"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Monday, December 6, 1982

05-04-1933 பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 06-12-1982 Professor K . Kailasapathy

 05-04-1933 பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 06-12-1982


எங்கள் தோழர்களுடனும், கட்சியுடனும் ,எம் குடும்பத்துடனும் மிக நெருக்கமாக வாழ்ந்த அறிஞர், தோழர், சகோதரன் என சொல்லாம்.
நீண்டகாலமாக தோழர் மணியம் , கைலாஸ் உறவு வளர்ந்திருத்தாலும், பாரதி பன்முகப்பார்வை என்ற தலைப்பில் யாழ் றிம்மர் மண்டபத்தில் கலந்துரையாடல்கள் இடம் பெற்றன. அச்சந்தர்பத்தில் தான் நான் அவருடன் பேசிப் பழகும் சந்தர்ப்பம் அமைந்தது. (பின்னர் அது 1984இல் நூலுருப் பெற்றது)
அவர் உடல் நலமற்று கொழும்பில் இருந்த போது பல தடவைகள் சென்று பார்த்து வந்தார். ஒருதடவை மகள் பபியையும் அழைத்துச் சென்றார். அவரது இறுதி நிகழ்வுகளில் கட்சியினதும், தோழர்களினதும் முன்னெடுப்பை திருமதி சர்வம் கைலாசின் வேண்டுகோளின் படி முன்னின்று ஒத்துழைத்தனர்.
அவரின் மறைவின் பின்பும், அவர் குடும்பத்துடனான ஊடாட்டம் தொடர்ந்தது. அவர்கள் குழந்தைகள் தோழர் மணியத்தின் மீது வைத்த அன்பிற்கும், மரியாதைக்கும் பேராசிரியர் கைலாசபதியே காரணம். தோழர் மணியம் விடைபெற்ற மலரில் அவரத துணைவியார் எழுதிய வரிகள் இன்றும் நினைவு மீட்டலுக்கு உரியது.
“கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்; முதன் முறையே அவருடைய எளிமையான தோற்றமும், இனிய சுபாவமும் எங்கள் எல்லோரையும் கவர்ந்தது. அவர் அப்பொழுது வெறுங்காலுடன் வந்திருந்தார். "மாமா வெறுங்காலுடன் இந்த வெய்யிலில் வந்திருக்கின்றார்” என்று எமது பிள்ளைகள் அங்கலாய்த்தனர்.
அவர்களுடைய அன்பு நச்சரிப்பால் அவர் பின்னர் செருப்புப் போட்டு வருவார். அவருடைய எளிமைக்கு இது ஒரு சிறு எடுத்துக்காட்டு. கைலாசபதியும் திரு. சுப்பிரமணியமும் இரண்டு வயது வித்தியாசமுடைய சமகால அரசியல் தோழர்களாயிருந்தனர். இருவரும் தேசிய சர்வதேசிய அரசியல் விவகாரங்களில் இறுதிக் காலம் வரை ஒத்தகருத்தைக் கொண்டவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டும் பரஸ்பரம் மதித்தும் வந்துள்ளதைக் காணக் கூடியதாக இருந்தது.”

இலங்கை நாட்டிற்கு மட்டுமல்ல அறிவு தேடும் அனைவரும் இவரின் பங்களிப்புகளையும் உள்வாங்கியே கடந்து செல்வர் . அந்த வகையில் எங்கள்
Raveendran Nadesan
அவர்களின் இவ்வளவு வளர்ச்சிக்கும் பேராசிரியரின் ஊக்குவிப்பு உரமாக அமைந்தது.
என்றும் அவரின் நினைவுகள் நிலைபெறும்!
“இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,
இறப்பை நீக்கி,அமிர்தத்தை ஊட்டுவாய்"
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே”
அவரது நூல்கள்:
  • பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966
  • தமிழ் நாவல் இலக்கியம்,1968
  • Tamil Heroic Poetry,Oxford,1968
  • ஒப்பியல் இலக்கியம்,1969
  • அடியும் முடியும்,1970
  • ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971
  • இலக்கியமும் திறனாய்வும்,1976
  • கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976
  • சமூகவியலும் இலக்கியமும்,1979
  • மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979
  • The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum
  • நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980
  • திறனாய்வுப் பிரச்சினைகள்,1980
  • பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,198
  • இலக்கியச் சிந்தனைகள்,1983
  • பாரதி ஆய்வுகள்,1984
  • The Relation of Tamil and Western Literatures
  • ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986
  • On Art and Literature
  • இரு மகாகவிகள்,1987
  • On Bharathi,1987
  • சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)



Tuesday, June 1, 1982

Message to Dispora by K.A.Subramaniam in 1982

Message to Dispora by K.A.Subramaniam in 1982 Length:2 Minutes

Video transcript of some excerpts from Comrade KA Subramaniam's message during a video recording for Comrade Devakumaran (Kumar) in Italy in June 1982 at 'Sathiamanai'. He was accompanied by Comrades S.K. Senthivel and S. Thevarajah.

'சத்தியமனையில் '1982அம்  ஆண்டு ,ஜூன் காலப் பகுதியில் இத்தாலியில் இருந்த தோழர் தேவகுமாரனுக்கான (குமார்) காணொளி உரையாடலின் போது தோழர் கே ஏ சுப்பிரமணியம் உரையாடிய சில  பகுதிகளின் காணொளி உரைவடிவம் .அவருடன் தோழர்கள் சோ .தேவராஜா , சி.கா.செந்தில்வேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

"Tamil comrades who may have left Sri Lanka, Sinhalese comrades who may be there must also work together to protect the unity and independence of the nation. The other is that they had to go here because of the real economic crisis and the problem of labor.

 Well, even if they take that position, they still believe that in the future it will work for the country, the need, the good and the freedom of the country. 

Kumar has now come and gone for the second time. He will also have experiences in Italy. Italy is undergoing the right changes. Economic and social developments have also taken place. What's left is that they must play an additional role in building Italy's economy and securing its independence, while at the same time protecting the country's independence and building its own economy. To that end, they mobilize the Sri Lankan youth there, educating them and explaining the conditions in the country so that they can do what they can!

"இலங்கையிலிருந்து போயிருக்ககூடிய தமிழ்த் தோழர்கள் ,அங்கிருக்கக்கூடிய சிங்களத் தோழர்கள் ஒன்றுபட்டு தேசத்தின் ஐக்கியத்தையும்,,சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்க்காக கூடப் பாடுபடவேண்டும் .மற்றது இங்கே உண்மையிலேயே பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் உழைப்பு பிரச்சனை சம்பந்தமாகத்தான் அவர்கள் போகவேண்டி வந்தது.

 சரி அவை அந்த நிலைமையை எடுத்திருந்தாலும் கூட, எதிர்காலத்திலையும் அதை நாட்டின்ரை , தேவைக்கும் நன்மைக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் அவை உழைப்பினம் என்று  நம்பிக்கை .ஆனால் அவை செய்வினம் என்று தான் நம்புகின்றேன் 

குமார் இப்போ இரண்டாவது முறை வந்து போய் இருக்கிறார். அவருக்கு இத்தாலி அனுபவங்கள் கூட இருக்கும் . இத்தாலி நாட்டிலை சரியான மாற்றங்கள் எற்பட்டு இருக்குது. அவையின்ரை  பொருளாதரா ,சமூக அபிவிருத்திகள் கூட நடந்திருக்கிறது. இன்னும் இங்கிருந்து போனவை இத்தாலி நாட்டு பொருளாதரத்தை கட்டி எழுப்புவதற்கும் , அதன்  சுதந்திரத்தை  பாதுகாப்பதறக்கும் அங்கே  அவை பாடுபடும் அதே வேளை , எங்கடை நாட்டு சுதந்திரத்தை பாதுகாக்கின்றதற்கும்  ,அதின்றை  பொருளாதரத்தை கட்டி எழுப்புவதிலையும்  அவை கூடுதல் பங்கு வகிக்கவேண்டும் . அதற்க்கு அவை அங்கேயுள்ள இலங்கை இளைஞர்களை அணிதிரட்டுவது  அவைக்கு கல்வியறிவைக் கொடுக்கிறது , நாட்டு நிலைமைகளை விளங்கப்படுத்துவதன் மூலம் அவை கூடிய சேவையை ஆற்ற முடியும் !"

Saturday, January 2, 1982

தோழர். ச. சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்)

 தோழர்-  சுந்தரத்தின் தந்தை இராமலிங்கம் சதாசிவம் ஆசிரியர், 

தாயார் கணபதிப்பிள்ளை பசுந்தரம் அவர்கள்

செய்திகளின் துளிகள்.... தந்தையார்---சுளிபுரம்- தாயார் காரைநகர்.
நாட்டுவைத்தியமும், நாடக இயக்குனருமான....அண்ணாவியார்
பரம்பரை( விக்காவில் , ஆயிலி..காரைநகர்) பெரியம்மா....மூளாய்.....
(திருமதி-கந்தையா ) 
தாய் மாமன் ...ஓவிய ஆசிரியர்.இராசரத்தினம் .
அவரது பெரியம்மாவின் மகள் - ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி விசாகபூசணி முருகையா
(சுந்தரம்) சதாசிவம் சிவசண்முகமூர்த்தி படித்தது
சுளிபுரம் , விக்ரோறியாக் கல்லூரி.
 


தோழர்  சுந்தரத்தின் குணாதிசயங்கள்:----
பெரியோருக்குக் கீழ்ப்படிவு, குருபக்தி,
நன்றிமற்வாமை, குழந்தைகளிற் பாசம்,
சகல மொழிகளையும் படிக்க ஆவல்,
தன்னடக்கம், ஊக்கம், நட்புக்கு முன்னுரிமை.



                        (சுந்தரம்) சதாசிவம் சிவசண்முகமூர்த்தி

தொலைநோக்கு அரசியல், அசாத்திய துணிவு, நேர்மை, கடின உழைப்பு, தன்னலங்கருதாத தியாகம், இவற்றிக்குமப்பால் மனித நேயம், தோழமை இவையெல்லாம் ஒன்று சேர்ந்த, மக்களை நேசித்த மகத்தான, சமூக போராளி சுந்தரம் 1980/81 இல்  
சுழிபுரம்  ஸ்ரீலங்காவில் இருந்து மேற்கு ஜெர்மனி நண்பருக்கு எழுதிய கடிதம்,

"இனிய நண்பா நீண்ட நாட்களின் பின் தான் உங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. மன்னிக்கவும். தங்கள் நலன், நிலை  முதலியன நான் அறிய விரும்புகிறேன்.நட்புகளை நான் மறப்பதில்லை நண்பர்கள் என நான் மதித்தவர்கள் என்னை மறந்து போனார்கள் அவர்கள் மறந்தனால் எனக்கு எந்தவித நட்டமும் இல்லை. ஆனால் மனக்கவலை தான் நீங்கள் அப்படி இல்லை என நம்புகிறேன். உங்களுக்கு என்ன கஷ்டமோ என எனக்குத் தெரியாது. ஆனால் உணர்கின்றேன் .  நீங்கள்பல மாதங்களுக்கு முன்னர் அனுப்பிய மடலுக்கு  பதில் அனுப்ப முடியாது போனது குறித்து வருந்துகிறேன். தயவுசெய்து இக்கடிதத்துக்கு பதில் எழுதவும். உங்களைப் பற்றி நாளாந்த வாழ்க்கை பற்றி  வேலைகளை பற்றி நண்பர்களை பற்றி சூழலை பற்றி எழுதவும்.


நான் நலம். வீட்டிலும் அவ்வாறே.  ஆறு மாதங்களுக்கு முன்னர் அப்பாவை கைது செய்து மூன்று நாட்களின் பின்னர் விடுதலை செய்தனர் . என்னால் பகிரங்கமாக நடமாட முடியாத நிலை எனினும் நடமாடுகின்றேன். இயங்குகிறேன். எடுத்த துறையில் 100% வேலை செய்கிறேன்............


...... தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டது . அமைச்சர்களுக்கு இராசதுரை மாலை போட்டதால் கட்சியை விட்டு விலக்கி ஒதுக்கி விளக்கம் கேட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள்  ( அமீர்,  சிவா ) அத்துலத்முதலிக்கும்  முகம்மதுவுக்கும் சுபாஷில் விருந்து அளித்தார்கள். ஜே ஆரின் ( J R ) பிறந்ததின விழாவில் முதல் ஆளாக வரிசையில் நின்று ஜே ஆருக்கு பரிசளித்தார் (மாஜி) தலைவர் அமீர்.   இராசதுரை , கனகரத்தினம் தங்களை மட்டும் முதலாளித்துவ ஜே ஆர் ஆட்சி கும்பலுக்கு அடகு வைத்தார்கள் . அமீர் சிவா பிற்போக்குத் தலைமை, கட்சியையும் இனத்தையும் தங்களுடன் சேர்த்து அடகு வைத்துவிட்டனர். இந்த அரசை எதிர்த்து ஏன் போராட வேண்டும் ? என அமீர் பகிரங்கமாக கேட்கிறார்.  இன்பம்,   செல்வரத்தினம் …… பிணங்களை பார்த்த நாம் …. …. காலம் பதில் சொல்லும் …….  பதிலை எதிர்பார்க்கிறேன் ….. மிகுதி அடுத்த மடலில் …..  தோழமையுடன் மூர்த்தி  முகவரி சுழிபுரம்  ஸ்ரீலங்காவில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு"












      

பின்குறிப்பு:----


என்குழந்தைகள் சிறுபொறி வெளியிட்டது  1976ல்........... 

புதியபாதை கை யெழுத்துப்பிரதிகள் 1977/78ல் பார்வைக்குக் கிடைத்தது. 

அச்சுவாகனமேறியது 1979/1980 ....

1980/81ல்.........வீடுகளுக்குச் சென்று கைகளில் ஒப்படைப்பதில் மிகக் கவனமாகச் சுந்தரம் செயற்படுவார். 



"மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும்!" ...வள்ளியம்மை சுப்பிரமணியம்  Updated in 2009




கடந்த சனிக்கிழமை (02 Jan 1982 ) யாழ் நகரில் உள்ள அச்சுக்கூடத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான சதாசிவம் சிவசண்முகமூர்த்தியின் உடலையும், தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் திரு. அ.அமிர்தலிங்கம் அஞ்சலி செலுத்துவதையும் இங்கு காணலாம். - ஈழநாடு 1982.01.06

தோழர் சுந்தரத்தின் நினைவு
†*
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச. சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்)
நினைவு நாள் இன்று.

இடதுசாரி அமைப்புகளின் "தொழிலாளி",'ஜனசக்தி' (கு.வினோதன்) போன்ற பத்திரிகைகளுக்குப்பின் போராட்டக்களங்களின் ஒரு திருப்பமாய் 
புதிய பாதை எனும் பத்திரிகை அமைத்த தோழனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நாள் இன்று.

சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்டத் தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982 ல் யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளின் தவைர் பிரபாகரன் பணிப்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
"துரோகத்தின் பரிசு " என கொலைக்கு நியாயம் சொல்லி உரிமைகோரிய துண்டுப்பிரசுரம் புலிகளால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

இங்கே சுடவேண்டாம் 
*

வாசலைப்பார்த்து கதிரை போடப்பட்ட சித்திரா அச்சகத்தில் ஒருவர் அச்சகத்தின் உள்ளே வர உள்ளே கதிரையில் இருந்த சுந்தரம் வந்தவரைப்பார்த்துச் சிரித்திருக்கிறார் .சுட்டவனை சுந்தரத்திற்கு நன்கு தெரிந்திருக்கவேண்டும் என்று அபிப்பிராயப்படுகிறார் அச்சக உரிமையாளரான மரியதாஸ் மாஸ்ரர் . 

அந்த அதிர்ச்சியிலிருந்தும் மன உளைச்சலில் இருந்தும் மரியதாஸ் மாஸ்ரர் வாழ்க்கைமுழுதும் மீளவில்லை .
அவர் வறுமையின் பின்னணியில் வாழ்பவர் ,போலீஸ் அவர் அச்சகத்தை மூன்று மாதங்களுக்கு மேலாக மூடியது .பின்னர் திறக்க அனுமதி கொடுத்தது .ஒரு உள்ளூர் ஆலோசனையின்பேரில் சுந்தரத்தை வைக்கல் பொம்மையில் உருவம் செய்து அருகில் உள்ள ஞானம் ஸ்ரூடியோ சந்தியில் அவலச் சாவடைந்த உயிர்களுக்குச் செய்யும் சில “களிப்பு” வகைகள் செய்து சுந்தரத்தின் பாவனை உயிர் அவ்விடத்தில் கொளுத்தப்பட்டது .

மரியதாஸ் மாஸ்ரருக்கு பின்னர் எவ்வித அச்சக வேலைகளும் வராமல் நின்றுபோனது .தனது மகளை அவர் வீட்டு வேலைக்காக சிங்கப்பூருக்கு அனுப்பமுயன்றார் .
அவர் நண்பர்கள் ஓரிருவர் அவருக்கு அச்சக ஓடர்களை எடுத்துத்தர பெரிதும் முயன்றனர் ,
எதுவும் வாய்க்கவில்லை ,அவர் நண்பர் ஒருவர் “இங்கே சுடவேண்டாம் !” என ஒரு அறிவித்தல் வைக்கச் சொல்லி அவரை மன உழைச்சலில் இருந்து மீட்க முயன்றார் .பின்னர் அச்சகம் மூடப்பட்டது .

ரஸமோனிய காலம் 
*
சுந்தரத்தின் கொலையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு .அமிர்தலிங்கத்திற்கு “நோக்கம் இருக்குமா ?” என ஒரு பலமான அல்லது லேசான அபிப்பிராயம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது .
அவரது புதியபாதை அரசியல் நிலைப்பாடுகள், அமிர்தலிங்கம் மீதான கடும் வெளிப்படையான விமர்சனம் என்பவை இவற்றிற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது ,இதனுடன் துரையப்பா கொலை பின்னணியும் சேர்த்து நோக்கப்படுகிறது .
அமிர்தலிங்கம் சுந்தரத்தின் மரணச்சடங்கில் கலந்துகொண்டிருக்கிறார் ,ஆனால் சுந்தரத்தை தனக்குத் தெரியாது நேரில் பார்த்ததில்லை என அவைக்கு தெரிவித்திருக்கிறார் .பின்னொரு தகவலின்படி திருமதி மங்கையற்கரசி அவர்கள் பிரபாகரன் காலில் விழுந்து அழுததாகவும் இன்னொரு கதை உண்டு ,ஆனால் ஆனைக்கோட்டை போலீஸ் நிலையத்தின்மீதான வெற்றிகரமான முதலாவது தாக்குதல் பிரபாகரனை பெரிதும் வேதனைக்கு உள்ளாக்கியதாகவும் அப்படி ஒரு தாக்குதலை பிரபாகரனும் செய்வதற்கு முயன்று பார்த்திருக்கலாம் எனவும் அதில் மிகவும் தேர்ச்சி பெற்ற இராணுவ வல்லமை சுந்தரத்திற்கே உண்டு எனவும் ,புலிகளில் இத்தகைய தகுதிநிலை சுந்தரத்திற்கு மட்டுமே உண்டு எனவும் பிரபாகரன் சுந்தரத்தைச் சுடுவதற்கு இதுவே காரணமாக இருந்தது எனவும் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது .

சுந்தரத்தின் தந்தை இராமலிங்கம் சதாசிவம் ஆசிரியர், 
தாயார் கணபதிப்பிள்ளை பசுந்தரம். 
அம்மாவின் பெயரைத்தான் இயக்கப் பெயராக வைத்தார் .
அவருக்கு மணி ,பாபு என்றழைக்கப்படும் இரு சகோதரர்கள் ,சகோதரிகள் இருவர்.
மாமன் இராசரத்தினம் பிரபல ஓவியர், மணி அவர் வழியில் ஓவியர்.

மறதியின் கணத்தில் 
**
போலீஸ் அச்சகத்தை மூடி அங்கிருந்த அனைத்து தஸ்தாவேஜுகளையும் நூல்களையும் அச்சுவேலை விபரங்களையும் தனது ஆய்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது அங்கு நுஹ்மானின் பலஸ்தீனக் கவிதைகள் ,மற்றும் செங்கை ஆழியானின் புவியியல் சூழலியல் நூல்கள் இருந்தன ,
போலீஸ் ஒரு முன்நிபந்தனை மரியதாஸ் மாஸ்ரருக்கு விதித்தது .
அங்கிருந்த நூல்களின் பெயர்களிற்குரியவர்களை அவரே போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்து நிறுத்தவேண்டும் ,செங்கை ஆழியான் பல தயக்கங்களினூடு போலீஸ் நிலையத்திற்கு வந்து தனது நிலையை போலீஸ் அதிகாரிகளுக்குப் புரியவைத்தார் .
பேரா .எம் ஏ .நுஹ்மானின் பலஸ்தீனக் கவிதைகள் மொழிபெயர்ப்பை ஒரு இளம் போலீஸ் அதிகாரி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார் .
போலீஸ் அதிகாரி நுஹ்மானைக்கேட்டார்
” இதிலிருந்து சமூகத்திற்கு நீங்கள் என்ன செய்தியைச் சொல்லவருகிறீர்கள் ?”
கைலாசபதி கூட இப்படியொரு கேள்வியை இலக்கியத்தளத்தில் அப்போது கேட்டிருக்கமுடியாது என ஈழக் கவிதைச் செல்நெறிகள் பற்றிஆய்ந்த  ஒரு ஆய்வு மாணவர் அப்போது கருத்து வெளியிட்டார் .

புதியபாதை எப்போதும் இடதுசாரிகள் தமது அச்சு வேலைகளை செய்யும் வேறொரு அச்சகத்திலேயே அடிக்கப்பட்டுவந்தது . 
அந்த அச்சகத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாய் இந்த ஒரு இதழ் மட்டும் சித்திரா அச்சகத்தில் அடிப்பதற்கு மரியதாஸ் மாஸ்ரரால் ஒப்புக்கொள்ளப்பட்டது .
அதுவும் முன்னரான அந்த அச்சகத்தின் பேரிலேயே .

மரியதாஸ் மாஸ்ரர் ஏழாலையைச் சேர்ந்தவர் .இப்போது அவர் நிலை என்ன எனத்தெரியவில்லை .மறதியின் தளத்திலேயே எப்போதும் இயங்கும் வரலாற்றின் இருண்ட ஒரு மடிப்பில் 
மரியதாஸ் மாஸ்ரருக்கும் ஒரு இடம் இருக்கும்தான் இல்லையா ?

சுந்தரமும், சந்ததியாரும் சிங்கள நூல்களை வாசிக்கவும், மொழி அறிவு பெறவும் சிங்கள மொழியை சுளிபுரத்தில் டாக்டர் தம்பையா என்பவரிடம் 70’இல் கற்றனர்.
மார்க்சிய நால்களையும், அதன் யதார்த்த நடைமுறைகளை தோழர் கே ஏ சுப்பிரமணியத்திடமும் – விவாதங்களின் மூலம் கற்றுக் கொண்டனர்.

சிறிதுகாலம் சுந்தரம் புத்தளத்தில் பாதுகாவலராக வேலைசெய்திருக்கிறார் .பின்னர் 
1974 மட்டில் இந்தியாவிற்குப் படிக்கப்போன நாளில் வீட்டில் வறுமை நிலவியது ,வயதிற்கு வந்த அவரது மூத்த சகோதரிக்கு திருமண ஏற்பாடுகளில் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த நேரத்தில்
சுந்தரத்திற்கும் படிப்புச் செலவுகளிற்கு பணம் தேவையாக இருந்தது , சுந்தரத்தின் தாயார் பசுந்தரம் தனது தாலிக்கொடியை கச்சதீவிற்கு போன அவரது உறவினரிடம் கொடுத்தனுப்பியபோது சுந்தரம் அத் தாலிக்கொடியை கச்சதீவில் பெற்றுக்கொண்டார் ,

அதை விற்று தனது படிப்பு தேவைகளை நிறைவேற்றி படிப்பை முடித்து 1977 இல் கொழும்பு வந்து கொழும்பில் இயக்கத்தொடர்புகள் ஏற்படுகிறது ,
பின்னர் காந்தீயம் அமைப்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார் .மலையக மக்களுக்கான மறுவாழ்வுப்பணியில் அவர் தீவிரமாக ஈடுபடுகிறார் .
சுமார் ஆறுமாத இடைவெளிகளில் இடையிடையே வீட்டிற்கும் அவர் வந்துசெல்கிறார் . யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே நடைபெறும் தமிழ்வகைப்பட்ட தனிநபர் தீவிரவாத நடவடிக்கைகளில் சுந்தரமும் பங்குகொண்டதாக போலீஸ் கருதுகிறது ,

1979 இல் அவரது தந்தையரையும் மைத்துனரையும் போலீஸ் கைதுசெய்து யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் விசாரணையில் வைத்திருந்தது .
அவர் இறுதியாக வீட்டிற்கு வந்த 1981 ஜூன் மாத இறுதி நள்ளிரவொன்றில்  வீட்டில் உணவு முடிந்துவிட்ட நிலையில் அன்று அவருக்காக  அயல் வீட்டில் வாங்கிவந்த உணவை அவர் தனது வீட்டில் இறுதியாக உண்டார் . 
மரங்கள் அசைந்தாடும் அந்த இரவை ஒரு பதட்டத்துடன் கண்காணித்தபடி அவர் தாயிடமிருந்து அந்த உணவைப் பெற்றுக்கொண்டார் .
அவர் கடைசித் தங்கச்சி தனக்கு ஒரு வானொலிப் பெட்டியை வாங்கித்தரச்சொல்லி சுந்தரத்திடம் அப்போது கேட்டிருக்கிறார் .
” கொஞ்ச நாள் பொறு !
நான் பிரச்சனையில் இப்போ இருக்கிறேன் ,உனக்கு வாங்கித்தாறேன் !” என சுந்தரம் தனது தங்கச்சிக்கு சொல்லியபோதிலும் அவரால் எப்போதும் தனது தங்கச்சிக்கு ஒரு வானொலிப் பெட்டியை வாங்கிக்கொடுக்க முடிந்ததில்லை .

அவர் மூத்த சகோதரி வீட்டின் நிலையை அப்போது அவருக்கு சொல்லியிருக்கிறார் , 
“அங்கை இருக்க வீடில்லாமை சனங்கள் இருக்கு ! உங்களுக்கு இருக்க ஒரு வீடாவது இருக்கு !” 
என சுந்தரம் பதில் சொன்னார் .

சுந்தரம் சுடப்பட்டநிலையில் அவரது பால்ய உயிர் நண்பர் ஜெர்மனியில் இருந்து சுந்தரத்தின் இறுதிச்சடங்குகளுக்கான பணத்தை அனுப்பி அவரது செலவிலேயே சுந்தரத்தின் இறுதிக்கிரியைகள் மற்றும் தொடர்ந்த காரியங்கள் நடந்தன .

 சுந்தரத்தின் குடும்ப வறுமையை தன்னால் இயன்றவரை போக்கி நின்றார் அந்த ஜெர்மன் நண்பர் .இடையிடையே தன்னால் இயன்றவரை அவர்கள் குடும்பத்தினருக்கு காசு அனுப்பிக்கொண்டிருந்தார் ,
சுந்தரத்தின் இன்னொரு உயிர் நண்பர் அவரது கடைசித் தங்கச்சியை சீதனம் எதுவும் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார் .
சுந்தரத்தின் நினைவாக அவரது விசுவாசமான தோழரான பாலமோட்டை சிவம் ,தன்னை “சண்முகம் ” என பின்னர் பேரிட்டு அழைத்துக்கொண்டதோடு தனது நெஞ்சிலும் சுந்தரத்தைப் பச்சை குத்திக்கொண்டார்
 
புதியபாதை வகுத்து 
மக்கள் புரட்சி வெல்வதற்கு முன்னோடியாய்  உழைத்த ஒரு முதன்மைப் போராளி  கொல்லப்பட்ட குறிப்பை 
இந்த நாற்பதாண்டுகள் ஒவ்வொரு தருணத்திலும் காட்டி நிற்கின்றது.

அவலச்சுவை தவிர்ந்த வேறெதையும் ருசித்திராத தமிழ் அரசியலில் சுந்தரத்தின் தொடக்கமும் முடிவும்  எப்போதும் ஏக்கத்துடனும் நிராசையுடனும் நினைவெழுந்தபடியே இருக்கும்.
-முகநூலில் பாரிஸ் சுகனின் பதிவு