"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Thursday, December 24, 2009

1976 இல் சத்தியமனையில் எனது பிள்ளைகளினால் வெளியிடப்பட்ட கையெழுத்துப்பத்திரிகை சிறுபொறியின் சில பிரதிகள் அண்மையில் கிடைக்கப்பெற்றேன்


1976 இல் சத்தியமனையில் எனது பிள்ளைகளினால் வெளியிடப்பட்ட கையெழுத்துப்பத்திரிகை சிறுபொறியின் சில பிரதிகள் அண்மையில் கிடைக்கப்பெற்றேன்.
அவற்றை ஒரு  வாரம் ஒரு பிரதியாக
உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றேன்............

Wednesday, December 23, 2009

K.A.Subramaniam's eldest brother Mr. Ambalapillai Nadarajah passed away recently (01 Nov 1928 - 03 Sep 2009)

மரண அறிவித்தல்
பெயர்: அம்பலப்பிள்ளை நடராசா (பாதிரி)
இடம்: நீர்வேலி.

கிளானை, கொல்லங்கலட்டியைப் பிறப் பிடமாகவும், பலாலியை வசிப்பிடமாகவும் தற்போது சிறுப்பிட்டியில் வசித்தவருமாகிய அம்பலப்பிள்ளை நடராசா (பாதிரி) நேற்று (04.09.2009) வெள்ளிக்கிழமை இறைபதம டைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அம் பலப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம் பதியினரின் அன்பு மகனும், வைத்திலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற முத்துப்பிள்ளையின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற சிவசுப்பிர மணியம் மற்றும் தங்கமனோரதி ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற சித்திரவேலின் மாமனும் காலஞ்சென்றவர்களான தங்கம், மனோன்மணி, சுப்பிரமணியம் மற்றும் சிவனேசம், இலங்கை நாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஹேமலதா, சர்மிளா, திலீபன், தீசன், பரன்சிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.09.2009) சனிக் கிழமை மு.ப. 11 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: இலங்கைநாயகம் (சகோதரன்),
தங்கமனோரதி (மகள்).
சிறுப்பிட்டி மேற்கு,
நீர்வேலி.

தகவல்: இலங்கைநாயகம் (சகோதரன்),
தங்கமனோரதி (மகள்).

Sunday, December 20, 2009

வவுனியா ஆசிரியர் ‘ரணேஸ்’ என்ற ஈர நெஞ்சினன் ...நாகைஒளி விளக்காய் வழிகாட்டும் தீபமானாய்....!



வவுனியா ஆசிரியர் ‘ரணேஸ்’ என்ற ஈர நெஞ்சினன், நாகைஒளி விளக்காய் வழிகாட்டும் தீபமானாய்....!

                             --------------------------------------------------------
வவுனியாப் பூந்தோட்டக் கல்வியியற் கல்லூரியில்
பவுத்திரமான ஆசிரியப் பயிற்சிபெறுங் காலத்தில்
கீழ்ப்படிவும் நன்றியுடன் சேர்ந்த செயற்பாடும்....
சூழ்ந்திருந்த மாணவ மணிகளுள்ளே தலைசிறந்த
தாழ்ப்பாளில்லாத் திறந்தமனத் தன்னிரக்கம் கொண்டவராம்
காழ்ப்புணர்ச்சி இல்லாத கர்மவீரன் ' ரணேஸ்’ என்போம்
ஊசிமுனைத் தராசுபோல உண்மைக்கு உருவளித்து
ஆசிரியப் பணிக்காக அல்லும்பகல் முயன்றுநின்றார்.
 
சாகும்வயது மல்ல;சாக்காடு போகும்வயது மல்ல;
வேகும்மனதுடன் உன்சக ஆசிரியர் மாணவர்கள்
தொழுதழுது புலம்புகிற துணையாளின் மதலைகளின்
அழுகையொலி கேட்கிறதே அன்பார்ந்த உறவுகளாம்
பெற்றவரும் பிறந்தவரும் உகுக்கின்றார் கண்ணீராய்.....
‘பிரிவென்ற’ மரணமது பிரித்ததோ ‘ரணேஸ்’ என்று.......
நாளைக்குச் சுகப்பட்டு வீடுவரும் நம்பிக்கையில்....
ஏழைந்து வயதினிலே எல்லோரையும் கைவிட்டாய்!
 
உயரதிபர் பதவியது உன்னருகில் நெருங்கையிலே-மிக
உயரத்தில் சென்றுவிட்டாய் உறவுகளை விட்டுவிட்டு
சமுதாய அக்கறையும் சமூகநலன் விழிப்புணர்வும்
அமுதான சேவைசெய்த ஆசிரிய மணியிவனே...மக்கள்
கழகத்தின் உயர்வினிலே கண்ணியம் காத்துநின்றாய்...
உழவுக்கும் தொழிலுக்கும் உறுதுணை வழிசொன்னாய்
பழகுதற்கு இனியவனே நற்பண்பான இயல்பினனே....
அழுதாற்ற முடியாது ஆறாதெம் மனத்துயரம்!
 
நீவாழ்ந்திருந்த காலத்தில் வாடாமலர்ப் புன்சிரிப்பும்
ஈகைநிகழ்வும் விருந்தோம்பும்  பாங்குகள் நிறைந்த
வாகைமரநிழல் அடைகின்ற வாயில்லாச் சீவன்கட்கு...
நாகைஒளி விளக்காய் வழிகாட்டும் தீபமானாய்....!
சொற்பவய துள்ளேநீ சுடரொளியாய் மிளிர்ந்ததனை
அற்புதம் என்போமோ ஆறாது எம்மனது...
ரணமாகி இதயமெலாம் நொந்து வலிக்குதய்யா!
‘ரணேஸ்’ என்றஈர நெஞ்சினனை எண்ணுதய்யா!

                                                               வள்ளியம்மை சுப்பிரமணியம் 20.12.2009

Saturday, December 19, 2009

இயக்குநர் சிகரம் பாராட்டிப் பேசிய சுபமங்களா ஆசிரியர் மறைந்த திரு- கோமல் சுவாமிநாதன்.


சிங்­கப்­பூர் "ரெக்ஸ்" திரையரங்கில் டிசம்பர் 13ம் நாள் நடைபெற்ற சிங்­கப்­பூர் ­மூத்­த ­எ­ழுத்­தா­ளர் புதுமைத்தேனீ திரு மா. அன்பழகனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சிகரம் பாராட்டிப் பேசிய சுபமங்களா ஆசிரியர் மறைந்த திரு- கோமல் சுவாமிநாதன்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


திரைப்படத் துறையில் பலநூறு படங்களை
வரைந்தெழுதிய சிகரமாம் பாலச்சந்தர் அவர்களின்
மனதில் இடம்பிடித்த ‘தண்ணீர் தண்ணீர்’*
கனதியாய் சமூகத்தின் அவலத்தைக் காட்டுகிற
திரைப்படமாகப் ப ஆண்டுக்கு முன்னர்
உரைகல்லாய் வெளியிட்ட கோமல் சுவாமிநாதனின்
சமுதாய விழிப்புணர்வை ஊட்டுவதாய் அமைந்த
வெகுமானக் கருத்துக்கள் அப்படத்தில் இருந்ததனால்
தேசியவிருது பெற்ற தகுதியும் பெற்றதென்றார
ஆசீர்வாதம் வழங்க தன்னினிய இளவலாம்
மாசிலா அன்பழகனின் மதிப்புள்ள அழைப்பேற்று
நேசமுடன் வருகைதந்து சிங்கப்பூர் ‘ரெக்ஸி’

திரையரங்கில் நடைபெற்ற மூன்றுநூல் வெளியீட்டில்
உரையாற்றும் போதுதான் உளம்திறந்து கூறினாரே!
சிகரமே பாராட்டிய சிறந்த அந்தப்படத்தை
அகத்தின் அக்கறையாய் ஆர்வமுடன் போற்றிடுவோம்.
  
*சுபமங்களா ஆசிரியர் மறைந்த திரு- கோமல் சுவாமிநாதனின் நாடகம் 'தண்ணீர் தண்ணீர்' 1981 இல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்தது.

Monday, December 7, 2009

டிசம்பர் பூ-ஆசிரியை சுகந்தி.

டிசம்பர் பூ-ஆசிரியை சுகந்தி.

  ---------------------------
சொற்களில் வடித்தோ சொல்லியோ முடியாத
அற்புதச் செயலால் ஆசிரியை சுகந்தி
நற்பணி செய்து நானிலம் போற்ற
பெற்றதாய் போலவுன் பேருயிரை நீத்தாயே!


வேதாரண்யம்  கத்தரிப்புலம் காமாட்சிக் குளத்தில்
பூதாகாரமான உயிப்பலிகள் நடக்க விடாமல்..
சாதாரணமாக உயிர்காக்கும் நீச்சலே தெரியாத...
ஆதாரமற்ற மாணவர்களை அக்கரை சேர்த்தாயே!


இருபத்தி ஒருவயதில் இன்னுயிரைத் துச்சமென...
பருவவயது பட்டக்கல்வி பெற்ற மங்கை...
அரிதாகப் பூத்திட்டாய் டிசம்பர்க் குளத்தினிலே
புரிந்த உன்  தியாகத்தால் டிசம்பர் பூ நீயே!

                            வள்ளியம்மை சுப்பிரமணியம்


Sunday, December 6, 2009

சில காணொளிகள்.......ஞாயிற்றுக்கிழமை 2009 நவம்பர் 15 ஆம் தேதி கவிச்சோலை 97


ஞாயிற்றுக்கிழமை 2009 நவம்பர் 15 ஆம் தேதி கவிச்சோலை 97

இந்தக் கவிச்சோலை நிகழ்வினை சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து பெக் கியோ சமூக மன்றத்தில் மாதந்தோறும் நடத்தி வருகிறது.
இம்மாதக் கவிதை தலைப்பு "புயலான பூ" கவியரங்கில்  இருந்து சில காணொளிகள்....... உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே  ஒளி செய்கின்றோம்...........
சிங்கப்பூர்க் கவிஞர் திரு. முருகடியான் அவர்களின் இலக்கண வகுப்பு மனம் கவர்ந்தது.
நிகழ்வில் தங்கமுனை விருது பெற்றவர்களுக்குப் பாராட்டாகத் தன் உரையை முடித்துக் கொண்டார் தலைவர் ஆண்டியப்பன்.


இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751.

Saturday, December 5, 2009

பொதுவுடைமைவாதிகளுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம்: வெகுஜனன்

மனிதர்களின் சமூகச் சூழல் தான் அவர்களது சிந்தனையைத் தீர்மானிக்கின்றது என்பது மாக்சிச உலக நோக்கின் அரிச் சுவடியாகும். நமது தமிழ்ச் சூழலானது பழைமை மரபு சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவற்றாலும் சாதியப்படிநிலை அமைப்பு முறையாலும் இறுக்கமுடையதாக இருந்து வந்திருக்கிறது. இன்றும் இவற்றின் தொடர்ச்சி வெவ்வேறு அளவுகளிலும் நிலைகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றின் கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் வெளிப்படையாகவும் உள்ளார்ந்த நிலைகளிலும் பேணப்படுகின்றன.


இவை பற்றிய கேள்விகளும் மாற்றுச் சிந்தனைகளும் மீறல்களும் சமூகத்தில் மேற்கிளம்புவது குறைந்த அளவிலேயே இருந்து வருகின்றன. அவ்வாறு புதிய சிந்தனைப் போக்குகள் வெளிவருவதையும் அவற்றின் தாக்கங்கள் சமூகத்திற்குச் சென்றடைவதையும் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்துவரும் கருத்தியல் சிந்தனை நடைமுறைகள் தடுத்து மறிக்கின்றன. இவற்றையெல்லாம் மாக்சிக உலக நோக்கின் அடிப்படையில் புதிய கருத்தியல் சிந்தனை நடைமுறைக்காக முன்னெடுத்தவர்கள் பொதுவுடைமைச் செயற்பாட்டாளர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
சமூக வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்த அனைத்து பிற்போக்குத் தனங்களையும் மீறல்களால் எதிர்த்துப் போராடி வந்த வந்தவர்ளும் பொதுவுடைமைவாதிகள் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

அவ்வாறான பொதுவுடைமை வாதிகளில் முன்னோடியாக வாழ்ந்து சமூக மாற்றத்திற்கான புரட்சிகரப் பணியாற்றி மறைந்தவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம். இலங்கையின் வடபுலம் பொதுவுடைமை இயக்கத்திற்கு ஆற்றல் மிக்க முன்னோடிகளைக் கடந்த நூற்றாண்டின் நாற்பதுகளிலே தந்திருக்கிறது. தோழர்கள் மு.கார்த்திகேசன், அ.வைத்திலிங்கம், பொன்.கந்தையா, நா.சண்முகதாசன், டாக்டர் சு.வே.சீனிவாசகம் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
அவர்களது அடிச் சுவட்டில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த முன்னோடிகளில் ஒருவராக இருந்தவர் கே.ஏ.சுப்பிரமணியம். அவரது அரசியல் வாழ்வும் மக்கள் மத்தியிலான கடுமையான அர்ப்பணிப்புடனான பணியும் உழைக்கும் மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பைப் பெற்றிருந்தது.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தனது இருபதாவது வயதிலே மார்க்கிச உலக நோக்கினால் ஈர்க்கப்பட்டவர். தான் வாழ்ந்த பழைமையும் ஏற்றத் தாழ்வும் மிக்கச் சமூக சூழலை நோக்கி எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மாக்சிசத்திலும் பொதுவுடைமை இயக்கத்திலும் விடைகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றுடன் தன்னை நெருக்கமாக்கிக் கொண்டவர். வெறுமனே மாக்சிசத்தை வரித்துக் கொண்டால் மட்டும் போதாது அதனைத் தீவிரமாகத் தொழிலாளர்கள் விவசாயிகள் ஒடுக்கப்படும் மக்கள் மத்திக்கு கொண்டு சென்று சமூக மாற்றப் போக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் உறுதிபெற்று நின்றவர் தோழர் மணியம்.
அதன் காரணமாக தோழர் மணியம் தனது இருபத்தியொராவது வயதில் 1951ம் ஆண்டில் அன்றைய பொதுவுடைமைக் கட்சியின் முழு நேர அரசியல் ஊழியராகிக் கொண்டார். அதன் மூலம் தொழிலாளர்கள், கிராமப்புற விவசாயிகள் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் என்போர் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சமூக மாற்றம் கோரி நின்ற பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை முன்னெடுப்பதிலும் முக்கியமான செயற்பாட்டாளராகி ஏனையோருடன் இணைந்து முன்நிலை வகித்து செயற்பட்டும் வந்தார்.
அன்றைய கால கட்டத்தின் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்த சிங்கள தமிழ் முஸ்லீம் தலைவர்களின் அர்ப்பணிப்பு மிக்க அரசியல் தொழிற் சங்க வேலைமுறைகளும் அவர்கள் கொண்டிருந்த ஆற்றல்கள் வாழ்க்கை முறைகள் அடுத்த தலைமுறையினரான பொதுவுடைமை வாதிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அதேவேளை சர்வதேசப் பொதுவுடைமை இயக்கத்தின் வேகமும் வளர்ச்சியும் பெரும் உந்துதலைக் கொடுத்து வந்தது. இவை யாவும் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் போன்ற அன்றைய இளம் பொதுவுடைமை வாதிகளுக்கு சிறந்த முன்மாதிரிகளை வழங்கின.
தாம் வரித்துக் கொண்ட பொதுவுடைமை கொள்கையை நடைமுறை வாழ்விலும் பின்பற்றுவதில் தோழர் மணியம் எப்பொழுதும் கவனத்துடன் இருந்து வந்தார். தான் விரும்பிய வாழ்க்கைத் துணைவியை மணம் முடிப்பதில் மிக உறுதியாக இருந்து தனது குடும்பமும் அதனைச் சூழ்ந்த பழைமைவாதத் தடைகளையும் எல்லைகளையும் உடைத்தெறிந்து நியாயமானவற்றுக்கான மீறல்களைச் செய்வதில் அன்றைய சூழலில் ஒரு பெறுமதி மிக்க முன்னுதாரணத்தைக் காண்பித்தார் என்பது இவ்வேளையில் நினைவு கூரத் தக்கதாகும்.
marx333தோழர் மணியம் வடபுலத்தின் இறுக்கமுடைய நிலவுடைமைக் கருத்தியல் சிந்தனை நடைமுறைகளின் மத்தியில் நின்று அவற்றுக்கு எதிரான மாக்சிச லெனினிசச் சிந்தனை அடிப்படையில் மக்களை குறிப்பாக தொழிலாளர்கள் விவசாயிகள் இளைஞர்களை அணிதிரட்டுவதில் உறுதியுடன் முன்சென்றார். இவ்விடயத்தில் மாக்சிசத் தெளிவும் பொதுவுடைமை இயக்க நம்பிக்கையும் தளராத மனவுறுதியும் அவசியமானதாகும். பொதுவுடைமை வாதிகள் நான்கு சுவர்களுக்குள் இருந்தவாறே தத்துவம் பேசுபவர்களாக இருக்க முடியாது. மக்களது அன்றாட வாழ்வில் பங்கு கொண்டு அவர்கள் மத்தியில் வேலை செய்பவர்களாக இருக்கும் பொதுவுடைமை வாதிகளாக இருப்போரே வெற்றிகரமான தமது வேலை முறைகளுடன் முன்னேறிச் செல்பவர்களாக இருப்பர்.
அந்த வகையில் தோழர் மணியம் மக்களை நாடிச் செல்பவராகவும் அவர்கள் மத்தியிலான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் விடுபடுவதற்கான அணிதிரட்டல் அமைப்பாக்குதல் போராட்டங்களை முன்னெடுத்தல் என்பனவற்றில் வழிகாட்டும் தலைமைத்துவ ஆற்றல் மிக்கவராக அவர் விளங்கினார். அத்தகைய அனுபவத்தின் வாயிலாகவே 1966ம் ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சியின் ஊடான சாதிய தீண்டாமைக்கு எதிரான பரந்த வெகுஜனப் போராட்டங்களின் தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கினார்.
1966 – 1971 வரையான காலப் பகுதியில் இடம் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களை தோழர் நா.சண்முகதாசன் தலைமையிலான மாக்சிச லெனினிசப் பொதுவுடைமைக் கட்சியே முன்னெடுத்து நின்றது. கட்சியின் கூட்டுத்தமைமையின் வழிகாட்டலில் இடம் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க அப்போராட்டங்களில் தோழர் மணியத்தின் ஆற்றல் மிக்க தலைமைத்துவப் பங்களிப்பு என்றும் நினைவு கூரத்தக்கதாகும்.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் எத்தகைய வெகுஜனப் போராட்டங்களிலும் தொழிற் சங்கப் போராட்டங்களிலும் மக்களோடும் தொழிலாளர்களோடும் இணைந்து முன்னணியில் நிற்பவர். அடக்குமுறை ஆட்சியினர் விதிக்கும் தடைகளை மீறி வெகுஜன ஊர்வலங்களையும் வேலை நிறுத்தங்களையும் கட்சித் தலைமை முன்னெடுக்கும் போதெல்லாம் தோழர் மணியம் முன்னின்று தலைமை தாங்கி நம்பிக்கை தரும் வகையில் தலைமைத்துவப் பாத்திரம் வகிப்பது அவரது புரட்சிகர இயல்பாகும். அதனால் பலதடவைகள் மோசமான பொலீஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகிப் படுகாயங்கள் பெற்ற தழும்புகள் அவர் உடலில் காணப்படும். அவற்றைப் பற்றியும் அவருக்கு ஏற்பட்ட நோய்கள் பற்றியும் பேச்சுக்கள் எழும் சந்தர்ப்பங்களில் “மக்களுக்காக வாங்கிய பொலீஸ் அடிகள் பெரிதல்ல. ஏனெனில் எத்தனையோ பொதுவுடைமை வாதிகள் போராட்டங்களில் தமது இன்னுயிர்களை ஆயிரமாயிரமாய் அர்ப்பணித்திருப்பதோடு ஒப்பிட்டால் இது ஒரு சிறிய விடயம்”. எனத் தன்னடக்கத்துடன் கூறிக்கொள்வார்.
ஒவ்வொரு பொதுவுடைமை வாதியும் தமது கொள்கை நிலைப்பட்ட செயற்பாடுகளாலும் வாழ்வு முறையாலும் எதிர்காலத்திற்குரிய வீரியம் மிக்க பொதுவுடைமை வாதிகளை உருவாக்கிச் செல்கிறார்கள் என்பது உலகம் தழுவிய பொது நிலையாகும். அந்தவகையில் தோழர் மணியம் தனக்கு பின்பும் இந்நாட்டில் தொழிலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் உரியதான ஒரு மாக்சிச லெனிசிசக் கட்சி தொடர்ந்து சக்திபெற்று தனது வரலாற்றுக் கடமையினை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகக் கடும் நோய் கண்ட நிலையிலும் செயலாற்றிச் சென்றார். அதுவே புதிய ஜனநாயகக் கட்சியாக வளர்ச்சி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
தோழர் மணியம் பதினொரு ஆண்டுகள் புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்து மறைந்தார். அவர் பழைய தலைமுறையைச் சேர்ந்த பொதுவுடைமை வாதிகளையும் புதிய தலைமுறைப் பொதுவுடைமைவாதிகளையும் இணைத்து செயல்பட்ட ஒருவராகத் திகழ்ந்தார். அதன் மூலம் இலங்கையில் பாராளுமன்றச் சீரழிவுக்கு உள்ளாகி நின்ற பொதுவுடைமை இயக்கத்திலிருந்து புரட்சிகர சக்திகளை அணிதிரட்டி முன்செல்வதில் முன்னின்ற தோழர் நா.சண்முகதாசன் தலைமையிலான கட்சியின் முன்னணித் தலைமைத்துவத் தோழர்களில் தோழர் மணியம் முக்கியமானவராகவும் திகழ்ந்தார். அதன் ஊடாகப் புரட்சிகரப் பொதுவுடைமை இயக்கத்தின் தொடர்ச்சிக்கு வழிகாட்டியும் சென்றார்.
ஒருவர் தனது இளவயதின் ஆர்வ மிகுதியால் பொதுவுடைமைவாதியாகிக் கொள்ளலாம். ஆனால் பொதுவுடைமை இலட்சியத்தை விடாப்பிடியாகப் பற்றி நிற்பதற்கு இன்றைய சமூகச் சூழல் விதிக்கும் பல்வேறு விதத் தடைகளையும் தான்டிச் செல்லும் மாக்சிச லெனினிச வாதிகளுக்குரிய ஆளுமையைப் பெற்றே ஆக வேண்டும். அதனாலேயே தோழர் மாஓசேதுங் “ஒரு பொதுவுடைமைவாதி என்பவர் ஒரு பரீட்சையில் சித்தியடைந்தவுடன் அதில் திருப்திப்பட்டு அதற்கு அப்பால் செல்லாது நின்றுவிடக் கூடாது. தொடர்ந்தும் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பரீட்சையிலும் சித்தி பெறும் ஒருவரே உண்மையான பொதுவுடைமைவாதிகளாகிக் கொள்ளமுடியும்” என்றார்.
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தனது நாற்பது வருடகால பொதுவுடைமை அரசியல் வாழ்வில் பல்வேறு நெருக்கடிகள் அச்சுறுத்தல்கள் கொலை முயற்சிகளின் மத்தியில் தொடர்ந்து வந்த சோதனைகளில் சித்திகள் பெற்றே வந்தார். அதுவே நம் எல்லோருக்கும் பலம் தரும் முன்னுதாரணமாகவும். அமைந்து கொண்டது. தோழர் மணியத்தின் அர்ப்பணிப்பும் தியாகமும் நிறைந்த வாழ்வின் முன்னுதாரணம் நமக்கெல்லாம் தொடர்ந்து வழிகாட்டும் என்பதை அவரது 20வது வருட நினைவின் போது உணர்ந்து முன் செல்வோமாக.

கருத்துக்கள்

Sharangan Posted on 11/27/2009 at 1:11 pm

பொதுவுடமைத்தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் நினைவுக்கூட்டம் சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள். தோழருக்கு புரட்ச்சிகர வணக்கமும் அஞ்சலியும்.

Ashokyogan Posted on 11/27/2009 at 8:55 pm

1983களில் சுழிபுரத்தில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களோடு நான் கொண்டிருந்த உறவின் இனிய தருணங்கள் என் நினைவில் எழுகின்றன. தோழருக்கு நான் சார்ந்திருந்த விடுதலை அமைப்பின் மீது விமர்சனங்கள் இருந்தன. இந்த விமர்சனங்களின் பெறுமதி மிக்க உண்மைகளை உணரநேர்கையில் எமது அமைப்பு எமது கையைவிட்டு எங்கோ நழுவிப்போய்யிருந்தது. இவையெல்லாம் காலங்கடந்த நினைவுகளாய் இன்றும் என் நெஞ்சில்.
தோழருக்கு என் புரட்சிகர வணக்கங்களும் அஞ்சலியும்.
வருடா வருடம் தோழரின் நினைவினைக்கூறும் தோழர்களுக்கு நன்றிகள்.
தோழரின் துணைவியார் வள்ளியம்மை அவர்களின் இணையவலைத் தளத்தை சமீபத்தில் பார்க்க முடிந்தது. 71வயதிலும் அம்மாவின் துடிப்பான செயற்பாடும் சமூக அக்கறையும் என்னை மகிழ்ச்சிகொள்ள வைத்தது. அம்மாவின் 71வது வயது எமக்கெல்லாம்வரும் போது நாமெல்லாம் என்ன செய்துகொண்டிருப்போமோ தெரியவில்லை. பொதுவுடமை தத்துவத்தை வாழ்க்கையின் உயிராக நேசித்த ஒரு தோழரின் துணைவியார் வேறு எங்ஙனம் வாழ்தல் சாத்தியம்?


"இனியொரு" இல் இருந்து மிகுந்த நன்றியுடன் இங்கே மீள் ஒளி செய்கின்றோம்..

Friday, December 4, 2009

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் சில படங்கள் உங்கள் பார்வைக்கு ...... K.A.Subramaniam's 20th Anniversary Memorial Lecture

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2009 மாலை 5 மணி தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபம்.
K.A.Subramaniam's 20th Anniversary Memorial Lecture held on Saturday 28 November 2009 
Venue: 571/15 Galle Road Colombo 06, Sri Lanka
கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2009 மாலை 5 மணி தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபம். இலங்கை புதிய சனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளார் தோழர் சி. கா. செந்திவேல் , தோழர் இ. தம்பையா - சர்வதேச அமைப்பாளர், தோழர் சோ. தேவராஜா - பொருளாளர்












Saturday, November 28, 2009

தாத்தா கே.ஏ.சுப்பிரமணியம்

தாத்தா கே.ஏ.சுப்பிரமணியம்




மனிதத்துக்கு ஒர் அடையாளம்- நீ

மலரின் மென்மையும், துப்பாக்கியின் தேவையும் உணர்ந்தவன்


அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை-என் கை தூக்கி

ஒரு வயசில் உணர்த்தினாய்!

சரிவு கண்ட இடமெலாம் -நீர்

பாய்ந்து ஓடுவது போல

அநீதி கண்ட இடமனைத்தும் நீ இருந்தாய்

உன் கனவுகளின் வெற்றியாக

நான் வாழ்வேன்!

சுபாரா

27.11.2009

Thursday, November 26, 2009

இன்னொரு மாவீரனின் 20ம் விடைபெறும் நாள். 27-11-2009.....




"1959:- தோழர் வி.பொன்னம்பலம் காங்கேசன்துறைத் தொகுதியில் கம்ய+னிஸ்ட் கட்சிக் கிளைகள் கிராமம் தோறும் ஏற்படுத்துதல். இதற்கு பக்க பலமாக தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் நின்று செயற்படுதல். கிராமங்கள் தோறும் ஜனசமூக நிலையங்களையும் பாரதி வாசிகசாலைகளையும் ஆரம்பிக்க ஊக்குவித்தல். இப்பணியைத் தொடர்ந்து கட்சிக் காரியாலயமும் படிப்பகமும் சுன்னாகத்தில் திறக்கப்பட்டன. இப்பணியில் தோழர்.எஸ்.ரி.என்.நாகரெத்தினம் சகல வழிகளிலும் உதவினார். படிப்பகத்தில் பத்திரிகைகளைப் பெறுவதற்குரிய நிதியுதவியை அன்று இலங்கை – சோவியத் நட்புறவுச் சங்கத்தின் யாழ் கிளைத் தலைவராகவும் தாய்ச் சங்கத்தின் உபதலைவராகவும் கடமையாற்றிய திரு.வி.தர்மலிங்கம் வழங்கினார்."


நன்றி "பொன்மலர் 1994"




இன்னொரு  மாவீரனின் 20ம் விடைபெறும் நாள். 27-11-2009. 


--------------------------------------

என் மறைவை விடைபெறும் நாளாய் இத்தால்

அறிவிக்க வேண்டுமென்று எண்ணி

முன்னேற்பாடாய்க் கையசைத்து விடைபெற்ற

காட்சியுள்ள புகைப்படத்தை

தன்னினிய தோழர்களிடம் கையளித்து

விடைபெற்ற மனிதநேயர் மணியம் ஆகும்.



இன,மத,சாதிய ஏற்றத்தாழ்வு களைந்து

மக்களின் ஒற்றுமை மலரட்டும் என்று

காங்கேயன் சீமெந்துக் கூட்டுத்தாபன

பொறியியல் பயிலுநராக இருந்தநீ

மனதைப் பாதிக்கும் உள்ளக உணவங்காடி

மனித உரிமையைப் பறிப்பது கண்டு

தன்மனப் போராட்ட உந்துதலால்

தொழிலையும் துறந்து வெளியேறினீரே!
 

50ம் ஆண்டுகளில்....மத சம்பிரதாயங்களை மறுத்தவர்

--------------------------------------------------------------------------------------------------

மணவாழ்விலும் வாழுங்காலத்திலும் இல்லத்தில்

நடந்த நிகழ்வுகளில் மதசம்பிரதாயங்கள்

கணப்பொழுதாவது நடைபெறக் கூடாதென

கவனமாகவும் கண்டிப்பாகவும் வாழ்ந்து-மனித

இணக்கத்தை வலுப்படுத்தும் இடதுசாரிக்

கொள்கைக்காய் குச்சொழுங்கை சந்துபொந்து

சுணக்கமின்றிச் சென்றடைந்து கிராமத்து மக்களின்

சுதந்திர உரிமைகளைச் சுயமாக உணர்த்தியவர்.




ஆலயப் பிரவேசம்.

---------------------------------

“சாதிஅமைப்புத் தகரட்டும், சமத்துவநீதி ஓங்கட்டும்

ஆதியில் இருந்துவந்த அடக்குமுறை ஒழியட்டும்” என்று

அறுபதுகளின் நடுவில் தன்பிறப்பிட ஆலயமாம்

மாவிட்டபுரக் கோவிலின் பிரவேசத்தை மனதாரக்

குறுக்கீடில்லாத் தோழர்கள் குழாத்துடன் வைத்தியர்

சீனிவாசகம், சூடாமணி, சுப்பையா, செந்திலென

போராட்டம் வளர்ந்து மட்டுவில், சங்கானை,

வேம்பிராய், புத்தூர் என்று வேகமாகப் பரவியதே!



மே தினம்---ஊர்வலம்

--------------------------------------

‘மே’ தினம் என்பது அமெரிக்க மண்ணில்....தொழிலாளர்

எட்டு மணித்தியால வேலைஉரிமைக்காய்

போராடி வென்றெடுத்த நாளே ’மே மாதம்’ முதல் நாளாகும்.

உலகமெங்கும் விடுமுறைநாள்..ஊர்வலங்கள்,கூட்டத்தில்....

வேரோடிய தொழிலாளர் விழிப்புணர்வு மிகுதியினால்...

ஆர்வமுடன் செங்கொடிகள் கைகளிலே தாங்கியோர்க்குத்

தலைமை தாங்கித் துணிச்சலுடன் புறப்பட்டாய்.

குண்டாந் தடியடிகள்....குறிபார்த்த துப்பாக்கிகள்..

எணணத்தில் உறுதிகொண்ட தோழர்களின் பலத்தால்,

மே தின ஊர்வலம் யாழ்-நகரைச் சுற்றியதே!


அடித்து உதைக்கப் பட்டும் எலும்புகள் நொருக்கப் பட்டும்

பிடித்து மிரட்டினாலும் பின்தள்ள முடியாத...

அடிமை விலங்கொடிக்க ஐக்கியமும் போராட்டமும்

குடிமக்கள் மனதிலே கொழுந்து விட்டெரியும்

ஆவேசம் தீரவில்லை அவலம் குறையவில்லை

ஆனமட்டும் சகல முற்போக்குச்  சக்திகளுடன்

கையோடு கைகோர்க்கும் கைங்கரியம் நடைபெற

தைரியமாய் இடதுசாரிகள் ஐக்கியம் உதிக்கச் செய்தாய்!



முன்னாளில் கெனமன், சரத் முத்தட்டு வேகம...பதுளை

முன்னணி வெற்றிபெறப் போனதுபோல் உன்னைநாடி

வநத பலருக்கு உறவானாய்....கருத்துப் பரிமாற்றம்
 
 
’தாயகம்’ இலக்கிய இதழைத் தோற்றுவித்தாய்!


---------------------------------------------------------------------------------

ஆண்டு எழுபதுகளின் ஆரம்பத்தில் அரசியலுடனே

பூண்ட இலக்கியமும் புதுமைபெற வேண்டுமென

வேண்டும் கலைஇலக்கியப் பேரவையைத் தோற்றுவித்து

தூண்டும் ஆசிரியத் தலையங்கம் தீட்டிநின்றாய்...

“தாயகம்” என்ற இலக்கிய இதழ்பிறந்து வளர்ந்தது.

தாயவள் நேசக்கரம் தன்னகத்தே கொண்டதனால்.....

முற்போக்குச் சிந்தைகொண்ட முனைவர்கள் வந்தார்கள்.

கற்றுப் பயன்பெறுவோர் கருத்தை எடுத்துரைத்தார்.




பேராசிரியர் கைலாசபதியின் தலைமையிலே

பாரதியார் பன்முகப் பார்வைத் தொடர்களில்...

சாரதிபோல் ரதம் செலுத்த அறிஞர்பலர் கூடினரே!

வேராக மறைந்திருந்தும் விழுதாயும் தாங்கினரே!

அரசியல் வாதிக்கு இலக்கிய ரசனையா?-எங்கிருநது?

‘’வரலாறு கூறுங்கள்” என்றுபலர் வினவினரே!’

“வி.பொன்னம்பலம்  தொடக்கம் - சண்முகதாசன் வரைக்கும் விளம்பினீரே!

 
 
இலக்கியவாதியாகவும் இயங்கினார்.


--------------------------------------------------------------

வொல்கவிலிருந்து கங்கைவரை.....பகவத்சிங் தொடக்கம்

நம்பூதிரிபாத் வரை--ஜீவானந்தம் தொடக்கம்-ஜெயகாந்தன்வரை

கார்ல்மார்க்ஸ் தொடக்கம்--மார்க்ஸிம் கோர்க்கி வரை-அதற்கு முன்

கம்பன் தொடக்கம்-வள்ளுவன் வரை பாரதி தொடக்கம்-பாரதி தாசன் வரை

கம்பனை வளர்த்த சடையப்ப வள்ளலை குறிக்கும்,

கம்பன் பாடிய பாடலையே தன்வீட்டுப் பாடலாக........

“அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்.......”

அந்தக் காலத்தில் கணனி-இணையம் இல்லாததால்...

இந்த உண்மைகள் வெளியுலக வெளிச்சத்திற்கு வரவில்லை!



அரசியல் எதிரிக்கும் அடைகலம் கொடுத்த அன்பன்.

-------------------------------------------------------------------------------------------

எண்பதுகளின் ஆரம்பத்தில் மனிதம் மரணிக்க.....

எண்ணற்ற வானூர்திகள் எடுத்துவீசிய பொருட்களும்

அள்ளும் ஆர்வலர்களின் மேளதாள வரிசைகளும்...

மக்கள் கூட்டமும் மலர்மாலைப் பொதிகளும்...

மேலாதிக்க வல்லரசின் மேலோட்டம் விழுந்ததால்...

“தேசியத்துள் நுழைதல் தேவையில்லை” என்று...

முதற்குரல் கொடுத்த முத்தமிழன் நீதான்!

இக்கருத்தை மறுதலித்த பத்திரிகை ந்ண்பன்

இல்லந்தேடி அடைகலம் கோர உன்னிடம் வந்தபோது..

‘”அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும்”

உடையவனாய் மிளிர்ந்தவன் மனிதமணியமே!
 
 
நிர்ப்பந்தமாய் ஊர் துறந்தாய்.


-------------------------------------------------------

அரசியல் தெளிவற்ற ஆட்கொலைஞர் உன்கருத்தை....

விரசமாய் விதைத்தபோது நிர்ப்பந்தமாய் ஊர்துறந்தாய் !

அதிகார வர்க்கமும் மாறிக்கொண்டே இருக்க...

அரிதாரம் பூசுவோரும் நிறங்களை மாற்றினர்.....

பதிவில் பலகதைகளுக்குச் சுருதியைக் கூட்டினர்.

உன்னைத் துரத்திய துப்பாக்கிகள் மாறின...

மதித்தவர் பலர் உன்னுடன் இருந்ததால்.....-நீயோ

துப்பாக்கிகளுடன் ஒத்துப்போக விரும்பவுமில்லை !



கண்டி வைத்தியசாலையில் இறுதி மூச்சு !

-------------------------------------------------------------------------

மனிதத் தேய்வு மலிந்து நீர்தேங்கிய இடங்களில்

பாசி பிடித்ததுபோல் இடப்பெயர்வு - புலம்பெயர்வு....

தனியத் தமிழன்....அவதிகள்...”அகதிகள்” என்ற

புனிதப் பெயரால் அழைக்கப் பட்டான்.

மனித இனமே மந்தைகளாயினர் ஏனென்று கேட்காமல்...

பின்னாலே ஓடுகிற பின்னடைவு வந்ததனால............!

எண்பதின் இறுதியில நீ விடைபெற்ற வேளையில்...

உன் உடம்பில்................!

‘தங்கொல்லை” முஸ்லீம் சகோதரியின் வீட்டுணவும்,

கண்டி வைத்தியசாலை பெளத்த பிக்குவின் குருதியுமே.....

தேசியம் உனக்குள் இருக்க; தேசம் உன்னை இழந்தது !
 
 
இறுதிப் பயணம்.
 
-----------------------------
ஊர்வலங்களைத் தடைசெய்யும் இராணுவக் காலத்தில்

சீர்பெறு செம்பதாதைகள் உயர்ந்து நிற்க....

ஏராளமான புத்தகப்பூக்களின் நடுவில் கண்மூடியபடி...

பெயரான ‘பொய்யாமொழி’ யின் உடலைச் சுற்றி

பாராளும் பலதோழர்கள் கைகளிலே செங்கொடிபறக்க.....-கண்

நீரால் வாழ்த்தி விடைகொடுக்கும் தோழமை,உறவுகள்

உன்னை அனுப்பி வைத்தோம். நீ வளர்த்த தேசியமும்

உன்கனவை நனவாக்க கண் விழித்தபடி இருக்கிறது. !



Wednesday, November 25, 2009

Remaining steadfast beside me! - My Grandfather K.A.Subramaniam



It is still so hard to believe that I have spent only my initial childhood years with you. However those days as a toddler & young kid remains still fresh and would always be evergreen in my life.

Whenever I have met different people, whose lives have been touched by your presence had said great & wonderful things about you. This would leave me wondering with so much awe & wished that I could spend more time with you.

Sometimes I believe that since we had so less time with each other, the love you showered to me was eternal.


The videos, photographs and the stories told to me enabled me to picture within my heart & was in every part of my life which helped me to be successful in the steps I’ve taken so far.


The words which I still remember and cherish are the ones where “You told me not to worry about anything and will always be there for even before I could utter my first alphabet in my mother tongue”, however you were long gone before I had the chance to grow as a girl and deal with real problems in life.


The way you saw life was “Nothing is Impossible”, still remember the day when I had asked you to show me the moon on a moonless night and you did show me the moon. It was not in the sky, however on a wall with torch light. The optimism which you showed me is one of the reasons on me being successful so far in life. All your dreams were well thought ahead of your time. Whatever people are saying at this century has been envisioned by you about two decades ago.


I’m so proud & honored to share the genetics with such a righteous man. The question that lingers my mind is how was it possible for a person to have the knowledge, virtue, commanding personality and yet being simple?


“Greatness of my thatha is his simplicity”


The life you lead was the one you preached to people of Tamils in the island nation, -“


“Adaiya nedung kathavum, Anjel enra sollum vendum”* (அடையா நெடுங் கதவும், அஞ்சேல் என்ற சொல்லும் வேண்டும்) and our Sathiamanai never had a door. You were a man of your words.


When you lay frozen amid the trees which you had planted, books you treasured and people esteemed by you knew that the mankind will never see another human being in this world with love, honesty, integrity and a hope to realize the dreams for his country and his people.


Along with all the people whose lives had an impact by your presence is your granddaughter who will live your dreams and make them come true.


 Thatha-you are my hero “ A true hero who lived for the change and / to uplift millions of lives in a society with troubled civil rights”and you always will be a Hero in those.


Love you!

Subhara Raveendran

கார்த்திகை 27: தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 20 ஆண்டு நினைவு

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 20 ஆண்டு நினைவு



காலில் வீக்கத்துடன் அந்தக் காலை லேசாக தடவிக்கொடுத்தவாறே திண்ணையில் உள்ள சாய்மனைக்கட்டிலிலிருந்து இடதுசாரிச் சிந்தனை அடிப்படைகளை கோரோசனைக் குழிசையை சிரட்டையில் உரைத்துப் பக்குவத்துடன் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நம் கிராமத்து வைத்தியர்போல அவர் அருகே இருந்து பாடம் கேட்ட 1983 கால நாட்களை இன்று நினைவுகூர்கிறேன்.

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்கள் மனைவி பிள்ளைகளுடன் 1969 இல்




இடையிடையே எழும்பி முற்றத்தில் நடக்கும் பாவனையிலும்கூட மூலதனத்தினதும் தனிச்சொத்துடமையினதும் அரசினதும் உழைப்பாளர் வர்க்கத்தினதும் இனவேறுபாடுகளைக் கடந்து ஐக்கியப்படவேண்டிய தவிர்க்கவியலாத நியதிபற்றி ஆசான் மணியத்தாரிடம் அப்போது பாடம் கேட்டதை இப்பொழுது நினைவுகூர்கிறேன்


கீறாத,கிறுக்கிக் கசக்கிவைக்காத காகிதமாக அப்போது நாங்கள் இருந்தோம். அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) பொதுச்செயலாளராக இருந்தார். அவ்வப்போதான உரையாடல்களின் வழியே இன்றுவரை என்னிடம் தொடரும் வர்க்க சாதிய போராட்ட அடிப்படைகள் அவரிடம் இருந்து முதிசமாக எனக்குக் கிடைத்தவைகளே.

தமிழில் வெளிவந்த சீன - சோவியத் இலக்கியங்களை எனக்கு கனிவோடு அளித்த ஒளியும் அறிவும் விவேகமும் நிறைந்த அந்த முகம் நினைவில் இப்போது அபூர்வமாகவும் அதிசயமாகவும் மாறிவிட்டது. நாம் மறுத்தபோதும் துப்பாக்கிகளைத் தருவதற்கு எல்லோரும் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர்.

தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் அவரின் அன்றைய நெறிப்படுத்துதல்களே இன்றுவரை வன்முறையற்ற வடிவங்களில் எம்மை நடத்திவருகிறது.

தீண்டாமை எதிர்ப்புப்போராட்டத்தின் போது தோழர் மணியம் அவர்கள் முன்னணியில் நின்று போராடியதிலும், அப்போது பொலிஸாரின் வன்முறையிலும் தடியடியிலும் தாக்கப்பட்டதிலும் தொல்புரத்தில் தலித்துகளிற்கான குடிநீர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்மாதிரியிலும் அவரின் நினைவு இன்றுவரை தொடர்கிறது.

'வெய்யிலில் இருந்தால்தான் நிழலின் அருமை தெரியும்' என்பது அவர் போன்ற பெரும் ஆளுமைகள் மறைவின்பின் இன்று வெறுமையாகவே தெரிகிறது. புலிகளால் அவர் அச்சுறுத்தப்பட்டார். எப்போதும் செயற்படாதவாறு அவர் முடக்கப்பட்டார்.

ஒரு கார்த்திகை விளக்கீட்டு நாளின்போது அவர் மகனும் எனது தோழனுமான 'மீரான் மாஸ்ரர்' அவர்களோடு கடைசியாக அவர்கள் வீட்டிற்குப்போய் அம்மாவின் கையால் கொழுக்கட்டையும் மோதகமும் சாப்பிட்டபின்னர் அவர் வீட்டிற்கு இன்றுவரை போகவில்லை.

இப்போது போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.ஆனால் மிஞ்சியிருப்பது...மணியத்தார் இருந்தால் எவ்வளவு நல்லாக இருக்கும்.

சுகன்

Monday, October 12, 2009
 "நிச்சாமம்" இணையத் தளத்தில் இருந்து மிகுந்த நன்றியுடன் இங்கே மீள் ஒளி செய்கின்றோம்.

Tuesday, November 24, 2009

5th March 1931 K.A Subramaniam 27 November 1989 Remaining steadfast beside me…

Remaining steadfast beside me…



It is so hard to believe I have spent only my initial most years with you.

Every time I hear people talk about you with so much awe I wish I had the opportunity to spend more time with you.


It is probably because we had so little time with each other you showered me with all the love that is needed for an eternity.


All your videos, photos and all the stories I’ve heard about you, made me picture you as someone who has been there in every part of my life and helped me lead every step I’ve taken.

You told me not to worry about anything and that you will always be there for me even before I could speak my first word, but you were long gone before I even had the chance to deal with the real problems in life.

When it comes to you nothing is impossible, I ask you for the moon on a moonless night and you show me moon on the wall with torch light. All your dreams were well ahead of your time. Whatever people are saying now you said them two decades ago.


I’m so proud to even share my genes with such a righteous man. How is it possible for a person to have all the knowledge, virtue, commanding personality and yet be so simple?


You’ve lead a quintessential life, you’ve followed every single thing you preached.


You said "Adaiya nedung kathavum, Anjel enra sollum vendum” * and our Sathiamanai never had a door. You were a man of your words.


When you lied frozen amid all the trees you planted, the books you treasured and the people who esteemed you, they all knew without a doubt that the world will never see another human so full of love, so full of honesty, so full of integrity and so full of hopes and dreams for his country and people.


Along with all the people, whose lives you’ve made an impact on, I will live your dreams and make them come true.


Thatha, you have always been my hero and you always will be. Love you!


R,Subhara
* In Tamil

Friday, November 20, 2009

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2009



கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2009 மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

K.A.Subramaniam's 20th Anniversary Memorial Lecture will be held on Saturday 28 November 2009 
Venue: 571/15 Galle Road Colombo 06, Sri Lanka

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது.

Sunday, November 15, 2009

சிங்கப்பூர்-திருமதி-திலகவதி அன்பழகனின் பிறந்தநாள் வாழ்த்துப் பாக்கள்




நாமறிந்த திலகவதிகள் நானிலத்தில் பலருண்டு...
நாவுக்கரசரின் தமக்கையாக நற்சமய வரலாற்றில்
தம்பியாரைத் தன்வழியில் தடுத்தாண்ட தமக்கையாகும்.-மற்றவர்
செம்மைமாதர் பாதுகாப்பில் சேவைபல செய்கின்ற
தமிழ்நாட்டின் தலைநிமிரக் குரல்கொடுத்து-மின்
குமிழான ‘அம்ருதா’வில் குறிக்கோளை எழுதிவரும்
ஐ.பி.எஸ். திலகவதி- அரிவையர்க்கு ஆணிவேராம்.
செய்கையில் தமிழுயர சிங்கையில் உழைக்கின்ற
வலதுகையான அன்பழகன் வாழ்க்கைத் துணைவியான
திலகவதி பெயருள்ள திருமகளாம்.சிங்கைவாழ்ந்த
இராமையாத் தேவரின் இளையமகள் இவரென்போம்.
இராமன் வாழுமிடம் சீதைக்கு அயோத்தியென்று
தமிழ்நாடு சென்றிருந்து தலைவன்வழி வாழந்த்வராம்.
அமிழ்தான வாழ்க்கையிலே ஆண்மக்களைப் பெற்றவராம்.
அக்டோபர் முப்பத்தொன்றில் ஆளுமையுடன் பிறந்து
அன்பழகன் இல்வாழ்வில் அரும்பணிகள் செய்தவராம்
கவிமாலை நிகழ்ச்சிகட்கு கருத்துடனே வருகைதந்து
குவிகின்ற புன்சிரிப்பால் குளிர்விக்கும் குலமகளாம்.-அவரை
புவிமேலே நீடுவாழ்ந்து புதுமைத்தேனி புகழுயர...
கவிமாலை உறவுகள் களிப்புடனே வாழ்த்துகின்றோம்.

   வள்ளியம்மை சுப்பிரமணியம்.

Monday, November 2, 2009

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 50வது நினைவுநாளை முன்னிட்டு மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் சிங்கைத் தமிழ்ச் சங்கத்தில் புதுமைத் தேனீ கவிஞர் மா.அன்பழகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கவியரங்கில் இருந்து சில காணொளிகள்.......

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 50வது நினைவுநாளை முன்னிட்டு மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில்  சிங்கைத் தமிழ்ச் சங்கத்தில் புதுமைத் தேனீ கவிஞர் மா.அன்பழகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கவியரங்கில்  இருந்து சில காணொளிகள்....... உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே  ஒளி செய்கின்றோம்...........


'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 50ம் ஆண்டு நினைவு நாள், சிங்கப்பூர் 01 Nov 2009 இல் இருந்து சில காணொளிகள் உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றோம்........


 
           அமைதிப் பாட்டு.
         -----------
 சிங்கப்பூர்ச் சிக்கனத்தில் வாழ்க்கையை ஓட்டு.
 ம்ங்காத ஐக்கியத்தைப் பழக்கத்தில் காட்டு.
 அயலவனை நேசிக்கக் கரத்தினை நீட்டு.
 சுயமாக உழைத்து மகுடத்தைச் சூட்டு.


 சமூக முன்னேற்ற நெறிகளைத் தீட்டு.
 தமிழின் பெருமையைத் தரணியில் நாட்டு.
 அறவழி தன்னில் பொருளினை ஈட்டு.
 குறைகள் சொல்வோர் வாய்தனைப் பூட்டு.


 இல்லாள் வருந்தாமல் ஒத்துழைத்து வீட்டு -
 அல்லல் களைய ந்ம்பிக்கை ஊட்டு.
 குழந்தையின் சிரிப்பில் தலைதனை ஆட்டு.
 புழக்கத்தில் புரளுதாம் கள்ள நோட்டு.


 வேண்டாத விரயங்கள் துருப்புச் சீட்டு.
 பூண்டநன் நெறிகளை அறிஞ்ரிடம் கேட்டு -
 வாரத்தில் ஒருநாள் குடலினை வாட்டு.
 நேரமே கிடையாது என்பது சாட்டு.

 அருவருக்கும் செயலுக்கு வைப்பாய் வேட்டு.
 திருக்குறள் எழுதிச் சுவரிலே மாட்டு.
 விரும்பும் சமாதான வீணையை மீட்டு.
 திரும்புமே உலகில் அமைதிப் பாட்டு.


  வள்ளியம்மை சுப்பிரமணியம்

Tuesday, October 20, 2009

என் அன்னை சிறீலங்காவுக்கு .......முதலில் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய மக்களின் கதவைத் திறந்து........

என் அன்னை சிறீலங்காவுக்கு .......
---------------------------------
மக்களின் ஐக்கியம் ஒன்றேநாட்டின் பலமாக
மதபேத இனபேத பிரதேச பேதமிலா
மக்கள் மனதில் வன்முறையை விதைகாத
தக்கநீர் வளத்தைத் தரமாக உயர்த்திட
விக்கினம் இல்லாத விவசாயம் மேம்பட
தரணிசூழ் உப்புநீர் ந்ன்னீராய் மாற்றிட
அறிஞர் பலரின் ஆலோசனை பெற்றால்
அனைத்து மாகாணங்களும் செழிப்புடன் வளருமே!



எண்ணிக்கையில் குறைவான இனத்திலே உதித்துக்
கண்ணியமாகக் கடமைகள் ஆற்றிய நாதன்....
நண்ணியே அவரை நாட்டின் தலைவனாய்ப்
பண்ணிய சிங்கையைப் பார்த்தே மகிழ்வாய்
மண்ணின் அளவில் சிறிதாக இருந்தாலும்
திண்ணமான சாதனைத் திறமைகள் மிளிரும்
விண்ணுலகம் என்பது மானிடர் வாழ்கின்ற
மண்ணில் தானன்றோ மலர்ந்து சிரிக்குது!

‘தம்மபதம்’ கூறுகிற புத்தரின் தத்துவச்
செம்மை நெறியினைச் சிரமேற் கொண்டு
வன்முறை ஒழித்து வரண்ட நிலங்களை
நன்செய் நிலமாக்க இதயச் சுத்தியுடன்
நம்மை நன்னெறியில் செம்மையாய்ப் பயிற்றிட
உண்மை நேர்மை உழைப்பு மேலோங்க
இன்பமான இலங்கைத்தாய் இயற்கை வனப்பால்
அன்பில் உயர்ந்து அழகாய்த் திகழ்வாள்!


போட்டி பொறாமை மன உழைச்சல் இல்லாத
வாட்டி வதைக்கும் வன்முறை அற்ற
ஆட்டிப் படைக்கும் அகந்தை ஒழிய ஆன்றோர்
காட்டிய வழியில் கருணை நெறியில்
ஈட்டிய செல்வங்கள் ஊறுபடாமல் புதுமை
காட்டிடும் கட்டொழுங்கு நல்லாட்சி நிலைக்க
தீட்டிடும் புத்தியைத் திடமான வெற்றிக்கு
ஊட்டுவோம் பலத்தைப் புதிய சந்ததிக்கே!

ஆசிய வட்டார நாடுகளில் தங்கி
பேசிடும் இன மத நல்லிணக்க மகிமையை
ஊசிமுனையில் உள்நுழைந்து வேரோடி
ஊடறுக்கும் பூசல்களை முளையிலே கிள்ளி
பேசிடும் ஒற்றுமை, சமாதானம் காத்து
பொறுப்புடன் நாட்டை நிர்வகிப்பதிலே
மாசில்லாத் திறனாளரை வருக’வென வரவேற்று
மாட்சிமையாய் ஆட்சியை மனதாரப் போற்றுவோம்!


ஆதியில் நாட்டில் இருந்தது போலவே
சாதிசமயப் பூசல்கள் இல்லாச் சகோதர
நீதிவழுவா நெறிமுறை பூண்ட புதுமையொன்று
மேதினியில் மீண்டும் வரவேண்டும் கட்டாயம்
மானிடத்தைப் பேணுகிற மனித விழுமியங்கள்
கானகத்தில் காய்ந்த நிலவாகப் போகாமல்
தானெடுத்துச் செல்லத் தராதரம் பெற்ற
நானிலமாம் இலங்கைக்கு இணையான நாடுமுண்டோ?.


முதலில் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய மக்களின்
கதவைத் திறந்து தொழில்நுட்பம் பலவளர
நிதமும் நெடுஞ்சாலைப் போக்கு வரத்துகளும்
மிதமாக வடிவமைத்தால் மெச்சிடும் உலகமெலாம்
குதமாகப் பயிர் வளரும் குடிநீரும் கிடைத்துவிடும்
உதவாது என்று கைவிட்ட ஓரங்குலப்
பதமான நிலமும் பயன்பாட்டைக் காட்டுகையில்
இதமான இலங்கைக்கு இணையாக நாடுமுண்டோ?

வள்ளியம்மை சுப்பிரமணியம்.சிங்கப்பூர்.

Tuesday, October 13, 2009

நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்! ...சிங்கைக் கவிச்சோலை 11 10 2009

மனிதரும் விலங்கினமும் மாநிலத்துப் பறவைகளும்
 புனிதமான நிழலால் புத்துண்ர்ச்சி பெற்றிடவே
     அழியாக் கருணையுடன் ஆறுதல் அளித்தமரம்
     நிழல்தேடும் மரமாக நிலைதடு மாறியதேன்?



    இளமை உறுதியுடன் இமைப்பொழுதும் கலங்காமல்
    களைப்பை உணரவில்லை கடுமையான வெய்யிலிலும்...
    சுழற்காற்றுத் தாக்கிக் கிளைமுறிந்து..முதிர்வயதில்..
    நிழல்தேடும் மரமொன்று நிம்மதிக்கு யாசிக்குது.

    கட்புலனும் கைகாலும் கறுத்துச் சிறுத்தாலும்
    முட்கம்பி அடைப்புக்குள் முடங்கிக் கிடக்கும்..
    வழிபிறக்கும் நம்பிக்கையில் வாசலை நோக்கியபடி
    நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்!



சிங்கைக் கடற்கரைக் கவிமாலை 11 10 2009


  மனிதரும் விலங்கினமும் மாநிலத்துப் பறவைகளும்
     புனிதமான நிழலால் புத்துண்ர்ச்சி பெற்றிடவே
     அழியாக் கருணையுடன் ஆறுதல் அளித்தமரம்
     நிழல்தேடும் மரமாக நிலைதடு மாறியதேன்?

    இளமை உறுதியுடன் இமைப்பொழுதும் கலங்காமல்
    களைப்பை உணரவில்லை கடுமையான வெய்யிலிலும்...
    சுழற்காற்றுத் தாக்கிக் கிளைமுறிந்து..முதிர்வயதில்..
    நிழல்தேடும் மரமொன்று நிம்மதிக்கு யாசிக்குது.

    கட்புலனும் கைகாலும் கறுத்துச் சிறுத்தாலும்
    முட்கம்பி அடைப்புக்குள் முடங்கிக் கிடக்கும்..
    வழிபிறக்கும் நம்பிக்கையில் வாசலை நோக்கியபடி
    நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்!

           
           வள்ளியம்மை சுப்பிரமணியம். 07 Oct 2009       

Wednesday, October 7, 2009

Letter written on 7 October 2009 in Sinhala to His Excellency the President of Sri Lanka


 For the benefit of the readers, this letter was written on 7 October 2009.                                                                         Blk 101 #04-07, Tampines St 11
                                                                                                             Singapore 521101

கனம்,
பெருமதிப்புக்கு உரிய ஜனாதிபதி அவர்கட்கு,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கம்
சிறீலங்கா

           வணக்கம்! ”ஆயுபோவன்”!!

இன்று 07/10/2009 எனக்கு 71 வயது.எமது இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டுமென்றும் அதற்குரிய ஆளுமையுடைய உங்கள் சுதந்திரக்
கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டுமெனவும் தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வை சேவையாக நடாத்திய
கே ஏ சுப்பிரமணியத்தின் (அமரர் 1989) மனைவியாகவும் என் மகன் (PLOTE மீரான் மாஸ்ட்ர்)சத்தியராஜனை
இழந்த தாயாகவும் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

எந்த மக்களுக்காக என் கணவர் தன் வாழ்வை அர்ப்பணித்தாரோ எந்த மண்ணுக்காக என் மகன் போன்றோர் தம்
வாலிப வசந்தத்தை அழித்தார்களோ அந்த மக்களும் அந்த மண்ணும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய துர்ப்பாக்கியம்
மாரி மழைக்கு முன்பாக முடிவுக்கு வர அவரவர் சொந்த இடங்களுக்கு போக வேண்டும்.அல்லது பாடசாலை
கட்டடங்களில் மாரி அடைமழைக்கு முன்பாக வசிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஒரு உண்மையான இலங்கை பிரசையாக உங்களிடம் உறுதியாகக் கூறுகின்றேன், இன்று மீதமாக உள்ள அனைவரும்
அடக்கி ஒடுக்கப்பட்ட அப்பாவிப் பொது மக்களே.அவர்களின் கதவைத் திறப்பதன் மூலம் நெடுஞ்சாலைகளும்
குளங்களும் அமைக்க முடியும்.

வரண்ட நிலங்களை நன்செய் நிலமாக்க, இதயச் சுத்தியுடன் நன்னெறியில் மக்களை
செம்மையாய்ப் பயிற்றிட, உண்மை நேர்மை உழைப்பு மேலோங்க இன்பமான இலங்கைத்தாய் இயற்கை வனப்பால் அன்பில் உயர்ந்து அழகாய்த் திகழ்வாள், அதற்கு உலக
நாடுகள் உதவ வேண்டுமென உறுதிபட சிங்கப்பூர் TV எதிரொலியில் May 2009இல் கூறினேன்.

இக்கடிதத்தை அவதானத்துடன் வாசித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி!
இங்ஙனம்
தங்கள் உண்மையுள்ள
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

”சீலமும் காட்சியும் நிறைந்தவர், தருமத்தில் நிலைத்தவர், வாய்மைகளை உணர்ந்தவர், தன் கடமைகளைச் செய்பவர்,
இவர்களையே மக்கள் போற்றுவர்.” (தம்மபதம் 217)

மகிழ்வாரே சந்திராவும்.




மகிழ்வாரே சந்திராவும்.
          ...............
  
வீட்டுக்குள்ளே முடங்கி விரக்தி மனதுடனே
    பாட்டெழுதும் பக்குவமும் பதுங்கி மறைந்ததாலே
  நாட்டுக்கும் பயனின்றி நானேன் இவ்வுலகில்....
    ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதென...
  பூட்டிய வாசல்திறந்து பூவாங்கப் போனபோது
    வாட்டிடும் துயரம் போக்கும் வனிதாமணி ஒருவர்
  தீட்டிய வார்த்தை கேட்டுத் திடமொன்று மனதுள்வர
   ஊட்டிய தெம்பினாலே உள்ளூரச் சிந்தித்தேனே!



  ஆசிரியப் பணியினூடே அயராமல் சமூகப்பணி
   ஆங்கிலம், தமிழ், மலாய் அனைத்திலும் தேர்ந்தமங்கை
  ஊசிமுனைத் தராசுபோல நீதிநிறை நங்கை
 ”  பேசுகின்ற வார்த்தையிலே பெருகும் தமிழ்ப்பங்கை
  பாசமுடன் எழுதுங்க பையனின் தாள்களிவை”
   வீசிடும் தென்றலாக விளம்பினார் என்முன்னாலே
  நேசமுடன் அவர்துணையால் நிரூபணம் கிட்டியது
   கூசிநின்ற நாட்கள் குறைந்து மறைந்தனவே!

  வேண்டுவோர் உதவிகளை விரைந்துநல்கும் நாவரசி
   பூண்டு மகிழ்வீரெனப் புத்தாடை தந்த பூவரசி
  ஆண்டகை சிவராமகிருஸ்ணன் அகத்தின் மாதரசி
   காண்பவர் போற்றுகின்ற அர்விந்தின் தாயரசி
  நீண்டநாள் நீர்வாழ்ந்து சேவையிலே சீரரசி..
   வேண்டுகிறேன் தாயொருவர் உனக்கு அன்பரசி
 தூண்டுகோல் போலிருந்து திரிஒளிரச் செய்தராசி
   மாண்புறு மனத்தாலே மகிழ்வாரே சந்திரா.சி.

Sunday, October 4, 2009

அதுமட்டும் வேண்டாம்........வள்ளியம்மை சுப்பிரமணியம்

அதுமட்டும் வேண்டாம்
.....................
பங்கமில்லாது பாடுபட்டு உழைத்த பணத்தையும்
த்ங்கமான உடம்பையும் தொலைத்துச் சிதைக்க
மங்கலான செவ்விளக்கு மரணப் பகுதியா...?
அங்குசென்று கெட்டழிய.. அதுமட்டும் வேண்டாம்!

கட்டுப் பாடாகக் காத்திடும் ஆட்சியில்
திட்டம் இட்டுப்பல திருட்டு வழிகளிலே..
காவல்துறையின் கைகளிலே சிக்கி வதைபட
போதைப்பொருளா..? அதுமட்டும் வேண்டாம்!

இனபேத மதபேத மொழிபேதம் இல்லாத
சனங்களின் மனதிலே சாக்கடை அழுக்காய்..
பையவே உள்நுழையும் பயங்கர வாதமா..?
ஐயகோ!மக்களுக்கு அதுமட்டும் வேண்டாம்!

----------------------------
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

Wednesday, September 30, 2009

கவிமாலை புனலிலே நன்னீர்

 

கவிமாலை புனலிலே நன்னீர்
     ....................
   சிங்கைக் கடற்கரைக் கவிமாலைப் பத்தாம் ஆண்டை
     பொங்கும் பொறுப்புடன் புரவலர்கள் அயர்வு  இன்றி
   தங்கநிகர் விழாவாக தேசியநூலக கீழ்த்தளத்தில் நடாத்த..
     முந்தைய ஆசான் பிச்சினிக் காடார் வந்ததனால்...
   சங்கொலிபோல் கரவொலியில் சட்டஅமைச்சரும் வருகை தந்தார்.
     பங்கமிலாச் சினிமாத்துறை மறுமீட்சிச் சேரனுடன்...
   வங்கக்கடல் பரந்து விரிந்து நிறைந்தது போல்
     பங்களிக்கப் பார்வையாளர் பலதிசையால் வந்திருந்தார்.


   தமிழ்த்தாய் வாழ்த்தை தரமான கானத்தில் கலையரசி பாட...
     அமிழ்தாக “அதுமட்டும் வேண்டாம்” தலைப்பில் ஐவர்கவி சொல்ல..
   சமூகமளித்த அத்தனை பேரும்மகிழ அமைச்சரின் கையினாலே..
     கணையாழி விருதும் தங்கப் பதக்கவிருதும் வழங்க..
   கமழ்கின்ற நறுமணத்து “பொன்மாலைப் பூக்கள் “ நூலை..
    கவினுறு சேரன் தன்கரத்தினால் வெளியிட்டாரே! நூலைவாங்க..
  புவியிலே மறுபிறப்பாய் பிறந்திட்ட இந்தத் தாயை..
    ”எங்களின் ஒளவை இவர்” என்றாரே புதுமைத் தேனீ.


   சிந்தனை கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்க...
    வந்த இவ்வுரிமை..அன்பு..அரவணைப்பு..பாசம்..
  எந்தனுக்கு எப்போது இந்த இணைப்பு ஏற்பட்ட தென்றால்...?
    சொந்தக் கனவிலே நிகழ்ந்த கவிமாலைக் குள்ளேவந்த-அந்த
  நனவுக்குப் பின்னால் தானே ..நானிதை உணர்ந்து கொண்டேன்.
   கனவல்ல; யாவும் உண்மை கவிமாலை எந்தன் அன்னை.
”இன்னும்  கேட்கிற சத்தம்” சொன்ன புதுமைத்தேனீ தன்குரலில்
  ”இன்னும் பல சொந்தங்கள் மனிதருக்கு வேண்டும்” என்றார்.


   மனதிலே பற்பல இழப்புகள்..மரணத்தாக்கம்..வாட்ட
     தினமும் ஏதாவதொரு திசையறியாத் திணறலுடன் -உலர்
  வனத்திலே தனியாளாக தாகமிகுதியால் நாவரண்டு -கவிமாலை
    புனலிலே நன்னீர் உண்ட புத்துணர்வாலே -தினைப்
  புனத்திலே வள்ளி யாக மறுபிறப் பெடுத்தேனென்று....
    எனக்குள்ளே சொல்லிக் கொள்ள இக்கவி பிறக்குதையா!
  கனதியான உறவுக்குள்ளே கால்பதிதத கர்வமொன்று
   தனக்குள் தான் சொல்லுகிற தாயாக இருப்பதாலே!


                                                      வள்ளியம்மை சுப்பிரமணியம்

Thursday, September 17, 2009

Eid Mubarak! நோன்புப் பெருநாள் வாழ்த்து.


நோன்புப் பெருநாள் வாழ்த்து.             
       ....................              
            
   (1) சிங்கையில் வாழுகிற சீருறு நான்கினமும்
          தங்களின் ஒற்றுமையைத் தாங்களே வெளிப்படுத்த
         ப்ண்டிகைக் காலங்களில் பண்பாடு, கலாச்சாரம்
         கொண்டாடக் குதூகல விருந்தோம்பல் செய்கின்றார்.
   (2) அருகருகே வாழ்கின்ற அயலவரை நேசித்து
          ஒருவர்க் கொருவர் உண்டி,உடை வழங்கித்
         தருகின்ற தருமச்செயல் நோன்புப் பெருநாளில்
        வருகின்ற புண்ணியமே வாழ்வின் பெருநிதியாகும்.
   (3) ஏழையின் பசியினைச் செல்வந்தனும் உணரவே
          வாழையடி வாழையாகக் கடைப்பிடித் தொழுகும்
          காலையில் தொடங்கி அந்திசாயும் வரைக்கும்
         வேலையில் இருப்பாரன்றி, உமிழ்நீரும் உண்ண்மாட்டார்.
   (4) வருடத்தில் எல்லாநாளும் வயிறார உண்பதால்-சக்தி
         தருகின்ற உள்ளுறுப்பு ஓய்வெடுக்க-சுத்தமாக்கத்
        தேவையற்ற கழிவுகள் தேகத்தை விட்டகல
        பாவச்செயல் புரியாப் பக்குவமும் வந்துவிடும்.
   (5) அன்பைப் பொழிந்து அருமையாய்ப் பெற்றவரை
         துன்பம் களைந்து தூயவழி காட்டினாரை
         மாசகல ஆழ்ந்த மனத்தொழுகை செய்தவரை
         ஆசானைக் குருகுலத்தை அடிபணிந்து போற்றிடுவர்.
   (6) பசித்திரு..தனித்திரு..விழித்திரு..என்றதேர்வில்
         புசிக்காமல், பகைக்காமல்,உறங்காமல் பதவிபெற்றார்
        வானத்தில் இருந்து குதிக்கவில்லைப் பூவுலகில்...
        மானிடத்தின் விழுமியமே அம்மனிதன் தானென்போம்.
   (7) புவிவாழப் புனிதமாய் நோன்பைக் கடைப்பிடிக்கும்
         மகிமையான மக்களுக்குச் சிங்கைத்தாய் சார்பாக...
        கவியால் கூறுகின்ற கருப்பொருள் எதுவென்றால்
        நபிகள் நாயகத்தின் நல்லுரையே அதுவென்போம்!


   (8) ஈகைத்திருநாளின் சிறப்பு இன்றுவரை வாழுதென்றால்
      வாகைசூடிய வள்ளல்கள் வாரிவழங்கும் கொடையன்றோ?
    ’செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என்பது வரலாறு...
     சக்தியிழந்த கைகூட வழங்கியது பழக்கத்தாலே...



    (9) வருந்தி உழைத்த செல்வத்தைத் தந்தேவைபோக..
    வறுமையில் உழல்வோர்க்கும் வாழ்வில்லா அபலைகட்கும்
    தருகின்ற வள்ளல்களைப் பார்த்திருந்த வானகமும்
    பொழிகின்ற மழைநீரால் பூமித்தாய் செழிக்கின்றாள்.


    (10) முல்லைக்குத் தேரீந்த பாரிமன்னன் வரலாறும்...
     கர்ணன் என்ற கொடைவள்ளல் காப்பியத்தில் இருப்பதுபோல்
    சிங்கைத் தாய்க்குப் பெருமைசேர்க்கும் சீதக்காதியர்கள்
    எங்களுக்காய்க் கட்டிவைத்தார் உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளி.


    (11)  நம்கண் முன்னே நடமாடும் வள்ளல் பெருந்தகைகள்
    வாழுமிந்த நாட்டினிலே நாமும்வாழ்ந் தோமென்றால்...
    ஆறுதல் வார்த்தையல்ல; உறுதியான உண்மையிது!
    கூறுகிறேன் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்!!



               வள்ளியம்மை சுப்பிரமணியம்.