"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Wednesday, December 14, 2011

தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் : தோழர் செந்திவேல் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு

கடந்த 27.11.2011 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. வெள்ளவத்தை தேசிய கலை இலக்கியப பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் சி.சிவசேகரம் தலைமையில் நடந்த மேற்படி கூட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் ஆற்றிய நினைவுச் சொற்பொழிவின் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.


பொதுவுடைமை இயக்கமானது மாக்சியத்தை அடிப்படைக் கருத்தியலாகவும் உலகக் கண்ணோட்டமாகவும் கொண்டே உலகம் பூராவும் பற்றிப் பரவி வந்திருக்கிறது. தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின்; தலைமையிலான போராட்டத்தினால் சமூக மாற்றத்தை வென்றெடுத்து நிலைநிறுத்த வேண்டும் என்பதை மாக்சிசமும் பொதுவுடைமை இயக்கமும் வெளிப்படையாகவே பிரகடனம் செய்து வந்துள்ளது. அந்த வகையில் பழமைவாதமும் மரபு பேணலும் சடங்கு சம்பிரதாயங்களும் இறுக்கமுடன் இருந்து வரும் நமது தமிழ்ச் சூழலில் ஒருவர் மாக்சிச உலகக் கண்ணோட்டத்தை உள்வாங்கிப் பொதுவுடைமைவாதியாகிக் கொள்வது இலகுவான ஒன்றாக இருப்பதில்லை. அத்தகைய சூழலில் துணிவான மீறல்களும் கடுமையான எதிர்நீச்சல்களும் கொண்டே பொதுவுடைமை இயக்க முன்னோடிகள் தமது அரசியல் சமூக பண்பாட்டுப் பணிகளை அர்ப்பணிப்பு தியாகங்களின் ஊடாக முன்னெடுத்து வந்துள்ளனர். அதனாலேயே அவர்கள் சமூகத்தில் தனித்துவமுடையோராக நோக்கப்பட்டனர். அத்தகைய முன்னோடிகளில்; இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவரே தோழர் கே.ஏ.சுப்பிரமணியம். தான் வரித்துக்கொண்ட கொள்கையால் நடைமுறையால் சொந்த வாழ்வால் பொதுவுடைமையாளர்களுக்குரிய அடிப்படை நிலை நின்று வந்தவர். அதன் காரணமாகவே அவர் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவராக நினைவு  கூறபடுகின்றார்.

தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தமிழர்களின் சமூகப் பரப்பிலே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட சமூக நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராட்ட இயக்கங்களை முன்னெடுத்தவர்களின் வரிசையில் முன்னின்றவர். பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவத்தில் தன்னை ஒருவராக்கிக் கொண்டவர். அதன் காரணமாக வடபுலத்தில் தொழிற்சங்க இயக்கத்தையும் சாதியத்திற்கு எதிரான 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஊடான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தையும் முன்னெடுப்பதில் முன்னின்றார். 1966-77 காலகட்டத்திலான வெகுஜன எழுச்சிகளும் போராட்டங்களும் தமிழர்களுடைய வரலாற்றில் அன்றுவரை புறக்கனிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வென்றெடுக்க வழியேற்படுத்திக் கொடுத்தன. அதுமட்டுமன்றி பிற்காலத்தில் எழுந்த தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டம் என்ற தளத்தில் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபட வைத்ததற்காக அடிப்படைகளையும் வெகுஜனப் போராட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன என்பது சிலர் மறந்துகொள்ளும் ஒன்றாகும். இவ்வெகுஜனப் போராட்ட காலங்களில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்துடன் இணைந்து நின்று போராட்டப் பணியாற்றிய நினைவுகள் இன்றும் பசுமையானவைகளாகவே இருந்துவருகின்றன. நெஞ்சில் உரமும், கொண்ட கொள்கையில் நேர்மைத்திறனும், உழைக்கும் மக்கள் மீதான போராட்ட நம்பிக்கையையும் கொண்ட புரட்சிகரப் பொதுவுடைமைவாதியாக தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர் தோழர் மணியம். அவருடனான நினைவுகள் பகிரப்படும் போது அவை போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் வேண்டி நிற்கும் இளம் தலைமுறையினருக்கு பயன் உள்ள அனுபவங்களாக அமைய முடியும் என்று நம்புகின்றோம்.

அத்தகையதொரு நேர்மையான பொதுவுடைமை இயக்க முன்னோடியின் நினைவுகளின் ஊடாக சமகால அரசியல் போக்குகளை நோக்குவது அவசியமாகும். ஜனாதிபதியும் அவரது மஹிந்த சிந்தனை வழிகாட்டலிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் தமது இரண்டாவது பதவிக்காலத்தின் உச்சநிலையில் இருந்து வருகின்றார்கள். அந்த உச்சநிலை ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருப்பதற்கு நான்கு நிலைகளில் செயல்பட்டு அவற்றை நிலைநிறுத்தி வைத்துக் கொண்டார்கள். ஒன்று அரசியலமைப்பிற்கான 18வது திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் தனிநபர் சர்வாதிகாரத்தை மேலும் விஸ்தரித்து குடும்ப ஆட்சியை வலுப்படுத்திக் கொண்டமை. இரண்டாவது, பாராளுமன்றப் பெரும்பான்மையை பல்வேறு கட்சிகளையும் உள்ளீர்த்து மூன்றிலிரண்டுக்கு மேல் தக்கவைத்துக் கொண்டமை. மூன்றாவது, ஆயுதப்படைகளை முறைமைப்படுத்தியும் வலுப்படுத்தியும் தமக்கும் தமது ஆளும் வர்க்க சக்திகளுக்கும் உரிய அரனாக மாற்றிக்கொண்டமை. நான்காவது பௌத்த சிங்கள பேரினவாதத்தை வெளிப்படையாகவும் உள்ளார்ந்த அடிப்படையிலும் பற்றி நின்று சிங்கள மக்களை திசை திருப்பி வைத்திருப்பது. மேற்கூறிய நான்கு முக்கிய தூண்களிலேயே இன்றைய மஹிந்த சிந்தனை அரசாங்கம் தன்னை நிலைநிறுத்தி நிற்கின்றது.

இத்தகைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது நாட்டின் ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிராகப் பொருளாதார அரசியல் தளங்களில் தரகு முதலாளித்துவ பேரினவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஒன்று நவகொலனித்துவ அமைப்பு முறையை வலுப்படுத்தும் வகையிலான நவதாராளவாத பொருளாதாரத்தை விஸ்தரித்துச் செல்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றமை. இரண்டாவது, யுத்தத்தின் மூலம் வடக்கு கிழக்கையும் தமிழ் மக்களையும் அழித்து அவலங்களுக்குள் தள்ளியது மட்டுமன்றி யுத்தத்திற்குப் பின்பும் தொடர்ந்து பேரினவாத ஒடுக்குமுறையினை ராணுவ மயப்படுத்தலின் ஊடாக முன்னெடுத்து வருவதுமாகும்.

மஹிந்த சிந்தனையின் தூரநோக்கு என்பதன் ஊடாக இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்றப் போவதாக அரச சார்பு ஊடகங்களில் நீட்டி வாசிக்கப்படுகின்றன. ஆனால் இன்றைய மஹிந்த சிந்தனை அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தகுந்த உரைகல்லாகும். அதனை ஆழ்ந்து நோக்கும் எவரும் அதன் உள்ளார்ந்த மக்கள் விரோதப்போக்கை இலகுவாகவே அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பிற்கு ஒதுக்கியுள்ள இருபத்து மூவாயிரம் கோடி ரூபாவானது ஆகக்கூடிய தொகை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பேரினவாத யுத்தத்தை முன்னெடுப்பதற்காக கட்டியெழுப்பப்பட்ட சுமார் நாலரை இலட்சம் ஆயதப்படைகளைப் பராமரிக்கவும் தீனிப்போட்டு வளர்த்துக்கொள்ளவுமே மேற்படி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.  அடுத்த ஆறு மாதத்தில் இத்தொகை மேலும் குறைநிரப்பு பிரேரனை மூலம் அதிகரிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு பாதுகாப்பு என்ற பெயரில் பேணப்படும் ஆயுதப்படைகள் அடிப்படையில் உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும்  எதிராகவே பயன்படுத்தப்படும். இன்று வடக்கு கிழக்கு இராணுவ மயப்படுத்தல்களின் கீழ் முகாம்கள் விஸ்தரிக்கப்பட்டு நிரந்தரமாக்கப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்வை மறுத்து ராணுவ நிர்வாகம் மேன்மேலும் இறுக்கப்பட்டு வருகின்றது.

இதே நிலை வடக்கு கிழக்கிற்கு மட்டுமன்றி தெற்கிற்கும் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் தெற்கில் தொழிலாளர்கள், ஊழியர்கள், வேலையற்றோர், மாணவர்கள் வீதிக்கு இறங்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நாட்டின் உழைக்கும் மக்களான தொழிலாளர்கள், விவசாயிகள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என ஏகப் பெரும்பான்மையான மக்களைக் கவனத்திற் கொள்ளவேயில்லை. அவர்களுக்கு எவ்வித ஆறுதலையும் ஆதரவையும் வழங்கவில்லை. அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு என்பதுகூட ஏமாற்றேயாகும். வெறும் வாழ்க்ககைப் படியாகவே அன்றி அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அதேவேளை ஏற்கனவே வானத்தை நோக்கி உயர்ந்து செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவோ அதன் மூலம் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவோ வரவு செலவுத் திட்டம் வழிவகைகளை முன்வைக்கவில்லை. அதற்குப் பதிலாக மேலும் விலைகள் அதிகரித்துச்செல்லும் வகையிலான மூன்று வீத நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட போகின்றது. நாட்டின் பொருளாதாரம் முற்று முழுதாகவே மறுகொலனியாக்கத்தின் ஊடாக நவகொலனித்துவமாக இறுக்கப்பட்டு வருகிறது. அன்று 1977ல் ஜே.ஆர். தொடக்கி வைத்த தாராளமயம், தனியார்மயம் மற்றும் திறந்த சந்தை என்ற நவதாராளப் பொருளாதாரத்திற்குள்ளும் அதற்கு வழிகாட்டி பாதுகாப்பு வழங்கி வரும் ஏகாதிபத்திய உலக மயமாதலுக்கும் மஹிந்த சிந்தனை மூலம் வலுசேர்க்கப்பட்டு வருகின்றது. நாட்டு வளங்கள் யாவும் அந்நிய பல்தேசியக் கம்பனிகளுக்கும்  உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்க்கப்பட்டு வருகிறது. இவற்றால் அற்ப சொற்பமாகவே இருந்து வந்த தேசிய பொருளாதாரம் என்பது அடிச்சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது. அதனாலேயே சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இன்றைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து கடனும் ஆலோசனைகளும் வழங்கி நிற்கின்றன. இவற்றை குறைந்தபட்சமாவது எதிர்ப்பதற்கு முன்னிற்க வேண்டிய பாராளுமன்ற இடதுசாரிகள் எனப்பட்டவர்கள் அரசாங்க அமைச்சர் பதவிகளும் சலுகைகளும் பெற்று எதுவும் தெரியாதவர்களைப் போன்று இருந்து வருகின்ற பரிதாப நிலையைக் காணமுடிகின்றது. ஜே.வி.பினர் மட்டுமே வீதியில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுகூட வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் நோக்கிலேயே அன்றி அனைத்து உழைக்கும் மக்களினதும் ஒன்றுபட்ட எழுச்சியை நோக்கி அல்ல என்பது பகிரங்கமானதாகும். அவர்கள் பேரினவாத நிலைப்பாட்டிலிருந்து விடுபடமுடியாதவர்களாகவே இன்றும் இருந்து வருகிறார்கள். அதேவேளை ஜே.வி.பி. க்குள் அதிருப்தியாளர்களாகி வெளியேறியுள்ள மாற்றுக் குழுவினரது நடவடிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

இவ்வேளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையில் முன்னெடுத்த கொள்கை நிலைப்பாடானது மிக மோசமானதாகும். யுத்தத்தின் மூலம் தீர்வு காண்பதில் முழுப்பலத்தையும் வல்லரசு மேலாதிக்க நாடுகளின் உதவி ஒத்தாசைகளுடன் பிரயோகித்துக் கொண்டது. அதனால் தமிழ் மக்கள் வரலாறு காணாத அழிவுகளையும் அவலங்களையும் அனுபவிக்க நேர்ந்தது. இன்றும் அவற்றிலிருந்து மீளமுடியாத மக்களாகவே வடக்கு கிழக்கு மக்கள் இருந்து வருகின்றனர். இவ்வாறான அழிவுகள் இழப்புக்கள் இடம்பெயர்வுகளுக்கு தொடர்ந்து வந்த பேரினவாத தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்க ஆட்சிகளும் அவர்களுக்கு அரவனைப்பு வழங்கிய இந்திய அமெரிக்க மேற்குலக நாடுகளும் மட்டுமன்றி சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளும் பங்காளிகளாவர். அதேவேளை தமிழ் மக்களுக்கு தலைiமை தாங்கி வந்த அனைத்துத் தலைமைகளும் குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் யதார்த்தமற்றதும் மக்கள் சார்பற்ற அரசியல் இராணுவ அராஜகப் போக்குகளும் காரணம் என்பதை இலகுவில் தட்டிக்கழித்துவிட முடியாது. யுத்தம் முடிவுற்று தாம் வெற்றி பெற்றதாகக் கூறிக்கொண்டபோதும் தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படுவதை மறுத்து இராணுவ ஒடுக்குமுறையின் கீழேயே வடக்கு கிழக்கையும் தமிழ் மக்களையும் வைத்திருப்பதிலேயே மஹிந்த சிந்தனையானது முனைப்புடன் இருந்துவருகின்றது. அதனை மக்கள் சார்பாகவும் மக்களோடு இணைந்து நின்றும் எதிர்ப்பது நேர்மையான ஒவ்வொரு பொதுவுடைமைவாதியினதும் இடதுசாரி என்போரினதும் கடமையாகும். அதேவேளை தமிழ்த் தேசியவாதம்; என்ற குறுகிய தேசியவாத நிலைப்பாட்டால் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கு வழிகாட்ட முடியாது என்ற உண்மையும் யதார்த்தமும் மக்களுக்கு உணர்த்தப்படவேண்டும். இதுவரை எந்தவொரு தமிழ்த்தலைமையும் தமது கடந்தகாலம் பற்றி எவ்வித விமர்சனம் சுயவிமர்சனத்தையும் முன்வைக்கத் தயாராக இல்லை. தங்களது கொள்கைகள் வழிகாட்டல்களால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கும் இழப்புக்களுக்கும் தகுந்த மன்னிப்பைக்கூட கேட்கத் தயாரில்லாத நிலையிலேயே தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைவர்களாகத் தமிழ்க்கட்சிகள்  தலைமைத்தாங்க முன்னிற்கின்றன. இது அன்றிலிருந்து இன்றுவரையான பழைமைவாத ஆதிக்க அரசியலை குறுந்தேசிய வாதமாக முன்னெடுப்பதன் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது.
எனவே வர்க்கப் போராட்ட அரசியல் மார்க்கத்தில் உழைக்கும் மக்களின் தலைமையிலான பரந்துப்பட்ட வெகுஜன எழுச்சியும் போராட்டங்களுமே இன்றைய சூழலில் முன்னெடுக்கப்பட வேண்டியதாகவுள்ளது. இப்பாதையிலேயே சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க முடிவதுடன் அதற்கான போராட்டமானது சிங்கள முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் ஆகிய அனைத்து உழைக்கும் மக்கள் முன்னெடுக்கும் வெகுஜனப் போராட்டங்களுடன் இணைத்தும் ஒன்றையொன்று ஆதரித்தும் முன்னெடுக்கப்படல் வேண்டும். தெற்கில் முன்னெடுக்கப்படும் ஜனநாயகத்திற்கான உழைக்கும் மக்களின் போராட்டங்களுடன்    வடக்குக் கிழக்கின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும். அதே போன்று வடக்குக் கிழக்கில் தெற்கிலே முன்னெடுக்கப்படும் ஜனநாயகத்திற்கு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் இணைக்கப்பட வேண்டும். இவற்றுக்கான மாற்றுக் கொள்கையும் மாற்றுத் தலைமையும் மாற்றுப் போராட்ட மார்க்கமும் முன்நிலைக்கு வரவேண்டும்.
Thanks to http://www.athirady.info

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்