"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Wednesday, December 14, 2011

தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் : தோழர் செந்திவேல் ஆற்றிய நினைவுச்சொற்பொழிவு

கடந்த 27.11.2011 அன்று தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் 22வது நினைவு தினக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. வெள்ளவத்தை தேசிய கலை இலக்கியப பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் சி.சிவசேகரம் தலைமையில் நடந்த மேற்படி கூட்டத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் ஆற்றிய நினைவுச் சொற்பொழிவின் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.


பொதுவுடைமை இயக்கமானது மாக்சியத்தை அடிப்படைக் கருத்தியலாகவும் உலகக் கண்ணோட்டமாகவும் கொண்டே உலகம் பூராவும் பற்றிப் பரவி வந்திருக்கிறது. தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின்; தலைமையிலான போராட்டத்தினால் சமூக மாற்றத்தை வென்றெடுத்து நிலைநிறுத்த வேண்டும் என்பதை மாக்சிசமும் பொதுவுடைமை இயக்கமும் வெளிப்படையாகவே பிரகடனம் செய்து வந்துள்ளது. அந்த வகையில் பழமைவாதமும் மரபு பேணலும் சடங்கு சம்பிரதாயங்களும் இறுக்கமுடன் இருந்து வரும் நமது தமிழ்ச் சூழலில் ஒருவர் மாக்சிச உலகக் கண்ணோட்டத்தை உள்வாங்கிப் பொதுவுடைமைவாதியாகிக் கொள்வது இலகுவான ஒன்றாக இருப்பதில்லை. அத்தகைய சூழலில் துணிவான மீறல்களும் கடுமையான எதிர்நீச்சல்களும் கொண்டே பொதுவுடைமை இயக்க முன்னோடிகள் தமது அரசியல் சமூக பண்பாட்டுப் பணிகளை அர்ப்பணிப்பு தியாகங்களின் ஊடாக முன்னெடுத்து வந்துள்ளனர். அதனாலேயே அவர்கள் சமூகத்தில் தனித்துவமுடையோராக நோக்கப்பட்டனர். அத்தகைய முன்னோடிகளில்; இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவரே தோழர் கே.ஏ.சுப்பிரமணியம். தான் வரித்துக்கொண்ட கொள்கையால் நடைமுறையால் சொந்த வாழ்வால் பொதுவுடைமையாளர்களுக்குரிய அடிப்படை நிலை நின்று வந்தவர். அதன் காரணமாகவே அவர் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவராக நினைவு  கூறபடுகின்றார்.

தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தமிழர்களின் சமூகப் பரப்பிலே தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட சமூக நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராட்ட இயக்கங்களை முன்னெடுத்தவர்களின் வரிசையில் முன்னின்றவர். பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவத்தில் தன்னை ஒருவராக்கிக் கொண்டவர். அதன் காரணமாக வடபுலத்தில் தொழிற்சங்க இயக்கத்தையும் சாதியத்திற்கு எதிரான 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஊடான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தையும் முன்னெடுப்பதில் முன்னின்றார். 1966-77 காலகட்டத்திலான வெகுஜன எழுச்சிகளும் போராட்டங்களும் தமிழர்களுடைய வரலாற்றில் அன்றுவரை புறக்கனிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வென்றெடுக்க வழியேற்படுத்திக் கொடுத்தன. அதுமட்டுமன்றி பிற்காலத்தில் எழுந்த தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டம் என்ற தளத்தில் அனைத்துத் தமிழர்களையும் ஒன்றுபட வைத்ததற்காக அடிப்படைகளையும் வெகுஜனப் போராட்டங்கள் ஏற்படுத்திக் கொடுத்தன என்பது சிலர் மறந்துகொள்ளும் ஒன்றாகும். இவ்வெகுஜனப் போராட்ட காலங்களில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்துடன் இணைந்து நின்று போராட்டப் பணியாற்றிய நினைவுகள் இன்றும் பசுமையானவைகளாகவே இருந்துவருகின்றன. நெஞ்சில் உரமும், கொண்ட கொள்கையில் நேர்மைத்திறனும், உழைக்கும் மக்கள் மீதான போராட்ட நம்பிக்கையையும் கொண்ட புரட்சிகரப் பொதுவுடைமைவாதியாக தலைமைத்துவ வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர் தோழர் மணியம். அவருடனான நினைவுகள் பகிரப்படும் போது அவை போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் வேண்டி நிற்கும் இளம் தலைமுறையினருக்கு பயன் உள்ள அனுபவங்களாக அமைய முடியும் என்று நம்புகின்றோம்.

அத்தகையதொரு நேர்மையான பொதுவுடைமை இயக்க முன்னோடியின் நினைவுகளின் ஊடாக சமகால அரசியல் போக்குகளை நோக்குவது அவசியமாகும். ஜனாதிபதியும் அவரது மஹிந்த சிந்தனை வழிகாட்டலிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கமும் தமது இரண்டாவது பதவிக்காலத்தின் உச்சநிலையில் இருந்து வருகின்றார்கள். அந்த உச்சநிலை ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருப்பதற்கு நான்கு நிலைகளில் செயல்பட்டு அவற்றை நிலைநிறுத்தி வைத்துக் கொண்டார்கள். ஒன்று அரசியலமைப்பிற்கான 18வது திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் தனிநபர் சர்வாதிகாரத்தை மேலும் விஸ்தரித்து குடும்ப ஆட்சியை வலுப்படுத்திக் கொண்டமை. இரண்டாவது, பாராளுமன்றப் பெரும்பான்மையை பல்வேறு கட்சிகளையும் உள்ளீர்த்து மூன்றிலிரண்டுக்கு மேல் தக்கவைத்துக் கொண்டமை. மூன்றாவது, ஆயுதப்படைகளை முறைமைப்படுத்தியும் வலுப்படுத்தியும் தமக்கும் தமது ஆளும் வர்க்க சக்திகளுக்கும் உரிய அரனாக மாற்றிக்கொண்டமை. நான்காவது பௌத்த சிங்கள பேரினவாதத்தை வெளிப்படையாகவும் உள்ளார்ந்த அடிப்படையிலும் பற்றி நின்று சிங்கள மக்களை திசை திருப்பி வைத்திருப்பது. மேற்கூறிய நான்கு முக்கிய தூண்களிலேயே இன்றைய மஹிந்த சிந்தனை அரசாங்கம் தன்னை நிலைநிறுத்தி நிற்கின்றது.

இத்தகைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது நாட்டின் ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிராகப் பொருளாதார அரசியல் தளங்களில் தரகு முதலாளித்துவ பேரினவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஒன்று நவகொலனித்துவ அமைப்பு முறையை வலுப்படுத்தும் வகையிலான நவதாராளவாத பொருளாதாரத்தை விஸ்தரித்துச் செல்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றமை. இரண்டாவது, யுத்தத்தின் மூலம் வடக்கு கிழக்கையும் தமிழ் மக்களையும் அழித்து அவலங்களுக்குள் தள்ளியது மட்டுமன்றி யுத்தத்திற்குப் பின்பும் தொடர்ந்து பேரினவாத ஒடுக்குமுறையினை ராணுவ மயப்படுத்தலின் ஊடாக முன்னெடுத்து வருவதுமாகும்.

மஹிந்த சிந்தனையின் தூரநோக்கு என்பதன் ஊடாக இலங்கையை ஆசியாவின் அதிசயமாக மாற்றப் போவதாக அரச சார்பு ஊடகங்களில் நீட்டி வாசிக்கப்படுகின்றன. ஆனால் இன்றைய மஹிந்த சிந்தனை அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தகுந்த உரைகல்லாகும். அதனை ஆழ்ந்து நோக்கும் எவரும் அதன் உள்ளார்ந்த மக்கள் விரோதப்போக்கை இலகுவாகவே அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பிற்கு ஒதுக்கியுள்ள இருபத்து மூவாயிரம் கோடி ரூபாவானது ஆகக்கூடிய தொகை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பேரினவாத யுத்தத்தை முன்னெடுப்பதற்காக கட்டியெழுப்பப்பட்ட சுமார் நாலரை இலட்சம் ஆயதப்படைகளைப் பராமரிக்கவும் தீனிப்போட்டு வளர்த்துக்கொள்ளவுமே மேற்படி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.  அடுத்த ஆறு மாதத்தில் இத்தொகை மேலும் குறைநிரப்பு பிரேரனை மூலம் அதிகரிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு பாதுகாப்பு என்ற பெயரில் பேணப்படும் ஆயுதப்படைகள் அடிப்படையில் உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும்  எதிராகவே பயன்படுத்தப்படும். இன்று வடக்கு கிழக்கு இராணுவ மயப்படுத்தல்களின் கீழ் முகாம்கள் விஸ்தரிக்கப்பட்டு நிரந்தரமாக்கப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்வை மறுத்து ராணுவ நிர்வாகம் மேன்மேலும் இறுக்கப்பட்டு வருகின்றது.

இதே நிலை வடக்கு கிழக்கிற்கு மட்டுமன்றி தெற்கிற்கும் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் தெற்கில் தொழிலாளர்கள், ஊழியர்கள், வேலையற்றோர், மாணவர்கள் வீதிக்கு இறங்க ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் நாட்டின் உழைக்கும் மக்களான தொழிலாளர்கள், விவசாயிகள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் என ஏகப் பெரும்பான்மையான மக்களைக் கவனத்திற் கொள்ளவேயில்லை. அவர்களுக்கு எவ்வித ஆறுதலையும் ஆதரவையும் வழங்கவில்லை. அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு என்பதுகூட ஏமாற்றேயாகும். வெறும் வாழ்க்ககைப் படியாகவே அன்றி அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. அதேவேளை ஏற்கனவே வானத்தை நோக்கி உயர்ந்து செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவோ அதன் மூலம் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவோ வரவு செலவுத் திட்டம் வழிவகைகளை முன்வைக்கவில்லை. அதற்குப் பதிலாக மேலும் விலைகள் அதிகரித்துச்செல்லும் வகையிலான மூன்று வீத நாணய மதிப்பிறக்கம் செய்யப்பட போகின்றது. நாட்டின் பொருளாதாரம் முற்று முழுதாகவே மறுகொலனியாக்கத்தின் ஊடாக நவகொலனித்துவமாக இறுக்கப்பட்டு வருகிறது. அன்று 1977ல் ஜே.ஆர். தொடக்கி வைத்த தாராளமயம், தனியார்மயம் மற்றும் திறந்த சந்தை என்ற நவதாராளப் பொருளாதாரத்திற்குள்ளும் அதற்கு வழிகாட்டி பாதுகாப்பு வழங்கி வரும் ஏகாதிபத்திய உலக மயமாதலுக்கும் மஹிந்த சிந்தனை மூலம் வலுசேர்க்கப்பட்டு வருகின்றது. நாட்டு வளங்கள் யாவும் அந்நிய பல்தேசியக் கம்பனிகளுக்கும்  உள்நாட்டு பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்க்கப்பட்டு வருகிறது. இவற்றால் அற்ப சொற்பமாகவே இருந்து வந்த தேசிய பொருளாதாரம் என்பது அடிச்சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது. அதனாலேயே சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இன்றைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து கடனும் ஆலோசனைகளும் வழங்கி நிற்கின்றன. இவற்றை குறைந்தபட்சமாவது எதிர்ப்பதற்கு முன்னிற்க வேண்டிய பாராளுமன்ற இடதுசாரிகள் எனப்பட்டவர்கள் அரசாங்க அமைச்சர் பதவிகளும் சலுகைகளும் பெற்று எதுவும் தெரியாதவர்களைப் போன்று இருந்து வருகின்ற பரிதாப நிலையைக் காணமுடிகின்றது. ஜே.வி.பினர் மட்டுமே வீதியில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுகூட வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் நோக்கிலேயே அன்றி அனைத்து உழைக்கும் மக்களினதும் ஒன்றுபட்ட எழுச்சியை நோக்கி அல்ல என்பது பகிரங்கமானதாகும். அவர்கள் பேரினவாத நிலைப்பாட்டிலிருந்து விடுபடமுடியாதவர்களாகவே இன்றும் இருந்து வருகிறார்கள். அதேவேளை ஜே.வி.பி. க்குள் அதிருப்தியாளர்களாகி வெளியேறியுள்ள மாற்றுக் குழுவினரது நடவடிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

இவ்வேளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினையில் முன்னெடுத்த கொள்கை நிலைப்பாடானது மிக மோசமானதாகும். யுத்தத்தின் மூலம் தீர்வு காண்பதில் முழுப்பலத்தையும் வல்லரசு மேலாதிக்க நாடுகளின் உதவி ஒத்தாசைகளுடன் பிரயோகித்துக் கொண்டது. அதனால் தமிழ் மக்கள் வரலாறு காணாத அழிவுகளையும் அவலங்களையும் அனுபவிக்க நேர்ந்தது. இன்றும் அவற்றிலிருந்து மீளமுடியாத மக்களாகவே வடக்கு கிழக்கு மக்கள் இருந்து வருகின்றனர். இவ்வாறான அழிவுகள் இழப்புக்கள் இடம்பெயர்வுகளுக்கு தொடர்ந்து வந்த பேரினவாத தரகு முதலாளித்துவ ஆளும் வர்க்க ஆட்சிகளும் அவர்களுக்கு அரவனைப்பு வழங்கிய இந்திய அமெரிக்க மேற்குலக நாடுகளும் மட்டுமன்றி சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளும் பங்காளிகளாவர். அதேவேளை தமிழ் மக்களுக்கு தலைiமை தாங்கி வந்த அனைத்துத் தலைமைகளும் குறிப்பாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் யதார்த்தமற்றதும் மக்கள் சார்பற்ற அரசியல் இராணுவ அராஜகப் போக்குகளும் காரணம் என்பதை இலகுவில் தட்டிக்கழித்துவிட முடியாது. யுத்தம் முடிவுற்று தாம் வெற்றி பெற்றதாகக் கூறிக்கொண்டபோதும் தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படுவதை மறுத்து இராணுவ ஒடுக்குமுறையின் கீழேயே வடக்கு கிழக்கையும் தமிழ் மக்களையும் வைத்திருப்பதிலேயே மஹிந்த சிந்தனையானது முனைப்புடன் இருந்துவருகின்றது. அதனை மக்கள் சார்பாகவும் மக்களோடு இணைந்து நின்றும் எதிர்ப்பது நேர்மையான ஒவ்வொரு பொதுவுடைமைவாதியினதும் இடதுசாரி என்போரினதும் கடமையாகும். அதேவேளை தமிழ்த் தேசியவாதம்; என்ற குறுகிய தேசியவாத நிலைப்பாட்டால் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கு வழிகாட்ட முடியாது என்ற உண்மையும் யதார்த்தமும் மக்களுக்கு உணர்த்தப்படவேண்டும். இதுவரை எந்தவொரு தமிழ்த்தலைமையும் தமது கடந்தகாலம் பற்றி எவ்வித விமர்சனம் சுயவிமர்சனத்தையும் முன்வைக்கத் தயாராக இல்லை. தங்களது கொள்கைகள் வழிகாட்டல்களால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கும் இழப்புக்களுக்கும் தகுந்த மன்னிப்பைக்கூட கேட்கத் தயாரில்லாத நிலையிலேயே தொடர்ந்தும் தமிழ் மக்களின் தலைவர்களாகத் தமிழ்க்கட்சிகள்  தலைமைத்தாங்க முன்னிற்கின்றன. இது அன்றிலிருந்து இன்றுவரையான பழைமைவாத ஆதிக்க அரசியலை குறுந்தேசிய வாதமாக முன்னெடுப்பதன் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது.
எனவே வர்க்கப் போராட்ட அரசியல் மார்க்கத்தில் உழைக்கும் மக்களின் தலைமையிலான பரந்துப்பட்ட வெகுஜன எழுச்சியும் போராட்டங்களுமே இன்றைய சூழலில் முன்னெடுக்கப்பட வேண்டியதாகவுள்ளது. இப்பாதையிலேயே சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க முடிவதுடன் அதற்கான போராட்டமானது சிங்கள முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் ஆகிய அனைத்து உழைக்கும் மக்கள் முன்னெடுக்கும் வெகுஜனப் போராட்டங்களுடன் இணைத்தும் ஒன்றையொன்று ஆதரித்தும் முன்னெடுக்கப்படல் வேண்டும். தெற்கில் முன்னெடுக்கப்படும் ஜனநாயகத்திற்கான உழைக்கும் மக்களின் போராட்டங்களுடன்    வடக்குக் கிழக்கின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்கள் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும். அதே போன்று வடக்குக் கிழக்கில் தெற்கிலே முன்னெடுக்கப்படும் ஜனநாயகத்திற்கு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் இணைக்கப்பட வேண்டும். இவற்றுக்கான மாற்றுக் கொள்கையும் மாற்றுத் தலைமையும் மாற்றுப் போராட்ட மார்க்கமும் முன்நிலைக்கு வரவேண்டும்.
Thanks to http://www.athirady.info

Sunday, November 27, 2011

மாவீரன் விடைபெற்ற நாள்! 27 கார்த்திகை 1989







    வசதிகள் மிகக் குறைந்த ஒரு சின்ன வீடு தான் "சத்தியமனை". அது எங்கள் எல்லாராலும் அமைக்கபட்டது . பல வரலாறுகளை அதனுள் கொண்டுள்ளது.சிறு வயதில் அந்த வீட்டை சுற்றி மேதின ஊர்வலம் நடத்தியதும், "சிறுபொறி" பத்திரிகை நடத்தியதும், உண்டியலில் காசு சேர்த்து கட்சிக்கு கொடுப்பதும் , பல தலைவர்கள் கூடி பேசியதும் , வெற்றிகள், கவலைகள், கண்ணீர் , இரத்தம் எல்லாம் பார்த்த வீடு. மிக வறுமையிலும் சத்தியம் மட்டும் என்றும் குறைந்ததில்லை. அங்கு அப்பா தன்னுடைய நீண்ட காலத்தை தொடர்ந்து கழித்தார். ஏனெனில் பல வாடகை வீடுகளில் இருந்த போது எல்லாம், பொலிசாரின் கெடுபிடிகளால் தொடர்ந்து ஒரே வீட்டில் வசிக்க முடியவில்லை. இது எங்கள் மாமா ,தனது சகோதரியான எங்கள் அம்மாவுக்கு வாங்கி கொடுத்தது. வீட்டு உரிமையாளர் பிரச்னை இன்றி வசிக்க முடிந்தது.
    அப்பாவின் நேர்மைக்கும் , வீரத்துக்கும், தீர்மானத்துக்குமான பல நிகழ்வுகள் பற்றி தோழர்களும், எங்கள் அம்மாவும் சொல்ல கேட்டதுண்டு,பார்த்ததுமுண்டு. , ஆனால் இது என்கண் முன்னால் "சத்தியமனை " இல் நடந்த நிகழ்வு.
     1988 இன் இறுதி பகுதிகள் ,எனது மகள் பிறந்து மிக சில மாதங்களே ஆகியிருந்தது. அப்பா கடும் சுகவீனமுற்று யாழ் திரும்பி இருந்தார். இந்தியன் ஆர்மி இன் கெடுபிடிகள் அதிகமாக இருந்த நேரம். தெற்கில் சிறிமாவோ எதிர் கட்சியாக இருந்துகொண்டு , தனது தேர்தல் வாக்குறுதியில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக இந்தியன் ஆர்மியைவெளியேற்றுவோம்  என்று தெரிவித்திருந்தார்கள். முற்போக்கு அணிகள்  அனைத்தும் இணைந்து இந்தியன்ஆர்மிக்கு  எதிரான வெளியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்தன. வினோதன், மோதிலால் நேரு, குமார் ,பொன்னம்பலம் என பலரும் அப்பாவுடன் இதுபற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். விடுதலை புலிகள்  அமைப்பும் இதற்கு அதரவாக இருப்பதாக இடையில் இருப்போர் தெரிவித்தனர் . அங்கு இருந்த மாத்தையா ,பிரபாகரன் பிளவு பற்றி தெரிந்திருக்கவில்லை. சிறிமாவோவை   யாழ்பாணத்துக்கு அழைப்பதற்கான முடிவை கட்சி எடுத்தது. மொழிபெயர்பாளராக கட்சியின் ஆதரவாளரான  மாமா ஒருவரை அழைப்பதாகவும்  தீர்மானித்தனர் .

கூட்டத்துகு முதல் நாள் கட்சியின் அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களும்  வந்திருந்தனர். மாலை கருகிய நேரம் திடீரென விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த தும்பனும், முன்னர் புளட் அமைப்பில் இருந்த வெற்றி என்கிற பையனும் ஆயுதத்துடன் வந்திருந்தனர், தும்பனை எனக்கு பாடசாலை  காலத்தில்  இருந்து  தெரியும் அதே போல வெற்றியையும் தெரியும். வந்ததும் என்னிடம் தான் தும்பன் கேட்டார் , "உங்கள் அப்பாவுடன் பேசவேண்டும்" என்று ,அப்பா அறையில் இருந்தார் ,தும்பன் கொண்டு வந்த துப்பாக்கியை வாசல் கதவில் வைத்துவிட்டு ,வெற்றியையும் வாசலில் விட்டுவிட்டு உள்ளே வந்து ,சுற்றிவளைப்பு  இன்றி "நீங்கள் நாளைக்கு கூட்டம்  நடத்துவதை இயக்கம் விரும்பவில்லை "என்றார் .அதற்கு அப்பா " இது பற்றி நாங்கள் நீண்ட நாட்களாக பேசி வருகிறோம் , இப்போது  இந்தியன் ஆர்மியின் வெளியேற்றம் என்பது அவசியம் " என்றார். அதற்கு தும்பன் " ஐயா இது எமது இயக்கத்தின் முடிவு, நீங்கள் நல்லவர் என்பது எங்களுக்கு தெரியும்,பொட்டரும்(நடராஜ ) நல்லவர் தான் ஆனால்  அவரை போட்டது நாங்கள் தான் . அதாலை இதை நிறுத்துங்கோ " என்றார். அதற்க்கு அப்பா,மிக நிதானமாக , மிக தீர்மானமாக உயிரை பற்றிய கவலையற்று  " இது இரவு நேரம், ஊரடங்கு வேளை வேறு, அவர் ஒரு நாட்டின் தலைவி ,காலையில் போய் இங்கு வராதை என்று சொல்ல முடியாது., இது அவசியம் என்று கருதுவதால் தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். ஒன்று நீர் செய்யலாம், என்னை சுட்டுவிட்டு போம், சிலவேளை கூட்டம்  நடக்காமல் போகலாம்" என்றார், "நான் சொல்றதை சொல்லிவிட்டேன் .."என்றபடி தும்பன் சென்றுவிட்டார். மீண்டும் கட்சி தோழர்களுடன் அப்பா கலந்தாலோசித்தார். (அந்த இடத்தில் நான் இருக்கவில்லை. ஆனால்  என் கணவர் இருந்தார்.அது பற்றி நான் விபரிக்கவில்லை. )இரவு யாரும் சரியாக தூங்கவில்லை. ஆனால் கலையில் கூட்டம் இருப்பது உறுதியாகியது .

    அதிகாலை அப்பா வழமைபோல தூய வெண்மை வேட்டி, சட்டையுடன் தயார் ஆனார், இரவு நடந்த பிரச்னை பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. பல தோழர்கள் மேடை அமைப்பதற்காக பண்டதெருப்பு இந்து கல்லுரி மைதானத்தில் இருந்தனர். சுமூகமான சூழல் உள்ளதா என்று அறிவதற்காக அவர் தனியாக புறப்பட்டார். மொழிபெயர்க்க வந்த தோழருக்கும், கட்சியின் முக்கிய ஒரு உறுப்பினருக்கும்  சடுதியாக நடுக்கத்துடன் காச்சல் வர, அவர்கள் வரவில்லை, மற்ற தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கூட்டத்துக்கான ஆயந்தங்களில் ஈடுபட்டனர்.  எனது குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் முடிந்திருந்தது. நானும் வருகிறேன் என்று அப்பாவிடம் சொன்னேன் முதலில் மறுத்த அவர் வற்புறுத்தலின் பின் சம்மதித்தார். நானும், அப்பாவும் மீண்டும் திரும்பி வருவோம் என்கிற நம்பிக்கை என்மனசில்  இல்லாமல் "சத்தியமனை"  இலிருந்து வெளியேறினோம் .......
    "சத்தியமனை இலுருந்து இரண்டு சைக்கிளில் புறப்பட்டோம். சுழிபுரம் பிரதான சாலை, துரையப்பா கடை, இடும்பன் கோவில் சந்தி வரை ஆர்மியை காணவில்லை. அதில் இருந்த ஆர்மி எங்களை மறித்து சோதனை செய்தது . எங்கும் கூட்டத்தை பகிஷ்கரிப்பதற்கான சுவரொட்டிகள் இல்லை. பண்டதெருப்பு இந்து கல்லுரி மைதானத்தில் சில தோழர்கள் இருந்தார்கள்.அவர்களுடன் கதைத்துவிட்டு ,பண்டதெருப்பு பெண்கள் பாடசாலைக்கு போனோம். அங்கு தேவர் அண்ணையின் மனைவியும், மகனும் ஒரு உறவுப் பெண்ணும் இருந்தார்கள் .அவர்களுடன் ரத்வத்தை , கல்கட் சேர்ந்து சிறிமாவோவை அழைத்துகொண்டு மீண்டும் பண்டதெருப்பு இந்து கல்லுரி மைதானத்துக்குள் வந்தோம். உண்மையில் நான் அவ்வளவு ஜனக்கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. கடுமையான உடல் உபாதையின் மத்தியிலும் மிக உற்சாகமாக அந்த கூட்டத்துக்கு அப்பா தலைமை தாங்கினார். சிறிமாவோ "இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம்" என்றபோது ஜனக்கூட்டம் கைதட்டல்களுடன் ஆர்ப்பரித்து அடங்கியது .இதனை சுற்றி நின்ற இந்திய இராணுவம் பார்த்து நின்றது. கூட்டம் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்த காணொளி.................
    விடுதலை புலிகளால் அச்சுறுத்தல் இருந்ததை ஸ்ரீமவோவும் இந்திய இராணுவமும் அறிந்திருந்தார்கள். அதனால் சிறிமாவோ அப்பாவை கொழும்பு வரும்படி வற்புறுத்தினார். அதனை மறுத்து வெளியில் வந்த அப்பாவிடம் இந்திய இராணுவம் தாங்கள் பாதுகாப்பு தருவதாக கூறினார்கள். " உங்களை வெளியேற்றுவதற்காக தான் இந்த கூட்டத்தையே ஏற்பாடு செய்தோம் . " என்று மிக தெளிவாக ,தீர்மானமாக சொன்ன அப்பாவை மிக பெருமையுடனும்  கர்வத்துடனும்  பார்த்தேன். அந்த   உயர்ந்த மனிதனை நான் பொக்கிசமாக காக்க வேண்டும் என்று உணர்ந்தேன். நானும் அவருடன் செல்ல ஆயத்தம் ஆனேன். "நீங்களும் வரவேண்டாம் உங்களை தொடர்வதன் மூலம் தான் சிக்கல்கள் ஏற்படும் , நான் கவனமாக இருப்பேன். நீங்கள் போங்கோ "என்று முற்றாக மறுத்துவிட்டார்.
    சில மணி நேரங்களின்  பின்னர் , அப்பா ஒரு விடுதலை புலியின் வீட்டில் தான் தொடர்ந்து சில நாட்கள்  இருந்தார். நான்  அங்கு சென்றும் பார்த்து வந்தேன். பின்னர் வந்த மேதின கூட்டத்தில் பங்கு பற்றியதும் , கடைசியாக சத்தியமனை " இல் இருந்து வெளியேற  வேண்டிய சூழல் பற்றியும் தொடர்வேன்.

27  கார்த்திகை:  விடுதலை புலிகளாலும், அநேக தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் "மாவீரர்" தினம்.  எங்கள் அப்பாவின்  அந்த பெருமை மிகுந்த இல்லத்தை ஒரு நூலகம் ஆகவும், குழந்தைகளின் விளையாட்டு  இடமாகவும்  மாற்றவேணும், . காலம்  முழுவதும் , அந்த உயர்ந்த மனிதனின்  சத்யம்  வாழ்ந்த  இடமாக  அது  இருக்க  வேண்டும்!

திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன்  27 November  2011

Wednesday, November 23, 2011

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு தினம் 27-11-2011

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 22ம் ஆண்டு நினைவு தினம் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.
மலர்வு:----05-03-1931                                                   உதிர்வு:----27-11-1989

K.A.Subramaniam's 22nd  Anniversary Memorial Lecture will be held at 5pm 
on Sunday 27 November 2011
Venue: 571/15 Galle Road Colombo 06, Sri Lanka

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது

Sunday, November 20, 2011

மணியம் ஒரு மானிட அரும் பூ. -வள்ளியம்மை சுப்பிரமணியம்

கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவு 22 வருடங்கள் (அமரர் 27 கார்த்திகை 1989) ,.......... 

  மலர்வு:----05-03-1931                                                   உதிர்வு:----27-11-1989
  
மணியம் ஒரு மானிட அரும் பூ....
--------------------------------------------------------------------------
தஞ்சை இளவரசியின் குதிரைமுகம் மாறிய மாவிட்டபுரத்தில் பிறப்பூ
பிஞ்சு வயதில் தமக்கையார் குடுப்பத்துக் கொழும்பில் வளர்ப்பூ
சென் - ஹென்றீஸ் கல்லூரியின் மாணவனாக ஆங்கிலப் படிப்பூ
தன்னுடன் படிக்கும் ந்ண்பன் கோவிலுக்குள் வரத்தயங்கிடத் தவிப்பூ

காங்கேயன் - சீமெந்து ஆலையில் பொறியியல் பயிலுநராய் நியமிப்பூ
அங்குள்ள உணவகத்தில் குறிப்பிட்ட சாதியினரைத் தள்ளியதால் பதைப்பூ.
மேட்டுக்குடி மக்களுக்கு மாத்திரமே கதவுகள் திறப்பதால் பக்தியில் வெறுப்பூ
ஆட்டிப் படைக்கும் மதசம்பிரதாயம் மனிதனுக்கு அவசிய மில்லையெனத் துறப்பூ.

இடதுசாரிக் கொள்கைகளில் சமத்துவம் கண்டு ஈடுபட விருப்பூ
நடக்கும் பாதையை வழிமறிக்கும் நில ஆதிக்க நீசர்களில் கடுப்பூ
ஊர்வலம்,போராட்டம் நடக்கையில் ஊக்கமான துடிப்பூ
ஊர்வாய்க்கு அடங்கி ஒடுங்கி கூனிக்குறுகுவோர்க்கு மறுப்பூ.

ஆட்சியினர் எலும்புகளை அடித்து நொருக்கினாலும் முகத்திலே ஒரு சிரிப்பூ
வீழ்ச்சி ஒருபோதும் மானிடத்தை ஒடுக்காதென்பதில் தொடர்ந்த -உழைப்பூ.
மாற்றியக்கத் தோழர்களும்    நாட்டுநலன் கொண்டால் கைகோர்க்க முனைப்பூ
நாற்றிசையும் ஐக்கியத்தை வலுப்படுத்த நாவசைக்கும் மனிதப் பண்பூ.

மணவாழ்வில் மறுக்காது தன்னுடன் வழிநடப்பாள் என்ற அன்பூ
இணக்கமான இருதயம் இருப்பது கண்டு உறுதியான மண முடிப்பூ.
கற்கைநெறி மானிட விழுமியத்தை நேசிக்கத் தொடர் வகுப்பூ.
முற்போக்குச் சக்திகளுடன் சகலரையும் இணைப்பதில் ஒத்துழைப்பூ.

 “தாயகம்” இலக்கிய இதழை ஆரம்பித்து ஆயுள்பரியந்தம் தலையங்க வடிப்பூ
தகாத செயல்கண்டு விட்டால் தட்டிக்கேட்டு விசாரிக்கும் கண்டிப்பூ.
கருத்தரங்கம்,நூல் வெளியீடு,பத்திரிகை வளர்ச்சி கண்டு பூரிப்பூ.
விரும்பாத வீணர்போல் சோறுண்டு மரணிக்க விரும்பாத அரும் பூ.
                                                                                                          --------------.
                                                                                                             வள்ளியம்மை சுப்பிரமணியம்


Tuesday, November 15, 2011

தோழர் சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

தோழர்  சிவதாசன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி 

தோழர் சங்கரப்பிள்ளை . சிவதாசன் அவர்கள் 1934ம் ஆண்டு கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தில் பிறந்து -கண்டி மாநகரத்தில் கல்விகற்று , தேசிய ஒருமைப்பாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் ஒத்துழைப்பு வழங்கியவர். 
 
 தோழர் சிவதாசன் அவர்கள், தோழர் கே.ஏ. சுப்ரமணியத்தின் அன்பு மைத்துனரும் மிக நெருங்கிய பால்யகாலத்து நண்பரும் ஆவார். இருவரும்  முற்போக்கு வாலிபர் இயக்கங்களில் இணைந்து பங்கு கொண்டவர்கள். அவர்களது உறவு , அவரது இறுதிகாலம் வரை குடும்ப உறவாக நீடித்தது. பல மொழிகளில் மிக பாண்டித்தியம் பெற்றிருந்தார். பாராளுமன்ற  உறுப்பினர் ஆக பதவி வகித்த காலத்தில் எம் மக்களுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை செய்தார். அவரது ஆத்மா சாந்தி பெற, அவர் விரும்பி நேசித்த "சத்தியமனை" தனது துக்கத்தை தெரிவித்துகொள்கிறது. 

தோழர் சிவதாசன் அவர்களுக்கு.........திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் கவி-அஞ்சலி
இளமைக் காலத்தில் இணைந்தாய் பொதுவுடமைப்
பழக்க மொழியூடே பங்கேற்பில் தேர்ந்திருந்தாய்
முழுக்கச் செயற்பட மூச்சாகக் கருமமாற்ற....
மாற்றுஅணி சேர்ந்து மனமுடைந்து போகாமல்....
ஆற்றுகின்ற சேவையது ஐக்கியத்தின் வெளிப்பாடு
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார்
தூற்றட்டும் என்ற திடத்துடனே நாடாளுமன்றத்திலும்
உந்தன் குரலையும் உரிமையுடன் ஒப்புவித்தாய்
தலைமையேற்றாய் 'கற்பகத்தின்' வளர்ச்சியிலும்
இயன்றவரை தமிழ்மக்கள் இன்னல்பல நீக்க......
முயன்று செயற்பட்டு மூச்சையும் வெளிப்படுத்தி
முகங்கொடுத்த இன்னல்கள்..... முரணான காலத்திலும்   
உன்தன் பங்களிப்பை உரியகாலம் செய்ததனால் 
நன்றியுடன் நினைவுகூரும் நல்லுளங்களில் வாழ்கின்றீர்.

திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம்15 Nov 2011

Sunday, October 30, 2011

யாழ்ப்பாணத்தில் சமத்துவ நீதி ஓங்கப் போராடிய களப் போராளி சங்கானை நிற்சாமத் தோழர் பொ. றாதா

 




Birth   1952.08.18  Comrade P. Radha Death 2011.10.30


18-08-1952 தோழர் பொ. றாதா  30-10-2011










யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1970களின் கால கட்டத்தில் நடந்த அப்போராட்டத்தில் கலந்து கொண்ட முன்களப் போராளி
சங்கானை நிச்சாமத் தோழர் பொ. றாதா
...
சங்கானைக்கு என் வணக்கம் !


"எச்சாமம் வந்து எதிரிஅழைத்தாலும் நிச்சாமக்கண்கள் நெருப்பெறிந்து
நீறாக்கும் குச்சுக் குடிலுக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன்
சங்கானை. மண்ணுள் மலர்ந்த மற்றவியட்நாமே உன் குச்சுக்குடிலுக்குள்
குடியிருந்தகோபத்தை மெச்சுகிறேன் மெச்சுகிறேன்" - கவிஞர் சுபத்திரன்







Thursday, October 6, 2011

யாருக்கு விருது?

  யாருக்கு விருது?
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
காலுடைந்து போனபின்னும் சக்கர நாற்காலியில் சாதிக்க வேண்டுமென
நாலு கி.மீ  ஓட்டத்தில் முதலிடத்தில் வந்து களைத்தவர்க்கு -
 
நாலிரண்டு வருடங்கள் தோல்விமேல் தோல்விகண்டு நம்பிக்கையில்
காலூன்றி நின்ற தாய்க்கு இரட்டைக் குழந்தைகள் கிடைக்கவைத்த மருத்துவர்க்கு -
 
வாலறுந்த பட்டம்போல் வாழ்வில் குறிக்கோளற்ற ஊதாரி இளைஞனுக்கு
மேலும் மனிதனாக வாழலாமென்று வழிவகுத்த மஞ்சள்நாடா குழுவினர்க்கு -
 
சின்னஞ் சிறுவயதில் சிந்திக்கும் திறனை வளர்த்த பெற்றோரின்
சொன்னசொற் தவறாது வளர்ந்து தன்நாட்டிற்குப் பெருமைசேர்த்த மகளுக்கு -
 
விஞ்ஞான ஆராய்ச்சியினால் விண்வெளியில் தடம்பதித்து மீண்டு
அஞ்ஞானம் அகல அனைவர்க்கும் வழிகாட்டும் அணுவிஞ்ஞானிக்கு -
 
சும்மா கிடைத்தால் அதன்பெயர் விருது அல்ல; அதைக்கருதி
தம்மால் இயன்றவரை அடுத்தடுத்து முயன்றபின்னும் தோல்விவர
“அம்மா” எனப் பெருமூச்சில் அவன்கண்ணால் மழைபொழியத் துவளாமல்
நம்மால் முடியுமென்ற நம்பிக்கை நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டவர்க்கே!
 
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

Wednesday, September 21, 2011

வள்ளியம்மை சுப்பிரமணியம் 75வது பிறந்தநாள் 07/10/2013

வள்ளியம்மை சுப்பிரமணியம்,  தனது 75 வருடங்களை மிகச் சிறப்பாக கடந்துள்ளார். இன்னும் பல் ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.!

தமிழின் மேலும் ,இலக்கியத்தின் மேலும் தீராக் காதல் கொண்டு   ' பண்டிதர் ' படிப்பை தொடர்ந்த காலத்தில் 1955 இல் கே .ஏ. சுப்பிரமணியத்துடன் அறிமுகம் .
சாதீய,பொருளாதார ,பிற்போக்கு  எல்லைகளைத் தாண்டிய - காதல் 
ஆச்சாரமான ,சடங்கு சம்பிரதாயங்களுடன் வளர்ந்து பின்  - வடபுலத்தின் மார்க்கசிய இடதுசாரியுடன் - -சீர்திருத்தக் கல்யாணம் 1962.
தாலியாக 'அரிவாள் சம்மட்டி சுமந்து  , உப்புச் சிரட்டையும் தாங்களே தேடி -அந்நிய ஊரில் தனிக்குடித்தனம் ..
சாதி எதிர்ப்புப் போராட்டம் 1966, மேதின மறுப்புப் போராட்டம் 1969
காவல் துறையினரின் எல்லை மீறிய பொல்லடிகள் , ரணமாகிய கணவர் -மூன்று  குழந்தைகள்- ஆசிரியத் தொழில் இவற்றையெல்லாம்  சிரித்த முகத்துடன் சகித்து ,வீட்டை வரும் தோழருக்கெல்லாம் உணவு பகிர்ந்து நீங்கள் வாழ்ந்த வாழ்வு மகத்தானது.அடிக்கடி தலைமறைவு வாழ்வு ,அநீதிக்கெதிரான போராட்டம் என கணவரின் வாழ்வு தொடர - கட்டாய மொழிச் சட்டத்தினால் வேலைக்கு இடைஞ்சல் வர ,முழு நேர ஊழியரான கணவர் -வருமானத்திற்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் -சிங்களம் படிக்க சென்று ,- அதன் தொடர்பால் ஈழப்போராட்ட முன்னோடிகளின் உறவு வளர்ந்து ,மூத்த மகன் போராளியாக, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் தந்தை ,தனியுரிமை கேட்கும் மகன் , என தவித்துப் புலம்பி - காவல்துறையின் அட்டகாசங்கள் குறைந்து - இராணுவத்தின் தொல்லை ஆரம்பமாகியது. 72 மணிநேர ஊரடங்கு உத்தரவின்போது 1984 மகன் சிறைப்பட - அடிபட்ட உள் காயங்களினால் நோயாளியான கணவர். - இயக்கங்களிடமிருந்தும் ,இராணுவத்திடமிருந்தும் காப்பாற்ற வேண்டிய வயதில் மற்ற இரு குழந்தைகள் ., வறுமை - நோய்  இவற்றுடன் வாரம்தோறும் இராணுவ முகாம்களுக்கு சென்று மகனின் நிலையறிய வேண்டிய நிர்பந்தம்  பல பல போராட்டங்களே  வாழ்வாகிப் போனது.4 வருடங்களின் பின்னர் மகன் 1988 சிறை மீண்டான் என சந்தோஷிக்க முடியாமல் , அச்சுறுத்தலினால் தலைமறைவு வாழ்வை மேற்கொண்ட கணவரின் மரணம் 1989. அராயகதிற்கு கட்டுப்பட முடியாமல் 1991 இடப்பெயர்வு. பின் இளைய மகனுடன் சிங்கப்பூர் பயணம் 1993.  மீண்டும் எழுத்தத் தூண்டிய சிங்கப்பூர், கணணி அறிவூட்டி , 'கவிமாலை'யில் இணைத்தது . அன்பு மகள்-திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன் 6 October 2013

72வது பிறந்தநாள் காணொளி 07/10/2010 சிங்கப்பூர்



அம்மா 
நீ நடந்த காலடி தடங்களில்,
தேங்கிய வியர்வைஉடன் 
சேர்ந்து - கண்ணீரும்  சொல்லும் 
உன் கடந்த காலம்.- 
வேலையால் வீடு திரும்பி 
உடுத்திய புடவையை 
கதவில் போட்டால்,
மறுநாள் வேலை செல்லும் வரை 
கால்களில் சக்கரம் தான்.
பச்சை தென்னம் மட்டையை 
இரவு தணித்த நெருப்பில் காய வைத்து 
பால் கறந்து , வீடு பெருக்கி 
எங்களை குளிக்க  வார்த்து 
சாப்பாடு தந்து அப்பாக்கு மருந்தும் தந்து
வீடுக்கு வரும் தோழர்களை வரவேற்று 
இன்முகம் காட்டும் அம்மா.
அனேகமாக முருங்ககை குழம்பும் 
வாழைக்காய் பொரியலும் தான் சாப்பாடு
இரண்டுமே வீட்டில் இருக்கும்.
கிணறு கலக்கி இறைத்து  சாம்பிராணி இடுவதில் இருந்து , 
மாவு இடித்து இட்டியப்பம் அவித்து 
ஓலை பின்னி வேலி அடைப்பது வரை நீதானம்மா .
 நீ தூங்கி நாம் பார்த்ததில்லை .
பலகாலம் நீ படித்தவ என்பதே எமக்கு தெரியவில்லை , 
எல்லாமே அப்பா தான் - என்று உணரவைத்தாய் .
அப்பாவை போலீஸ் தேடிய காலங்களில் 
பல பல வீடுகள் மாறினோம் .
வாடகை வீடுக்கு நீ பட்ட கஷ்டம் அன்று 
எமக்கு உணரும் வயசில்லை.
இளம் வயதில் தனி மாதாக -நீ 
பட்ட கஷ்டம் புரியவில்லை.
துரத்தும் போலீஸ் உம் , நகையாடும் உறவுமாய் 
நீ வாழ்ந்த வாழ்வு, காதலின் வெற்றி!
எமது நாட்டின் இரண்டு பெரும் சகாப்தங்களின்
 வாழ்வு நாயகி நீ.
கொள்கைக்கு மாறுபட்ட குழந்தையும் 
கோபமுறும் கணவனும் ,
பகல் பொழுதில் மார்க்சியம் பேசும் தோழர்கள் 
இருட்டில் பிரிவினை கேட்கும் குழந்தைகள்
சமையலே உன் வாழ்வாகி போனது. 
வறுமையின் உச்சத்திலும் நீ வாடி 
நாம் பார்த்ததில்லை. 
மக்கள்  கழக சுந்தரம், சந்ததியார் தன்னுடனே 

சிங்களமொழி வகுப்பில் சேர்ந்து படித்தாய்
பீட்டர் கெனமன், சண்முகதாசன்  மாமா  இலிருந்து  
சிறிமாவோ பண்டாரநாயக்கா வரை பழகி இருந்தாய்
மக்களுக்கா  அமரர் ராஜீவ் காந்தி  இலிருந்து
மகிந்த ராசபக்ச வரை கடிதம் எழுதி இருந்தாய் 
சாதி எதிர்ப்பு போராட்டத்தில் படுகாயம் பட்ட 
அப்பாவை - மூன்று சிறு குழந்தைகளுடன் 
குழந்தையாய் காப்பாற்றினாய் .
பின் மே தினம் ஒன்றின் (1969)பெரும் போரட்டத்தில் 
சிதறிய அப்பாவின் அங்கங்களை ஒட்டவைத்தாய் .
அம்மா,
ஓய்வு பெறும் வயதில் சிறைச்சாலை தோறும் சென்று
அண்ணாவை பார்த்து வந்தாய்.
இடை மறிக்கும் போலிகள், 
உளவு சொல்லவா என்று கேலி பேசும் போது 
அரசியல்  தெரியாத அந்த கூட்டத்துக்கு 
வரலாறு சொன்னது கேட்டு மலைத்து நின்றிருக்கிறேன்.
பிரிவினையை வெறுத்த அப்பா -இந்திய இராணுவம் 
வெளிச்சத்திற்கு வந்த வேளை-இல்
கோபு மாமா உதவி கேட்டு வந்தார்
பத்திரிகை வெளி வரவும் உதவியதுடன் 
குண்டுகளின் சிதறல்களின் நடுவே  
உணவும் சமைத்து கொடுத்தாய் , பயந்தோடவில்லை.
புன்சிரிப்பும் பொறுமையும் உன் ஆயுதங்கள் 
உன் அளவுக்கு எனக்கு ஆளுமை இல்லை ,
அறிவும் இல்லை ஆனால்
இன்றுவரை உனக்காக ஏதும் நான் செய்ததில்லை.
நேற்று கூட உன் ஓய்வூதிய பணம் எனக்கு வந்தது.
உனக்கான என்  கண்ணீரை கூட -இதுவரை 
நான் காட்டியதில்லை .
எழுபதுகள் கடந்தும் ஏற்றமாக இருக்கிறாய் அம்மா.
அன்பு அனைத்தையும் வென்றிடும் என்று சொல்லுவாய் .
முயற்சிக்கிறேன் முழுமையாய் வாழ.
உங்கள் வளர்சிக்கும , மகிழ்ச்சிக்கும் காரணமான 
என் தம்பிக்கு நன்றிகள் .
இன்று அப்பாவும் அண்ணாவும் இல்லை- அனால் 
மரணத்தின் பின்பும் அவர்களை வாழ வைக்கிறீர்கள்
நிறைய வாசியுங்கள், எழுதுங்கள். 
உங்கள் வாழ்வின் வெற்றி சத்தியமனையின் வெற்றி!
நூறாண்டு   வாழ வாழ்த்துகிறேன்.
அன்பு மகள்-திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன் 4 October 2010

Wednesday, September 7, 2011

சிங்கப்பூர் கவிஞர் பா.திருமுருகனின் "ஊதாங்கோலும் ஒரு துண்டு நெருப்பும்" கவிதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா

சிங்கப்பூரில் நூல் அறிமுக விழா
செப்டம்பர் 05,2011,16:50  IST

 
சிங்கப்பூர் : சிங்கப்பூர் கடற்கரைச் சாலை கவிமாலை அமைப்பின் ஏற்பாட்டில் கவிஞர் பா.திருமுருகனின் "ஊதாங்கோலும் ஒரு துண்டு நெருப்பும்" கவிதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா செப்டம்பர் 04ம் தேதியன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. முற்றிலும் புதுமையாக மகளிரே நடத்திய இவ்விழா, இலக்கியா மதியழகனின் தமிழ் வாழ்த்துடன் முனைவர் சத்திய பாமா முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் துவங்கியது. கவிஞர் கலையரசி செந்தில்குமார் வாழ்த்துப் பா வாசித்தளித்தார். தொடர்ந்து முனைவர் தேன்மொழி சண்முகவேல் நாட்டுப்புறப் பாடல் பாணியில் பாடி வாழ்த்துரை வழங்கினார். பல்வேறு இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி தற்கால இளம் கவிஞர்கள் புதுமை படைப்பதிலும், புதிய உத்திகளைக் கையாளுவதிலும், மனிதநேயப் பண்பாட்டிலும் சிறந்து விளங்குவதை முனைவர் சரோஜினி செல்லக் கிருஷ்ணன் எடுத்தியம்பி நூலாய்வுரை நிகழ்த்தினார். நூல் வெளியீட்டிலும் புதுமை காணப்பட்டது. ஒரு நாட்டுப்புற விறகு அடுப்பில் பானையில் நூலைப் போட்டு, மகளிர் சிறு பானை நீர் வார்க்க, வெளியீட்டாளர் டாக்டர்.இ.மாலதி ஊதாங்கோல் ஊத நூல் முகிழ்ப்பது போலக் காட்சிப்படுத்தியது அருமையிலும் அருமையாக அமைந்தது. சிங்கை தேசிய நூலக வாரிய அதிகாரி புஷ்பலதா கதிர்வேலு முதல் நூலைப் பெற, மலர்விழி ஜோதிமாணிக்கவாசகம், இந்திரா சுப.திண்ணப்பன், சந்திரா புருஷோத்தமன், சுதா இறைமதியழகன், வள்ளியம்மை சுப்பிரமணியம், அம்பை ஆ.பால சரஸ்வதி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டு நூலாசிரியரை வாழ்த்தினர். திலகவதி அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். கவிஞர் சங்கரி சரவணன் சுவைபட நிகழ்வினை நெறிப்படுத்தினார். திரளான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, கவிஞர் பா.திருமுருகனின் ஏற்புரையோடு நிறைவுபெற்றது.
- நமது செய்தியாளர் வி.புருஷோத்தமன்
Thanks to            http://www.dinamalar.com/
 

Sunday, August 28, 2011

ஏணியும், தோணியும்.

ஏணியும்,  தோணியும்.
                       ‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
ஏணி உதவுகிறது மேலேபோகக் கீழேவர.....
தோணி செய்கிறது கரையேறக் கரையிறங்க....
ஆணிகள் ஓட்டைகள் அடிக்கடி சரிபார்த்துப்
பேணிப் பாதுகாத்து நிலமட்டம், நீர்ச்சுழற்சி, காற்றழுத்தம் - கண்
காணிக்க வேண்டியது மனிதனின் செயற்பாணி!
 
 

Monday, July 25, 2011

22 வருடங்களின் பின்பு மறுபிரசுரம்: 1989 இல் அமரர் சத்தியராஜன் ( மீரான் மாஸ்ட்ர்) எழுதிய கடிதம்

காலஞ்சென்ற தோழர்-கே-ஏ-சுப்பிரமணியம் அவர்களது மறைவையொட்டி அன்னாரது மகன் காலஞ்சென்ற சு-சத்தியராசன் அவர்கள் மலேசியாவிலிருந்து 29-11-1989 ல் எழுதி, தந்தையின் நினைவு மலரில் வெளியான கடிதத்தை, இங்கு மறுபிரசுரம் செய்கிறோம். திரு-சு-சத்தியராசனின் 10ம் ஆண்டு நினைவுதினம் எதிர்வரும் 25-08-2011ல் நடைபெறவுள்ளது.

தந்தையின் நினைவாக...........

----------------

’ சத்தியமனைக்கு’

1989-11-29 இரவு மலேசிய நேரப்படி எட்டுமணியளவில், இதயத்தைப் பிளந்து,குருதியைக் கொப்பளிக்க வைக்கும் துயர்மிகு செய்தியைக் குலேந்தி அண்ணாவின் தொலைபேசி அழைப்பு மூலம் அறிந்து கொண்டேன்.என்ன செய்வதென்றே இதுவரை புரியவுமில்லை; தெரியவுமில்லை.

(1) அறிவின் சிகரமே......அப்பா.............அன்பின் இலக்கணமே........!அப்பா.............அப்பா..............இந்த வார்த்தைக்கு முழு இலக்கணமாக மொத்த வடிவமாகத் திகழ்ந்த அந்த மாமனிதனை,நடமாடிய இமயத்தை,வரலாற்று நாயகனை நினைந்து நினைந்து, ஒவ்வொரு கணமும் நெக்குருகி, நிலைகுலைந்து கொண்டிருக்கிறேன். செந்தில் மாமாவின் தந்தி,செய்தி கிடைத்தது.

(2) அப்பா! நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை மகத்தானது.! மிக மிக மகத்தானது.வரலாற்றில் வாழ்ந்து முடிந்த பல,பல வரலாற்று நாயகர்களை, மகத்தான தலைவர்களை, மாபெரும் தியாகிகளை, விலைபோகாத கொள்கை வீரர்களை வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்த போராளிகளைப் பற்றிப் படித்தும்,பார்த்தும், கேட்டும் அறிந்திருக்கின்றேன்.
அவர்களின் பெறுமதி மிக்க மானிட வாழ்க்கை பற்றி வியந்திருக்கின்றேன். ஆனால், அத்தனை பேரினதும் பல பல குணாம்சங்களை நேரிடையாக உங்களிடம் நான் கண்ட போது தான், நான் என்னைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். உங்களைப் பற்றிய பிரமிப்பே என்னை ஒரு மனிதனாக மாற்றியது.

(3) அப்பா! இளமைத் துடிப்பினால் உங்களின் உயர்ந்த கொள்கைக்கு மாறுபட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும், ’வேற்றுமையிலும் ஒற்றுமை காணவேண்டும்’ என்ற துடிப்புடன் என்னால் செயற்பட முடிந்ததென்றால்...நீங்கள் கற்றுக் கொடுத்த அரசியல் அறிவினால் தானாகும். சிலவேளைகளில் ’கற்றுக் குட்டித்’ தனமான தவறுகளை நான் இழைத்தாலும்,தவறுகளை உணர்ந்து என்னால் திருந்தக் கூடியதாகவிருந்தது என்றால், அது நீங்கள் காட்டிக் கொடுத்த வழியாகும்.

(4) அப்பா ! நீங்கள் ஒரு மாமேதை!! நடமாடிய பல்கலைக்கழகம். ஆம்! உங்கள் மூலமாகத்தான் நான் உலகைப்புரிந்து கொண்டேன்.உங்களினால் தான் மக்களை நேசிக்கக் கற்றுக் கொண்டேன்.உங்களால் தான் உலகின்
அடிமை விலங்கு நிரந்தரமானதல்ல என்றும்,அது உடைத்தெறியப் படக்கூடியது என்றும் தெரிந்து கொண்டேன். ஆண்டான் அடிமைமுறை ‘தெய்வ நியதி’ அல்ல: அது அடக்கு முறையாளனின் சதி என்பதை அறிந்து கொண்டேன்.உங்களிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பால பாடம் தான் என்னை ஒரு போராளியாக மாற்றியது.

(5) அப்பா, உங்களோடு நான் வாழ்ந்த காலத்தையும்,அதற்குப் பிந்திய காலத்தையும் எண்ணிப் பார்க்கின்றேன். நாங்கள் தூக்கம் விட்டு எழுந்திருக்குமுன் நீங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டிருப்பீர்கள். நாங்கள் தூங்கிய பின்தான் வீடு வந்து சேருவீர்கள்.”அடக்கி ஒடுக்கப் பட்ட மக்களது முழுமையான விடுதலையே மக்களின் விடுதலையாகும். அந்த நாளே நாட்டின் சுதந்திர நாளாகும்.அந்த நாள் வரும் வரையில் போராடிக்கொண்டே இருப்பேன்.வயோதிபத்தினாலோ, சுகவீனங்களாலோ போராட்டத்தை விட்டு ஒதுங்க மாட்டேன்.’தவண்டு தவண்டு’ ஆவது போராட்டத்திற்கு என்னாலான கடமையைச் செய்து கொண்டிருப்பேன்” என்று அடிக்கடி கூறுவீர்கள். “அந்த மகத்தான போராட்டத்தில் எனக்குப் பக்கத்தில் சக போராளிகளாக உங்களை (எங்களை )ப் பார்த்தால் மகிழ்ச்சியடைவேன். இல்லையேல் வெட்கித் தலைகுனிவேன்; வேதனைப்படுவேன்” என்று சிறு வயதில் எங்களுக்குச் சொல்லிச்சொல்லி வளர்த்தீர்கள்.

(6) 1984 நவம்பர் கடைசியில் ஒருநாள் என்னிடம் நீங்கள் பேசியபோது “அரசியல் நடப்புகளை உன்னிப்பாகக் கவனிக்கும் போது இந்தியாவின் விஸ்தரிப்புக் கரங்கள் இலங்கையின் மேல் விழக்கூடிய சாத்தியக் கூறுகள் தெளிவாகத் தெரிகிறது. அப்படியொரு அந்நிய ஆக்கிரமிப்பு எனது தேசத்தில் நடந்தால்....அதற்கு எதிரான நியாய பூர்வமான போராட்டக் களத்தில் ‘ஒரு போராளியாக அணிவகுத்து நிற்பேன். ஆக்கிரமிப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அதற்கு எதிராகப் போராடுவேன். என்மகன் என்ற அளவில் உன்னிடம் (என்னிடம் )ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், அப்படியானதொரு துரோகத்தை,அதாவது தாயகத்தைக் காட்டிக் கொடுக்கும் அல்லது அடகு வைக்கும் நடவடிக்கையைத் தெரிந்தோ, தெரியாமலோ நீ செய்யக்கூடாது; அதற்குத் துணைபோகக் கூடாது. அதைத்தான் நான் உன்னிடம் எதிர்பார்க்கிறேன்” என்று கூறினீர்கள்.

(7) நான் இலங்கை அரசின் சித்திரவதை முகாம்களிலிருந்து விடுதலையாகி வந்த வேளையில், அந்நியனுக்கு எம் தேசம் அடிமைப்பட்டிருந்தது.அதைப் புரிந்து கொள்ள முடியாத பலர் “ஆஹா! ஓஹோ!” என்ற வண்ணம் இருக்கிறார்கள். நான் கூடத் தடுமாறி விட்டேன். தடுமாறித் திகைத்துப் போய் நின்ற என்னை சரியான வழிகாட்டி, நீதியான, நேர்மையான மார்க்கத்தில் திசைதிருப்பி விட்ட மகத்தான ஒளிவிளக்கு நீங்கள் தானப்பா!


(8) இன்னொரு சம்பவம், ஆக்கிரமிப்பு நடைபெறுவதற்கு முன்பாக 1987,யூன் 4ம் தேதி அந்நியர்களின் ஆக்கிரமிப்பு விமானங்கள்’அகதிகளுக்கான உதவி’ என்ற பெயரில் தனது மேலாதிக்க வலிமையை வெளிப்படுத்தியபோது அதைக் கண்டனம் செய்த முதலாவது நபராக நீங்கள் இருந்தீர்கள். அப்போது அதைப் புரிந்து கொள்ள முடியாத அரசியல் குருடர்கள் பலர் ‘சொல்லம்பு’ கொண்டு உங்களைத் தாக்கியபோது இமயத்தைவிட உறுதியாக உங்கள் கொள்கையில் நின்றீர்கள்.காலம் கடந்தது. நாலு மாதங்கள் முடிவடைந்து நாலு நாட்கள் தான் ‘அகதிகளுக்கான உதவி’ என்ற பெயருடன் நம் தேசத்துள் நுழைந்தவர்கள், அப்பாவிகளின் இரத்தத்தில் நீச்சல் அடித்து, மக்களைக் கொன்று குவித்தார்கள்.

(9)இதற்குப் பிறகுதான் பலர் தமது தவறை உணர்ந்து உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். காலம் கடந்த பின்னே வரும் ஞானத்தால் யாருக்கும் எந்தப் பலனும் கிடைப்பதில்லை.உங்களது அரசியல் முடிவுகளைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டாலும் தமது தவறுகளை ஒப்புக் கொள்ளவில்லை. இலங்கையின் அரச பயங்கரவாதிகள் உங்களது உயிருக்கும்,உடலுக்கும் தீங்கு ஏற்படுத்த எடுத்த முயற்சிகள் உலகம் அறிந்ததே! அதேபோல் அந்நியர்களும் உங்களுக்குத் தீங்கு ஏற்படுத்த மறைமுகமாக முயன்றதை மக்கள் அறிவார்கள். இதைப் புரிந்து கொள்ள முடியாத அரசியல் குருடர்களும் உளர்.

(10) 1950ம் ஆண்டுகளின் முற்பகுதியில் நடைபெற்ற தேசம் தழுவிய இடதுசாரிகளின் மகத்தான வரலாற்று ’ஹர்த்தால்’ வெற்றிக்காக நீங்கள் உறுதியாகப் பணியாற்றியதையும்,1950ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நடை
பெற்ற தேசம் தழுவிய தேசிய உடமை நடவடிக்கைகளின்போது வீராவேசம் மிக்க உங்கள் பங்களிப்பையும் மற்றவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

(11) 1966ம் ஆண்டில்,நாட்டின் - யாழ்-குடா நாட்டில் இறுக்கமாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களது சார்பாக கம்யூனிஸ்ட் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க வெகுஜனப் போராட்டத்தின் வீரம் மிக்க தளபதியாக நீங்கள் திகழ்ந்ததை பலர் வாயாரப் புகழ்ந்து கூறியதைக் காதாரக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.

(12) 1969ம் ஆண்டு மே- 1ல் சர்வதேசத் தொழிலாளர்களது உரிமைத் தினமான ‘மே தின’ த்தை அரச பயங்கரவாதிகள் தடுக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை முறியடித்து, அரச காவல்நாய்களின் சித்திவதைக்குள்ளாகி
உங்கள் உடல் படுமோசமாகப் பாதிக்கப் பட்டாலும், அன்றைய தினம் உங்களது முழுஅளவிலான பங்களிப்பைவரலாறு மறக்கவில்லை.

(13) 1971ல் மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட எழுச்சிகளின்போது உங்களுக்கு எதிராக இலங்கை அரசு எடுத்துக் கொண்ட கொலைவெறித் தனமான பல நடவடிக்கைகளிலும் நீங்கள் காப்பாற்றப்பட்டதையும்,அக்கால கட்டத்தில் நாங்கள் சந்தித்த கொடுமை நிறைந்த வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறேன்.

(14) நாட்டின் முதலாளி வர்க்கம்,தனது அதிகார வெற்றியையும், பலத்தையும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் நாட்டின் வடக்கிலும்,தெற்கிலும் இனவாத விதைகளை ஊன்றிய வேளையிலும் சரி,அந்த இனவாதிகளின், சிறுவிதை பெரிய விருட்சமாகி இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கையாக மாறிய வேளையிலும் சரி,
இவைகளின் விளைவு நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல; என்று துணிவுடன் எடுத்து இயம்பியதை நினைவு கூருகிறேன்.

(15) தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொண்ட தரகு முதலாளித்துவத் தலைமை தமது பாராளுமன்ற அரசியலை அடிப்படையாகக் கொண்டு பிரிவினைக்கோஷத்தை முன்னெடுத்தபோது, அதன் விளைவுகளைக் கட்சி உறுதியாகச் சுட்டிக் காட்டியதையும்,அதற்குப் பிரிவினைக்கு ஆதரவான அலை பெரிய அளவில் வீசியபோதும், அதன் தவறைத் தெளிவாக நீங்கள் விளக்கியதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

(16) பாராளுமன்றப் போலி ஜனநாயக அமைப்பிற்கு எதிராக 1977ல் கட்சி உறுதி மிக்க பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தபோது அதற்காக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும்,அதன் விளைவாக நீங்கள்
அரசபயங்கர வாதிகளின் தேடுதலுக்குள்ளானதையும் கொலைமுயற்சி வாழ்க்கையில் எதிர்நோக்கியதையும் எண்ணிப் பார்க்கிறேன்.

(17) ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் உறுதி உரமடைந்ததே தவிர, உருக்குலையவில்லை.கொள்கைக்காக இமயத்தைவிட உறுதியாக உழைத்தீர்கள்.அதனால்தானோ என்னவோ ...மரணம் உங்களை நெருங்கப் பயந்து பல தடவை தோல்வி கண்டதோ?

(18)1980ம் ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி பலவிதத்திலும் உங்களைப் பாதித்தபோது கூட நீங்கள் கொள்கையை விலைபேசவில்லை.பலவிதங்களில் உங்களுக்கு உயிராபத்து ஏற்பட்ட போதும் கூட நீங்கள் கொள்கை பிரளவில்லை: தடம் புரளவில்லை.உங்களுக்கு மகனாகப் பிறந்ததை நினைத்து,தினம்,தினம் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் பணி இவைகுறித்து வியப்படையாதவர்களே இல்லை. கொண்ட கொள்கைக்காகவே அம்மாவை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டீர்கள். நான் அறிந்த வரையில் இன்பத்திலும்,துன்பத்திலும் மனமொத்த தம்பதிகளாக வாழ்வு நடத்திய ஒருசிலரில் நீங்களே
முதன்மையானவர்கள்.

(19) உங்களைப் போன்ற நெஞ்சுரம் மிக்க, கொள்கைப் பற்றுடைய - உறுதிமிக்க போராளிகளை உங்கள் தோழர்களாக நீங்கள் பெற்றுக்கொண்டதன் மூலம் சிறந்த அரசியற் பணியாற்றினீர்கள்.நீங்களும், உங்கள் தோழர்களும் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றங்கள் மூலமும், விட்டுக்கொடுப்புகள் மூலமும்,விமர்சனம், சுயவிமர்சனம் மூலமும் சரியான அரசியல் முடிவுகளை காலத்துக்கேற்ற வகையில் எடுத்து வந்தபோது, அந்தப்புதிய அணுகுமுறை கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்.

(20)அப்பா- என்ற முறையில் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்த ‘சமூக ஒழுக்கம்’ தான். அவர்கள் தலை நிமிர்ந்து வாழ உதவியுள்ளது.அம்மாவின் முடிவுகளுக்கு நீங்கள் கொடுத்த முன்னுரிமை பலருக்கு முன்னுதாரணமாகியது.உங்கள் முடிவுகளை மற்றவர்கள்மீது திணிக்க முயலாத உங்கள் பண்பு, நாசூக்காக உங்கள் கருத்தை வெளிப்படுத்தும் பாங்கு, பலருக்கும் வியப்பளிப்பதாக இருந்தது. மதச் சடங்குகளிலோ, மற்ற மூடநம்பிக்கைகளிலோ நம்பிக்கையில்லாத நீங்கள், மற்றவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளித்தமை- உங்கள் மேலிருந்த மதிப்பைப் பல மடங்கு உயர்த்தியது.

(21) நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ‘அறிவுக்குப் படியுங்கள்.ஆஸ்திக்குப் படிக்க வேண்டாம்’ என்று அடிக்கடி கூறுவீர்கள்.1979ம் ஆண்டுகளின் இறுதியில் உங்கள் நெருங்கிய நண்பரான ஏ-சி-டி-சொய்சா ’எயர்லங்கா’ விமான நிறுவன இயக்குனராக இருந்த வேளையில், அந்நிறுவனத்தால் கோரப்பட்ட வேலை வெற்றிடங்களுக்கு எனக்குச் சகல தகைமைகளும் இருந்தது. நீங்கள் உங்கள் சொந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தியிருந்தால் எனக்கு அங்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் அப்படிச் செய்யவில்லை.அதற்காகப் புரிந்து கொள்ளமுடியாத வயதினில் நான் மனம் நொந்தேன். ஆனால் அதைப் பார்த்து இன்று பெருமையடைகிறேன்; இறுமாப்புக் கொள்கிறேன்.

(22) 1989ல் உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர் எனக்கொரு கெளரவமிக்க வேலைவாய்ப்பை வழங்க முன்வந்தார். அதை நான் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். அதற்கு நீங்கள் எழுதிய பதிலில் ‘அந்த வேலை சத்தியராஜனுக்குக் கிடைத்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன்; ஆனால், சுப்பிரமணியத்தின் மகனுக்குத்தான் இந்த வேலை கிடைத்திருப்பதாக
நினைக்கிறேன்.  அதனால் தான் இதை விரும்பவில்லை.எனக்கு இருக்கும் அந்தஸ்து எனது கட்சிக்கு உரியது. அதை எனது வீட்டுக்குப் பயன்படுத்த விரும்பவில்லை; என் பிள்ளைகளும் அதைப் பிழையாகப் பயன்படுத்த
மாட்டார்கள் என்று நம்புகிறேன்’ என எழுதியிருந்தீர்கள்.  அரசியல் ரீதியாக பொது வாழ்விலும்,பொருளாதார ரீதியாகச் சுயவாழ்விலும் மிக,மிக நீங்கள் பாதிப்புற்றிருந்த- அத்துடன் நிரந்தர நோயாளியாக துயருற்றிருந்த அந்த நிலையில் கூட, நீங்கள் எடுத்த உறுதிமிக்க அந்த முடிவைப் பார்த்து நான் மாத்திரமல்ல; பலரும் வியந்து நின்றார்கள்.

(23)பலரிடம், அவர்களுக்கே தெரியாமல் இருந்த பல திறமைகளைப் புரிந்து கொண்டு - அவர்கள் சமுதாயத்தில் ,தன்னம்பிக்கையுள்ள பிரஜைகளாக.... உருவாகுவதற்காக நீங்கள் அவர்களை ஊக்குவித்து வளர்த்தெடுத்ததை பலரும் நன்றியுடன் கூறக் கேட்டிருக்கிறேன்.

(24) ”தம்பிக்கு இலங்கையில் கல்வியைத் தொடர்வது மிகச்சிரமம்.எனவே, சோசலிச நாட்டிற்குப் புலமைப்பரிசில் பெற்றுச் செல்வதற்கு ஆவன செய்யுங்கள்” என்று கேட்டபோது, ’கல்விக்காகக் கூட அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தக் கூடாது.’ என்ற உங்கள் உறுதியான முடிவில் எந்த மாற்றத்தையும் நீங்கள் செய்யவில்லை.

(25)தங்கையின் திருமணத்தின் போது கூட உங்கள் இலட்சியப்படியே இலட்சியத்திருமணம் நடத்திவைத்தீர்கள்.எங்களது நியாயமான எந்தவொரு முடிவையும் நீங்கள் அங்கீகரிக்கத் தவறியதில்லை. அத்துடன் அது
உங்களுக்கும் நியாயமாகத் தோன்றிய பொழுது, சமுதாயத்தின் போலிக் கட்டுப்பாடுகளை மீறி அதற்கு ஆதரவளிக்கவும் தவறியதில்லை.

(26) அப்பா, நீங்கள் ஒரு தனிப்பிறவி. இதைப் பல விடயங்களிலும் நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள்.

நீங்கள், உங்கள் அரசியல் வாழ்வில் தீர்க்கதரிசனமாகக் கூறிய பல விடயங்கள் நடந்து முடிந்ததை வரலாறுபலதடவை சந்தித்து இருக்கிறது.

(27) எமது தாயகத்தில் மக்களின் விடுதலையை மனதில் கொண்டு...ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த முதல் போராளிகளில் நீங்களும் ஒருவராகத் திகழ்ந்தீர்கள். அப்படியான உங்களிடமே ஆயுதமுனையில் அரசியல் பேரம் பேச நினைத்த பலர், தமது சொந்த அரசியலில் புறமுதுகிட நேரிட்டதை வரலாறு காட்டியிருக்கிறது. அரசியலில் நீங்கள் ஒரு வணங்காமுடி வேந்தன்!

(28) 1970ம் ஆண்டு ’மே’தினத்திலன்று யாழ்நகரையே உலுக்கிய மேதின ஊர்வலம் வீரத்தின் விளைநிலமாம் சங்கானையில் ஆரம்பமாகி யாழ்-நகரமண்டபத்தை வந்தடைகிறது.அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

தலைமை உரையாற்றிய நீங்கள் 1969 மேதின அரச அடாவடித்தனங்களை எடுத்துரைத்து “என்னைச் சுட்டுச் சதை--சதையாக வீசியெறிந்தாலும் எனது உடலில் இருந்து சிந்தும் ஒவ்வொருதுளி இரத்தத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் விடுதலைப் போராளிகள் தோன்றுவார்கள்! அவர்கள் மக்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்ப்பார்கள்” என்று வான் அதிரும் கரவொலிக்கு மத்தியில் கூறினீர்கள். அந்தச் சம்பவம் இன்னும் என் கண் முன்னால் தெரிந்து கொண்டே இருக்கிறது.

(29)அப்பா! அடிக்கடி நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறும்போது “சுப்பிரமணியத்தின் பிள்ளைகள்

என்ற முகவரியுடன் வாழ வேண்டுமென்று நினைக்காதீர்கள்.அதற்குப் பதிலாக.....இந்தப் பிள்ளையின் அப்பாதான் சுப்பிரமணியம்’ என்று கூறும் அளவிற்கு நீங்கள் வாழ்ந்தால் ....நான் என் குடும்ப வாழ்வில் வெற்றியடைந்ததாகக் கருதுவேன்” என்று கூறுவீர்கள். அதை வேதவாக்காக நினைத்தே இன்றுவரை நடந்து வந்திருக்கிறோம்.நடந்து வருவோம்.

(30)”ஒருநாடு, ஒரு கட்சி, ஒரு தனி மனிதன்......எதுவுமே தனது சொந்தக்காலில் நிற்கவேண்டும்.” என்று அடிக்கடி கூறி தன்னம்பிக்கையையும்,பொறுப்புணர்வையும் வளர்த்தீர்கள். கூட்டுமுடிவு,ஆலோசனை, பலர் அபிப்பிராயங்கள் என்பவற்றுக்கு....உங்கள் அளவிற்கு மதிப்பளித்த ஒருவரை, நான் இதுவரை சந்தித்தது இல்லை.

(31)அப்பா.......அப்பா.......உங்கள் நினைவுகள் எம்மை வழிநடத்திக் கொண்டேயிருக்கும். உங்களுக்கோ உங்கள் கொள்கைக்கோ என்றுமே துரோகம் இழைக்கமாட்டோம்.நீங்கள் நேசித்த தேசத்தை, மக்களை, அவர்களது விடுதலையை முன்னெடுக்கும் சக்திகளின் பக்கமே நாம் என்றும் இருப்போம்.உங்களது மகத்தான தோழர்கள் முன்னெடுக்கும் அரசியல் நடவடிக்கைகளில் எங்களால் எந்த அளவிற்குப் பங்காற்ற முடியுமோ,அந்தளவிற்குப் பங்காற்றுவோம். மகத்தான மானிட விடுதலைக்காக எமது பங்களிப்பைச் செய்வோம்.

மகத்தான மாக்ஸிஸ- லெனினிஸ- மாசேதுங் சிந்தனைகளின் வழி நடப்போம்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) நீடூழி வாழ்க!

மலேசியா எஸ்-எஸ்- வி- சத்தியராஜன்.  29-11-1989


காலஞ்சென்ற தோழர்-கே-ஏ-சுப்பிரமணியம் அவர்களது மறைவையொட்டி அன்னாரது மகன் காலஞ்சென்ற சு-சத்தியராசன் அவர்கள் மலேசியாவிலிருந்து 29-11-1989 ல் எழுதி, தந்தையின் நினைவு மலரில் வெளியான கடிதத்தை, இங்கு மறுபிரசுரம் செய்கிறோம்.


Friday, July 15, 2011

A Leader- About K.A.Subramaniam

A Leader- About K.A.Subramaniam

27 November 2011, 15:28  
This universe, people say it is very small. Yes, it is, but this little world has a wide range of people, or in other words, wide range of human souls. Each soul is unique, and each has its own inimitable individuality. The path we take in this world, we do not know where it guides us, and we cannot predict it. But, the path is always exciting and mesmerizing. The journey allows us to meet new people and new personalities. Each individual persuades us in one way or the other. In my journey, I met countless number of characters, but I am not going to talk about everyone. This talk is about a matchless soul whom I have never met in my life but has inspired me in many ways. My Grandfather, a person whom I never got a chance to play with, or never even had a chance to talk to. All that I know of him are stories that are told to me by my mother. I had never been jealous of my sister, but Listening to those stories that my mother, grandma, and others told and news and articles that I read about him triggered a resentful feeling towards my sister who had a chance to be with my Grandfather.

He was a visionary who stood by his ideologies.  Only few people in this world have the ability to inspire people, and my grandfather is one of those people who influenced people to rise against discrimination. In a world where selfish and hatred are considered one of the characteristics of human society, only handful of people has the ability to leave the wealth they have in order to search for the wellness of everyone. My Grandfather, a person who left all his wealth, sacrificed his job so that he could serve the common ordinary people. He was not an ordinary person who thrives for his own success. He envisioned a place where every soul is treated equally and everyone has a chance to experience the happiness of life.  Even during the latter part of his life when his body kept him away from social work, he contributed hugely for the rising of new society. As a leader, he kept his followers thriving for a better future. Even after his death, he was able to leave a strong mark in the society for a brighter future.

Even though I never met him, the stories that I read and the stories I heard make me wish I had a day to be with him and I wish my cousins also had a chance to be with a legend. He inspires me to be a person who cares about the society that I live in, and not just another person who thinks only about himself. I miss you Grandpa.


By: Son of Raveendran 27 November 2011, 15:28

Thursday, July 14, 2011

ஈரமுள்ள நெஞ்சமே எமதன்புச் செல்வமே!

ஈரமுள்ள நெஞ்சமே எமதன்புச் செல்வமே!


மண்ணில் : 16 யூன் 1933  விண்ணில் : 13 யூலை 2011
———————————————————————

சிவயோகம் நடேசன் என்ற சீரோங்கு நங்கை



தவமாக ஒருபெண்ணாய்க் குடும்பத்தில் பிறந்தாய்!



உவமானம் உமக்கில்லை உலகினில் ஒப்பிட



எவரோடும் இன்முகம் இன்சொல் பகிர்ந்தீர்!



இதமான அரவணைப்பில் என்முதல் சம்பந்தியே!



இகத்திலும் பரத்திலும் கல்விக்கு முதலிடம்



இதயத்தால் ஈய்ந்தாய் உன்சந்ததி தனக்கே!



ஈரமுள்ள நெஞ்சமே எமதன்புச் செல்வமே!

————————————————————————————

வள்ளியம்மை சுப்பிரமணியம் -சிங்கப்பூர்.

Monday, June 13, 2011

பெருவிரைவு ரயில்களில் பயணம் -கவிதை.



பெருவிரைவு ரயில்களில்  பயணம்.

                                     ---------------
வீட்டு வேலைகள் முடித்து வீதியிலே நடந்து சோர்ந்து
வாட்டமாய் வந்து சேர்ந்தேன் பெருவிரைவு ரயில்நிலையம்.
பிரயாணச் சீட்டை அவசரமாய்க் காட்டி விட்டு...கொஞ்சத் தூரம்
பரபரக்கும்  படிக்கட்டில் கால்வைத்து வெளியேற...மேடைக்கு
இசைவுடனே விரைவாக வந்ததுவே ரயில்வண்டி....
தசைப்பிடிப்புக் கால்வைத்து உட்புகுந்தால் உட்கார இடமில்லை.
முடிநரைத்த தலைபார்த்த நிலவுமுகம் புன்னகைத்து....
கடிதென எழுந்துநின்று தன்னிருக்கையை எனக்களித்தாள்.
பளிங்குச் சிலையொன்று பள்ளிச் சீருடையுடனே...
தெளிந்த நீரோடைபோல் விளங்கும் கருணைமுகம்.
தானிறங்கும் இடமது வந்தவுடன் கையசைத்தாள்...
நான் மறந்தேன் என்னை, எனக்குள்ளே ஒருசிலிர்ப்பு!
வயோதிபத்தாய் உட்கார இடங்கொடுத்த பண்பை எண்ணி...
இளவயதுச் சந்ததியை நினைந்து இறுமாப்புக் கொண்டேனே!.
மற்றவர்க்கு உதவுவதால் தன்னில்தான் உயர்ந்து நிற்பர்.
சொற்களிலே வடிக்க முடியாத செயலிதை எழுதுகின்றேன்.   
வள்ளியம்மை சுப்பிரமணியம்.