"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Friday, December 31, 1971

DRAFT

 

Encounters of a Communist Coexistence Valliammai Subramaniam

This Book is Dedicated to my beloved husband K.A. Subramaniam and also to countless comrades who are tirelessly working to build his dream in Sri Lanka

  

 


 

 

 

 

 

 

 


Oru Communist Inaiyar Valvin Santhippukal

Valliammai Subramaniam

K.A. Subramaniam was a unique leader of the Sri Lankan Communist Movement.

These are the memoirs of his Life Partner, Valliammai Subramaniam. She was

active in many critical turning points in Sri Lanka’s Political life in the last half century.

First Edition: 2023

Published Jointly by:

K.A. S. Sathiamanai Library

Tholpuram West,Chulipuram

Srilanka.

sathiamanai.library@gmail.com

+94 770780657, 718207252

South Vision Books

491-B, 4th Link Road, Sadasiva Nagar,

Madipakkam, Chennai - 600 091

southvisionbooks@gmail.com

+9194453 18520

Wrapper and Layout: Babi, Kalaiselvan,

ISBN :9788196126216
I’m Here...

To give a voice against injustice

Never feared

Poverty has never added

Enough surrounded by disease

Search and solidity did not

diminish Think Fuse

The lifeblood I received

more happy

I found love and kindness

in my husband

I saw humanity and individuality

In your highest image -

honesty is sublime

Your Mankind

does not lie even in death.

You wanted to see

Social change and balance

not far off.

I’m here to remind you....

by Valliammai Subramaniam.

 


 

Contents

சங்கானை நிச்சாமத்தோழி அரங்காவின் தோழர் மணியம் பற்றிய கவிதை. 478

 


இலங்கை பொதுவுடமை இயக்கத்தின் தனித்துவமான தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கே..சுப்பிரமணியம். அவரது இணையரான வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் நினைவுக்குறிப்புகள் இவை. இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டுகால அரசியல் வாழ்வில் ஏற்பட்ட பல நெருக்கடியான திருப்புமுனைகளில் செயல்பட்டவர் அவர். இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டுமென்று, அதற்குரிய ஆளுமையுடன் தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வை சேவையாக நடாத்திய தோழர் கே சுப்பிரமணியத்தின் இணையராகவும்; தமிழ் மண்ணுக்காக தன் வாலிப வசந்தத்தை அர்ப்பணித்த இனவிடுதலைப் போராளி மீரான் மாஸ்ட்ர் சத்தியராஜனை இழந்த தாயாகவும் வள்ளியம்மை சுப்பிரமணியம் எழுதிய நூல்.

பதிப்புரை

இலங்கை பொதுவுடமை இயக்கத்தின் தனித்துவமான தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கே..சுப்பிரமணியம். இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டுமென்று, அதற்குரிய ஆளுமையுடன் தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வை சேவையாக நடாத்திய தோழர் கே சுப்பிரமணியத்தின் இணையராகவும்; தமிழ் மண்ணுக்காக தன் வாலிப வசந்தத்தை அர்ப்பணித்த இனவிடுதலைப் போராளி மீரான் மாஸ்ட்ர் சத்தியராஜனை இழந்த தாயாகவும் வள்ளியம்மை சுப்பிரமணியம் இருக்கிறார். இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டுகால அரசியல் வாழ்வில் ஏற்பட்ட பல நெருக்கடியான திருப்புமுனைகளில் செயல்பட்டவர் அவர். அவரின் நினைவுக்குறிப்புகள் இவை.

சமூக விடுதலைக்கான இயக்கங்களை மக்கள் கட்டி எழுப்பும்போது அவர்களுக்கு இடையில் எத்தகைய காதல் உறவுகளும், குடும்ப உறவுகளும் உருவாகின்றன என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாக அவர்களது வாழ்வின் நிகழ்வுகள் உள்ளன. தோழர் மணியம் அவர்களும் வள்ளியம்மை அவர்களும் ஒருவரின் அடித்தளமாக மற்றொருவர் வாழ்ந்துள்ளனர். மணியம் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க வாழ்க்கைக்கு அசைக்கமுடியாத உறுதுணையாக அவர் இருந்ததும் மகளின் திருமணத்தில் வள்ளியம்மை அவர்களின் எதிர்கால வாழ்க்கை நலனை மணியம் அவர்கள் பார்த்ததுமாக இருவரும் காவியமான காதல் வாழ்வை வாழ்ந்துள்ளனர்.

இலங்கையின் இரண்டு இனங்களின் ஒன்றுபட்ட வாழ்வுக்கு தனது உயிரைப் பணயம் வைத்து எவ்வாறு பொதுவுடமை இயக்கமும் தோழர் கே. . சுப்பிரமணியம் அவர்களும் போராடினார்கள் என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இனமோதல்களை இந்தியா எவ்வாறு பயன்படுத்தியது என்பதையும் தொட்டுக் காட்டுகிறது.

இயக்கங்களின் செயல்பாட்டில் பெண் தலைமைக் குடும்பங்கள் படுகிற அவதிகள் போதுமான அளவுக்கு விவாதிக்கப்படாதவை. இலங்கையின் அரை நூற்றாண்டு கால அரசியல் போக்குகளை ஒரு பெண்ணின் நோக்கிலும் ஒரு தாயின் நோக்கிலும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வரலாற்று நோக்கு தனித்தன்மையானது. சமூக விடுதலைக்கான பணிகளில் பெண்களின் பங்களிப்புகள் போதுமான அளவுக்கு இன்னமும் மதிக்கப்படவில்லை. வள்ளியம்மை அவர்களின் நினைவுக்குறிப்புகள் அத்தகைய பங்களிப்பையும் அடக்கமான முறையில் பதிவு செய்துள்ளன என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

புதிய தலைமுறையினர் கற்றுக்கொள்வதற்கு இந்த நினைவுக் குறிப்புகளும் உதவும்.

எம். பாலாஜி
நிறுவன ஆசிரியர்
. நீதிராஜன்
முதன்மை ஆசிரியர்
சவுத் விஷன் புக்ஸ்
25. 06. 2023

அணிந்துரை

கே..எஸ். சத்தியமனை நூலகம்காத்திரமிக்க பங்களிப்புகளுடன் தொடர்ந்து பலவேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவது குறித்துப் பலரும் தங்களது பாராட்டுதல்களைத் தெரிவித்து வருவதோடு இயன்றளவில் ஒத்தாசைகளையும் பங்கேற்புகளையும் நல்கி வருகின்றனர். காலப் பொருத்தமிக்க நிறுவனமாக இந்த அமைப்புக் களமாட இயலுமான சூழலின் வெளிப்பாடு இது!

காலத் தேவையின் அவசியத்துடன் வரலாறு படைக்கும் களச் செயற்பாடுகளுக்குத் தலைமை ஏற்று மக்களது பங்களிப்புகளை ஒழுங்கமைத்து நெறிப்படுத்தி, வழிகாட்டியதன் வாயிலாக மக்கள் இயக்கம் சரியான திசைமுகப்படுத்தலுடன் முன்னேற வகை செய்தவர் தோழர் கே.. சுப்பிரமணியம். அந்த வரலாற்று இயக்கப் போக்கின் அடையாளமாக அவரது பெயருடன் திகழும் கே..எஸ். சத்தியமனை நூலகம் மீண்டும் மக்களது வரலாறு படைக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்தி முன்னேற்றமடையச் செய்வதற்குத் தன்னாலியன்ற பணிகளை முன்னெடுக்கும்!

அத்தகைய பணிக்கொடைகளில் ஒன்றாக நூல் வெளியீட்டுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் இந்தப் படைப்புவாழ்வின் சந்திப்புகள்தோழர் கே.. சுப்பிரமணியத்தின் இணையரால் ஆக்கப்பட்டு வழங்கப்பட்ட அரும் சொத்து.

இலங்கை வரலாற்றின் மகத்தான திருப்பு முனைகளில் ஒன்றாக அமைந்த தருணம்ஒக்ரோபர் 21 எழுச்சி”, “சாதி அமைப்புத் தகரட்டும்”, “சமத்துவ நீதி ஓங்கட்டும்என்ற பதாகையுடன் சுண்ணாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறிய அந்த ஊர்வலத்துக்கு தலைமையேற்று வழி நடாத்தி விழுப்புண் பட்டவரைப் பலரும் தமக்கான வழிகாட்டியாக வரித்த வரலாறுண்டு.

அதன் சமூக எழுச்சி அலை வீறுடன் இருந்த 1969 மேதினத்தை தொழிலாளர் தினமான மே முதலாம் நாளிலேயே நடாத்துவது என்ற புரட்சிகரக் கொம்யூனிஸ்ட் கட்சியின் முடிவைக் கையேற்று, அந்தப் புரட்சிகர ஊர்வலத்துக்கும் தலைமை ஏற்று மற்றொரு தடவை காவல் படைத் தாக்குதல்களுக்கு ஆளானவர் தோழர் கே.. சுப்பிரமணியம். அத்தகைய வீறுமிக்க வரலாற்று எழுச்சிகள் பலராலும் படைப்பாக்கப்பட்டன!

அத்தகைய வரலாற்று நாயகரது குடும்ப வாழ்வு எவ்வாறு அமைந்திருந்திருக்கும் என்ற கேள்வி பலரிடமும் எழுவதுண்டு. சாதனையாளர்கள் சமூக வெளியில் பிரகாசமாகச் சுடர்விடும் போது நெய்யாகவும் பலமான அத்திவாரமாகவும் துலங்கிய குடும்பம் பற்றி எந்தப் பதிவும் இடம்பெறாமல் போய் விடுகிற அவலங்கள் உண்டு!

பண்டிதர் படிப்புடன் கல்வியில் முன்னேறித் தொழில் வாழ்க்கையை மேற்கொண்ட, தன்னம்பிக்கையுடன் முழுநேரக் கட்சி ஊழியரென அறிந்தே தோழருடன் வாழ்வின் இணையராகக் கைகோர்த்துப் பக்க பலமாக வாழ்க்கைத் துணையாக வாழ்ந்தவர் வள்ளியம்மை சுப்பிரமணியம்; புரட்சியாளரான ஒரு மக்கள் தலைவரை இரத்தமும் தசையுமாக மீண்டும் வாழ்வளித்து எம்மிடம் புத்தகமாகத் தந்துள்ளார்!

மக்களே வரலாறு படைப்பவர்கள்என்ற கோட்பாட்டுத் தெளிவுடன், அதற்கான களம் அமைத்து வழிப்படுத்தி - அதனூடாக மக்கள் தலைவர்களாக வளர்வோரை அமைப்பாக்கி - மீண்டும்மக்களிடம் இருந்து மக்களுக்குஎனச் செயலொழுங்குகளை வளர்த்துச் சென்ற அற்புதமான தலைவராக வாழ்ந்த தோழர் கே..எஸ்., சாதனைகள் அனைத்தையும் தனக்கானது எனவறுகியெடுக்கும்சுரண்டலாளராக இருந்தவரல்ல; சக தோழர்கள், தலைவர்கள் மட்டுமன்றிப் பங்கேற்ற மக்கள் சக்தியை முழு அளவில் மதிப்பவராகக் கருத்துரைத்து வழிகாட்டியவர் தோழர் கே..எஸ். சுப்பிரமணியம் அவர்கள்!

சாதியத் தகர்ப்புப் போராட்டத்தின் ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் (1966 - 1974) பலரது பங்கேற்புகள் வாயிலாக வளர்ந்ததன் பேறாக சாதனைகள் பல படைத்தது; பலரும் அதற்கான காரணி என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதேயளவுக்குத் தீர்க்கமான, மனவுறுதிமிக்க தலைமைச் சக்தியாகத் தோழர் கே.. சுப்பிரமணியம் திகழ்ந்து வழி நடாத்திச் சென்றார் என்பதும் சம அளவில் வலியுறுத்தப்பட வேண்டிய உண்மை என்பதனை அந்தக்காலத்தில் ஊடாடிய பலரும் அறிவர். (அவற்றை எடுத்துரைக்கும் படைப்புகள் செ. யோகநாதன், எஸ்.பொ. போன்ற ஆளுமைமக்க படைப்பளர்களால் சமகாலத்தில் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது).

அவ்வகையில் தனக்கான வரலாற்றுப் பங்களிப்புக் கைவரப்பெற்ற போதிலும் தனது வாழ்வனுபவத்தைஒரு கொம்யூனிஸ்ட்டின் சுய விமரிசனம்என்ற தலைப்பிலேயே எழுத எண்ணி இருந்தார். தனது சாதனைப் படிக்கட்டுகளை எழுதுவதாக அன்றி, அந்த மகத்தான காலத்திலும் ஏற்பட்ட தவறுகளில் தனது பங்கு எத்தகையது என்பதனை வெளிப்படுத்த வேண்டும் என அவாவி இருந்தார்!

வலுமைமிக்க மானுட உறுதி வாழ்வியலாகத் தடம்பதித்த பக்கங்கள் எத்தகைய வலிகளைத் தாங்கி முன்னேறி வந்தது என்பதனை கே..எஸ். சத்தியமனை நூலக நிறுவுநர் வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களது எழுத்தினூடாகத் தரிசிப்போம்!

இரவீந்திரன் நடேசன்

நிர்வாகி, கே..எஸ். சத்தியமனை நூலகம்.

சுழிபுரம், இலங்கை.

முன்னுரை

வள்ளியம்மை சுப்பிரமணியம் ஆகிய என்னால் எழுதப்பட்டவாழ்வின் சந்திப்புகள்என்ற தொடர் எழுதினேன். அது நூலாக வெளிவர இருப்பதால் அதற்கொரு என்னுரையாக இந்த முன்னுரையை வாசக நேயர்களாகிய தங்களின் கரங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.

எனது வாழ்வில் நிகழ்ந்த அத்தனை சம்பவங்களையும் உள்ளதை உள்ளபடி அப்படியே எழுதியிருக்கிறேன். அதனை வாசித்துக் கண்ணீர் வடித்த அன்புள்ளங்கள் பலர் தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொண்டுஅம்மா..... இது ஒரு நூல் வடிவத்தில் வெளிவந்தால்..... புதிய சந்ததியினரும் வாசித்துப் பயன்பெற வழி பிறக்குமல்லவா?” என்று தங்கள் அபிப்பிராயத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த ஊக்குவிப்பின் செயற்பாடுதான் நூலாக உங்கள் கரங்களில் உலா வருகிறது. அதிலே வறுமை இருக்கிறது. வறுமையிலும் ஒரு செம்மை இருக்கிறது. ஆண்டான் அடிமை முறைக்கெதிரான குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. அதிலே.....அடிமைத்தனமும் இல்லை. ஆளும் ஆவலும் இல்லை. அடக்குமுறைக்கெதிராக குரல் கொடுத்தபடியால் வாங்கிக்கட்டிய பொல்லடிகளும், எலும்பு உடைவுகளும், காய்ந்து போன இரத்தக்கறைகளையும் நீங்கள் காணலாம்.இரத்தக்கறை படிந்த ஆடைகளையும், அவை கூறும் சோகக்கதைகளையும் வாசிக்க முடியும். பசி, பட்டினியின் கோரத்தைக் காணமுடியும். அதே வேளை பசித்த முகம் பார்த்து.....வீடு தேடி வந்தவர்களைப் பசித்த வயிற்றுடன் திருப்பியனுப்பியதுமில்லை. வசிக்க வீடில்லாமல் வாடகை வீடுகளில் உரிமையாளர்களின் விருப்பப்படிஉங்களிடம் வரும் சகலருக்கும் உள்ளே நுழைய அனுமதியோம்என்ற எதிரப்புக்குரல்களையும் எதிர் கொண்ட வரலாறும் உண்டு. “உங்களுக்குத் தான் வாடகைக்குத் தந்தோம். மற்றவர்கள் எங்கள் கிணற்றில் தண்ணீர் அள்ள இடங்கொடுக்க மாட்டோம்என்ற வீட்டுரிமைக்காரரின் கண்டனத்துக்கு பல தடவைகள் ஆளாகியிருக்கிறோம். இத்தனை எதிர்ப்புகள் மத்தியிலும் சக தோழர்களின் பக்கபலமும், ஒத்துழைப்பும் இருந்த படியால், சகல தடைகளையும் கடந்து.....தடைக்கற்களை வெற்றிப் படிக்கற்களாக மாற்றி மேலே ஏறி லட்சிய உயரத்தை எட்ட முடிந்தது.

என்றும்..... இதே போல லட்சிய வாழ்வை மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பல இடைஞ்சல்கள், வீடில்லாத வெறுமை......கைகொடுக்க முடியாத உறவுகள்..... பணப்பற்றாக்குறை......வைத்தியசாலைக் காலத்தில் கைகொடுத்த தோழமை......என்ற நினைவுகள் கண்களில் கண்ணீரை வரவழைத்த நாட்களை உங்கள் பார்வைக்கு தந்து..... உங்களின் பெறுமதிமிக்க வாழ்த்துரையை வேண்டி நிற்கிறேன்.

வள்ளியம்மை சுப்பிரமணியம்

நிறுவுநர்,

கே.,எஸ் சத்தியமனை நூலகம்,

சுழிபுரம், இலங்கை


1

நினைவிலாடும் உறவுகள்

 

என் வாழ்வில் சந்தித்த நண்பர்கள் தோழர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், வாழ்வியல் அனுபவம் வாய்ந்த முதியோர்கள், அயலில் வாழ்ந்த அன்புத் தாய்க்குலங்கள், தனியே கஷ்டப்படுகிறாவேஎன்ற பரிவு காரணமாக உதவிட ஓடி வந்த மாணவ செல்வங்கள், அரசியலுக்கும் அப்பாற்பட்டு முக அறிமுகம் என்ற ரீதியில் பழகிய மனித உருவில் வந்த அக்கறையுள்ள மனித நேயங்கள் அநேகர். ஆண்டு ரீதியாக எழுதினாலும் அத்தொகை கணக்கில் அடங்காது. நிற்க.
எனக்கென தனிப்பட்ட அரசியல் எதுவும் கிடையாது. அந்த அளவுக்கு ஆழமான ஆராய்வோ முடிவு எடுப்போ எதுவுமே என்னிடத்தில் இல்லை. அதற்கு எனக்கு நேரமும் இருக்கவில்லை.

ஒரு பொதுவுடமை அரசியலின் முழுநேர ஊழியரின் மனைவிக்கு, மூன்று குழந்தைகளின் தாய்க்கு, அரசாங்க வேலை செய்கிற பெண்ணுக்கு எவ்வளவு பொறுப்புக்கள் கடமைகள் பணிச்சுமைகள் இருந்திருக்கும்என்று என் போல விடயங்களுக்கு முகங் கொடுக்கும் பெண் இனத்திற்குத் தான் இந்த ஆற்றாமையின் தாக்கம் புரியும்.

இன்று சுயமாக வாழ முடியாமலும், சகல உணவுகளை உண்ண முடியாதஅல்சர்’ (Alcer) என்ற நோயுடனும், எலும்புத் தேய்மானத்துடனும், நடக்க முடியாத நிலையில் ஆங்கில மாத்திரைகள் மாத்திரமே உயிர் வாழும் நாட்களை தக்க வைத்துக் கொள்ளுகின்றன, என்று... வயது 80 பூர்த்தியான நிலையில் இந்ததோழர்கள்தலைப்பில் எழுத்து வடிவில் எழுத ஊக்குவித்த என் மகளுக்கும், தோழமைக்கும், உறவுக்கும் மேலான மகன் முறை வாய்ந்த, சேவை செய்ய தன்னை ஒரு நிலைப்படுத்தி செயற்படுகின்ற கவிஞர் அழ. பகீரதன் அவர்களுக்கும் எனது விசுவாசத்தை தெரிவிப்பது எனது கடமையாகும்.

என்மீதுள்ள அன்பினாலும், அக்கறையினாலும் என் திருமணத்தின் முன்னரும், பின்னரும் ஏன்? இன்று வரையும் பரிந்துரைக்கும், மனித அபிமானம் கொண்ட நல்லுள்ளங்களுக்கு என்மன ஆழத்தில்...நன்றி உணர்வு ஊற்று உண்டு. சிலருடைய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும், பின்பற்றவும் கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயம் தேவைப்படும் அளவுக்கு எடுத்துக்கொண்டு வழி நடந்தது அவர்களுக்கு நான் கொடுத்த கெளரவத்தின் இடத்தினால் ஆகும். சிலரது தீர்ப்பான வார்த்தைகள் என் காதுக்குள் நுழைய இடங் கொடுக்க என் அன்னை என்னை வளர்த்த, தான் வாழ்ந்த இல்லற அடிச்சுவட்டில் அமைந்தது. அம்மா தன் மூத்த பெண் குழந்தையுடன் வாழ இலங்கையில் விட்டிட்டு அந்தக் காலத்தில்.... 1925 ம் ஆண்டில் என் தந்தையார் சிங்கப்பூர் நாட்டிற்கு கப்பல் மூலம் சென்று விட்டாராம். அந்தக் கால கடல்வழி கப்பல் பயணமே இரண்டு வாரங்கள் செல்லுமாம். கடிதம் போட்டால்... மூன்று வாரங்களின் பின்னர்தான் கைக்கு வருமாம். இந்தக் காலம் விஞ்ஞான முன்னேற்றத்தினால், நேரில் முகம் பார்க்கவும், பேசவும், செய்திகள் பரிமாறவும் முடிகிறது.
இந்த வசதிகளை உலகுக்கு வழங்கிய கண்டுபிடிப்பாளர்கள் மிக திறமையான புத்திசாலிகள்.! அந்த இளம் தாய் தனிமையில் பேருந்து பஸ் பிரயாணம் செய்து சுழிபுரம் - யாழ் - அரியாலை வரை சென்று வந்த சிரமங்களை ஒரு தாயார் நீர்வேலி சோமு ஆச்சியின் வழித்துணை உதவியதாக கூறுவார். அந்த வரலாற்று சம்பவங்கள் எனக்கும் கணவன்
நாட்டில் இல்லாத காலங்களில் குழந்தைகளின் பாதுகாப்பில் நான் வாழ அயலும் உதவியமைக்காக அந்த தாய்க்குலத்திற்கு.. காரைநகர் (1962-1966), காலையடி பண்டத்தரிப்பு (1967 -1971), தொல்புரம் (1972-1976), சத்தியமனை (1977-1991) கண்டி (1992-1997), சிங்கப்பூர் (1998-2011), கொழும்பு (2012 -2018), சத்தியமனை (2019) மறக்க முடியாத அன்னையர் சூழ்ந்த அயல் வாழ்ந்த தாய்க்குலமே !

பொதுவுடமை கட்சியின் அங்கத்தவர்கள் சிலரை தேடி அவர்களது வீட்டிற்கு சென்று, வந்திருக்கிறோம். அந்த வீடுகளில் குழந்தைகள் இருப்பர். வயோதிப பெற்றார் இருப்பர். நோய் வாய்ப்பட்டுவீல் செயர்’ (Wheel Chair) பராமரிப்பு, மரணவீடு, குழந்தை கைதவறல் இப்படியாக. ஒருவரின் துயரில், மற்றவர் பங்கு பற்றுதல்உடுக்கை இழந்தவன், கைபோல ஆங்கே இடுக்கண், களைவதாம் நட்புஎன்ற பொய்யாமொழி நடைமுறையில் வெளிப்படும். ஆண்டுகள் வரிசைப்படுத்தவில்லை. சம்பவங்கள், பெயர்கள் உண்மை. டாக்டர். சீனிவாசகம் வீடு தையிட்டி. மான் முத்தையா வீடு சங்கானை, டாக்டர் நந்தி சிவஞான சுந்தரம், மாதகல் கந்தசாமி, செ. யோகநாதன், பெற்றோலிய கதிரவேலு (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தந்தை. என் உடன் பிறவா சகோதரன்) அத்தியடி, பேராசிரியர் மெளனகுரு வீடு, யாழ்ப்பாணம். பேராசிரியர் கைலாசபதி, முற்போக்கு எழுத்தாளர் கே.டானியல் வீடு, நல்லூர் வீதி கார்த்திகேசன் மாஸ்ரர், தோழர்கள் சண், நீர்வை, திருஞானமூர்த்தி, செந்தில், தருமு, சுப்பையா, செல்வநாயகம், தம்பையா. நவத்தார் என பலரும், ஊரில் என் ஆசிரியர்கள் பண்டிதர் . ஆறுமுகம், டாக்டர் தம்பையா, நட்புகள் சுந்தரம், சந்ததியார் என…..
டைப் அடிக்க முடியாமல் எழுத்துகள் குழம்புகின்றன. நிறுத்தி பிறகு தொடர்வேன்.....

2

எனது ஆசிரிய மணிகள்

நாம் தேடிச் சென்று வாழ்த்துக்களையும், வாழ்வில் எப்படி எதிர் நீச்சல் போட்டு இல்வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதென்ற அறிவுரைகளையும் பெற்றுக் கொண்ட வாழ்வியல் அனுபவ- மனோபலம் கொண்ட அறிஞர்கள் பலர். ஆண்டுகள் முன் பின்னாக இருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன். கிட்டத்தட்ட 58 ஆண்டுகளுக்கு முற்பட்ட சந்திப்பு நிகழ்ச்சிகளாகவே இவை இருக்கும். (பழமைவாய்ந்த பழக்க வழக்கங்களுக்கு உட்பட்ட கிராம மக்களின் பாரம்பரிய நடைமுறைகளுக்கு அமைவாக வாழ்ந்த குடும்பங்களில் இருந்து பிறந்த ஓர் ஆண் மகனும், பெண் மகளும், ஒருவரை ஒருவர் தமது வாழ்க்கைக்கு துணை மற்றவர் என்று தீர்மானித்து முடிவு செய்து திருமணம் செய்து கொண்டதனால், அவர்கள் முகங் கொடுத்த துன்ப துயர நாட்களில் அவர்களுக்கு தெம்பு கூறி, நம்பிக்கையளித்து வாழ்ந்து இன்று மறைந்த நிலையிலும் என் மனதில் மறையாமல் இருக்கின்ற பலரையும், உயிருடன் வாழுகின்ற பலரையும் கீழ் எழுதும் போது..... ஆண்டுகள் வரிசைப்படுத்த முடியாமைக்கு மன்னிக்கவும். சம்பவங்கள், செயல்கள், நிகழ்ச்சிகள் யாவும் உண்மையே)

அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்என்ற பாரதி பாடலுக்கு அமைய அந்தக் காலத்தில் 5 வயது சிறுவர்கள் அனைவரையும் நவராத்திரி ஏடு தொடக்கிய நாளில் இருந்தே தொடர்ச்சியாக பள்ளிக் கூடம் போகின்ற குழந்தைகளுடன், குழந்தையாக நானும் மெய்கண்டான் பள்ளியில் தான்... எனது ஆரம்பக் கல்வி தொடக்கம், எனது தொழிலுக்கு வழி காட்டிய ஆசிரிய பயிற்சி முன்னிலை யாவற்றிற்கும் மெய்கண்டான் தாயே வழி வகுத்துக் கொடுத்த பெருமைக்கு உரியவளாகும். ஐந்து வயதில் அரிவரி அதாவது, பாலர் வகுப்பு 1943 தொடக்கம், SSC எனப்படும் பாடசாலை இறுதிப் பரீட்சை வரை எனக்கு ஒரே ஒரு பாடசாலையில் கற்கிற வாய்ப்பு தானாகவே அமைந்தது. 1953 வரையும் 15 வயது முடியும் வரை எமக்கு வாய்த்த ஆசிரிய மணிகள் அந்தக் காலத்திலேயே பதினைந்துக்கும் மேலான எண்ணிக்கையில் சேவையாற்றிக் கொண்டிருந்தார்கள். இன்று ஒருவரும் உயிரோடு இல்லை. ஆனால், அவர்கள் செய்த சேவை இரண்டு சந்ததி கடந்தும், உயிர் வாழும் பேசு பொருளாக இருக்கிறது.

முதல் பாடம் சைவ சமயம், இதனை பண்டிதர் . ஆறுமுகம், திரு. இலகுப்பிள்ளை ஆறுமுகம், திரு. அப்பாத்துரை அவர்கள் எடுப்பார்கள். இரண்டாவது பாடம் கணிதம் அதிபர் செ. சீனிவாசகம் அவர்களும், உதவி அதிபரான அப்பாத்துரை ஆசிரியர் அவர்களும் எடுப்பார்கள். அது போல் சரித்திர பாடத்தை அந்தந்த வகுப்பு ஆசிரியரே எடுப்பர்.ஆங்கில பாடத்தை திரு. யேம்ஸன் குமாரவேல் அவர்களும், திரு. இராசையா தம்பிராசா , வட்டுக்கோட்டை திலகலட்சுமி அவர்களும், வடலியடைப்பு முத்துக்குமாரு மனோன்மணி அவர்களும் எடுப்பார்கள்.சகல வகுப்புக்களுக்கும் தமிழ் பாஷை என்கிற தமிழ் இலக்கணத்தையும், தமிழ் இலக்கியத்தையும் பண்டிதர் ஐயா அவர்களே எடுப்பார்கள்.

சங்கீதத்தில் தேர்ச்சி பெற்ற அறிஞர். கல்யாண சுந்தரம் (இந்தியா) அவர்கள் பிற்பகலிலும் வகுப்பு எடுப்பார்கள். கைத்தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்த அதாவது நம் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பாடசாலைகளில் தொழிற்கல்வியின் அவசியம் கற்பிக்கப்பட்டது. தையற்கலைக்கு திருமதி. சிவபாக்கியம் நாகலிங்கம் அவர்கள், திருமதி. நல்லம்மா தங்கராசா, முல்லைத்தீவு, அவர்களும் நெசவுத் தொழிலுக்கு செல்வி. தம்பையா பொன்னம்மா செல்வநாயகம் அவர்கள்,வயித்திலிங்கம் ஞானேஸ்வரி அவர்கள், அச்சுவேலி மனோன்மணி அவர்களும், பன்ன வேலைக்கு கோப்பாய் அன்ன லட்சுமி அவர்களும் கடமையாற்றினார்கள்.

யாவற்றிற்கும் மேலாக, காலப்போக்கில் உயிரியல், விலங்கியல் விஞ்ஞானம் என்ற பதம் பிரிக்கப்பட்ட பாடங்கள் நாட்டுச் சீவனசாத்திரம் என்ற பாடமாக இருந்தது. அதனை திரு. எதிர்மன்னசிங்கம், என்ற கந்தசாமி வாத்தியார் உயிரினங்களின் படங்களை கரும்பலகையில் வரைந்து கண் தொடக்கம் வால் வரை இலக்கங்கள் இட்டு ஊர்வன, பறப்பன என... இப்போ நினைத்தாலும் பசுமையான நினைவாக இருக்கிறது.

சிறப்பாக நெசவுத்தொழில் பாடத்தை ஆசிரியை பொன்னம்மா அவர்களே தொடர்ந்து நடாத்தி வந்தார்கள். மற்ற இருவரும் வேறு, வேறு இடங்களுக்கு மாற்றல் பெற்றுப் போய்விட்டார்கள். நல்லூரில் நீண்ட காலமாக இயங்கி வந்த அரசினர் நெசவு பயிற்சி கல்லூரி என்ற பயிற்சிநெறி அரசடிச் சந்தியில் நிலை பெற்று, எத்தனையோ ஆசிரிய வழிகாட்டிகளை வளர்த்து விட்டது காலத்துக்கு காலம் பொறுப்பதிகாரிகள் மாற்றல் பெற்றதும், வந்து தங்கி இருந்து கடமையாற்றினார்கள். மெய்கண்டானில் இருந்து நான் உட்பட நான்கு பேர் மேற்படி பாடசாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுடன் 25 மாணவர்களாக 1954ம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டோம். அந்நேரம் திருமதி. குணவர்த்தன என்ற தென்னிலங்கை (கொறணை அத்துக்கோறளை) சிங்கள ரீச்சர் தான், பொறுப்பதிகாரியாக கடமையாற்றிக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மாணவர்களுக்காக தமிழ் மொழியுடன், ஆங்கிலத்தையும் ஆனைப்பந்தி சந்தியில் இயங்கி வந்தரியூட்டறியில் படித்து பரீட்சைகளில் தேர்ச்சி பெற்று அயலில் வசிக்கும் மக்களுடனும் நேச உணர்வுடன் பழகி வந்த சிங்கள பெண்மணியாவார். அவர்களுக்குகாஞ்சனமாலாஎன்ற பெண் குழந்தை இருந்தார். நீண்ட காலம் கடமையாற்றி பதவி உயர்வு பெற்று அவர்கள் மாற்றலாகி போக, திரு. குகதாசன் அவர்கள் பொறுப்பை ஏற்று வந்தார்...


தொடர்வேன்.....

3

நான் பிறந்த குடும்பம்

3,4, நாட்களாக எழுத முடியவில்லை.... என்னைப் பற்றி மாத்திரம் எழுதிக் கொண்டிருப்பது சுயநலம். எனது பெற்றார், சகோதரர்களை, அவர்களது கல்வியைப் பற்றியும் எழுத வேண்டியது அவசியமல்லவா? எனக்கு அறிவு தெரிந்த நாளில் இருந்து எமது பெற்றார் பறாளாய் முருகன் சந்நிதியில்... கந்தஷஷ்டி விரதம் அனுஷ்டிப்பதற்காக ஐப்பசி மாதத்தில் ஒரு வாரம் கோவிலிலேயே தங்கி புராண படிப்பு, ஞானியார் அவர்கள் கூறுகிற உரை யாவும் கேட்டு அதை எமக்கு கதையாகச் சொல்லுவார்கள்..... தமக்கு மீன் சுமக்க மறுத்த தேவர்களை...., சூரன், சிங்கன், தாரகன் ஆகிய அரக்கர் குல சகோதரர்கள்.... தேவர்களை சிறையில் அடைத்ததும், முருகப் பெருமான் அவதரித்து.... போர் செய்து சிறை மீட்ட வரலாறும்.... இரவிரவாக கதையாகக் கூறுவார்கள். “வீர வேல், தார வேல், விண்ணோர் சிறை மீட்ட தீர வேல், வாரிக் குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும துழைத்த வேல் உண்டே துணை....” இப்படி எத்தனையோ பாடல்கள்..... செவ்வேல், திருக்கை வேல் பற்றிய கந்த புராணப் பாடல்கள்.... கச்சியப்ப சிவாச்சாரியாருடையவை...!

இப்படி கோவில் வழிபாடு, விரதம், உபவாசம் , கடலில் தீர்த்தமாடுதல், இறுதி நாள் சிவனடியாருக்கு உணவளித்தல்..... இப்படியான சைவ சமய நெறிகளும், குல தெய்வத்துக்கு நவராத்திரி, திருவெம்பாவை என்றும், பொங்கல், படையல், வேள்வி, அபிசேகம், குளிர்த்தி , அன்ன தானம் என்ற புண்ணியக் காரியங்களை செய்து தான் ....இறுதியில் பிறந்த 3 பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தனர். புதிய சந்ததிக்கு இந்த வரலாறு தெரியாது. சைவ சமய அறிவு கற்பிக்காத பள்ளிகளில் படித்ததால் அவர்களுக்கு சமயம் என்றால் என்ன என்ற அவாவும் கிடையாது.
எனது தங்கை இலட்சுமிப்பிள்ளையும் மெய்கண்டான் பள்ளியில் படித்து 5ம் ஆண்டு புலமைப் பரிசுகல்விக்குத் தகுதியாகி வேலணை, அரசினர் மத்திய கல்லூரி..... விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார். என் தம்பி பொன்னையா மெய்கண்டான் பாடசாலையில் படித்து தனது உயர்கல்விக்கான வழியை சுன்னாகம் ஸ்கந்தவரோதயா.... கந்தரோடை
கல்லூரியில் படித்து, பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினார். தங்கையும் தனது A/L பெறு பேற்றுடன் கண்டியில் வரக்கலாந்தை பள்ளியில் கணித ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

சுழிபுரம் கம்பனை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த சூரியர், லட்சுமி குடும்பத்தில் 4 பிள்ளைகள். ஞானக்கா, தேவியக்கா, திலகமக்கா, தம்பி சூரியர் என்று அவர்களும் இந்த கந்த சட்டி விரதம் அனுஷ்டிப்பவர்கள். அவர்கள் தான் எமக்கு புத்தகங்கள் தந்து ஊக்குவிக்கும் வழிகாட்டிகளாக இருந்தனர். தேவியக்கா..... மங்கையற்கரசி ரீச்சர், சுழிபுரம் ஐக்கிய சங்கப்பள்ளியில் ஆசிரியராக இருந்த காலத்தில்.... நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களின் உறவுமுறை சுப்பிரமணியம் செட்டியார் எந்த விதமான சீதனமும் கேட்காத மருமகனாக வந்தார். என்று லட்சுமி ஆச்சி சொல்லுவார். அந்தக் குடும்பமும், அவர்களது சகோதரிகளின் பிள்ளைகளான கமலா, மரகதவல்லி, மகேந்திரன், சேதுகாவலர், டாக்டர் மணி, ரேணுகா, முரளி, சீமாட்டி, ராசு, (சில பெயர்கள் ஞாபகத்தில் இல்லை.... பொன்னார், மஞ்சு,... அநேக உறுப்பினர்கள்.) அவர்களைப் போல எமது உறவுக்குள் பாடசாலைப்பரிசோதகராக இருந்த மு.நாகலிங்கம், மனோன்மணி ஆசிரியை அவர்களும்., எமது படிப்பை முன்னிலைப்படுத்த ஊக்குவிப்பார்கள்.

பண்ணாகம் மண்ணுக்கு பெருமை சேர்த்து வாழ்ந்த பண்டிதர் .ஆறுமுகம் அவர்களுடன், தொல்புரம் வித்துவான் நா. சிவபாத சுந்தரனார் அவர்களும் வழி காட்டிகள் வரிசையில் இடம் பெறுகிறார்கள். அது போல எனது தங்கைக்கு, மிஸ் மருதயினார், திரு. தம்பு, திரு.அரிச்சந்திரன், திரு. .இராசசுந்தரம், திருமதி. தேவகி சபாரத்தினம், என..... ஆசிரிய மணிகள் ஏராளம்..... சக உறவுகள் வரதா, இராசலட்சுமி, நேசம்மா, பவானி, தியாகேஸ்வரி, லோகேஸ்வரி, இரத்தினேஸ்வரி, கிருஷ்ணன், காந்தன், றூபா, ஏராளமானவர்கள்...... அது போல தம்பிக்கு வித்துவான் வேலன் அவர்கள், வித்துவான் வேந்தன் அவர்கள், திரு.வி. பொன்னம்பலம் அவர்கள்,மாதகல். .கந்தசாமி அவர்கள்....... அது போல... கண்டி பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் . கைலாசபதி அவர்கள், பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் போன்றோர் ஆசான்களாக வந்து வாய்த்தமை நன்றியறிதலுடன் நினைவு கூரத்தக்கது ....!

என் தோழமை மிகு கணவர் கே.. சுப்பிரமணியம் அவர்களைச் சந்தித்தது பற்றி அடுத்துத் தொடர்வேன். ...

4

மணியத்தைச் சந்தித்தேன்

தோழர் மணியத்துடனான என் முதல் சந்திப்பு :

என்னுடன் விடுதியில்செல்லக்காஎன்கின்ற அம்பலப்பிள்ளை சிவநேசம் என்ற பெண் இருந்தார். என்னை அவருக்கு பிடித்திருந்தது. எனது அமைதி, கையெழுத்து,நான் பாடல் புனைவது என, என் பெருமைளை நண்பர்களிடம் பகிர்வார். நல்லூர் அரசினர் நெசவு ஆசிரியர் பயிற்சி கலாசாலை விடுதியில் 1955 மாசி மாதமளவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை (ஏற்கெனவே அதிபரிடம் கேட்டு பெற்றுக் கொண்ட அனுமதிப்படி) செல்லக்கா (சிவநேசம்) என்னுடன் ஐந்து பேரை, கீரிமலை தீர்த்தம் பார்ப்பதற்காக அழைத்துச் செல்ல விரும்பினார். அதன்படி எல்லோரும் புறப்பட்டு இரண்டு பஸ் மாறி, மாறி ஏறி... மகாஜனாக் கல்லூரிச் சந்தியில் இறங்கி, கிளானை வைரவர் கோவிலடியில் உள்ள செல்லக்கா வீட்டிற்கு போக 11-00 மணிக்கு மேலாகி விட்டது. கீரிமலை கேணி பார்க்கிற திட்டமும் கை விட்டப்பட்டது. வீட்டிலிருந்த சின்னக்கா , மனோன்மணி அவர்கள்எல்லாருக்கும் சமைக்கப் போகிறேன். சாப்பிட்டு விட்டு போகவேணும்என்றா.

சற்று நேரத்தில் சின்னண்ணை.... (மணியம் அவர்கள்) அங்கு வந்தார். தங்கைக்காக தங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் படி எந்த ஊர் என்று கேட்டு தன்னுடன் சீமெந்து தொழிற்சாலையில் வேலை பார்க்கும்நண்பர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு உறவு முறை பற்றிய பல விசாரணைகள் கலந்துரையாடினார். எனது உடன்பிறப்புக்கள் யாரும் அங்கு வேலை செய்யாததால், நான் வாயை மூடிக்கொண்டு கொண்டு இருந்தேன். பின்னர் மதிய உணவு 2-00 மணிக்கு முடித்து முன்போல் பஸ் வண்டிகள் பிடித்து அரசடி, நல்லூருக்கு வந்து சேர 5-30 மணிக்கு மேலாகி விட்டது. “எல்லோரும் கதைக்க ஒரு பிள்ளை மாத்திரம் கதைக்காமல் இருந்தவ. ஏன் என்று இனிமேல் எப்போதாவது காணக் கிடைத்தால் கேட்க வேணும்என்று தோழர் நினைத்தவராம்.

அதன் பின்னர் 1956 ஆகஸ்ட் மாதம் படிப்பு முடிந்தது. அவரவர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட தயாரானார்கள். ஆனால், எல்லோருடைய முகவரிக்கும்தேசாபிமானிஎன்ற முற்போக்கு பத்திரிகை மாதாந்தம் வரும். அதில் உள்ள வசன நடைகளை... புரிந்து கொள்ள முடியாது. உதாரணமாக :- சர்வாதிகாரம் , ஏகாதிபத்தியம், வல்லரசு, மேலாதிக்கம்.... இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள்... பள்ளிக்கூடத்தில்... கலாசாலையில்... நான் படிக்காத, பரிச்சயம் இல்லாத, அர்த்தம் புரியாத சொற்கள்.... வசனநடையும் இதுவரை காலமும் வாசித்து அறியாத வசனங்கள்....... இதன் கருத்துக்களை யாரிடம் கேட்பது...? அந்த பேப்பர்....அனுப்பிய அந்தப் பேப்பர் வாசிக்கிற அவரைக் கேட்டால் தான் தெரியும். அரசியலை மக்கள் மயப்படுத்தும் எண்ணத்தில் அவரது செயல்கள் இருக்கும். அதை பின்னர் புரிந்து கொண்டேன்.

ஆனால், இவற்றிற்கு மேலாக.... எனக்கொரு தொழில் கிடைக்க வேணும்....அதன் மூலம் ஐயா பட்ட ஈட்டுக் கடனைத் தீர்க்க வேண்டும் என்ற கவலை..... சதா நேரமும் என்னுள் புதைந்து கிடந்தது. செல்லக்கா தனக்கு இரண்டு தலையணை உறை பூக்கள் தைத்து வரக்காட்டச் சொல்லியும், தான் திருமணம் சரிவந்து திருகோணமலை போலீஸ் குவாட்டர்சில் தங்கியிருப்பதாகவும் எழுதி ஒரு கடிதத்தை தமையன் மூலம் அனுப்பியிருந்தா.

தோழர் மணியமும் வீடு கேட்டு அக்காம்பியின் (அக்கா மகன் அப்புத்துரை) உதவியுடன் வந்து சேர்ந்தார். (அவர் வீட்டிற்கு வந்த போது நான்செத்தைக்குள் ஒளித்து நின்றதாகப் பின்னர் தோழர்கள், குழந்தைகளிடம் சொல்லிச் சிரிப்பார்.) ஏதோ நீண்ட நெடிய காலம் பழகியவர் போல அம்மா கொடுத்த சாப்பாட்டை இரண்டு கையாலும் வாங்கிச் சாப்பிட்டார். அவ கோவிலில் இருந்து கொண்டு வந்த வீபூதியை தான் எழுந்து நின்று நெற்றியில் அனுமதித்தார். மிக அன்பான கீழ்ப்படிவான முதியவர்களை மதிக்கத்தக்க பண்பாளனாக அவர் இருந்ததனால் தங்கள் மகன்களை சிறு வயதில் பறி கொடுத்த அந்த பெற்றோருக்கு ஏதோ யார் பெற்ற பிள்ளையோ இப்படி மரியாதை தெரிந்த மகனாக இருக்கிறாரே என்று பெரிய பாசம், பெரிய அன்பு.. அதனால் தான் என் தந்தை பின்னர்சத்தியமனைகட்டப்பட்டிருக்கும் மண்ணை மகன் (தம்பி பொன்னையா) மூலம் வாங்கி மகளுக்கு (மருமகனும் வசிக்க) கொடுத்தார்கள் போலும். அதன் பின்னர் நான் பிரவேச பண்டிதர் படித்து சித்தியெய்தி விட்டேன். இதற்குள் நான், விளக்கங்கள் கேட்ட குற்றத்திற்காக பல புத்தகங்கள் தபாலில் வரும். மூலம் வங்காள மொழி, தமிழில் மொழி பெயர்ப்பு. அவர் வசதியான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்ததால் வறுமை தெரியாது. பற்றாக்குறை விளங்காது. எந்த நேரமும் வாசித்துக் கொண்டிருந்தால் வீட்டில் ஆச்சி சாப்பாடு கொடுப்பார். அப்புவுடன் அண்ணன் வெற்றிலை தோட்டத்தில் உதவி, ஒத்தாசை செய்வதால் வீட்டருகே கிளானை சனசமூக நிலையத்தை தனது தந்தை, பெரிய தந்தை, உறவினர்கள், நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்து சமூக ஆர்வலர்களை உதாரணமாக, உடுவில் எம்.பி. தர்மலிங்கம், ஸ்கந்தவரோதயா வி.பொன்னம்பலம், காங்கேசன்துறை டாக்டர் சீனிவாசகம் போன்ற முற்போக்கு கருத்துள்ள பெரியவர்களை வரவழைத்து தலைமை தங்கும் பொறுப்பை கொடுத்து கெளரவப்படுத்துவது அவர்கள் மூலம் கிடைக்கும் நூல்களைநானும் வாசிக்க வேண்டும்என்ற அவாவும், ஏதோ..... அவர் நினைப்பில் நான், ஒரு பெரி..ய்..... அறிவு ஜீவி என்ற நினைப்பு. ஆனால், அதுவல்ல நான்; ஆக, என் கையில் இருந்தது S.S.C (O/L), Government Training School Final certificate (1st Class) பிரவேச பண்டிதர் ஆக இவ்வளவும் தான். இந்த இடத்தில் எனக்கொரு பாடல் வரி ஞாபகம் வருகுது....”

பாடறியேன்.... படிப்பறியேன்,... பள்ளிக்கூடம் நானறியேன்.... ஏடறியேன் எழுத்தறியேன்.... எழுத்து வகை நானறியேன்... ஏட்டிலே எழுத வில்லை. எழுதி வைத்தும் பழக்கமிலல.....

என்னமோ.....பொழுதே போகாமல் வீட்டிலே சும்மா.... வெட்டியாக இருக்கும், பெண், என நினைத்து...... பொதுவுடமைக் கருத்துக்கள் செறிந்த புத்தகங்கள்...... தபாலில். வரும். இதற்கிடையில் நான் யாழ். பாரதி பாஷிய வித்தியாசாலையில் பால பண்டித வகுப்பில் எமது கிராம.... மகேஸ்வரி கனகசபை, தம்பி சிவசண்முகமூர்த்தி அவர்களுடன் ஒன்றாக பஸ் ஏறிச் சென்று படிக்கத் தொடங்கினேன்.

பிறகு வைத்தீஸ்வரர் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றது. அங்கு படித்து தமது பண்டித தேர்வை முடித்த பண்டிதர் திரு. இராசகுரு அவர்களும், பண்டிதை பாக்கியம் அவர்களும் இடம் பெறுவர். இந்த வகுப்புக்கு தனது ஆசிரிய தோழர்களான கந்தரோடை வித்துவான் வேந்தனார், வித்துவான் வேலன் அவர்கள் தங்கள் கைவசம் உள்ள நூல்களை கொடுத்ததுடன் நாளடைவில். எனதுகுருஎன்கிற ஆசான் பதவிகளையும், வகித்தவர்கள். இந்தப் படிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வகுப்புகள் தொடரும்..... எங்கள் அன்பும் தபால் மூலம் வளர்ந்தது. கல்வி இலாகாவில் பாடசாலை ஆசிரியரா? அல்லது கைத் தொழில் இலாகாவா? என்ற நிலையில் மக்களுடன் இணைந்து வாழ்வை நடத்த, அவர்களுக்கு புதிய எண்ணங்களை உருவாக்க கைத் தொழில் இலாகா சிறந்தது என தோழரும் சொல்லியிருந்தார். கல்வி இலாகாவில் பாடசாலைக்கு 25 மாணவர்களைச் சேர்த்துக் கொடுப்பதுடன் கிண்டு போர்ட்க்கு (Hindu Board) பணமும் கட்ட வேணும். பல யோசனையின் பின் 1959 இறுதியில் நான் கைத்தொழில் இலாகாவில் வேலையில் சேர்ந்தேன். இலாகா மாற்றம் கல்வி இலாகாவில் 3 மாதங்களுக்கு ஒரு மாதம், பாடசாலைக்கு லீவு. ஆனால், எனக்கோ லீவு தேவை எனில், காரணத்துடன் காட்டி , கச்சேரிக்கு விண்ணப்பித்து தான் பெற வேண்டும். அப்படி இருந்தும் பாடங்களை சிறப்பாக செய்தும் சமஸ்கிருத பாடத்தில் சித்தி பெற முடியவில்லை. அந்தக் குறை இன்றை வரை இருக்கிறது.

அவர்.... தனது கொள்கை, நடைமுறை, முழு நேர ஊழியர், சேவை என்று நாளாந்த கடமைசெய்ய நான் அரசாங்க வேலை பஸ், பிடித்து உரிய நேரம் கடமை 30, 40 பெண் பிள்ளைகளின், ஆசிரியர் தலைமையை தக்க வைத்துக்கொண்டு வேலைக்கும் பெயர்பொறுப்பதிகாரிமற்றவர்கள் பார்வையில் அது ஒரு சின்னன் சில கிராமங்களில் என்னை விட எத்தனையோ வயது மூத்த அக்காமார் மாணவர்களாக வந்த போது என் மனம், சங்கடப்படும். பத்திரங்கள் பூரணப்படுத்தும் வேளை, அவர்களுக்குரிய வயது மரியாதையை நான் கொடுத்தேன்.
இது மெய்கண்டான், பாடசாலை எனக்குள் ஊறிப்போக ஊட்டிய ஆசிரிய வழிகாட்டலாகும். இதனிடையே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினராக இணைந்துகொண்டேன். பார்வை, தேடல் சிறிது சிறிதாக விரியத் தொடங்கியது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நானும் இருந்ததனால் எழுத ஆரம்பித்தேன். அங்கு எழுத்தாளர் கே.டனியல், மல்லிகை டொமினிக் ஜீவா, பத்மா சோமகாந்தன், ஈழத்துச் சோமு, யாழ்ப்பாணக் கவிராயர், அகத்தியர், இந்துமதி மார்க்கண்டு, சில்லையூர் செல்வராஜன், நீர்வை பொன்னையன், இவர்களுடன் என்னுடன் பால பண்டித வகுப்பில் படித்த சக மாணவச் சகோதரிகளாக இருந்த உஷா பஞ்சநதேஷ்வரன், மகேஸ்வரி கனகசபை, மகேஸ்வரி இராமநாதன், பூமாதேவி சின்னத்துரை இப்படி அநேகர்.கொழும்பு தாய்ச்சங்கத்தில் எச்.எம்.பி மொகைதீன், செ.யோகநாதன், பிரேம்ஜி, ஞான சுந்தரம், இப்படி ஏராளமானவர்கள்....
என் கணவன் மூலம் அறிமுகமானவர்களுள் டாக்டர் சீனிவாசகம், டாக்டர் நந்தி ஞானசுந்தரம், வித்துவான் வேந்தன், வித்துவான் வேலன், பண்டிதர் இராசையா, பண்டிதர் துரைசிங்கம், பண்டிதர் சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதர் இளமுருகனார், சமஸ்கிருத ஆசான் சுப்பிரமணிய தேசிகர்....... காரைநகர் சரஸ்வதி, ஞானம்பிகை சிற்றம்பலம்.....

மற்றக் காதலர்கள் மாதிரி சந்திக்கும் நேரங்கள் வாசித்த புத்தக வசன அர்த்த விளக்கங்கள் கேட்கவே....... காலங்கள், நேரங்கள், ஓடி விட.... மக்கள் மத்தியில் பொதுச்சேவை செய்பவன் என்ற ஒழுக்க கடிவாளம் பாதுகாப்பு அரண் செய்ய.... விரல் தொட்டுக் கதைக்க நேரமோ..... காலமோ... இன்றி.... நாட்களை ஓட்டியவர்கள் நாங்கள் என்று சொன்னால்.... இன்றையகைப்பேசிஉலகம் நம்பவா போகிறது?
தொடர்வேன்...

5

புது வீடும் சகோதர பாசமும்

என் தந்தை சிங்கப்பூரிலிருந்து நோயுடன் திரும்ப, என் அம்மா தன் நகைகளை விற்று அவரைக் காப்பாற்றியதாகச் சொல்லுவார். அந்த நாளில் படிப்புடன், அழகாகவும், வசதியான குடும்பத்திலிருந்து செல்லப் பெண்ணாக வாழ்ந்த என் அம்மாவை ஆசைப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டாராம் என் தந்தை. பின் அடுத்தடுத்துக் குழந்தைகள் இறக்க, நோயுடன் பணப்பற்றாக்குறையும் சேர அவரைக் கோயில், குளம் நாடிச் செல்ல வைத்தது. அதனால் மிகச் சிறுவயதிலேயே தங்கை, தம்பியைப் பார்க்கவும் வீட்டு வேலை செய்யவும் பழகிக் கொண்டேன். வீட்டைத் தவிர்த்து அன்பு காட்டவோ அறிவுரை சொல்லவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ எங்களூரில் யாருமிருக்கவில்லை. இந்நிலையிலேயே இவரைக் கண்டேன். நிற்க,

நிலை மட்டத்துடன் நின்று விட்ட வீட்டை கட்ட தொடர்வதாயின் உழைக்க வேண்டும், படிப்பை விடவேண்டும். தொடர்ந்து உழைப்பதென்ற முடிவிற்கு வந்தேன். என் வீட்டுக்கட்டு என் தந்தையின் உடல் மற்றும் பண உதவியுடன் தொடர்ந்தது. 50 பைக்கெற் சீமெந்து, 8 அங்குல கற்களை தொல்புரம் முருகேசு மேசன் அவர்கள் அச்சுப் பெட்டி கற்களாக ஆக்கி அக்கா வளவு கிணற்றடியில் பெருங் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டது. யன்னல்கள், மற்றைய நிலைகளை கொஞ்சங் கொஞ்சமாக ஐயாதொல்புரம் புண்ணியமூர்த்தி துணையாளர் உதவியுடன் சிறுவயது தம்பி (12...13...14..15..16) ஒத்துழைப்புடன், செய்து செய்து அடுக்கி வைத்திருந்த முன் ஏற்பாடு நடவடிக்கைகள். அன்னமுத்து சத்தியக்காடு, சந்தையடி ஆச்சியிடம் தான் அம்மா அடுத்த சீட்டு ஆரம்பித்து ரூபா 272/=ல் மாதாந்தம் 100/=, 100/= இரண்டு சீட்டுக்கு போக, மிகுதி எனது பஸ் போக்குவரத்து செலவு, வீட்டில் சமையல், சாப்பாட்டுச் செலவுகள், வருடத்தில் இரண்டு தடவைகள் நடைபெறும் குலதெய்வ பூசை, திருவிழா... “மணிப்பிள்ளையின் (எனது) சம்பளக் காசில்கோவில், அர்ச்சனை, நேர்த்திக்கடன்என்று அம்மாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஏதோ என்னால் இயன்றது சம்பளக் காசை அப்படியே அம்மாவின் கையில் கொடுப்பது தான். அந்தப் பழக்கத்தில்... திருமணம் முடிந்த பின் 27 ஆண்டுகள் (1962-1989) எனது சம்பளக்காசை நான் கையில் வைத்துச் செலவு செய்ததில்லை. “அவ உழைக்கிற எண்ணத்தில் புருசனை மதிப்பதில்லைஎன்ற ஒரு ஆங்காரியாக நான் இருந்ததில்லை. இந்தச் செயல் நான் எனக்குள்ளே வகுத்த செயல் மேலே எழுத்து தடைப்பட நிலை.

மட்டத்துடன் நின்று விட்ட வீட்டுக்கட்டை விட்ட குறை என்னால் இயன்றது நான் செய்ய, தம்பியும் தன்னால் முடிந்த உடல் உழைப்பை நல்க, (படிப்பையும் கைவிடவில்லை ) பனைமரங்களை ஏற்கெனவே வாங்கி நான்காக வெட்டி பிளந்து மேல் கோப்புச, சிலாகை, தீராந்தி, குத்துக்கால் இவற்றை தயார் செய்யும் போது ஐயாகேணியாவருத்தம் உள்ளவர் என்று தகப்பனை நோக விடாதுஅடிப்பனைக்கு தோள் கொடுத்த பிள்ளைஎன்று சொல்லி எனக்குரிய பாதி வீட்டுப்பங்கை..... தம்பிக்கு பாதி கொடுத்துமணி தமக்கென்று வீட்டில் இருந்த சங்கிலியோ.....காப்போ எடுக்கவில்லை. அப்பிடியான பொம்பிளைப் பிள்ளை, தம்பி நீங்க மணிக்கு (வீட்டில் என்னைமணிஎன்றே அழைப்பர்) ஒரு நிலத்தை வாங்கி கொடுங்கஎன்ற அன்பின் கட்டளைப்படி தம்பிக்கு பாதி வீடு, Bank loan எடுத்து மிகுதி வீடுகட்டிய தங்கைக்கு பாதி வீடு,எனக்கு ஆனைப்பந்தி ஒழுங்கை, சுளிபுரத்தில் ஒரு நிலம் என்று பாரபட்சமின்றி ஐயா இருக்கும் போதே கோயில் முதலாளி வீட்டில் ஈடு வைத்த நிலத்தை மீட்டு உறுதி வீட்டிற்கு வந்த நன்றியை நினைவில் வைத்திருந்த மகனையும் மதித்துஅடிப்பனைக்கு தோள் கொடுத்து.... முத்துக்குமார வளவில் இருந்து வீடு சேர்த்த பிள்ளைஎன்று நன்றி பாராட்டியவர். காலம் போக போக தம்பி தனது பங்கினை சின்னக்காவுக்கு (தங்கைக்கு) வீட்டிற்கு மின் இணைப்பு செய்வதற்காக கையொப்பம் இட்டுக் கொடுத்ததாக அறிந்தேன். சகோதர பாசம் அப்படி.

இப்போ அந்த வீடு யாரும் குடியிருக்காமல், வடக்கு பக்கத்தூண்கள் வீசும் காற்றில் விழுகுற நிலையில் கம்பிகள் துருப்பிடித்த பார்க்க சகிக்காத நிலையில் அத்திவாரம் போடும் போது. தங்கம் போடவேண்டும், ஐம்பொன் போட வேண்டும் என்ற பாரம்பரிய சம்பிரதாயத்திற்கு ஒப்ப எனது காது தூக்கணம் அத்திவார குழிக்குள் போட்டதாக ஐயா கூறுவார். ஆனால் அந்த மனையை எத்தனையோ பேரக் குழந்தைகள் தவழ்ந்த அந்த தாய் மனை பாழடைந்து நிலையில் பராமரிப்பு இன்றி கிடக்க யார் செய்த பாவமோ? சிலர், இருக்க வீடு இன்றி தவிக்கையில் இந்தப் பெரிய வீடு குடியிருப்பாரின்றி இருக்கிறதே! அவ்வில்லத்தில் தவழ்ந்த பேரக்குழந்தைகள் இராசன், பபி, கீரு, கரன், கிருபா, சுதா, லம்போ, சோமஸ், கிரி எந்தத் தலைமுறை திருத்தி சீரமைத்து மக்கள் உபயோகப்படுத்தும் நிலைக்கு விடப்போகிறார்களோ? என் கண் மூட முதல் அதைப் பார்ப்பேனோ...?

என்னை நிர்ப்பந்தப்படுத்திய அவசரக் கலியாணம் பற்றி அடுத்து எழுதுவேன்....

பின் குறிப்பு :- அவ்வீட்டை இப்போது தங்கையின் மகன் திருத்தி சீரமைத்து உள்ளார்.

6

படிப்பும் வேலையும்

ஞாயிறு பண்டிதர் வகுப்பு.... படிப்புக்குப் போக வேணும்..... மற்றைய ஆறு நாட்களும் வேலை..... இப்படியே எனது பொழுதுகள் ஓடுகையில்..... அவரும் சுன்னாகம் கட்சிக் காரியாலத்தில் முழுநேர ஊழியராக தன்னை ஈடுபடுத்தி அரசியல் வேலை மட்டுமன்றி இலக்கியப் பணிகளிலும் தொடர்ந்தார். கடிதப் போக்கு வரவுகளுடன், அத்தி பூத்தாற் போல சந்திப்புகளும் நிகழ்ந்தது. என் சில தோழிகள் அவரைகுறிஞ்சி மலர்அரவிந்தன் போலுள்ளார் என்பர். நெடிய உருவம், தூய்மையான ஆடை, நிதானமான பேச்சு, ஆழ்ந்த அறிவு, காட்டும் அக்கறையும் அன்பும் அவர்
மீதான அன்பையும், நம்பிக்கையையும் வளர்த்தது....1960, 1961 ஆண்டுகள் கழிந்தன.

எனக்கு ஞாயிறு ஒரு நாள் மாத்திரம் போய் பாடங்களை கற்று ஈடு செய்ய முடிய வில்லை. ஏனெனில், பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ள, 3 மாதத்திற்கு ஒரு மாத லீவு போல கைத்தொழில் இலாகாவுக்கு கிடையாது. இருந்தும், படிக்க வேண்டுமே... என்ற ஆர்வத்தினால் தாய்மொழி புத்தகங்களை உதாரணமாக...... பிரவேச பண்டித வகுப்பில் நன்னூல்
காண்டிக உரை என்றால்.... அடுத்த வகுப்பில் நன்னூல் விருத்தியுரை...... இப்படி..... தண்டியலங்காரம், நம்பியகப்பொருள், அகநானூறு, புறநானூறு இப்படியானசூத்திரங்கள், பொழிப்புரைகள் வலிந்து வலிந்து படித்தாலும். செவிப்புலன் கல்வி உள்ளே ஊடுருவும் பாய்ச்சல் குறைவுதான். சமஸ்கிருத பாடங்கள், தம்பி சிவசண்முக மூர்த்தி எனக்கு குருவாக உதவினார். 1960 ல் யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தின் இரண்டாம் மாடி தளத்தில் பரீட்சையில் இணைந்தேன்.

மூன்று மாதங்கள் கடந்தபின் வந்த பெறு பேற்றில் சமஸ்கிருத பாடம் சித்தி பெற வில்லை. மற்றய இலக்கண, இலக்கிய செய்யுள் இயற்றல் சாதாரண சித்தி மாத்திரம் தான். எனக்கோ ஓய்வு எடுக்காமல்.... பெண்களுக்கான.... இந்த 3 நாட்கள் கூட ஓடி.... ஓடி... களைத்து கண்ணீர் வந்தது. அடுத்த ஆண்டு முயற்சி செய்ய நினைக்கையில் வட்டுக்கோட்டை, இறாத்தலடியில் இருந்து காரைநகர், நீலிப்பந்தனைக்கு மாற்றல் கிடைத்து விட்டது. இந்த நிலையில் வீட்டிலும், நான் பரீட்சையில் சித்தி பெறாமைக்கு இவர் தான் காரணம் என்றனர். கம்பீரமும், அறிவும், நன்னடத்தையும், குடும்பப் பின்னணியும் தோற்றிவித்த பிரமையால் ஆரம்பத்தில் தோழரை மிக நேசிக்க முடிந்தளவு, பின் அவர்களால், வேலையை இழந்து முழு நேர ஊழியராக இருப்பதை ஏற்க முடியவில்லை. சாதீய, சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அனைத்தையும் துறந்து வாழ்வை முன்னோக்கி நகர்த்தலாம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இருந்தும் கல்வியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்பார். அதன் மூலம் பலதைச் சமூகத்திற்கு செய்யலாம் என்பார். அவர் தனது கடிதத்தில்நான் உம்மைப் பற்றி நினைத்துக். கொள்ளும் நேரத்தில் நீர்படிப்பு படிப்புஎன்று அக்கறை எடுக்கிற பெண் என்று தோன்றும். இறுதியில் வெற்றி பெற வில்லையே, அடுத்து முயலுங்கள்என்று வருத்தமாக எழுதி இருந்தார்.

எனது பிறந்த வீட்டைப் பொறுத்தவரை நிலை மட்டத்தோடு இடை நிறுத்தியுள்ள வீட்டைக்கட்டி முடிப்பேனா? அல்லது பண்டித வகுப்பை மென்மேலும் தொடர்வேனா....? அல்லது மாதச் சம்பளத்தை தரும் பொறுப்பதிகாரி கடமையைச் செய்வேனா? என்றதிரிசங்குசொர்க்க நிலையில் திணறி வேலையை மாத்திரம் செய்வோம் என முடிவெடுத்தேன்.

ஆரம்பத்தில் நானும் என் பெற்றோரும் பள்ளி ஆசிரியர் தொழிலுக்குச் செல்வதாக நினைத்திருந்தோம். இடையில் வந்து தோழர் சமூகம், மக்கள் ஊடாட்டம், Hindu boardக்கு 25மாணவர்கள், அத்துடன் பணம் என்பதும் சேர்ந்து அது இது என்று என்னைக் குழப்பிவிட்டது. ஆனால் என் பெற்றோர் இவர் எங்களுக்கு உதவுவார் என நினைத்திருந்தார்கள் போலும். அவர் ஏன் அப்படி நடக்கவில்லை என்றால்...... சில மாதங்களின் பின்னர் அதன் காரணத்தை வெளியிட்டார். தானும் எங்கள் குடும்பத்துடன் ஒரு அங்கத்தவராக இணைய மனதில், தீர்மானம் கொண்டிருப்பதனால், தான் சார்ந்த கட்சியின் செல்வாக்கை தன் குடும்பத்திற்காய் பயன்படுத்தக்கூடாது. அதைவிடசிபார்சு என்பது, ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்குவது என்ற நீதி வரம்புக்கு உட்பட்டது என்பதாகும்என்றும் கூறினார்.

அடுத்த ஆண்டு எனது தங்கை விஞ்ஞான A.L வகுப்பில் தேறி, வேலணை மத்திய கல்லூரியில் இருந்து தகுதியுடன் விலகும் வேளையை சந்திக்கும் நேரத்தில், இலங்கையில் இருந்து சோவியத் ரஷ்யாவுக்கு சென்று மருத்துவப்படிப்போ, பொறியியல் பட்டப் படிப்போ படித்து முடித்து வரும் புலமைப்பரிசில் அடிப்படையில், என் தங்கை அந்த மருத்துவப் பட்ட கல்வித்துறைக்கு விண்ணப்பித்து ஒரு பிரதியை கட்சியிடமும் கையளிக்கும் படி கொடுத்தார். இதில், பிரதானமானது 75 வீதம் அரசாங்கம் தீர்மானிக்கும்; 25 வீதம் கட்சி தீர்மானிக்கும் அதிலும், குடும்பம் முழுப்பேரும் கொள்கைப்பற்றுடனும், கூட்டங்களுக்கு தவறாது சமூகமளிப்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டதன் காரணத்தால், சுன்னாகம் தோழர். எஸ்.ரி.என் அவர்களின் தம்பியாருக்கு பொறியியலும், இன்னொரு பெண்ணுக்கு மருத்துவமும் படிக்க வாய்ப்புக் கிடைத்தது.

எமது பெற்றார் எம்மூர் தலைவராக விளங்கிய திரு. . அமிர்தலிங்கம் அவர்களின் தமிழ் அரசுக்கட்சி விசுவாசிகளாகவே வாழ்ந்து மறைந்தவர்கள். இந்த விபரங்கள் வயது போன அவர்களுக்கு எடுத்து உரைத்து விளங்கப்படுத்தவில்லை. விளங்கப் படுத்தினாலும் புரிந்து கொள்ளும் மன நிலையிலும் அவர்கள் இல்லை. ‘தங்கள் இரண்டு மகள்மாரின் வேண்டுகோள் விண்ணப்பங்களை தோழர் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லைஎன்ற ஒரு விளக்கமற்ற... உள்ளார்ந்த வெறுப்பும் அவர்களின் மனதில் பதிந்து விட்டது. நானும், எங்கள் ஊர் அன்பான இருவருடன் சேர்ந்து யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் இருந்த பாரதி பாஷிய வித்தியாசாலையில் நடைபெறும் பால பண்டித வகுப்பில் சேர்ந்தேன். அந்த வகுப்புக்கு செல்ல பணம் வேண்டும்..... அங்கு கடமையாற்ற வரும் ஆசிரிய மணிகளுள் வித்துவான் வேந்தன் அவர்கள் ஏற்கெனவே, திரு. வி. பொன்னம்பலம் அவர்கள் மூலம் தோழருக்கும் நட்புரிமையுடன் பழகிய அறிஞர்களாக இருந்தனர்.
இவர்களை விட நவாலி பண்டிதர் இளமுருகனார், (நவாலி, சோமசுந்தரம் புலவரின் மூத்த மகனாவார்) நீர்வேலி பண்டிதர் துரைசிங்கம், திருமதி. சத்தியதேவி துரைசிங்கம், அரியாலை பண்டிதர் இராசையா அவர்கள், குறிப்பாக, எமது சமஸ்கிருத வகுப்புக்கு பிரம்மஸ்ரீ. சுப்பிரமணிய சர்மா அவர்கள் குறிப்பிடத்தக்க மும்மொழி வல்லுநர் வரிசையில் வாழ்ந்தவர்கள். அவரது நாவில் இருந்துவந்த பொன்மொழி ஒன்று இன்னமும் நினைவில் இருக்கிறது. “மவுனம், கலக நாஸ்த்திஅதாவதுமவுனமாக இருந்தால் கலகமே வராதுஎன்பது தான், அந்த வாழ்க்கைத் தத்துவமாகும். மேற்படி வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரர் வித்தியாலயத்திற்கு இடம் மாறியது.
அந்தக் காலத்தில் யாழ். உஷா பஞ்சநதேஸ்வரன் அவர்கள், ஆனைக்கோட்டை மார்க்கண்டு இந்துமதி , இவர்களுடன் எம்மூர் ஏற்கெனவே படித்த தமிழ்ச்சங்க பண்டித வகுப்பில் இணைந்த ஆசிரியை நா. பாக்கியம் அவர்களும், பண்ணாகம் . இராசகுரு அவர்களும் தமது கல்வியை கைவிடாது தொடர்ந்தனர். 1959ம் ஆண்டில் அரசாங்க சுற்று நிரூபத்தின்படி எங்களுக்கு அடுத்த ஆண்டுகளில் பயிற்சி பெற்ற 21 வயது வந்த அனைவருக்கும் ஆசிரிய நியமனம் வழங்கப் பட்டது.

நேர்முகத் தேர்வு கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்தில் நிகழ்ந்தது 6 மாத பயிற்சி நெறி இளவாலை என்ற கிராமத்தில் உள்ள நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய செல்வி. நடராசா பூரணம் (சின்ன மகேஸ் அக்கா) அவர்களுக்கு கீழ் பயிற்சி பெறக் கிடைத்தது . அந்தச் சகோதரி, மிகுந்த பொறுமையும், செயற் திறனும் கொண்ட ஒரு சிறந்த வழி காட்டியாக விளங்கினார்.

நான், பாடசாலைப் படிப்போடு கலாசாலைக்கு போனதால், செயல்முறை நுட்பங்கள் விளக்கமாக தெரியாது. சின்ன மகேஸ் அக்கா அவர்கள் மருதனாமடம் பெண்கள் நிலையத்தில் அதுவும் விடுதியில் தங்கி இருந்து பயிற்சி பெற்று வந்த மூவரில் ஒருவராவார். அந்த ஆறு மாத காலங்கள் சுழிபுரம், சித்தங்கேணி, பண்டத்தெருப்பு, இளவாலை என்ற நான்கு பஸ் நிலையங்களில் காத்திருந்து காத்திருந்து போக.... அதிக நேரம் செலவாகி விடும். சிலருக்கு ஒரே பஸ் சில் போய்ச்சேருகிற நிலையங்களை தெரிவு செய்கிற திறமை இருந்தது. இளவாலை என்ற கிராமத்தை சென்றடைய எத்தனை பஸ் மாற வேண்டும் என்ற விபரமும் தெரியாது. ஒன்று மட்டும் மனதில் இருந்தது. அது சின்ன மகேஸ் அக்காவுடன் பயிற்சி பெறுவது தான்.
சில நாட்களில் பண்டத்தெருப்பு மகளிர் கல்லூரி சீன மாமா சீனிவாசகத்தின் வாகனத்தில் போய் மாதகலில் இருந்து வரும் கீரிமலை பஸ் பிடித்தும் போய் இருக்கிறேன். லீவு எடுக்கும் அந்த ஆறு மாதங்களில்மெடிக்கல்லீவு மாத்திரமே கச்சேரி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும். இப்பொழுது கூட அந்த நிகழ்வுகளை நினைவு கூர்..கை...யி...ல்... இந்தச் சொத்திக் கிழவிய பல மணித்தியாலங்கள் மழைக்காலத்தில் கூட உடுப்புக்கள் நனைந்த நிலையில்..... ஏறி, இறங்கி வந்த கால்களா? இவை என்று எனது அசைய மறுக்கும் பாதங்களுக்கு நன்றி கூறுகின்றேன்.

இந்த வரலாறு எழுதுகையில் நினைவுக்கு ஓடி வந்தவற்றைடைப்செய்கையில் முதல் நினைவில் இருந்த நிகழ்வுகள் எழுதி விட்டேன் போலும் என்ற நிறைவில் கை தவறிய சம்பவங்கள் இடம் பெறாமல் கோவைப்படுத்த முடியாத பந்தியாக பதிவில் வந்து விடுகிறது...! மன்னிக்கவும் வயது போகுதல்லவா?

7

கம்யூனிஸ்ட் இணையர்

1961 இறுதியில் அனுப்பிய சிறுகதை 1962 ஆரம்பத்தில் தான் வீரகேசரியில் வந்தது. ‘அன்னதானம்என்ற தலைப்பில்வள்ளி சுப்பிரமணியன்என்ற பெயரிலும், ‘கலைமதிஎன்ற மாதாந்த சஞ்சிகையில் இரு சிறு கவிதைகள்தியாகி யார்?” என்ற தலைப்பிலும் வெளியாகின. அந்தக் காலத்தில்கலைச்செல்விஎன்ற பெயரில் ஒரு மாதாந்த சஞ்சிகையும் வெளி வந்து கொண்டிருந்தது. ஒன்று சுன்னாகத்திலும், மற்றையது நல்லூரிலும் இருந்து வெளியீடு கண்டன.

அந்தக் காலத்தில் கம்பியூட்டர் பதிவு இல்லாத காலத்திலும் 1962-01-21 வீரகேசரி பத்திரிகை 50 வருடங்களைக் கடந்து பிரதி எடுக்கக் கிடைத்தது. அக்காலத்தில், பள்ளி ஆசிரியர்களாக இருந்த பத்மா சோமகாந்தன், குறமகள் வள்ளிநாயகி, இவர்களுடன்... யாழ். நங்கை அவர்கள் வீரகேசரியில் நீண்டதொடர் கதையை எழுதி வந்தார்கள். (அன்ன லட்சுமி இராசதுரை அவர்கள்) நூல் வெளியீடு செய்தவர்களில்... இந்துமதி மார்க்கண்டு, ஆனைக்கோட்டை (என்னுடன் பால பண்டித வகுப்பு) Dr. சிவஞான சுந்தரம், நல்லூர்நந்திஎழுதிய மலைக் கொழுந்து, நாவல். இந்துமதியின்தங்கத் தாமரை”, சிறுவர் கதைகள் யாழ்ப்பாணக் கவிராயரின் கவிதை நூல் இவற்றுடன் பிரசித்தி பெற்ற முற்போக்கு எழுத்தாளர்களான கே. டானியல் அவர்களது நூல்களும், மல்லிகை டொமினிக ஜீவா அவர்களது நூல்களும் வெளியீடு கண்டன. இவை யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் கிழக்கு மாகாணத்திலும் பல கதைகள், நாவல்கள், கவிதைகள் வெளியீடுகள் செய்யப்படும். செய்திகள் வீரகேசரி, தினகரன், ஈழநாடு பத்திரிகைகள் வாயிலாக வாசித்து அறிய கிடைக்கும். ‘சுதந்திரன்என்ற தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் பத்திரிகை தமிழர் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்று வெளி வந்தது. முற்போக்குதேசாபிமானிமாதம் ஒரு வெளியீடாக, H.M.B. மொகைதீன் அவர்களையும், பிரேம்ஜி ஞானா அவர்களின் வழி காட்டலின் கீழ் வெளிவந்து கொண்டிருந்தது. அது போல், இந்து மதத்திற்கு, கிறிஸ்தவ மதத்திற்கு, இஸ்லாம் மதத்திற்கு தனித்தனி பத்திரிகைகள் வெளி வந்து கொண்டிருந்தன. யாழ். மத்திய கல்லூரி மண்டபம், யாழ். சிங்கள மகா வித்தியாலயம், மணிக்கூண்டு வீதிறிம்மர்மண்டபம், சேணிய தெரு ஆரம்ப பாடசாலை ஆகியன பல நூல்களை வெளியீடு செய்கிற நிலையங்களாக செயற்பட்டன.

1962 ம் ஆண்டு பிறந்து விட்டது. அந்த ஆண்டு தைப்பொங்கல் ஞாயிற்றுக் கிழமையில் வந்தது. சூரிய பகவானுக்கு முற்றத்தில் கோலம் போட்ட சதுரத்துள் வைக்கப்பட்ட பூரண கும்பம், சிலர் கும்பத்தை சுவாமி அறைக்குள் பொங்கல் பானையுடன் எடுத்துச் சென்று அன்று மத்தியானமே கும்பத்தின் தேங்காய், மாவிலை, பூக்கள் அகற்றி, நீரை கிணற்றுக்குள் ஊற்றுவார்கள். அன்று ஞாயிறு அதாவது சூரியன் நாளாக இருந்ததால், “3 ம் நாள் கும்பத்தை கலைக்கலாம்என்று ஐயா சொல்லிய படி அது சுவாமி அறைக்குள் பூரண கும்பமாகவே இருந்தது. 3ம் நாள், நான் காரைநகர் வேலைக்குச் சென்று அங்கிருந்து பஸ் எடுத்து யாழ் யூனியன் போய் வேலைகள் முடித்துக் கொண்டு நீலிப்பந்தனை திரும்ப 3-30 மணியாகி விட்டது.

வந்தது தான் தாமதம், எனது பிள்ளைகள் சகலரும் ஒரே குரலாகரீச்சர், உங்கள் அத்தான், முறையான ஒருவர் வந்திருந்தார். கையில் ஒரு வில்லுக்கத்தியும் வைத்திருந்தார்என்றார்கள். “அவர் உங்களை குத்திக் கொலை செய்ய வந்திருப்பதாகவும், நீங்கள் யாரோ ஒரு உத்தியோகம் இல்லாத வெறும் மாப்பிள்ளையை கல்யாணம் செய்யப் போகிறீர்கள்என்றும்அத்துடன் அவர் சகல சாதியுடன் பழகுகிறார்என்றும், “தான் 1949ம் ஆண்டு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் வேலை பார்த்த காலத்தில் அந்த விபரம் எல்லாம் தெரியும்என்றும், “உங்களைக் கொன்றால் தான், தனக்கு மரியாதைஎன்றும், “தான் உங்கள் மூத்த அக்காவின் கணவன் என்று சொன்ன அவர் நிறைய குடித்து விட்டு வந்ததால் பல, பல கெட்ட, பழி வாங்கல் கதைகளையும் சென்னார். ஆகவே, நீங்கள் உடனே புறப்படுங்கள். அவர் திரும்பவும், இங்கு வருவதாக கூறிச் சென்றவர்என்று என்னை புதுறோட் சந்தியில் பஸ் ஏற்றி விட்டனர்.

நான், என்ன நடந்தாலும், பரவாயில்லை என்ற எண்ணத்தில் அதுவும் 3ம் நாள் எனது கையால், கும்பம் கலைக்க வேண்டிய நல்ல காரியம், நிறைவு செய்ய இருந்ததால், சுளிபுரத்துக்கே டிக்கெட் எடுத்தேன். நான் ஏறிய பஸ், தபால் சேகரிக்கும் பஸ் அது ஒவ்வொரு தபால் நிலையத்திலும் தபால் பொதிகளை சேகரித்து சுளிபுரம் வரவே 4-50 ஆகிவிட்டது. ஒருவித பயம். பதட்டம். என்னால் வீட்டில் பிரச்சனை வர இருக்கிதே ஒரே எல்லை வீடுகள். வீட்டின் மூத்த மருமகன். கொஞ்சம் சண்டித்தனம் நிறைந்தவர். (உழைப்பில்லை, பணத்தை மதிக்கத் தெரியாதவர் என்று பழி போட்டவர், பின்னாளில் தோழரை நேசித்தது மட்டுமல்லாது மதிக்கவும் செய்தார். வீட்டிற்கு வந்து அதிக நேரம் தோழருடன் பேசுவார். அது அவரது நடத்தைக்கும் அவரது கோட்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி) எனது குலதெய்வம் பத்திரகாளித் தாயை வேண்டிக் கொண்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம்என்று பஸ் நடத்துனருக்கு கூறினேன். அந்த ஒரு முடிவுதான், என் முழு வாழ்விலும் நானாக எடுத்தது. இப்படி பல விடயங்களை நான், என் உள் மனதுள் குல தெய்வத்தை வேண்டித்தான் முன்னெடுப்பேன். அது எனக்கு இரத்தத்துடன் ஊறிப்போன செயலாகும். அவர் கூட முதன் முதல் எங்கள் வீடு தேடி வரும் போது பத்திரகாளி கோவிலின் முன் வெளியில் பந்து விளையாடிக்கொண்டிருந்த அக்காம்பியை அழைத்து வந்து தான் எங்கள் வீட்டை வந்து சேர்ந்தாராம். எனக்கு கொலை மிரட்டல் விட்டது அவரது தந்தையே. அப்படியே பஸ் வண்டியை விட்டு இறங்கி, மணிக்கூண்டு வீதியில் உள்ள புஷ்பலீலா (யாழ். தாதிமை அதிகாரி) முருகேசு அவர்களின் இல்லத்தில் 2 மணித்தியாலங்களுக்கு மேல்... தோழர்கள் செய்தி சொல்ல அவர் அவசரமாக வந்தார். அவருக்குள்ளும் பல கேள்விகள். திடீரென ஒரு பெரிய முடிவிற்கான நிர்ப்பந்நம். இரவு 7-30 மணியாகி விட்டது. முருகேசு மாஸ்டர் வீட்டில் அவரது சில நண்பர்களும், இருந்தார்கள். அவர்கள் யாவரும், ஒரு மனதாகஇந்தக் கல்யாணம், எப்படியும் நடந்தேறி விட்டால், சண்டைக்காரர் எல்லாம் அடங்கி விடுவார்கள். ஒரே சொந்தங்களுக்கு உள்ளேயே சண்டையில் முடியும் கல்யாணம், அடுத்த நாள் சமாதானம், ஆனது பார்த்து இருக்கிறோம். சட்டப்படி மைனர் வயது கடந்தவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராதுஎன்று மனத் தைரியம் ஊட்டினார்கள். இனி என்ன? ‘தலைக்கு மேலே வெள்ளம் வந்தால், சாண் ஏறினால் என்ன? முழம் ஏறினால் என்ன?’ என்ற ஒரு பழ மொழி உண்டு. இப்ப தனிமையில் இருந்து நினைக்கையில் எனக்கு இப்படி ஒரு மனத் தைரியம் எப்படி வந்தது. அது தான் உண்மை.

நான் ஒரு தனி மனிதனை விரும்பவில்லை. ‘பொதுவுடமைக் கட்சிஎன்ற ஒரு பருமரத்தை சுற்றியபல்லிஎன்ற பாதுகாப்பு கண்காணிப்புஉடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம், நட்புஎன்ற உறவுப்பாலங்களுள் நல்லூர் அரசடி தோழர் இராசையா அவர்கள்பல விடயங்களில், பல சந்தர்ப்பங்களில் தோழரும், அண்ணனும், உறவும் ஆகிய பாத்திரங்களை வகித்தார். கல்வியங்காடு விவாகப்பதிவு திருமதி. நடராசா அவர்கள் மாலை மாற்றி தாலி கட்டுவது ஒரு பொது இடம் இப்படி எத்தனையோ பேர் பல நாட்களாகப் பாடு படும் நல்ல காரியத்தை புஷ்பலீலா அக்கா குடும்பமும், தோழர் அரசடி இராசையா அவர்கள் குடும்பமும், தங்கள் வீட்டைக் காப்பது போல் வாகனமும் அவரிடம் நல்லூரில், இருந்ததால் 4 நாட்களுள் தைப்பூசமும்,பெளர்ணமியும் சேர்ந்து வந்த 19-01-1962 வெள்ளிக்கிழமை மங்கள நிகழ்ச்சி நிறைவு பெற, பலர் ஒத்துழைப்பு நல்கினர்.

இளம் பெண்கள் மத்தியில் வழிகாட்டி ஆசிரியை என்ற ஒரு முன்னுதாரணமாக விளங்குகிற எனக்குவிவாகமாகி விட்டதுஎன்ற அடையாளமாக கழுத்தில் ஒரு சின்னம் இருக்கவேண்டும், என்ற எனது விண்ணப்பமும், தனது கட்சியின் சின்னமாகும்அரிவாள், சம்மட்டிஇலச்சினை தான் அதில் இருக்கும், என்ற அவரது உறுதியும்,கல்வியங்காடுமுத்திரைச்சந்தை பத்தர் ஐயாஎன்ற சிறப்புப் பெயரால் அழைக்கப் பட்டவர் 1952ம் வருடம் மாண்புமிகு எலிசபெத் மகாராணிக்கு தங்கத்தினால், கைக்கடிகாரத்தை மணி, நிமிடம், செக்கன், உள் சுற்று மூன்று சக்கரங்களை உருவாக்கம் செய்து பரிசளித்தார். அந்த மேதையின் கைவண்ணத்தினால் உருவாக்கப்பட்ட அந்த வட்ட வடிவினால் ஆன அரிவாள், சம்மட்டி என்ற தாலி இன்று வரை என்னிடம் பாதுகாப்பாக உள்ளது.பல தடவைகள் அடைவுக்கடைகள் கண்டு கண்டு வரும். ஆனாலும் என்னை விட்டுப்போனதில்லை. என் தோழர் என்னிடமிருந்து விடை பெற்ற போது, பல கோடிக் கதைகளைச் சுமந்த என்அரிவாள் சம்மட்டிஎன்னிடம் இருக்கவில்லை. அது பற்றிப் பின்னர் சொல்வேன். தோழர் இராசையா அவர்கள் எங்களுடன் புஷ்பலீலா அக்கா குழந்தைகள் மூவரையும் தனது வாகனத்தில் சிவன் கோவில் மண்டபத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார். தோழரின் சின்னம் பொறித்த தாலியை ஏற்க நான், உடன்பட்டதால், எனது ஆசிரியை திருமதி. பொன்னம்மா செல்வநாயகம் அவர்களின் திருமணம் நடந்த நல்லூர் சிவன் மண்டபத்தில் புஷ்பலீலா அக்கா கையால் வாங்கி எனது கழுத்தில் மங்கல நாண் பூட்டப்பட்டது.

அவரையும், அவரது சில பிடிவாதம் நிறைந்த செயல்களையும் நான் எனது சிற்றறிவுக்கு ஏற்ப புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுத்ததால் என்மனதில் புரிதல் இருந்தது. அவர் மனதில் ஏழு வயது சிறுமியாக கிராம பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து பழகிய அறியா பருவப் பெண் எதையும் திரும்பத் திரும்ப, எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டிய பயந்தார் கொள்ளி என்ற பச்சாதாபம் அவரது வார்த்தையில்காதல்என்று இருந்தது. அதனால் தான், தன் மகளுக்கு, “உமக்கு திருமணம், என்ற ஒரு பந்தம் வருமாயின், அது அம்மாவை மதிக்கிற ஒருவருடன் தான், ஆக வேண்டும்,” என்று தந்தையார் கூறியிருந்தாராம். அதன்படி என்னை மாத்திரமல்ல, ஏனையோருக்கும் மதிப்பு கொடுக்கிற ஒருவரே இரண்டு பகுதி பெற்றோரின், அறுகரிசி வாழ்த்துக்கள் சகிதம், எமது குடும்ப மருமகனாக, மூத்த மகனாகவும் தானாக தேடி வந்த செல்வமாகவும் வாய்க்கப் பெற்றார்.

*எனது மகள் கேட்கிறதுஅப்பா மேல் உங்களுக்கு உள்ள காதல் பற்றி எழுதுங்கஎன்று. அதாவது அவர் பிறந்த வீட்டில் அவருக்கு ஒரு மகன் என்றோ, நண்பர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிற மனித நேய சீவன் என்றோ உரிமை கொடுக்காமல், மனம் நோக, சில நேரங்களில், அப்பா குஞ்சியப்பர், துரையர் குஞ்சியப்பர் போன்ற இரத்த உறவுகள் புரட்டி, அடித்துகுலத்தை கெடுக்க வந்த கோடரி பாம்புஎன்ற சுடு சொற்களால் மனம் வெந்து மனம் நொந்து என்னிடம் கூறி அவர்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாமல், கொள்கை அற்ற நடை முறை குருட்டுத்தனமாக வாழ்ந்து பழகிய பாரம்பரிய உறவுகளுடன், நடைமுறையற்ற கொள்கை மலட்டுத் தனமாக வாழ ஒன்றிப் போக அவரது மனச்சாட்சி இடங் கொடுக்காததனால், சந்திக்கும் நேரங்களில், தனது வீட்டில் தன்னை புறக்கணிக்கும் சம்பவங்களையும், “தன்னால் அவர்களுக்கு ஒரு மதிப்பு குறைவுஎன்று அவர்கள் கருதி தனது தோழர்கள் முன்னால், அவமதிப்பு சந்திக்கக் கூடாதுஎன்றும், கூறியதால் அவர் மேல் எனக்கு ஒரு மன... ஆழ.... புரிதல் ஏற்பட்டது. அது.... பு...புரிதல் தான். அவருக்கும், என் மேல் ஒரு புரிதல் தான்….அது காதலல்ல ஏனெனில், நான் ஒரு அழகியுமல்ல, பெரிய பணக்காரியுமல்ல, 4,5 அண்ணன்மார் கொண்ட, ஆள்பலங் கொண்ட பெண்ணுமல்ல. ஆகவே இதற்கு நீங்கள் பொருத்தமான சொல்லை வைத்து விருப்பப்படி பூரணப்படுத்தவும்.

நீண்ட நேரத்தை.... எழுத்துடன் விட விரல் ஒத்துழைக்குதில்லை...... தொடர்வேன்....

8

கம்யூனிஸ்ட் உறவுகளோடு சந்திப்பு

1962 தை மாதம் [19-01-1962] வெள்ளிக்கிழமை, தைப்பூசத்தில் நல்லூரில் திருமணம் நிறைவேறிய பின்னர் ஒருசில நாட்கள் புஷ்பலீலா அக்கா வீட்டில் இருந்து கொண்டே அயலில் தங்குவதற்கு ஒரு அறை வாடகைக்கு எடுக்க முயற்சித்தோம். அவர்கள் வீட்டில் சிறு குழந்தைகளைப் பராமரிப்பதற்காக ஒரு பெண் இருந்தார். அவரே எமக்கும் உணவு செய்தார். இருவரது குடும்ப நினைவுகள் மனதி்ல் தோன்றும். தனது தாயார் இரவு எத்தனை மணியானாலும் தனக்காய் காத்திருந்து உணவளிப்பதை முன்னரே என்னிடம் சொல்லி இருக்கிறார்.
இதே போல என் வீட்டிலும் பிந்தி வரும் நாட்களில் பஸ் நிலையத்தில் ஐயா காத்திருப்பார். கண்ணீரும், திகைப்புமாக நாட்கள் ஓட, உதவி செய்தவர்களுக்கு சிரமம் கொடுக்கிறோம் என்ற கேள்வி இருவர் மனங்களிலும்... அதனுடன் வேலைக்குச் சென்றால் தான் காசு கைக்கு வரும். உடுத்தும் உடை, திருமண உடை தவிர எம்மிடம் எதுவுமில்லை. ஈற்றில், இராசையா அண்ணை மூலம் ஒரு அறை பெறக் கிடைத்தது. அது யாழ், பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் ஒரு சிறிய ஒழுங்கையில்.... தையல் கடைக்காரர் ஒருவர் வாடகைக்கு எடுத்து…. தேவைப்படுவோருக்கு பிரித்து கொடுப்பவராக இருந்தார். மிக மிக வசதி குறைவான, பாதுகாப்பற்ற ஆனால் ஒப்பீட்டளவில் வாடகை குறைந்த அறை. உப்புச் சிரட்டையும் எம்மிடமில்லை . கடையில் ஒரு நேர உணவை வாங்கி பிரித்து உண்டபடி நாட்கள் ஓட மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். கழுத்தில் இருந்தஅரிவாள் சம்மட்டியும்மனது முழுவதுமாய் இருந்த தோழரும் பலமாக இருக்க வேலைக்குச் சென்றேன். யாழ்.- காரைநகர் பேரூந்து , வீடு கடந்து செல்லும் போது நான் பட்ட வேதனை எழுதி மாளாது. எனக்கும் இவருக்கும், எம் குடும்பத்திற்கும் நட்பான - கார் வைத்திருந்த சின்னத்தம்பி தான் ஆறுதலாக இருந்தார். அவர் தான் எம் திருமணத்தையும் படம் எடுத்தார். அங்கே தை மாதத்தில் இருந்து சித்திரை மாதம் வரை வசித்தோம்.

1962 பெப்பிரவரி 03 அன்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தாளான தேசாபிமானி பத்திரிகையில் வெளி வந்த திருமண செய்தி. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாணப் பிரதேச உறுப்பினரும், யாழ்ப்பாண பிரதேச கம்யூனிஸ்ட் இளைஞர் சங்கச் செயலாளரும், “தேசாபிமானிவளர்ச்சியில் பெரும் பங்கெடுப்பவருமான தோழர் கே.. சுப்பிரமணியத்திற்கும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினரான தோழியர் வள்ளியம்மை ஆசைப்பிள்ளைக்கும் சென்ற வாரம் திருமணம் நடந்தேறியது. புதுமைத் தம்பதிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். தேசாபிமானி நிர்வாகி.

நாம், யாழ் ஒரு அறையில் வசித்த இறுதி வாரத்தில் எம்மைத் தேடி தோழர்கள் வி. பொன்னம்பலம் , மான் முத்தையா வந்தார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர்களான தோழர்கள் டானியல், ஜீவா, அகத்தியர், கவிஞர் பசுபதி, எஸ்.பொ, முதலியோர் வந்தார்கள். எனது வட்டுக்கோட்டை மாணவிகள் குடம், குத்துவிளக்கு, மோதிரம் என்ற அன்பளிப்புகளையும், காரைநகர் மாணவிகள் மண்ணெய் குக்கர், மோதிரம், பாத்திரங்கள் போன்ற அன்பளிப்புகளைச் செய்தனர். தோழர் டானியல் சில்வர் கனதியான இரண்டு சட்டிகளைக் கையளித்தார். அதில் தங்கம் உட்பட சிலதை விற்றும் சீவித்தோம். அதற்கிடையில் மாசி மாதம், கண்டியில் இருந்த என் தங்கை தனது ஆசிரிய பயிற்சிக்கு பலாலி

கலாசாலைக்கு வர வேண்டி இருந்தது. அவ எங்களை தன்னுடன் புறப்பட்டு வீட்டிற்கு வரும்படி அன்புரிமையுடன் கேட்டா. அந்த வேளை நான் (அந்த மூன்று நாட்கள்) லீவில் இருந்தேன். தனது கையில் இருந்த காப்பைக் கழற்றி எனது கையில் போட்டுஅக்கா, நீ உனக்கு என்று எந்தப் பொருளையும் எடுக்கவில்லை.வீட்டில் இருந்த ஒரு சில தங்கங்கள் அப்படியே இருக்குதக்காஎன்று கூறி அழுதா. சகோதர பாசமல்லவா? அவாவின் வேண்டுகோளை தோழரும் தட்டாமல் சுளிபுரம் பிறந்த வீட்டிற்குப் போனோம். தை மாதம் பொங்கலுக்கு என் கையால் வைத்த கும்பம் பிரிக்காமல் அப்படியே இருந்தது. நாம் அங்கு சென்ற பின்.... ஒரு நல்ல நாளில்... (எனது பெற்றார் நாள், வளர்பிறை, தேய்பிறை எல்லாம் பார்ப்பார்கள். பஞ்சாங்கம் எந்த நாளும் கையிலிருக்கும்) என் கையால் அந்த பூரண கும்பத்தை பிரித்து கும்பத்து நீரை கிணற்றுள் விடச் சொன்னார்கள். இது வருடா, வருடம் நடக்கின்ற நிகழ்ச்சி தான். அந்த ஆண்டில் வீட்டில் நடக்க வேண்டிய மங்கள நிகழ்ச்சி நடக்காத துக்கத்தில் ஐயா அழுதார். இருந்தும் மகளின் கழுத்தில் திருமணம் நடந்த அடையாளமாக தாலியும், நெற்றியில் குங்குமமும் பார்த்து உள்ளூற ஒரு திருப்தி தான்.

எனது பெற்றார்... நாம் வீடு வாடகைக்கு எடுத்து போகும் போது கொண்டு போக.... பெரிய கட்டில், கதிரைகள் , மேசை, சாய்வு நாற்காலி, உட்காரும் பலகைகள், அம்மி, குளவி, உரல், உலக்கை, சுளகு, பானை, அகப்பை, அரிதட்டு, மண்ணெண்ணெய் விளக்கு (பித்தளையால் ஆனது), டப்பாக்கள், கரண்டிகள், போத்தல்கள். உட்பட எல்லாம் குருவி சேர்த்தது போல் சேர்க்கும் போது.... தங்கச்சிக்கும் அதே மாதிரி, அதே தரத்தில் செய்து வைத்தார். தம்பிக்கு ஒன்றும் சேகரிக்கவில்லை. யாழ்ப்பாணத்து வழமை.... பெண்ணுக்கு கொடுப்பார்கள். ஆண்.... அவருக்கு பெண் வீட்டார்.. வீடு, நகைகள், சீதனம் அப்படி பாரம்பரியமாக நடைமுறை இருந்து வருகிறது. நீலிப்பந்தனைக்கு அத்தான் வந்து.... அப்படி ஒரு குழப்பம் செய்யாது விட்டால் காலப் போக்கில் வீட்டில் எமது திருமணம் நடந்திருக்கும். ஏனெனில், சுளிபுரம் கிழக்கு தம்பியப்பா என்ற சீமெந்து கூட்டுத்தாபன ஊழியரும், பண்ணாகம் தம்பி நைனார் என்ற ஊழியரும், ஐயாவுடன் கதைத்த போது... “பெண் பிள்ளைக்கு மதிப்பு வீட்டில் வைத்து கட்டிக்கொடுப்பது.... அவன் என்ன குறைஞ்ச சாதியோ?”
என்று புத்திமதி சொல்லி இருக்கிறார்களாம். ஐயாவுக்கு இது எல்லாம் மனதில் கிடந்து தான் அந்த நிலத்தை வாங்கி என்னையும் ஒரு இடத்தில்தன் மண்.... தன் நிலம்என்ற மிடுக்குடன் வாழ வேண்டுமென ஆவல் கொண்டிருந்தார். அந்தசத்தியமனைநிலத்தில் ஐயா நாட்டிய வேப்பமரம், தென்னை மரங்கள் இன்று வரை நிழல் பரப்புகின்றன.

கை விறைத்து விட்டது. கண்ணீரும் பெருக்கெடுக்க..... தொடர்வேன்....

9

புதுக்குடித்தனமும் கட்சியும்

உப்புச் சிரட்டையையும் நாமே தேடி ஆரம்பித்த வாழ்வு , திகைப்பும், திணறலும் ஆச்சரியங்களும் அழுத்தங்களும் சேர நகர்ந்தது. யாழ்பாணத்தில் இருந்து காரைநகருக்கான பணமும் நேரமும் மிச்சப்படுத்த காரைநகருக்கு குடி பெயர்ந்தோம். காரைநகரில், புது றோட் சேர்ச் ஒழுங்கையில் முத்தம்மா ஜேக்கப் ரீச்சரின் வீடு வாடகைக்கு எடுக்க, கிடைத்தது. அவர்களும் நன்றாக விசாரித்துஅரசாங்க சம்பளம் மாத வாடகை ஒழுங்காக தருவார்கள்என்ற நீலி பந்தனை தையல் அக்காவின் சிபார்சின் பேரில் கிடைத்தது.

சில பாத்திரங்கள் தோழர் டானியல் மூலமும், பல பாத்திரங்கள் பெற்றாரிடமிருந்தும், ‘தாச்சிஎனப்படும் எண்ணெய்ச்சட்டி சிவக்கொழுந்து அக்கா மாப்பாணவூரி தந்து உதவினார். கட்டில், கதிரைகள், மேசை, ஈசி செயர், உரல், உலக்கை, அம்மியும் குழவியும்... சுளிபுரத்திலிருந்து லாரி மூலம் வந்து சேர்ந்தன. திருமணத்தின் முன்னர் நான்.... பெற்றாருக்குச் செய்து காட்டிய செயல்கள் அவர்கள், மனதில்....என்னை ஏற்றுக்கொள்கிற ஒரு பாச உணர்வை, மதிப்பை தக்க வைத்திருந்தது. (இந்த இடத்தில் இன்னொரு பிரதானமான சம்பவத்தை தவற விட்டு விட்டேன். நான் முதலில் குறிப்பிட்ட அந்த 1962ல் காரைநகரில், இருந்து யாழ். போன நிகழ்ச்சியால் ஒரு சில உறவுகள் வீட்டில் இருந்த.... காப்பு, சங்கிலி யாவும் எனக்கு ஐயா செய்து தந்த மூன்று லாச்சி மேசைக்குள் பத்திரமாக கிடந்ததைப் பார்த்து ஐயா, அம்மா விக்கி...விக்கி அழுது..... “மணிப் பொண்ணே ஒரு பொருளும், நீ எடுக்கவில்லை, இங்கே வந்திருக்கிற சொந்தங்கள் தங்கடை பிள்ளைகள் போகேக்கை பவுணையும் கொண்டு போகிற சின்னத்தன எண்ணத்தை எங்கடை மணிக்கு சூட்டிவிட்டு எங்களுக்காக பொறுமை காத்த பிள்ளையை பொருள் ஆசை பிடித்த பேராசைக்காரி என்ற வரிசையில் கொச்சைப்படுத்தப் பார்த்தினமேஎன்று சொல்லி சொல்லியழுததாக இராசமணி மச்சாள் என்னிடம் சித்திரையில் சொல்லி அழுதா.

அன்றைய கால கட்டத்தில் யாராவது தங்களின் முடிவின் படி திருமணம் செய்தால் தாங்கள் வாழ்வதற்கு தேவையான நகை, நட்டங்களை கொண்டு போகிற உலக வழமையைத்தான் சொல்லி இருக்கிறார்கள். அந்தக் காலம் என்றால் என்ன இந்தக் காலம் என்றால் என்ன பெற்றோரின் கண்காணிப்பில் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தால், அவர்கள் பாக்கிய சாலிகளே புதிய இடத்தில் ஒடுக்கும் சமூகம், ஒடுக்கப்படும் சமூகம் இதன் நடுவில் எம் புது வாழ்வு தொடங்கியது. சேர்ச் ஒழுங்கை வீட்டில் காலடி பதித்து பஸ் எடுப்பதற்கு நடந்து செல்லும் போது, நிறுத்தத்தில் காணும் இளைஞர்களிடம் பேசி, பின் அவர்களுக்கு பத்திரிகை, புத்தகங்களைக் கொடுத்து தோழமையை ஏற்படுத்தினார். மார்க்கிச, சோசலிச அறிவுரைகள் பெற்றுக்கொண்ட இளைஞர்கள் அநேகர். அவர்களுள் சுழிபுரம் கா.நடராசா என்ற தோழர் கொள்கைப் பற்றுக் கொண்டவர். “அவர்களால் நீடித்து நிலைத்து செயற்பட முடிந்ததா?” என்று அக்கறையாளர் கேள்வி காதுக்குள்
வருகிறது. இதற்கெல்லாம் பதில் எதற்கும் கைச்செலவுக்கும், உண்ண, உடுக்க, பிரயாணம் செய்யபணம்என்ற ஒரு ஆட்டுவிக்கும் பொருள் வேண்டுமே? இது எனக்குத் தெரியும். “வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியக் கூடாதுஎன்பதால் அவர் குடும்பத்தில் இணைந்து வாழ்ந்த அந்த 27 வருடங்களும் அவர் கையிலேயே எனது சம்பளத்தைக் கொடுத்து நாம் வாழ்ந்தது அயல் வீடுகளுக்கு கூட தெரியாது. நாலு சுவர்களுக்கு உள்ளே குடித்தனம் நடத்த வேணும்என்று எனது தாயார் தனது நகைகளை விற்று, விற்று வாழ்க்கையை செலுத்தியதாக செவிவழி கேட்ட அறிவுரைகள் தான் எனக்கு வழிகாட்டி. வி.பொன்னம்பலம், கார்த்திகேசன் மாஸ்ரர், வி கந்தசாமி, நீர்வை பொன்னையன் என பலரும் வருவர். அதில் கார்த்திகேசன் மாஸ்ரர் ஏற்கெனவே, வந்திருக்கும் இளைஞர்களுக்கு வகுப்பு எடுத்த பின்.... இரவு தங்கி மறுநாள் அதிகாலை பஸ் வண்டி எடுத்துப் போய் விடுவார். அந்த நேரத்தில் அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கணித, ஆங்கில ஆசிரியர். இலங்கை நாட்டில் பொதுவுடமைக் கருத்துக்களை அதாவது தாம் அறிந்தவற்றை ஆர்வமுள்ள வாலிப உள்ளங்களுக்கு அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு நடைமுறை சாத்தியமான விளக்கங்கள் தேவைப்பட்டது. அறிவுரை கேட்க வந்த இளைஞர்கள் காலப்போக்கில் உலகளாவிய ரீதியில் கட்சி, இரண்டாக பிரிந்த பின்னர் நடந்தவை எனக்குத் தெரியாது.

தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் அவர்கள், சிங்கப்பூர் மலேசிய குடும்ப வழி வந்த கல்விமான். தனது உடன் பிறந்த சகோதரிகளின் ஆதரவுடன் தனது பிள்ளைகளையும் ஒரே வீட்டில் ஐக்கியமாக, அனுசரணையாக வாழ வளர வழி வகுத்த ஆசான். அதிகம் பேசமாட்டார். அவரது மொழிகளில் ஒரு வசனம் ஞாபகத்தில் இருக்கிறது. அதாவதுசாதம் இன்றேல் சாந்தம் ஏது?” இது எவ்வளவு உண்மை.

தனது உணவு தனக்குக் கிடைக்காத போது தான் பசியின் கொடுமை தாங்காது உழைக்கும் வர்க்கம், வியர்வை சிந்திய பாட்டாளிகள் பொறுத்து பொறுத்துப்பார்த்து பொறுமை இழந்து உரிமைக் குரல் எழுப்பினார்கள். இது உலகில் உள்ள சகல இன, மொழி பேதங்களைக் கடந்து மானிடத்தின் உணர்வு பூர்வமான போராட்டமாகும்.

உலக நாடுகளில் சிறப்பாக ஐரோப்பிய நாட்டில் கைத்தொழிற் புரட்சி, ஆண்டான், அடிமை, முதலாளி, தொழிலாளி, சுரண்டுபவன், சுரண்டப்படுபவன் என்ற பதங்கள் ஏன் வந்தன? எதற்காக? நூல் வடிவம் பெற்றும், பின்னர் தாய் மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப் பட்டு சகல நாட்டு மக்களும் அறிவு பெறும் வகையில் பரவப் பட்டன.

இலங்கைக்கு... இந்தியாவில் இருந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப் பட்ட நூல்கள்.... அதாவது தோழர் ஜீவானந்தம் நடாத்திய ஜனசக்தி போன்ற அரசியல் நூல்களும், விஜயபாஸ்கரன், வானமாமலை, வல்லிக்கண்ணன், சிதம்பர ரகுநாதன் அவர்கள் வெளியிடும் அரசியலும், இலக்கியமும் கலந்ததாமரை’ ‘சரஸ்வதிபோன்ற சஞ்சிகைகளும் வாசிப்போர் மனதை புதிதாக சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு நூல்களாக வந்து கொண்டிருந்தன. என் வேலையுடன் பத்திரிகைகள், சிற்றிதழ்கள், கட்சி கூட்டங்கள், ஊர்வலங்கள், தோழர்களின் வருகை என நாட்கள் ஓடின.

கை விறைப்பு...... தொடர்வேன்......

10

கட்சியின் சந்திப்பு மையமாய் வீடு

நாங்கள் வசித்த வாடகை வீடு பெரியது. இரண்டு பெரிய அறைகள், இரண்டு பெரிய திறந்த விறாந்தைகள், சமையலறை இரண்டு அறைகளுடன் திறந்த விறாந்தையும் கொண்டது. ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி ஜேக்கப் முத்தம்மா அவர்களுடையது. அந்த வீடு எமக்குக் கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும். அன்னாரை எல்லோரும்மம்மிஎன்றே அழைப்பார்கள். நாங்களும் அப்படியே அழைப்போம்.

என்ன இனமோ, என்ன மதமோ? என்ற கேள்வியே கேட்கமாட்டார்கள். ஆகவே, எம் வாழ் முறைக்கு அது பெரும் வரமாக இருந்தது. அவர்கள் பெரிய குடும்பம். மம்மிக்கு நான்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கும் குறைவில்லை. அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததாலும், அண்மையில் நத்தார், புத்தாண்டைக் கொண்டாட தூர இருக்கும் மகள்மார், பேரப்பிள்ளைகள் வந்து போய்விட்டதாலும், அவர்கள் வீட்டில், சகல பொருட்களும் நிறைவாக இருக்கும். எவர் வீட்டிலும் எதுவும் இரவல் கேட்கத் தேவை வராது. சாப்பாட்டுக் கோப்பைகள் உட்பட நாங்களோ புதுக்குடித்தனம்.... சிறிய குடும்பம்! ஆனாலும் அவர்கள் எம்மை நேசித்தனர்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை இளம் சந்ததியின் மத்தியில் , தாம் மற்ற இனத்தால் அடக்கப்பட்டால், வெறுத்து ஒதுக்கப்பட்டால்... ஒரு விழிப்புணர்வு, "ஏன்?" என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. அப்படித்தான் காரைநகர் என்ற ஊரில் 1962ம் ஆண்டும் எழுந்தது. தோழர் மணியம் அவர்கள், தான் சார்ந்த கட்சிக்காக சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கத் தக்க காரியங்களுக்கு தனது குரலையும் பங்களிப்புச் செய்திருக்கிறார். 1945 இல் C.W.W. கன்னங்கராவினால்
அமுல்படுத்தப்பட்ட இலவசக் கல்வி பின் 1956 இல் சுயமொழிக் கல்வியையும் கொண்டு வந்தது. பின் 1960ம் ஆண்டளவில் சகல பாடசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றது. அந்த நிகழ்ச்சி பற்றிய விபரம் கேட்டு அறிந்து கொண்டது தான். அரசு பொறுப்பேற்கக் கூடாதென குரல் கொடுத்தோர் ஒரு பக்கத்திலும், ஏற்பதை யாரும் தடுக்கக் கூடாது' என்று குரல் கொடுத்தோர் பக்கத்தில் தன்னைப்போன்ற வாலிபர்கள் அநேகர் பங்கு பற்றியதாகவும், தங்களுக்கு எதிர் தரப்பிலிருந்து அழுகிய தக்காளி வீச்சு வந்ததாகவும் தோழர் மணியம் கூறினார். அந்தப் போராட்டம் தான் வெற்றி பெற்றது. அதனால், சகல மாணவர்களும், சமமான கல்வி பெற்று, மேல் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதல்லவா?.....

அடுத்ததாக, தேனீர்க் கடை பிரவேசங்கள். ஒரு தேனீர்க் கடை முன்பாக ஒரு தடி நாட்டப் பட்டு அதில் 4,5 கறள் பிடித்த தகர பேணிகள் மாட்டப்பட்டு இருக்குமாம். சந்தைக்கு அதிகாலையில் மரக்கறிகள், பழவகைகள், மற்றும் இதர பொருட்களை கொண்டு வரும் விவசாயி (தாழ்த்தப்பட்ட இனம்) தேனீர் குடிக்கக் கடைக்குப்போனால், அந்த கறள் பேணி ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு போய், கடைக்காரர்கள் ஊற்றி விடும் தேனீரைக் குடித்து விட்டுப் பணத்தைக்கொடுக்க வேண்டுமாம். இந்த அவமானச் செயலை எதிர்த்த இளைஞர்கள் அச்சுவேலி, மட்டுவில், சுன்னாகம், சங்கானை, அளவெட்டி, கொடிகாமம், சாவகச்சேரி இப்படி சந்தைகள் இருக்குமிடமெல்லாம் ஆரம்பித்த போராட்டங்கள் வலுப்பெற்றன. அது பற்றிப் பின்னர் எழுதுவேன்.

நானும் என் மூத்த குழந்தையை சுமக்கத் தொடங்கிய காலம். எங்களுக்கு ஒரு புது உறவு வரப் போகிறதே என்பதற்காய் மகிழ்வதா? உறவுகளால் ஒதுக்கப்பட்டு தனியாக வாழ்கிறோமே எனக் கலங்குவதா? இருந்தும், என் வேலை அவரது அரசியல் வேலை என ஓடின நாட்கள். நானும், என் கணவர் தோழர் மணியமும் காரை நகரில் வசித்த காலத்தில் சில இளைஞர்களுக்கு சில ஐயங்கள் மனதில் எழுந்ததன் காரணமாக "தமிழரைத் தமிழர் அடக்கியாள்வதின் காரணம் என்ன?"

என்ற கேள்விக்கு விடைதேடுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அவர்களின் உந்துசக்தி, விடாமுயற்சியினால் இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்தரத்தில் இயங்கிய தோழர் கார்த்திகேயன் மாஸ்டர் அவர்கள் காரைநகர் கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பொதுவுடமைக் கட்சியானது மிகவும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஒரு தோழர் இன்னொரு கிராமத்துக்குப் போகிறார் என்றால்.....அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான தோழர் ஒருவர் அவ்விடத்தில் வசித்தால் தான் அவர் அந்த இடத்திற்குப் போகமுடியும். இரகசியமாகவே அரசியல் வேலைகள் நடந்தன.

புரட்சிகரமாகச் சிந்தித்துச் செயலாற்றுபவர்களை அழித்தொழிக்க, மேலாதிக்க சக்திகள் எந்நேரமும் தயாராக இருப்பார்கள். உளவுப் பிரிவைக் கூட அனுப்புவார்கள். அதனால், இளைஞர்களின் சந்தேகங்களைப் போக்க வருபவர் தனது தோழர் ஒருவரின் இல்லத்தில் தான் தங்கவேண்டும். அந்த வீட்டில்தான் இரவு தங்கி அதிகாலையில் பயணம் செய்யமுடியும். “உயிர் காப்பான் தோழன்என்பது எவ்வளவு உண்மை! அந்தக் குறிப்பிட்ட மாலை 5-45க்கு தோழர் மணியம் அவர்கள் பேருந்து நிறுத்த இடத்திற்குச் சென்று தோழர் கார்த்திகேயன் மாஸ்டரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்கள் இருவரும் வீட்டிற்கு வரமுன்னரே இளைஞர்கள் ஒன்பது பேரும் வந்துவிட்டனர். மிகுந்த மரியாதை கலந்த மலர்ந்த முகத்துடன் எழுந்து நின்று தோழரை வரவேற்றனர். அண்மையில் தான் சோவியத் ரஷ்யாவிலிருந்து திரும்பியிருந்த தோழர் கார்த்திகேயன் மாஸ்டர் அவர்கள், தோழர் மணியத்திற்குக் கொடுப்பதற்காக சோவியத் சோசலிசக் குடியரசு அமைய அரும்பாடுபட்ட தோழர் லெனின் அவர்களது உருவச்சிலையைக் கொண்டு வந்திருந்தார். தான் நேரில் பார்த்த சோசலிசக் குடியரசின் ஆட்சியமைப்பின் விழுமியத்தைக் கூறிஇந்த அடையாளச்சின்னம் தோழர் மணியத்திடமிருப்பது தான் பொருத்தமானதுஎன்று கூறி தோழரிடம் கையளிக்கும்போது
சகலரும் அந்நிகழ்ச்சிக்கு கரகோசம் செய்து ஆரவாரித்தனர். அதன் பின்னர், இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாகச் சகலரின் சந்தேகங்களுக்கும் மாஸ்டர் விளக்கமளித்தார். பொதுவுடமைத் தத்துவம் என்பது மார்க்ஷிச சிந்தனையின் அத்திவாரத்தில் அமைந்துள்ளது. அதனை விளக்கி எழுத எனக்கு அறிவாற்றலோ, ஆளுமையோ போதாது.

அதன்பின்னர் 9-30 மணியளவில் உணவருந்திய பின்னர் தோழர் கார்த்திகேயன் மாஸ்டருக்கு நித்திரைக்குரிய நேரம். வாடகை வீடு பெரிதாக இருந்தாலும், எம்மிடம் கைவசம் இருந்த பாவனைக்குரிய பொருட்கள் சிறிய எண்ணிக்கையில் தான் இருந்தன. தோழர் கார்த்திகேயன் மாஸ்டர் அவர்கள் பத்திரமாகவும், நிம்மதியாகவும் உறங்க வேண்டும் என்பதற்காக நல்ல பாய், சுத்தமான வெள்ளைத் துணிப் படுக்கை விரிப்பு, சுத்தமான தலையணை இவற்றை அன்று சாயந்தரமே தயார்படுத்தி, கூடத்தில் அறைக்குள் பத்திரமாக தோழர் மணியம் வைத்திருந்தார்.
மறுநாள் அதிகாலை 4-00 மணிக்கே யாழ்ப்பாணம் போகிற பஸ் வண்டி காரைநகர், மேற்கு றோட்டிலுள்ள புதுறோட் சந்திக்கு வந்துவிடும். தோழர்கள் இருவரும் எழுந்ததோ, சுடுநீர்ப் போத்தலில் விட்டுப் பத்திரமாக வைத்திருந்த தேநீரைக் குடித்த பின் பேருந்தைப் பிடிக்கப் போனது பற்றிய விபரம் ஒன்றும் எனக்குத் தெரியாது. ஆனால், அந்தப் புனிதமான வெள்ளை நிறமும், சாம்பல் நிறமும் கலந்த , சலவைக் கல்லினால் ஆக்கப்பட்ட தோழர் லெனின் அவர்களது உருவச்சிலை மாத்திரம், நாங்கள் 4 கிராமங்கள், 6 வீடுகள் (எனது தொழில் நிமித்தம்) மாறி, மாறி வசித்த காலத்திலும் பத்திரமாகவும், புனிதப் பொருளாகவும் தோழர் மணியம் பாதுகாத்தார் என்பதை நினைக்கும் போது, ‘அவர் தான் நேசித்த கட்சியையும், தோழமையையும் பேணினார்என்பதை அவரது மனைவியாகிய என்னால் இந்த முதிய வயதில் ஞாபகத்தில் நிறுத்தும் போது கண்களைக் கண்ணீர் நனைக்கின்றது!
தொடர்வேன்.....

11

நீர்வையின் கற்பனைக் கதை நூல்

கடந்த தொடரில் தோழர் மணியம் தலைமை தாங்க பல நிகழ்வுகளில் நீர்வை பொன்னையன் இருந்த படங்களைப் பார்த்த போது, நீர்வை பொன்னையன் தானே எழுதி தானே வெளியிட்டகற்பனைக் கதைநூல்பற்றிய நினைவும், வலியும் வந்தது. நீர்வை பொன்னையன் மட்டுமல்ல இவரைப்போல சுயநலமிக்க சில குழப்பவாதிகள் மார்க்சியம் பேசியபடி சுயநலமிகளாய் பொய்யுரைத்து வாழ்கின்றனர். பல உண்மைகளின் சாட்சியாய் நான் இன்றும் வாழ்கிறேன். சிலதைக் கண்டும் காணாதது போல நகர்கிறேன். அது எதுவரை சாத்தியம் என்பது தெரியவில்லை. இன்று நீர்வை பொன்னையன் மேல் எழும் கோவம் போல சில வேளைகளில் வெடித்து விடுமோ?

தனது விவாகம் நடைபெறும் வரை 1970 வரை தோழர்களுடன் இணைபிரியாமல் இயங்கிய நீர்வை பொன்னையன், இருபது வருடங்கள் கழிந்த பின்னர் தான் எழுதிய நூலில் அதாவது தன்னைப்பற்றி எவ்வளவும் எழுதலாம். ஆயிரம் பக்கங்களுக்கும் மேலே கூட எழுதலாம். அதைக் கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால், தோழர் மணியத்தைப் பற்றி வலிந்து ஏதோ தான் எழுதித்தான் மணியம் வாழ்ந்த தன்னலமற்ற வாழ்க்கையை மற்றயவர்கள் புதிய சந்ததி அறிந்து கொள்ள, அடையாளம் காட்டுவிப்பதாக புனை கதையாக....(கதை எழுதும்.... கதாசிரியர் தானே கற்பனையில்) “வி.பி. யின் (வி. பொன்னம்பலம்) காரைக் கழுவுவதற்கும், கூட்டங்களுக்கு கைதட்டவும் தான் கட்சிக்கு வந்தவர்என்று எழுதியமை ஞாபகத்தில் இருந்தது என்றால் 1956 க்கு பிற்பட்ட காலங்களில் மணியம் அவர்கள் முழு நேர ஊழியராக சுன்னாகத்தில், காரியாலயத்தில் அவருடன் மிக நெருங்கிப் பழகி, என்னுடன், பிள்ளைகளுடன் மிக மிக நேசமாக வாழ்ந்துவிட்டு, 1961 வரை சேவை செய்ததையும், அதன் பின்னர் நடந்த சாதி எதிர்ப்புப் போராட்டம், மேதின சட்ட மறுப்பு போராட்டங்கள் அந்நேரங்களில் அவர்கள் எங்கு இருந்தார்கள்? தோழர் மணியம் அவர்கள் தனது உடம்பு நொருக்கப்பட்ட நிலைமையிலும், கட்சியை விட்டிட்டு ஓடாமல், கொள்கைப் பிடிப்புடன் செயற்பட்டதை ஏன் நீர்வை மறைத்தார்? ஏதாவது எதிர்பார்ப்புகள் இருந்திருக்குமா?

தோழர் மணியம் காலமாகி 23 ஆண்டுகளின் பின்னர், இப்படியான ஒரு திரிபுவாத.... கற்பனைக் கதை மாதிரியான எழுத்து வடிவத்தை வடித்து, அச்சேற்றி, நூல் வடிவில் வெளியிட்டால், அதைத் தட்டிக் கேட்க, அவரது கொள்கையைத் தொடரும் தோழர்கள் அவருடன் இல்வாழ்வில் ஒத்து வழி நடந்த அவரது வாழ்க்கைத் துணைவி,நான் கேட்க மாட்டேன் என்ற அசட்டுத் தைரியமா? உண்மை ஒரு போதும் அழியாது. மணியம் அவர்கள், வாழ்க்கையில் பற்றாக்குறை, வறுமை ஏற்பட்ட நேரத்தில் தனக்கு படித்த படிப்புக்கு ஏற்ற உத்தியோகம் வேண்டும் என்று ஒரு எதிர் பார்ப்புடன் செயற் பட்டவரா? கிடைக்க வில்லை என்று தெரிந்தவுடன் விட்டுட்டு ஓடி ஒளிந்தவரா? அனைத்து வசதிகளையும், தன் ஆதிக்க உணர்வு கொண்ட அனைத்து உறவுகளையும் விட்டு விலகி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மரணம் வரை வாழ்ந்த மனிதன். கட்சியின் அந்தரங்க நிகழ்ச்சிகள்.... வெளியாருக்குத் தெரிய வராது. எத்தனை ஆண்டுகள் முன்னராக இருந்தாலும், ஒரே இயக்கத்தில் இருந்து செயற்பட்ட தோழமை என்ற எல்லையற்ற அன்பை முன்னிட்டு பிரிந்து சென்ற தோழர்களைப்
பற்றி ஒரு சிறு வார்த்தைகள் கூடக்குறை சொல்லாத தோழர் மணியம் பற்றிநடு உழவிலே அறுந்த கதைசொல்லுந் தகுதி வாழ்விலும், தாழ்விலும் கொள்கைப் பிடிப்புடன் இன்று வரை உறுதியான மன வைரத்துடன் செயற்படும் தோழர்கள் வரிசையில் நீர்வை இருக்கிறாரா? இன்று வரை எத்தனையோ கஷ்டங்களுக்கு முகங் கொடுத்து வாழும் தோழர்கள் தங்களுக்கு உயர்பதவி கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் செயற்பட்டவர்களா? தனது சொத்தையே.... கட்சிக்கு கொடுத்து முன் மாதிரியாக வாழ்ந்த பெரும் தலைவர்கள் பலரது வாழ்க்கையை வாசித்து அதனால் ஈர்க்கப்பட்டு இயக்க வேலை
செய்ய அர்ப்பணிப்புவாழ்வை மேற்கொண்டேன்என்று கூறி நாளடைவில் வெளியே சென்றமைபிழையல்ல, தொடர்ந்து இருந்தவர்களை, இழிந்துரைக்கும், நீசத்தனமான சிந்தனை உள்ளவர்களை நான் காணவில்லை.

நம்பிய கொள்கைக்காககஷ்டப்படுகிறாய், விட்டு விலகி விடுஎன்ற அன்பான வேண்டுகோள் செவி வழி வந்தாலும், ஆழப் புதைந்த வைரமான கொள்கைக்கு துரோகம் நினைக்காமல், மற்றவர் மனங்களைப் புண்படுத்தாமல், மனச்சாட்சியின்படி வாழ்கின்ற தியாக உணர்வு கொண்ட தோழர்களின் நிழலைக் கூட மிதிக்க தகுதியற்ற நீர்வை பொன்னையனைவிசுவாசமான தோழன்என்று நேசித்து தனது குழந்தையையே (சத்தியராசன்) வாரக் கணக்கில் நம்பி ஒப்படைத்தார் என்றால் எடுத்துப் பேணியவர் எந்த எதிர் பார்ப்பும் இல்லாதவரா? அல்லது குழந்தையை தனது வீட்டில் அம்மா, தங்கை அவர்களின் பராமரிப்பில் பாதுகாத்துப் பின் பெற்றாரிடம் தந்த அந்த தோழமையை இன்று வரை நன்றி மறவாத பெருந்தன்மையுடன், நினைவு கூரும் என் மன ஆழத்தில் அப்படி திரித்து எழுதிய நீர்வையை அவரது அறியாமையை எண்ணி என்னை நானே நிந்திக்குறேன். சீ! இதையெல்லாம் திரும்ப நினைத்து நானே எழுதியதுடன் என்னை வருத்துவது எவ்வளவு மடமை?.

அந்தக் காலத்தில் 1956 ஒரு வயது குழந்தையாக இருந்து 1975ல் கட்சியில் இணைந்த . இரவீந்திரனிடம் நீர்வை கொடுத்துஎழுத்துப் பிழை திருத்தி தாருங்கஎன்று கேட்டு அதில் இருந்த கருத்துப் பிழைகளை, எடுத்துச் சொல்ல கடந்த கால விபரம் அனைத்தும் தெரிந்தும் இலக்கணப் பிழைகளையும், எழுத்துப் பிழைகளையும் திருத்தி, “கருத்துப் பிழைகள் இருக்கின்றனஎன இரவீந்திரன் கொடுக்க அதை சாதகமாக பயன்படுத்தி.... தன் காரியத்தை சாதித்து வென்ற ஒரு இறுமாப்புடன் நீர்வை நெஞ்சு நிமிர்த்தி நடக்கவும் அவரது எழுத்தால் மறைந்த தோழர் மணியம்மாசுபட மாட்டார்என்பதும் வரலாறு உண்மையை உணர்த்தும்.
நீர்வை பொய்யை எழுதியது மாத்திரமல்ல; ஒரே குடும்ப உறவினரிடம் கொடுத்து நீர்வை உதவி கேட்கையில் . இரவீந்திரனது புத்தி எங்கே போனது? நீர்வையை சத்தியமனையிலோ கட்சிக் கூட்டங்களிலோ 1975-2011 வரை சந்தித்ததோ கலந்து உரையாடியதோ கிடையாது. நீர்வையைப் பற்றிய கணிப்பீட்டை எப்படி உறுதிப்படுத்த முடியும்?
என்று மனத்துள் ஆராயாமல்; “நீர்வை கேட்டார்......” அது தான், என்றால் மன உளைச்சலின்றி எப்படி ஏற்க முடியும்? மறுப்பு.... எழுத்து கூட.. இத்தனை காலத்தில் இல்லாதது.. இவரும் நீர்வை எழுதிய பொய்யை மனம் அறியாமல் ஏற்று விட்டாரா? கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு என்றால், அதிலிருந்து விலகி நின்றிருக்கலாமே...?

1975—1989 வரை உடனிருந்தவருடன் வாழ்ந்த, பங்கு பற்றிய சுகதுக்க நினைவுகள் எங்கே ஓடி ஒளிந்தன?” என்ற வினாக்களுடன் வயது போன கை விறைப்புடன்.... மனம் முழுவதும் வலியுடனும்... தொடர்வேன்.....

12

குழந்தைக்கு பெயர் சூட்டுதல் எனும் அரசியல் நிகழ்வு

எமக்குத் திருமணமாகி, 10 மாதங்கள் சென்ற பின்னர், மானிப்பாய் கிறீன் மெமோறியல் ஆஸ்பத்திரியில் 30-10-1962ல் என் செல்ல மகன் சத்தியராசன் (ராசன்) பிறந்தார். குழந்தையை டாக்டர் விஸ்வாசம் என்ற பெயருள்ள, கேரளாவிலிருந்து வந்து சேவையாற்றியவரே என் வயிற்றிலிருந்து பிறப்பித்தவராவார். எனது கணவனின் நண்பராக இருந்த . ஆர். திருச்செல்வம் (இவர் பற்றி கட்டாயம் பின்னர் எழுதுவேன் 1989 இல் அவரது நட்பின் துரோகம் பற்றி.) அவர்களது அக்கா செல்வி எலிசபேத் அவர்கள் மூலமே மேற்படி டாக்டர் எமக்கு அறிமுகமானார்.

5
மாதத்திலிருந்து மாதாந்தகிளினிக்காரைநகரிலிருந்து போய் வருவோம். டாக்டர் எமக்கு குறித்து தந்த திகதி 10-11-1962 ஆகும். ஆனால், அந்த ஆண்டு தீபாவளி (28-10-1962) வந்தது. எனது தங்கை அப்போ பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் முதலாம் ஆண்டில்பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார். அவர், எமது வீட்டிற்கு வந்து எங்களிருவரையும் பேருந்து மூலம் சுளிபுரத்திற்கு அழைத்துச் சென்றார். அன்றிரவு நள்ளிரவுக்குப் பின்னர் எனக்கு எழுந்திருக்கவே முடியாத ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டது. அதிகாலையில் ஒரு வாடகை வண்டி மூலம் மானிப்பாயைச் சென்றடைந்தோம். என்னைப் பரிசோதித்த டாக்டர் அங்கு ஒரு அறையில் தங்க வைத்தார். “வீட்டிற்குப் போகக் கூடாது என்றும் தனது கண்காணிப்பில் இருக்க வேண்டும்என்று கூறி விட்டார். எந்த விதமான முன் ஏற்பாடுகளுமின்றி அறையில் நான் இருக்க எனது தங்கை வீட்டிற்குச் சென்று அவசியமான பொருட்களை எடுத்து வந்தார். மறுநாள் திங்கட்கிழமை. தங்கை தனது படிப்பிற்காக கலாசாலைக்குச் சென்று விட்டார். அன்று நள்ளிரவுக்குப் பின்னர் எனது நிலையை முன்னிட்டு பிரசவ அறைக்கு தள்ளு வண்டியில் இரண்டு தாதிமை பெண்கள் அழைத்துச் சென்றனர். கிட்டத்தட்ட ஐந்து மணித்தியாலங்கள்......! அதற்குத்தான் பிரசவ வலி என்ற பெயர். இது அனுபவித்தவர்களுக்கு மாத்திரம் தான் தெரியும்.

டாக்டர் அவர்கள் சேவை செய்யப் பிறப்பெடுத்த தெய்வங்கள். தூக்கமின்றி என் பக்கத்தில் நின்றார். ஆயுதங்கள் கொதிக்கவைக்கப்பட்டது தெரியும். பிறகு காலையில் கண் விழித்தேன். சிறிது நேரத்தில் தள்ளு வண்டிக்கு மாற்றி, அறைக்கு என்னைக் கொண்டு சென்றனர். அங்கும் வழமையான கட்டிலுக்கு மாற்றப்பட்டேன். “ஊசி ஏற்றிய விறைப்பு மாறிய பின்னர் தையல்கள் போட்ட நோவு, கொதி,வலி தெரியும்என்று எலிசபேத் சிஸ்டர் கூறியிருந்தார்.
9
மணியளவில் குழந்தையைக் காட்டினார்கள். தோழர் மாத்திரம் நின்றார். சற்று நேரத்தில் திரும்பவும் தூங்கி விட்டேனென நினைக்கிறேன். எனது தங்கையின் குரல் கேட்கிறது. “பிறந்து 5 மணித்தியாலத்தின் பின்னர் சுட்டு ஆறிய தண்ணீர் பருக்க வேண்டும்என்று ஏதோ ஆயத்த வேலைகள் கரண்டிச் சத்தம் கேட்கிறது. “ஆண் குழந்தைஎன்றும், “சகல அவயவங்களும் சரியாக இருக்கிறதுஎன்றும் தங்கச்சி சொல்லித்தான் தெரியும். அன்று வைத்த பாசம் இராசன் விபத்தில் இறக்கும் வரைஎன்ரை ராசன், என்ரை மூத்த பிள்ளைஎன்ற பரிவும், பாசமும் அவவை வருத்திக் கொண்டே இருக்க அவவும் சிறிது காலத்தில் பெருநோயாளியாகி மறைந்து விட்டார்.

எனது கணவனின் நெருங்கிய நண்பனும் தோழருமான வி.பொன்னம்பலம் அவர்கள் துணைவியாருடன் வைத்தியசாலைக்கு வந்திருந்தார். அவர் கூறினார்எங்கள் குழந்தைக்கு மாவலிராசன்என்ற பெயர் வைத்து இருக்கிறோம். உங்கள் குழந்தைக்குசத்தியராசன்என்ற பெயரை வைப்பது பொருத்தமானதுஎன்றார். குழந்தை வயிற்றில் இருந்த காலத்தில் காரைநகர் ஆலடி ஆயிலி, விக்காவில் என்ற இடத்தில்சம்பூர்ண அரிச்சந்திரன் மயான காண்டம்என்ற நாடகம்....பருத்தித்துறை மாதனை இளைஞர்களினால் நடாத்திக் காண்பிக்கப் பட்டது. அதில், மயானம் காக்கும் தோட்டியை தன் மன்னன் என்ற விபரம் அறியாத மந்திரி சத்தியகீர்த்திதேடி அலைகிறேனே என் அண்ணலைக் காணாமல் தேடி அலைகிறேனே....” என்று கண்ணீர் ததும்பப் பாடுகிறார். அதற்கு (மன்னன்) தோட்டி பாடுகிறார்அப்பனே, சத்தியகீர்த்தி அரிச்சந்திரன் நானே கண்டாய்....” என்று ஆரம்பித்து விசுவாமித்திர முனிவரின் அடாவடித்தனத்தால்.. “ஒரு பொய் சொல்என்ற நிபந்தனையை ஏற்காமல் இத்தனை இழப்புக்களுக்கும் முகங்கொடுத்து தற்போதுவீரவாகுஎன்ற புலையனுக்கு அடிமைப்பட்டதைக் கூற... பார்வையாளர்கள் அனைவரினது கண்களிலும் கண்ணீர் வழிகிறது. இந்த உள்ளத்தைத் தொடும் காட்சியைக் கண்ட நேரத்திலிருந்து பிறக்கும் குழந்தைக்கு ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்னசத்திய கீர்த்திஎன்ற பெயர் தான் வைப்பது என்ற முடிவில் இருந்தோம். (இதிலுள்ள சிறப்பு அரிச்சந்திரனாக நடிகமணி வைரமுத்து அவர்களும், சத்திய கீர்த்தியாக மாதனை மகாலிங்கமும் நடித்தார்கள். இலங்கை வானொலி புகழ் பெற்ற இந்த நாடகம் நடாத்தாத கிராமமே இல்லை எனலாம்) அப்பாடல்களைத் தோழர் மிக மிக அழகாகப் பாடுவார்.
தனது விருப்பத்தை வி.பொன்னம்பலம் அவர்கள் கூறிய பின்....“அது மந்திரியின் பெயர். இது மன்னனின் பெயர். எல்லாம் சத்தியம் தவறாத வரலாறு தான்என்று கூறி அதன்படி குழந்தைக்குசத்தியராசன்என்ற நாமத்தை வி.பொன்னம்பலம் அவர்கள் குழந்தையின் 45ம் நாள் பல தோழர்கள் மத்தியில் சூட்டினார்கள். அதற்குநாம கரண வைபவம்என்ற பெயரில் அழைப்பிதழும் அவர்களால் அச்சடிக்கப் பட்டு தோழர்களுக்கு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு யாழ். குடாநாட்டு தோழர்களும், கட்சி ஆதரவாளர்களும் என நிறைய ஆட்கள் வந்திருந்தனர். எமது வீட்டைச்சுற்றியுள்ள அயலவர்கள், நண்பர்கள் ஒத்துழைத்தனர். அதற்குப்பட்ட சிரமத்தையும் சொல்ல வேண்டும். கட்சியிலும் சீனா, ரஷ்சியா என விமர்சனங்களும் வரத்தொடங்கிய நேரம். இராசரது பெயரிடும் விழா அரசியல் ரீதியாக தோழர்கள் பலரை ஒரே இடத்தில் சந்திக்க வைக்க முடியும் என்பதால் தோழரும் எல்லோரையும் அழைக்க விரும்பினார். ஆனால் பலர் வருவது பற்றி என்னுடன் கலந்து பேசவில்லை. நான் என் இராசனைப் பாராமரிப்பதிலும், அவர் காட்டும் வினோதங்களில் என்னை மறந்தும் இருந்தேன்.

என் இராசனை எழுதக் கைகள் நடுங்குகிறது. எனக்கு எல்லாம் நீயாகி, உன் ஒரு வயதில் பெரிய அரண் ஆக எனக்குப் பலம் தந்தாய் ராசா... ஐயோ... நீயும் நானும் மட்டும் எத்தனை இரவுகள் காரைநகர் வீட்டில் தனித்து அந்த இரவுகளைக் கழித்திருப்போம். என்னால் எழுத முடியவில்லை. வலிக்கிறது.

தொடர்வேன்......

13

கைக்குழந்தையோடு வாலிபர் மாநாட்டுப் பணிகள்

எமது மூத்த குழந்தை சத்தியராசன் மூன்றுமாதக் குழந்தையாக இருந்தகாலத்தில் இற்றைக்கு 56 ஆண்டுகளுக்கு முன், கட்சியின் வாலிபர் மாநாடு நடாத்தும் நடவடிக்கைகள் 1963 இல் யாழ் நகரசபை மண்டபத்தில் நடாத்துவதாக, யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள அவர்களது காரியாலயத்தில் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எனது கணவன் கடைசி பஸ் பிடித்து காரைநகர், புதுறோட், சேர்ச் ஒழுங்கை வீட்டிற்கு வர நள்ளிரவு நெருங்கி விடும். அது வரை எனக்கு துணை எனது கைக் குழந்தை இராசன் தான். எனது தாயாரோ வருத்தக்காரி. இருந்தும் நான் வேலைக்குப் போகிற தாயாக
இருந்ததால், தனது இயலாமையுடனும் கை உதவியாக இருந்தார். வலிந்து அழைத்ததால் வந்திருந்தார்.

1963 மார்ச் மாதம் 10ம் திகதி மாநாடு. தென்னிலங்கைத் தோழர்கள் (சிங்களக் குடும்பங்கள்) பலர் வருகை தர இருந்தனர். மாநாட்டின் முதல் நாள் அதிகாலை புகை வண்டியில் அவர்கள் வருகிறார்கள். அவர்களில் பெண்களும் கைக்குழந்தைகளும் அடங்குவர். அவர்களை ரயில் நிலையத்தில் வரவேற்க கட்டாயம் ஒரு பெண்மணியாவது போக வேண்டும். கட்சியின் பல தோழர்கள் குடும்பஸ்தர்கள் தான். என்னை வரும்படி அழைத்தபோது முதல் தடவையாக தோழர் மீது கோவம் வந்தது. கைக்குழந்தை, வயதான தாய் எப்படி என்னால் போகமுடியும்? என்னை அதிகாலை பஸ்சில் புறப்பட்டு.... யாழ், ரயில் நிலையத்திற்கு வரும்படி கட்டளை. என் கோவம் எனக்குள் புதைந்தது.

எனக்கு ஒரே நடுக்கம் அம்மா பாவம். வயதான நோயாளி. கைக் குழந்தைக்கு பால் கரைத்துப் பருக்கி, இயற்கைக் கழிவு அகற்றி கழுவி சுத்தப்படுத்துகிற வேலைகள் செய்ய முடியாத நோயாளி. சில நேரங்களில் குழந்தையை தூக்கவே கஷ்டப்படுவா. தான் தனது வீட்டுக்குசுளிபுரம் போகப் போகிறேன்என்று கூறி அழுவா. எப்படி குறைந்தது நாலு, ஐந்து மணித்தியாலம் வேறு யாருடைய உதவியும் இல்லாமல் விட்டிட்டுப் போவது? “போறதும் வாறதுமாக வந்து விடுவேன்என்று பொய் சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்று விட்டேன். அதிகாலை பஸ் ஏறி யாழ், புகையிரத நிலையம் சென்று அன்று புகைவண்டி வரவே அரை மணித்தியால தாமதம் தென்னிலங்கைத் தோழர்களை வரவேற்று. அவர்களுக்கு ஒழுங்கு செய்த ஒரு வாகனத்தில் ஏறி, முதலில் தோழர் கார்த்திகேயன் அவர்களது வீட்டிற்குச் சென்றோம். அவரது வீட்டில் சகோதரிமார், பிள்ளைகள் பலர், சுகயீனமான மனைவி (அது சாத்தியப்படவில்லை) தோழர்கள் எதிர்பார்த்தது போல தங்குமிடம் இலகுவாக அமையவில்லை. பின்னர், இன்னொரு தோழரின் தம்பியார் வீட்டிற்குச் சென்றோம். (பெயரைத் தவிர்க்கிறேன்) அவர்களது வீடு, யாழ் இந்துக்கல்லூரிக்கு பக்கத்தில் இருந்தது. வருகை தந்த அவ்வளவு பேரையும் தங்க வைக்கிற இட வசதி இருந்தது. அவர்களை அங்கு இறக்கி விட்டு வாகனம் போய் விட்டது. இந்தக் காலம் போல 1963ம் ஆண்டு ஆட்டோ வசதி கிடையாது. நான் தனிய ஓட்டுமடம் சந்திவரை நடந்துவரவே அரை மணித்தியாலத்திற்கு அதிகம் பிடித்தது. அந்த வாகனத்திலாவது என்னை ஓட்டுமடம் சந்தியில் கொண்டுவந்து இறக்கவும் அவர்கள் ஒருவரும் நினைக்கவில்லை.
எனக்கோ கைக்குழந்தையின் நினைப்பும் தவிப்பும் அம்மா தனிய வயோதிபமும் வருத்தமும் என்ன செய்வாவோ நேரமோ ஒன்பதரை ஆகி விட்டதேஎன்ற தவிப்பும் பத்து மணி கழிந்து பேருந்து வந்தது. பஸ் ஏறி புது றோட் இறங்கி உள்ளே நடந்து வீடு போக பதினொரு மணியாகி விட்டது. அம்மா...பாவம்..! கைக்குழந்தையுடன் தான் பட்ட கஷ்டத்தை சொல்லிச் சொல்லி அழுதா. தான் தனது இயற்கை கழிவு அகற்றவும் போக முடியாமல் தவித்தாவாம். குழந்தையை கைதவறி கீழே போட்டு விட்டாவாம். இந்த இக்கட்டான நேரத்தில் ஏதோ ஒரு வாகனச் சத்தம் கேட்கிறது. தென்னிலங்கைத் தோழர்களுடன் நீர்வைப் பொன்னையனும் வருகிறார். பார்த்ததும் திகைத்து பேச்சும் புதைந்து நின்றேன். கையிலே அரிசிப் பார்சல் ஒன்று மறு கையில் இறைச்சிப்பார்சல் ஒன்று. தோழர் வரவில்லை. ஆனால்விருந்தினர்களை அன்பாக உபசரித்து உணவும் தயாரித்து தன் மனைவி கொடுப்பாள்என்ற நம்பிக்கை எனது கணவனுக்கு இருந்திருக்கிறது. ஏன்....? என் படபடப்பும், திகைப்பும் ஆயிரம் கேள்விகளும் மீண்டும் எனக்குள் புதைந்தது. அவ்வளவு தோழர்கள் யாழ் பட்டினசபை வட்டாரத்துக்குள் வசிக்கிறார்கள். காரைநகர் எவ்வளவு தூரம் நாம் சின்னக் குடும்பம். ஒரு குட்டிப்பானை. இரண்டு சிறிய சட்டிகள். இரண்டு அகப்பைகள். எமக்கு வீடு வாடகைக்குத் தந்த மம்மி வீட்டில் ஓடிச் சென்று பெரிய பாத்திரங்கள், சாப்பிடும் கோப்பைகள், படுப்பதற்கு பாய், தலையணைகள் யாவும் இரவல் வாங்கி ஏதோ சமைத்து வந்த விருந்தினர்க்கு மதிய உணவளிக்க மூன்று மணியாகி விட்டது. அவர்களும் முதல் நாளிரவு தூங்காததால் தூங்கி விட்டனர். தோழர் இரவு தான் வந்தார். இறைச்சியுடன் கத்தரிக்காய், சொதி முதலியன அம்மாவின் அனுசரணையுடன் செய்தேன். இரவும் அனைவரும் சோறே சாப்பிட்டனர். சிறு குழந்தைகளுக்கு சுடுதண்ணீர்ப் போத்தலில் தண்ணீர் விட்டு வைத்தேன். எமது வாடகை வீட்டில் மலசலகூடம் இருக்கவில்லை. பெரிய கிடங்கின் மேல் பனை மரத்தினால் செய்யப்பட்ட மரங்களைப் பரப்பிச் செய்யப்பட்டு சுற்றிவரக் கிடுகினால் அடைக்கப் பட்ட வேலியையும் கொண்டது.
பனை மரத்திலிருந்து செய்யப்பட்டு காலை உறுத்தாத ஆறு அடி நீளமான மரங்கள் குறுக்கும் நெடுக்கும் போடப்பட்டு, சுற்றிவர கிடுகினால் வேலி அடைக்கப்பட்டிருக்கும். தென்னிலங்கைத் தோழர்கள் அனைவரும் வறிய எம்மைப் போன்றே விவசாய, தொழிலாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான். அதனால்.... எந்த விதமான அருவருப்போ, வெறுப்போ அவர்கள் முகத்தில் தெரியவில்லை. சகலவற்றையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.அன்று காலையில், அவர்களை ஒரு பெரிய வசதிகள் நிறைந்த வீட்டில் தானே இறக்கி.... தங்க வைத்திருந்தோம். அவர்களில்
ஒருவருக்கு தமிழ் நன்றாக கதைக்கத் தெரியும். அவர் கூறினார்எங்களிற் சிலருக்கு அவர்களின் நவீன மயமான குளியலறையை எப்படிப் பாவிப்பது என்று தெரியாமல், சில தவறுகள் நடந்து விட்டன. அதற்காக அந்த வீட்டுக்காரரிடம் மன்னிப்புக் கேட்டபின்னர், தோழருடன் கதைத்து இங்கு வந்தோம்என்று. எனக்கு அதுவரை மனதில் இருந்த பல கேள்விகள் அழிந்தன. தோழரை நம்பி வந்தவர்களை முடிந்தவரை உள நேசிப்புடன் பார்த்துக்கொண்டேன்.

நாம் குடியிருந்த வாடகை வீட்டுற்கு கிணறு கிடையாது. மம்மி வீட்டு கிணற்றில் தான் அனைவரும் குளித்து முழுகினார்கள். (எனது மகள் தாங்கள் பிறந்து, குழந்தைகளாக வளர்ந்த காரைநகர் வீட்டைப் பார்க்க வேண்டுமென விரும்பியதால் 2013ம் ஆண்டு அங்கு சென்று பார்த்தோம். இரண்டு, மூன்று கைமாறி.... ஒரு அக்காவும், தங்கையும் விலைக்கு வாங்கிக் குடியிருக்கிறார்கள். கிணறு, குளியலறை, நவீன மலசல கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இரண்டு வட்டப் படிகளாக இருந்த முன் விறாந்தை அழிக்கப்பட்டு.... மூடிக் கட்டப்பட்டு இருந்தது. ஆனால், நாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட படிகள் சகிதம் உள்ள புகைப்படம் இப்பவும் எமதுசத்தியமனையில் இருக்கிறது. நிற்க.

அடுத்தநாள் விடிந்து விட்டது. குழந்தைகளுக்கு கொஞ்சம் இடியப்பம் தயாரித்தேன். மற்றவர்கள் அனைவருக்கும் பாணும், சம்பலும், தேநீரும் தான். அனைவரும் புறப்பட்டு புதுறோட் சந்தியில் பஸ் ஏறி... யாழ். நகரசபை மண்டபத்தை வந்தடைந்தோம்.

அனைவரும் எனக்கு நன்றி கூறி குழந்தைக்காக விரைவில் வீடு செல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் அனைவரும் உலகளாவிய ரசியா, சீனா என்ற பிளவின் பின்னர் எங்கே என்று தெரியவில்லை.
மணியம் தோழரின் வாடகை வீடு காரைநகரில் இருக்கிறது. அங்கே.... கைக் குழந்தையுடன் வேலைக்குப் போகும் ஒரு பெண், நோயாளியான ஒரு வயோதிபத் தாய், வசதி குறைந்த வீடு, இந்த நிலைமையில் வந்த தோழர்களை என்னால் இயன்றவரை தங்க வைத்தேன் என்றால், அது நான் எனது கணவனை மதித்த மரியாதையால் தான். குறைபாடுகள் மனதை நெருடினாலும், முடிந்த வரை உபசரித்த திருப்தி உண்டானது.

எத்தனையோ தோழர்கள் வசதி கூடிய சொந்த வீடுகளில் வசித்தார்கள். யாழ்ப்பாணத்திலும், இரண்டு, மூன்று மைல் சுற்று வட்டாரத்திலும் வாழ்ந்தார்கள். அவர்கள் மனதிலே மனிதாபிமானம் எங்கே போனது என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

மாநாட்டில் கட்சியின் மாவட்ட செயலாளராக வி. பொன்னம்பலம் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். அதேபோன்று வாலிபர் சம்மேளத்தின் செயலாளராக தோழர் கே..சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டார்.

தோழர்கள் பிரேமலால் குமாரசிறி, பீற்றர் கெனமன், டபிள்யூ..தர்மதாச, சண்முகதாசன், சரத்முத்தேட்டுவகம, வி. பொன்னம்பலம், வைத்திலிங்கம், அரியரத்தினம், கார்த்திகேசன் மற்றும் பானுதேவன் எனப் பலரும் வந்திருந்தனர். அங்கு தோழர்கள் வி.பொன்னம்பலத்திற்கும் கார்த்திகேசனுக்கும் இடையில் சிறு சண்டை வந்தது. கட்சியின் உள் விவகாரங்களக்குள் நான் செல்வது நல்லதல்ல. அதனால் அதைத் தவிர்கிறேன். அசோக ஸ்ரூடியோ இப்படத்தை எடுத்திருந்தனர்.

இப்படியே வாலிபர் மாநாடு முடிந்து விட்டது. அடுத்தடுத்த, மாதங்களில் தோழருடன் வெளியூர் தோழர்கள் நடுநிசி தாண்டி வருவார்கள். விவாதிப்பார்கள். எழுதுவார்கள். அம்மாவின் திட்டுதல்களும், தோழரின் நம்பிக்கைக்கும் இடையில் என் இராசன் மட்டுமே ஆறுதல் தந்தார். சில மாதங்களின் பின்னர் நான் கைக் குழந்தையை அம்மாவீட்டில் சுளிபுரத்தில் விட்டிட்டு தினமும் வேலைக்கு பஸ்சில் போய் வந்தேன்.

நீர்வை பொன்னையன் அவர்கள் தான் எழுதி வெளியிட்ட புத்தகத்தில் 1963ல் நடந்த மாநாடு தென்னிலங்கைத் தோழர்களின் வரவு அவர்களின் மனம் நோகாமல் தங்க வைத்தது பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் எழுதியிருந்தார். தங்கள் புகழுக்காக வரலாற்றை மறைப்பதும், திரிபுபடுத்துவதும், தங்களை முதன்மைப்படுத்தவுமே நூல்கள் வெளியிடுகிறார்களா? கண் கண்ட காது கேட்ட பின் தோழருடன் விவாதித்த விடயங்கள் பல பசுமையாக மனதில் ஓட இன்றும் நானிங்கு உயிருடன் ......

மாதங்கள் ஓடி 1963 ஆகஸ்ட் மாதத்தில் நான் எனது மகள் பபி வயிற்றில் இருப்பதை அறிந்தேன்.

தொடர்வேன்......

14

கட்சிப் பிளவும் ஒக்டோபர் எழுச்சியும்

காரைநகரில் வாழ்ந்தது 5 ஆண்டுகள் மாத்திரமே. அந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று குழந்தைகளும் பிறந்து விட்டனர். இராசன் மானிப்பாய் கிறீன் மெமோறியல் ஆஸ்பத்திரியிலும், பபியும், கீர்த்தியும் மூளாய் கூட்டுறவு வைத்திய சாலையிலும் பிறந்தனர். முதல் இரண்டு குழந்தைகளுக்கும் கை உதவியாக வந்திருந்த அம்மா, கடைசிக் குழந்தைக்கு வரவும் இல்லை. பார்க்கவும் இல்லை. ஏனெனில், “இரண்டு குழந்தைகளுடன் ஆளனி இல்லாமல் அல்லாடி அலைகிற உனக்கு மூன்றாவது குழந்தை தேவை தானா?” என்ற ஆத்திரம் எனது பெற்றாருக்கு. “ஏதோ மேகம் போட்டதோ பூமி தாங்கினதோ...” என்று பழமொழி சொல்வர்களே அது போல மகள் பபியை டாக்டர் குமாரசாமியும், நர்ஸ் நாகம்மா அக்காவும் பிறப்பித்தார்கள்.

அது போல சின்ன மகன் கீர்த்தியை டாக்டர் திரு. கங்காதரனும், நர்ஸ் சகுந்தலாவும் பிறப்பித்தார்கள். மேற்படி இரண்டு பிரசவத்திற்கும் தவமக்கா தனது ஒப்பிறேசன் தியேட்டர் வேலை இல்லாத நேரத்தில் மேலதிக உதவிகள் வந்து நின்று செய்வா. அந்த நன்றியை அவ மறையும் வரை நானும், எனது மகளும் மறக்கவில்லை. இறுதிவரை அவவுடன் எமது உறவு தொடர்ந்தது. தவமக்காவின் மறைவுச் செய்தி கேட்ட என் மகள் உடுவில் வரை சென்று இறுதி மரியாதை செலுத்தி விட்டு வந்தாவாம். ஒருவர் செய்த உதவியை நாம் ஒரு போதும் மறக்க மாட்டோம்.

1964 ஆம் ஆண்டில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு கூறாகப் பிளவடைந்தது. இப்பிளவினை அடுத்து, நா. சண்முகதாசன் தலைமையில் மாக்சியம் லெனிசியம், மற்றும் மாவோசேதுங் சிந்தனையில் உருவான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) உடன் தோழர் தன்னை இணைத்துக் கொண்டார். இடையில் 1963ல் வாலிபர் அமைப்பு மற்றும் கட்சிப் பிரதிநிதியாக மக்கள் சீனக் குடியரசுக்கு ஒரு மாதம் 1963 ஜூன் 18 முதல் 1963 ஜூலை 20 வரை சென்றார். அந்தக் காலப் பகுதியில் தான் இன்றைய கட்சித் தலைமைத் தோழர் செந்தில்வேல் கட்சியில் இணைந்து கொண்டார்.

கீர்த்தி வயிற்றில் இருக்கும் வரை மம்மி வீட்டில் தான் இருந்தோம். அந்த வீடு பேத்தி ரஞ்சிக்கு சீதணம் என்றும், ரஞ்சியின் கணவன் அல்பிரட் வேலை மாறி ஊரொடு வருகிறார் என்றும், உடனடியாக வீடு தேவை என்றும் நெருக்கினார்கள். ஒன்பது மாதங்கள் முடிந்து விட்டன. மிகுதி ஒரு வாரத்துள் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஏதோ தெய்வசெயலாக எனது மாணவி அன்னலட்சுமி (பேபி) மூலமாக அவர்களின் சிறிய தாய் ஒருவர் கொழும்பில் ரீச்சராக இருப்பதாவும், அவர்களின் வீடு ஒன்று அதே மருதடி விநாயகர் கோவில் ஒழுங்கையில் இருக்கிறதென்றும், தாங்கள் அவர்களிடம் கேட்டு வாடகைக்கு வாங்கித் தருவதாவும் சொன்னார்கள். அதன்படி அந்த ஏப்ரல் மாதத்தில் வீடு மாறி வந்து விட்டோம். வீடு மாறி, சாமான்கள் ஒதுக்கி ஓய்வின்றி வேலை செய்ததில் வீடு மாறிய அன்றிரவு எனக்கு தாங்க முடியாத நாரிப்பிடிப்பு வருத்தம் வந்து விட்டது. மறுநாட் காலை மூளாய் ஆஸ்பத்திரிக்கு போய் மூன்று நாட்கள் தங்கி ஊசி வைத்தியம் செய்வித்து வீடு திரும்பினோம். அதற்கிடையில், மகள் தமையனின் கையை பிடித்துக் கொண்டு வளவில் விளையாடும் போது கண்ணாடி உடைந்த துண்டு பின் பக்கமாக குத்தி இரத்தம் ஒழுகும் நிலையில் நான் பதறி அழுதேன். பாவம்.... குழந்தைஅண்ணாக்கு அடிக்க வேணாம். நான் தான் நான் தான்என்று அழுகிறா இவை எல்லாவற்றையும் தாண்டி அந்த வீட்டில் ஏப்ரல் தொடக்கம் ஒக்டோபர் வரை இருந்தோம்.

கற்பகம் என்ற பெயருள்ள சடையாளியைச் சேர்ந்த ஒரு தாய் தான்..... அதுவும் தனது வீட்டு வேலைகள் முடித்து 9 மணிக்கு வந்து ஒரு மணிக்குப் போய் விடுவா. அவவுக்கும் பள்ளிக்குப் போகிற பிள்ளைகள் இருந்தார்கள். அவவின் மகள் பாக்கியம் பெயர். அந்த அறிமுகத்தில் எமக்காக ஒரு மாதம் ஒத்தாசையாக இருந்தா. இன்று அவரின் பூட்டப் பிள்ளைகள் இடம்பெயர்ந்து சத்தியமனைக்கு அண்மையில் வந்து எம்மிடம் சேர்ந்துள்ளார்கள்.


இத்தனை இடைஞ்சல்களின் மத்தியில் , பல கோயில்களுக்குள் செல்ல முடியாது, பல பாடசாலைகளில் படிக்க முடியாது, பொது உணவகங்களில் உணவு உண்ண முடியாது, பொதுக் கிணற்றையோ, குளத்தையோ பயன்படுத்த முடியாது என பல விதங்களில் தீண்டாமை வெளிப்பட்டது. தீண்டாமை சாதியத்தின் கோர வெளிப்பாடாக இருந்தது. கட்சியின் வேலைகள் என்றால், அவருக்கு வீடு,மனைவி, மக்கள் மறந்து விடும்.

1966 ஒக்டோபர் 21 எழுச்சி.

காலையில் வீடு விட்டுப் போனவர் இரவு 12-00 மணியாகியும் வீடு திரும்பவில்லை. நானும், மூன்று பச்சைக் குழந்தைகளும் தவித்து இருந்தோம். அது தான் அவவுக்கு நிம்மதியான நித்திரை. இராசன் பாவம்.... தங்கையின் கையைப் பிடித்தபடி..... தூங்கிப்போனார். எனக்கோ.... என்னில் வெறுப்பாக இருந்தது. என்னைப் போன்ற ரீச்சர்மாருக்கு ஒவ்வொருவருக்கும் ஆறு, ஏழு குழந்தைகள்.… பெற்றார், மாமன் மாமி, சகோதரங்கள், இன சனம் என்ற ஒரு பெரிய சொந்த பந்தங்களோடு வாழ்ந்தார்கள். எத்தனை பிள்ளைகளைப் பெற்றாலும் சுக துக்கங்களைப் பகிர உறவுகள் சூழ
வாழ்ந்தார்கள்.

சாதியின் திமிர்தனத்தால் தந்தையின் மரணத்தை மறைத்தது மட்டுமல்ல சுப்பிரமணியம் என்ற குழந்தையின் தந்தை அம்பலப்பிள்ளை என்பதையே நினைவு மலரில் மறைத்த குடும்பத்தில் இருந்து இளைய சகோதரன் இலங்கைநாயகம் சைக்கிளில் வந்தார். உடம்பு முழுவதும் வியர்வையால் நனைந்த சேர்ட். குடிக்கத் தண்ணீர் கேட்டு வாங்கிக் குடித்த பின்
கூறினார். தான் விவேகானந்தா அச்சக வேலை முடிந்து வீடு போகும் வழியில்சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி உயரட்டும்என்ற கோஷத்துடன் சுன்னாகத்தில் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடப்பதாக.

எழுச்சியான அந்த தினம் என்னால் மறக்கவே முடியாத நாட்களில் ஒன்றாகிப்போனது. இரவு நெடுநேரமாகியும் தந்தையைக் காணாது காரைநகரில் உள்ள வாடகைவீட்டில் குழந்தைகள் மூன்றும் கத்தி அட்டகாசம் பண்ண - சாதி மறுப்பு மணம் புரிந்ததால் சொந்தமும் இல்லாது, உதவிக்கும் யாருமில்லாது பயத்துடனே கூறினார்களாம்ஊர்வலம் போனவர்களை கைவிலங்கு மாட்டி அடைத்து வைத்திருக்கிறோம் நாளை காலை இன்ஸ்பெக்டர் வந்த பின் தான் விசாரித்து, வழக்குப் பதிந்து விடுவார்கள்... போல...” என்றார். சகோதர பாசமல்லவா கேள்விப்பட்ட பின் வீட்டிற்குப் போக மனம் வராமல் சுன்னாகம் எங்கே....? காரைநகர் எங்கே.....? அந்த 9 பாலங்களும் எதிர்க்காற்றில்...சைக்கில் ஓடி
வருவதென்றால் சாதாரண காரியமா? (இலங்கைநாயகம் அவர்கள் அண்ணரின் அரசியல் சார்பற்ற ரஷ்ய கம்யூனிஸ்ட் பீற்றர்கெனமன் கட்சியைச் சார்ந்தவர்.) “சின்னண்ணாவை சுண்ணாகம் பொலீஸ் பிடித்து நல்லாய் அடிச்சு மறியலில் வைத்திருக்கினமாம். நாளைக்கு காலமை போய்ப்பார்த்திட்டு வந்து சொல்லுறன்எண்டார். நான் கத்தி அழ, என்னோடை சேர்ந்து குழந்தைகளும் அழ, அவரும் அழுதார். அடுத்த நாள் பாட்டில் பொல்லுகளின் அடியின் வீரியம்
உடம்பு முழுதும் திரணையாக வீங்கி வெதும்பி வந்தார் தோழர். தோழரின் வரவிற்காய் கைவிளக்குடன் நெடுநேரம் காத்திருந்தேன்.

கத்தரி கொண்டு உடுப்புளை அகற்றினேன். குழந்தைகளின் சித்தப்பா இலங்கைநாயகம் அவர்கள், எமக்கு கூறிய விபரத்துக்கு மேலதிகமாக உடம்பு முழுவதும் கொழுக்கட்டை போன்ற வீக்கத்துடன் கூடிய பல அடையாளங்களுடன் இரண்டு கைகள் தோள்மூட்டிலிருந்து முழங்கை வரை, முதுகுப்புறம் தடியடி கண்டல் அடையாளங்கள் சகிதம் பகல் ஒரு மணியளவில் தோழர் வீடு வந்தார். குழந்தைகள் அழுவார்களென்று சிரித்து மழுப்பிக் கதைத்தார். “சின்னையா வீடு வந்துவிட்டார்என்ற செய்தியைக் கேட்டவுடன் பேபியின் அம்மா, எங்கள் வீட்டிற்கு வந்து விட்டா. உறவு முறைக்கப்பால் பழகிய அன்பின் நிமித்தம்தம்பீஎன்ற உரிமையுடன் தான் அவ அழைப்பா. இவரும் சொல்லுவார், “தனது அக்கா தான்..... இங்கு காரைநகரிலும் வாழும் திருமதி தருமலிங்கம்என்று. அந்த அம்மா மிகுந்த இரக்க மனம் கொண்டவ. உடனே தனது வீட்டை போய் நோவெண்ணெய் தயாரித்து எடுத்து வந்தா. அவர்கள் வீட்டில் செக்கு வைத்து ....எள்ளில் இருந்து எண்ணெய் வடிப்பார்கள். விக்காவில் என்ற குறிச்சியில் இருந்து ஒரு பெரியவர் தினமும் வந்து அவர்கள் வீட்டில் அந்த வேலையைச் செய்வார்.

அந்த அம்மா வீடு சென்று சிறிது நேரத்தில் நோவெண்ணெய்யும், எங்களுக்கு உணவும் எடுத்து வந்தா. தானே தனது கையால் அவருக்கு பூசி விட்டா. இயற்கையாகவே கூச்ச சுபாவமுள்ள அவர், தானேபூசுகிறேன்என்று தடுத்தும் அவ விடவில்லை. “தன்ரை கையாலை பூசினால் அது தற்செய்யாது. நான் தான் பூசி விடுவேன்என்று பிடிவாதமாக 3 நாட்கள் வந்து எண்ணெய் பூசியது மாத்திரமல்ல; பருத்தி, முத்தாமணக்கு, நொச்சி, பாவட்டை, இலுப்பை , வேம்பு முதலிய குழைகளைச் சேகரித்து எமது வீட்டில் அவற்றை அவித்து காலையில் அவரைக் குளிக்க ஊக்கப் படுத்தியும், என்னை அந்தக் குழைகளை அவருடைய உடம்பில் தேய்த்து விடும்படியும் கட்டாயப் படுத்தினா.

அந்த அம்மா இறந்த பின்னரும், அன்னாரது மகள் பேபி குடும்பத்துடன் இற்றை வரை தொடர்புடன் தான் இருக்கிறேன்.

எந்த ஊருக்கு மாற்றலாகிச் சென்றாலும், அந்தந்த ஊரில் வாழும் தாய்க்குலம் ஓடி வந்து எமக்கு உதவி செய்பவர்களாக வந்து வாய்த்தது எமது பாக்கியமே! அவ் ஊர்வலத்தில் ஆர்.கே.சூடாமணி, கே . .சுப்பிரமணியம், வி . .கந்தசாமி, எஸ்.ரி.என். நாகரத்தினம், Dr சு.வே. சீனிவாசகம், கே. டானியல் என பலரும் கலந்து காயப்பட்டனர். அந்த நாட்கள் இன்று நடந்தது போல இருக்கிறது. அதை ஒட்டிய கனவுகள் இன்று வரையும் என்னை இரவில் பயமுறுத்துகின்றன. அப்படி....! நான் பட்ட துன்பமும், துயரமும் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது.

இன்று அக் காயங்களின் வலிகள் தந்த வெற்றி பல சவால்களை முறியடித்து தலை நிமிர்வை உருவாக்கியிருக்கிறது. ஐயோ! இப்படிப் பல பல..... அன்றைய நாட்களில் சில பொழுதுகள் வலியைத் தந்திருந்தாலும் சொல்லாலும், செயலாலும் கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதனுடன் நானும் சேர்ந்து நடந்தேன் என்பதே இன்றைய என் வாழ்வின் நீட்சி!

ஒக்டோபர் எழுச்சியின் வீரியங்களையும், அன்றைய இன்றைய வாழ்வோட்டங்களில் அதன் தாக்கு திறனையும், இன்றும் பிரயோகிக்கும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்! சாதீய ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டமும், தோழர் எஸ்.டி பண்டாரநாயக்கா பற்றியும், அந்தப் போராட்டத்தை வெற்றி கொண்டமை பற்றியும் பின்னர் விபரமாக
எழுதுவேன்.

15

எனது ஆசிரியர் பணிக்கு ஆபத்து

1966 அக்டோபர் மாதக் கடைசியில் இந்த எழுச்சியின் திகைப்பில் இருந்து மீள முதல் காரைநகரிலிருந்து பண்ணாகம் வடக்கு, பண்டத்தெருப்பு, பனிப்புலம் என்ற கிராமத்துக்கு மாற்றல் கிடைத்தது. அழகான அமைதியான கிராமம். நிலையத்திற்கு அருகில் ஒரு வீடும், வாடகைக்கு எடுக்கக் கூடியதாகக் கிடைத்தது. அது திருமதி. தங்கம்மாவினுடையது. அவவின் தமக்கையார் தான் எங்கள் அனைவரினது அன்புக்குப் பாத்திரமான பெரியம்மா என சகலரும் அழைக்கும் திருமதி பாக்கியம் பொன்னையா ஆவார். அவவுக்கு அதற்கு முதல் வருடம், அவவின் இளையமகள் தேவி கிணற்றுள் தவறுதலாக விழுந்து இறந்து போனாவாம். அந்தக் கதையைச் சொல்லிச் சொல்லி எங்கள் குழந்தைகளை கிணற்றடிக்குப் போகவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளும் படி கூறுவா.

கொப்பிக் கணக்கு வைத்து சாமான்கள் வாங்க நரையர் கடையையும் எமக்கு அறிமுகப் படுத்தியதோடு, பால் வாங்க இன்னுமொரு அம்மாவையும் அறிமுகப்படுத்தி வைத்தா. எனக்குத் தெரியாத சமையல் (மாமிச) நுட்பங்களையும் அவ தான் காட்டித் தந்தார். தோசை, இட்லி செய்வதற்கு எவ்வளவு உழுந்து, அவ்வளவுக்கு அரிசி என்ற பிரமாணங்களையும் அவவிடமே கற்றுக் கொண்டேன். அவ தன் மகள் இராசாத்தியுடன் சேர்ந்து பிரதோஷ விரதம் அனுஷ்டிப்பா. மாலை நேரம் விளக்கு வைத்த பின்னர் தான் உணவு உண்பார்கள். சுத்த சைவ உணவுகளுடன் வடை, பாயாசம், மோதகம் போன்ற விசேட பதார்த்தங்களும் செய்து படைப்பார்கள். எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு விசேடமான வரவேற்பும், பரிமாறுதலும் நிகழும். அயலின் ஆதரவும் என் வீட்டாரின் வருகையும் ஆறுதலாக இருந்தது.

1967
இல் அல்பேனியாவில் நடைபெற்ற வாலிபர் அமைப்பு மாநாட்டில் இலங்கை கம்யூனிஸ்ட் வாலிபர் சங்கப் பிரதிநிதியாக தோழர் மணியம் அவர்கள் கலந்து கொண்டார். தோழர் ரோகண விஜயவீராவும் இம்மாநாட்டில் கலந்து கொண்டார். திரும்பி வந்த போது வழமை போல் எதுவுமே வாங்காது வந்தார். ஊர்பெட்டிக் கடையில் இனிப்புகள் வாங்கி குழந்தைகளுக்கு பகிர்ந்தளித்தோம். அது பெரியம்மாவிற்கு ஆச்சரியமும் கவலையும்.

நாங்கள் அங்கே இருந்த காலத்தில் தான், அந்தக் கிராமத்து அம்பாள் ஆலய புனருத்தாரணத் திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்த ஒரு ஆண்டு கோவில் தீர்த்தக் கிணற்றில் குடிதண்ணீர் வாங்கிப் பருக முடியும். இல்லாவிடில் பறாளாய் வயற்கிணற்றிலோ அல்லது தபாற் கந்தோர் வளவிலோ தான் போய் பெற்று வந்து பருக முடியும். சில நாட்களில் வெற்றி மடத்துக் கிணற்றிலும் குடிதண்ணீர் பெறமுடியும். காரைநகரில் இருந்த காலத்தில் ஒரு குடம் குடி தண்ணீர் ஒரு ரூபாவுக்கு ஒரு பெண்மணி கொண்டு வந்து தருவார்.


அந்தக் காலத்தில் சங்கக் கடைகளில் கூப்பனுக்கு சாமான்கள் பெற்றுக் கொள்ளுகிற ஒரு வசதி இருந்தது. அந்த வசதி 1970ம் ஆண்டளவில் ரூபா 300/= சம்பளம் எடுப்பவர்களுக்கு நிறுத்தப்பட்டது. கூப்பன் முறை நடைமுறையில் இருந்த காலத்தில் மூன்று சுண்டு இலவசம், மூன்று சுண்டு காசுக்கு என்ற வழங்கு முறை இருந்தது. எங்களுக்கு அந்த இலவச அரிசியே வாரம் முழுமைக்கும் போதுமானதாக இருந்தது.

வீட்டு வாடகை, கொப்பிக் கணக்கு, பால் காசு, குழந்தைகளின் வைத்தியச் செலவு என்று கையுங் கணக்கும் சரியாகவே இருந்தது. பெரியம்மா சொல்லுவாஒரு சம்பளத்தை எடுத்து எத்தினைக்கென்று பங்கிடுவதுஎன்று. வயலில் நெல்லு விளைந்து வந்தால் சோற்றுத் தேவை பூர்த்தியாகி மிகுதியை விற்பார்கள்.சிறு தானிய விளைச்சல் காலை, மாலை உணவை நிறைவு செய்யும். விளையும் மரக்கறிகள் வீட்டுத் தேவை போக, மிகுதியை விற்று மீன், முதலிய கறித்தேவையை சரிக்கட்டுவார்கள். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் மாதச்சம்பளம் பெறுபவராக இருந்தால், அந்தக் காசை அப்படியே சீட்டுக்கட்டி நிலம் வாங்குவது நகை வாங்குவது போன்ற சேமிப்புக் காரியத்தைச் செய்வார்கள். எனது வாழ்க்கையைப் பார்த்து அவர்களுக்குஅடி ஊற்று இல்லாக் கிணறு. அள்ள அள்ள வற்றும்என்றும், “பிள்ளை குட்டிக்காரி நாளைக்கு ஒரு நோய், நொடி என்று வந்தால் ரீச்சர் என்ன செய்வாவோ?” என்று என் மீதுள்ள அன்பில்
அக்கறைப் படுவார்கள். பால் தருகிற அம்மா கேட்பாதான் ஒரு சீட்டு முதலாளி என்றும், மாதத்தில் நூறு ரூபாவாவது மிச்சம் பிடித்து சீட்டுக் கட்டினால், ஒரு வருசத்தில் ஆயிரத்து இருநூறு ரூபா கையிலே மிஞ்சுமேஎன்றும் சொல்லுவார்கள். எங்கள் குடும்பத்தின் பொருளாதார அந்தரங்கத்தை அவர்களுக்குச் சொல்ல முடியுமா?
ரீச்சரின் கணவன் வருவாயற்ற முழுநேர ஊழியர்என்றா அவர்களுக்குச் சொல்ல முடியும்....?

அவர்கள் கேட்டசேமிப்பு சீட்டுஎன்ற காரியங்கள் என் சீவியத்தில் ஒரு காலமும் நடைபெறவில்லை. அதனால் தான்
எனக்கு சிங்கள மொழிப் பரீட்சைக்குத் தோற்றாத குற்றத்துக்கு வேலை நிற்பாட்டு அறிவித்தல் வந்ததும் அழுதேன். எனக்கு இன்னொரு பக்க வருவாய் இருந்தால் நான் மனம் கலங்காதுருப்பேன். அதை எப்படிக் கடந்தேன் என்பது பற்றியும் அச்சமயத்தில் நான் சந்தித்த என் தம்பியைப் போன்ற இரு ஆளுமைகள் பற்றியும் தொடர்வேன்....

16

சிங்கள மொழிப் பரீட்சையில் தேர்ச்சி

எனக்கு சிங்கள மொழிப் பரீட்சைக்குத் தோற்றாத குற்றத்துக்கு வேலை நிற்பாட்டு அறிவித்தல் வந்ததும் அழுதேன். அவர் முழு நேர ஊழியர். அத்துடன் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்வு.மூன்று குழந்தைகள் வேறு. இரு வீட்டாரின் உதவியும் இல்லை. படித்து சித்தி பெற்று, வேலையை நீடிக்க வேண்டிய கட்டாயம். மத்தியான சுடு வெய்யிலில் நடந்து காலையடி எங்கே சுளிபுரம் மத்தி வள்ளியம்மன் கோவிலடி எங்கே இப்போ நினைக்க தலை சுற்றுகிறது. நானா அவ்வளவு தூரம் நடந்து வந்து அதுவும் உச்சி வெய்யிலில்?

காரைநகரில் இருந்து ஊர் மாறி ஒரு வருடமே. ஊரும் அதிகம் பழக்கமாகவில்லை. அருகிலிருந்த பெரியம்மாவும், இராசாத்தியும் தான் துணையாக இருந்தார்கள். 1968 ஆண்டுகளில் எங்கே போவது யாரிடம் கேட்பது? ‘கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோன்ற ஒரு தேடலுடன் இருந்தேன். வேலையில் இருந்தால் தான் வீட்டுவாடகை, கொப்பிக்கணக்குகாசு கொடுக்க முடியும்!
வேலை இல்லையேல் சம்பளம் இல்லை வசிப்பதற்கு வீடும் இல்லை. குழந்தைகள் மூவருக்கும் எப்படி சாப்பாடு கொடுத்துப் பாதுகாப்பேன்? அப்படி இருந்தும் சிங்கள அரிச்சுவடி என்ற புத்தகத்தைக் கடையில் வாங்கி எழுத, வாசிக்க முயற்சி செய்தேன். “குரு இல்லா வித்தை பாழ்என்ற முதுமொழி ஒன்று உண்டல்லவா? அது எவ்வளவு உண்மை! எழுத்துக்களின் வரிவடிவம் அழகாக இருந்தது. அவற்றை வலப்பக்கமோ அன்றி இடப்பக்கமோ சுழற்றி எழுதுவது என்று கூடத் தெரியாது. அந்த தேடல் நாட்களில் எனது தாயார், டாக்டர் திரு. தம்பையா அவர்களின் வீட்டிற்குச் சென்ற வேளையில் அவர்களின் வீட்டு வெளி விறாந்தையில் டாக்டர் அவர்கள், வகுப்பு நடத்திக் கொண்டிருப்பதையும், பல மாணவர்கள் படித்துக் கொண்டிருப்பதையும் கண்டிருக்கிறார். அந்த விபரத்தை எனக்குக் கூறினார். கடவுளேதேடிய பூண்டு காலுக்குள் தடக்குப் பட்டதுஎன்பார்களே அது போல எனக்கு முக்கால் மணித்தியால நடை தூரத்தில் தான் அதாவது சுளிபுரம் நடுக்குறிச்சி வள்ளியம்மன் கோவிலடிக்குப் பக்கத்தில் தான். அது நான் பிறந்த வீட்டிற்கு கொஞ்சம் அருகில். ‘டாக்டரின் வீடுஎன்ற குறிப்பும் சொன்னார். அத்துடன், அம்மா சோதிட ஞானத்தில் கை தேர்ந்தவர். “இப்போ
வளர் பிறை. கனத்த நாளும் இல்லை. அட்டமி நவமி தொடங்க இன்னும் இரண்டு நாள் கிடக்கு. நீ நாளைக்கே படிக்கப் போய்விடுஎன்று கூறினார். அதன்படி நானும் போய்ச் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன்.

(என் வாடகை வீட்டில் இருந்து இருமடங்கு தொலைவு) Dr. தம்பையா அவர்களிடம் மொழி படிக்க வேண்டும். அந்தப் பெரியார், திருக்குறளைச் சிங்களத்தில் மொழி பெயர்த்த அறிஞராவார். மிக அன்பாக என்னை நடத்தினார். எனக்கான நேரங்களை மாற்றியமைத்து உதவினார். அத்துடன் எனது கைத்தொழில் இலாகா, யாழ் மாவட்ட அத்தியட்சகர் அவர்களிடமிருந்து வேலை நாட்களில் தினமும் 1.30-4.30 வரை 3 மணித்தியாலம் கடமைலீவு உத்தரவுக் கடிதமும் பெற்று வைத்திருந்தேன். யாராவது எனது மேலதிகாரிகள் திடீரென நிலையப் பரிசோதனை செய்ய வந்தால், அந்தக் கடிதம் எனக்கொரு பாதுகாப்பாகவும் இருக்கும். அப்படி இருந்தும் அவ்வூரில் வாழ்ந்த ஒரு பெரிய மனிதன்...! “பொறுப்பதிகாரி நிலையத்தில் இருப்பதில்லை. யாரையோ சந்திக்கத் தினமும் பிற்பகலில் போய் விடுகிறா. அதனை
உடனடியாக விசாரிக்கவும்என்றுபெட்டிசம்எனப்படும் கடிதமொன்றை எனது இலாகா அதிபருக்கு அனுப்பி இருக்கிறார்.பிறகு, ஒரு நாள் அத்தியட்சகர் அவர்கள் என்னைக் கண்ட போது இந்த மொட்டைக் கடிதத்தைப் பற்றிக் கூறிச் சிரித்தார். “இப்படிப் பொறாமை, வஞ்சனை உள்ளவர்கள் வாழுகிற கிராமத்திலே வேலை பார்க்கிற பெண்கள் பாவங்கள் தான்என்று இரக்கப்பட்டார். நிற்க,

சிங்களம் படிக்கிற வகுப்பில், என்னைத் தவிர மற்றையவர்கள் உயர்தர பரீட்சையை முடித்தவர்கள். அவர்களுக்கு காலை நேரத்தில் தான் வகுப்பு நடக்கும். எனது நேரமோ பிற்பகலில் அத்துடன் அவர்கள் படிக்க ஆரம்பித்து 6 மாதங்கள் முடிவடைந்த, அறிவு முதிர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். அங்கு தான் என்னை சொந்த அக்கா போல நேசித்து பழகிய சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி), தம்பிப்பிள்ளை சந்ததியாரை சந்தித்தேன். அவர்களுள் செல்வி பவானி வைத்திலிங்கம் என்பவர் மிகத் திறமைசாலியாக விளங்கினார். டாக்டர் தம்பையா அவர்கள், தனது சொந்த அலுவல்கள்
நிமித்தம் வெளியே போனால்..... அந்த நாட்களில் நான் பவானி வீட்டிற்கே சென்று படிப்பேன். அவவின் திறமைக்கு ஒரு சின்ன உதாரணம் :-- ஹித்துணா - நினைத்தது. ஹித்த - இதயம் உணா - இருந்தது இதயத்தில் இருந்தது தான் நினைத்தான் என்பதுஎன்று பதம் பிரித்து அர்த்தம் சொல்லி விளங்கப் படுத்துவா.

மற்றவர்களைப் போல எனக்கும் புத்தகம் தடங்கலின்றி வாசிக்கத் தொடங்கியதும்.... எனக்காக வகுப்பைப் பிற்பகல் நேரத்திற்கு மாற்றினர். பவானியுடன் வகுப்பில் படித்தவர்கள் செல்வி குகபூசணி கந்தையா, செல்வி நற்குணலட்சுமி, (பலரின் பெயர்கள் மறந்து போச்சுது) செல்வன் சின்னத்துரை குருக்கள் பிறைசூடிக்குரு, சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்), தம்பிப்பிள்ளை சந்ததியார் (பிந்திய இருவரும் தான் பிற்காலத்தில் எங்கள் வீட்டிற்கு வரத்தொடங்கி, தோழருடன் அரசியல் கலந்துரையாடல்களில் ஈடுபடும் அளவிற்கு உறவை வளர்த்துக் கொண்டனர். இன்று அவர்கள் உயிருடன் இல்லை) இப்படியே ஆறு மாதங்கள் டாக்டரிடம் படித்ததனால், அரச கரும மொழித் திணைக்களம் நடாத்திய 3 ம் வகுப்பு எழுத்துப் பரீட்சை, வாய்மொழிப் பரீட்சை இரண்டுடன் கல்வி இலாகா நடாத்திய S.S.C பரீட்சைக்கு விருப்பத்திற்குரிய ஒரு பாடமாகவும் எழுதிச் சித்தி பெற்றேன். எனது தொழிலையும் தற்காத்து இன்று ஓய்வூதிய தகுதியுடன் இருக்கிறேன். என்றால் அதற்கு டாக்டர் தம்பையா அவர்களின் வழிகாட்டலும், பவானியின் ஒத்துழைப்பும் இன்றியமையாதனவாகும். அத்துடன் வீட்டில் எனது மூன்று குழந்தைகளையும் தன் மடியில் இருத்திப் பராமரித்த பக்கத்து வீட்டுப்பிள்ளை இராசாத்திக்கும், நான் என்றென்றும் கடமைப்பட்டவளாக இருக்கிறேன்.

வீட்டிற்குப் போய் வேலைகளைச் செய்திருக்கலாம். இப்போ தள்ளுவண்டியுடனும், உணர்வற்ற கால்களுடனும் வாழும் நானா எனது 31 வயதில் மொழி படிக்கும் மாணவியாக இருந்தேன்.! நினைக்க.... நினைக்க எனக்கு வியப்பாக இருக்கிறது. நான் முன்னர் அதாவது இல. 15ல் குறிப்பிட்டு இருந்தேன். அதாவது எனது 1966—-1970 வரையிலான இடர் சூழ்ந்த அந்த 5 வருடங்கள். அந்த துன்ப , துயரங்களைக் கடந்து கணவனின் தலைமறைவு வாழ்வு.! தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தின் பாதிப்பை விட மிக அதிக பாதிப்பை எதிர்கொண்டேன். அது பற்றி முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். அதனால் விபரிக்காது 1969 மேதின நாளின் பின்னான என் வாழ்வில் ஜே.வி.பி காலம் தலைமறைவு வாழ்வு, வேலையின் இடைஞ்சல்கள், வாடகை வீடற்ற வாழ்வு... இவை குறித்து தொடர்வேன்.....

17

மே தின தடை மீறலும் பொலிஸ் தாக்குதலும்

நாங்கள் காலையடி, பண்டத்தெருப்புக் கிராமத்தில் வாழ்ந்த 1966-1971 ஆகிய ஐந்து வருட காலத்தில் தான் பொதுவுடமை கட்சி ( இடது ) தனது செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற காலமாகும். தோழர் மணியம் அவர்கள் 1967 சோஷலிச நாடுகளான சீனாவுக்கும், அல்பேனியாவுக்கும் வாலிபர் மாநாட்டுப் பிரதிநிதியாகச் சென்று
வந்ததும், 1969 ‘மேதின ஊர்வலத்தில் பங்கு கொண்டு தாக்குதலுக்கு ஆளானதும், சங்கானையிலுள்ள நிச்சாமம், மடுவில், கன்பொல்லை என கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதும், தென்னிலங்கையில் இருந்து புத்த பிக்கு தொடக்கம்,கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. பண்டாரநாயக்க வரை வந்து பார்வையிட்டதும், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசமும் ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்ற காலம்.

தோழர் மணியம் அவர்களுடன் சில சிங்கள தோழர்கள் மக்கள் சீனத்திலும், ஐரோப்பிய அல்போனிய நாட்டிலும் நடை பெறும் வாலிபர் மாநாடுகளில் பங்கு பற்றுவதற்காக அழைக்கப்பட்டனர். அல்போனியாவில் நடைபெற்ற மகாநாட்டில் ஜே.வி.பி.ரோகண விஜயவீராவும் கலந்துகொண்டார் எனச் சொன்னார். அங்கு, இவர்களைப் போலவே பல நாட்டு முற்போக்கு வாலிப இயக்கத் தோழர்களும் சமூகமளித்திருந்தனராம். எழுச்சி மிகு வாலிப மாநாட்டு உரைகளும், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களும் தங்களைப் புதுமையான வழியில் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்திருந்தனவாம். ஒவ்வொரு தன்னலமற்ற தோழர்களின் செயற்பாடுகள் எப்படி மக்களைச் சென்றடைகின்றன என்பது பற்றிச் சிந்திக்க வைத்ததாக அமைந்திருந்தன எனக் கூறினார். பல படங்கள் இருந்தன. ஒன்றுடன் ஒன்று ஒட்டிய நீண்ட படங்கள் முழு மகாநாட்டையும் அடக்கியதான படங்கள் இருந்தன. புலப் பெயர்வு பலதை இழக்கப் பண்ணிவிட்டது.

இதன் பின்னரே 1969 மேதின ஊர்வலம். அந்த ஆண்டு மே மாதம் முதலாம் தேதியிலன்றுவெசாக்தினம் வருவதால் வெசாக்தினம் வருவதால் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப் பட்டதாம். பொதுவுடமைக் கட்சி வாலிபர் இயக்கம், வழமை போலமேதினத்திற்கு ஊர்வலம் , பொதுக் கூட்டம் இரண்டும் கட்டாயம் நடத்துவது என்று மத்திய கமிட்டியில் எடுத்த தீர்மானத்தின்படி அதே தினத்தில் நடாத்துவது என முடிவு செய்திருந்தனர். ஆனாலும் சில தோழர்கள் காவல்நிலையம்
சென்று அனுமதி பற்றிக் கதைத்தனர். இதனால் சில தோழர்கள் கோவம் உற்றனர். தீர்மானம் எடுத்ததாயிற்றுது. அவர்கள் அனுமதிதரப்போவதில்லை. பின் ஏன் செல்லவேண்டும்? என்பது அவர்கள் வாதம். அதன்படி, தோழர் காலையிலேயே வீடு விட்டுப் போய் விட்டார். மாபெரும் மே தினமும் அதன் வெற்றி பற்றியும் தோழரின் வீரம் மிகு மதிநுட்பம் பற்றியும் பலரும் , நானும் நிறைய எழுதி இருப்பதால் அவ்விபரிப்பை தவிர்க்கிறேன். கட்சியின் முடிவுகள் யாவும் தோழர்கள் தங்களுக்கு உள்ளேயே வைத்திருப்பார்கள். அடுத்தவர் காதுக்கு எந்தச் செய்தியும் போக விடமாட்டார்கள். இவற்றின் விபரிப்பை பின் நாட்களில் தோழர் பல தடவைகள் புதிய தோழர்களிடம் பகிரும் போது கேட்டிருக்கிறேன். பின் நாட்களில் ஈழநாடு எஸ். எம். கோபாலரத்தினமும் .ஆர். திருச்செல்வமும் தோழர் மணியம் பற்றியும், இத்தகைய கட்சி நடவடிக்கைகள் பற்றியும் பொது ஆளாக இருந்து உண்மைகளை எழுதினார்கள். நானும் குழந்தைகளும் இரவு 12 மணிவரை காத்திருந்தோம். குழந்தைகள் தூங்கியபின்னும் விடியும்வரை நான் கண் விழித்திருந்தேன். வரவில்லை. அதிலும், மகள் பபி தகப்பனுடன் தான் தூங்குவார். காலையில் எழுந்ததும் முதல் வேலையாகத் தகப்பனைத் தேடி அழுதார். எனக்கோ ஒரு விபரமும் தெரியாத நிலையில் நான் குழந்தையை எப்படித் தேற்றுவேன்? சாதீய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தினால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. வாடகை வீட்டிலும் பயந்து பல கதைகள் சொன்னார்கள். எனது பெற்றோரும் பலத்த சொற்பிரயோகங்களை வீசினர். அவர்களுக்கு ஏழு குழந்தைகள்
சாக வந்த பெண் கஷ்டப்படுகிறாளே என்ற கவலை. இவற்றில் பல தோழருக்கும் தெரியும். இனிமேல் இந்த மாதிரி தாக்குதலுக்கு முகம் கொடுக்கமாட்டார் என பிழையாக நினைத்து விட்டேன். எப்போதும் நானாக அவரிடம் எந்த முறைப்பாடும் செய்ததில்லை. (பின்னாளில் என் மூத்தமகனின் அரசியல் நுழைவு தவிர.)

பகல் 10-30 மணியளவில் தோழர் செ. யோகநாதன் அவர்கள் ஒரு காரில் வந்தார். “உடனே எல்லோரும் புறப்படுங்கள்என்றார். அதன்படி நாமும் தயாரானோம். வாகனம் யாழ் ஆஸ்பத்திரி வளவுக்குள் போகும் வரை நாம் எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல் பிரயாணப்பட்டிருந்தோம். பெரியாஸ்பத்திரி விபத்துக்கள் வார்ட்டில் தோழர் மணியம் அவர்களைக் கண்டேன். இடது கை மாக்கட்டுப் போடப்பட்டு கழுத்துடன் இணைக்கப் பட்டிருந்தது. வலது கை தோள் மூட்டிலிருந்து ஏதோ மஞ்சள் நிறத்தில் பிளாஸ்ரர் போன்ற துணி ஒன்றினால் சுற்றப்பட்டிருந்தது. மொத்தத்தில் இரண்டு
கைகளும் செயற்பட முடியாத நிலையில் இருந்தன. பக்கத்துக் கட்டிலில் மட்டுவில் நடராசா என்ற தோழர் படுத்து இருந்தார். தகப்பனைக் கண்டதும் மகள் பலத்த சத்தத்தில்வீட்டை வாங்கோஎன்று அழுதார். தோழரின் உடம்பில் மகளை முட்ட விடாமல் சுற்றி நின்ற மற்றைய தோழர்கள் பார்த்துக் கொண்டார்கள். அடுத்த நாள் ஏதோ ஒரு சத்திர சிகிச்சை இருப்பதாகவும் அது இடது கை சம்பந்தமானதும் என்று தோழர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
(
இந்த இடத்தைத் தட்டச்சு செய்யும் அதே நேரத்தில் கண்ணீர் வழிந்துஓடுகிறது) ஏதோ பெரியாஸ்பத்திரி டாக்டர்களின் வைத்தியத் திறமையினால் கழற்ற வேண்டிய நிலையில் இருந்த இடது கை அந்தப் பந்துக் கிண்ணத்துள் புகுத்தப்பட்டது. தோழர் . கதிர்காமநாதன் என்பவரை பக்கத்தில் இருந்து பராமரிக்க இயற்கை கழிவு சம்பந்தமான அவசர காரியங்களுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

வைத்திய சாலையில் சில நாட்கள் கழிந்தபின், தோழர் மேதினம் முடிந்த இரு தினங்களில் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்த தோழர். சண்முகதாசன், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பின் தோழர் மணியத்தை விமான மூலம் கொழும்புக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தினார். அவரது மனைவி எனக்கு ஒரு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். தோழர் இறந்து, பரமேஸ் அக்கா இறந்து பின் தோழர் சண்ணும் இறந்துவிட்டார். ஆனால் அக் கடிதம் இன்றும் இருக்கிறது. (பெருமதிப்புக்குரிய தோழர் பொன் கந்தையா அவர்கள் இறந்த பின்னர் அவரது மனைவி பரமேஸ் அக்காவை தோழர் சண் திருமணம் செய்திருந்தார்).

2 மே 1969
23/7
ஸ்கோபீல்ட் ப்ளேஸ்
கொள்ளுப்பிட்டி, கொழும்பு-3.

என் அன்பு மிக்க சகோதரி,

யாழ்ப்பாணத்தில் மே தினத்தன்று நடந்தவற்றை நேற்று இரவு அறிந்து மிகவும் மனம் வருந்தினோம். முக்கியமாக, எமது தோழர் மணியம் காயப்பட்டதை அறிந்து அளவிட முடியாத துயரம் அடைந்தோம்.
எங்களுக்கு இப்படியானால், உங்கள் மனம் எவ்வளவு பாடுபடும் என்பதை நான் அறிவேன். என்ன செய்வது? நாம் இருக்கும் முதலாளித்துவ ஆட்சிக்கு கீழ் போராட்டம் ஒரு இலேசான பாதை அல்ல. நாம் என்ன கஷ்டத்துக்கும், தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் நல்ல மனோதிடத்துடன் இந்த நேரத்தில் இருந்து, மணியத்துக்கும்,

குழந்தைகளுக்கும் ஆறுதல் அளிக்க வேண்டும். முக்கியமாக மணியத்தின் காயங்களை சீக்கரம் குணப்படுத்துவது எமது முதல் வேலையாக இருக்க வேண்டும். அவர் போலீசாரின் கைதியாக இருந்தாலும் கவர்மெண்ட்து ஆஸ்பத்திரியில் இருந்தாலும் அங்கு அவருக்கு சரியான சிகிச்சை செய்யப்படாவிட்டால், அல்லது சீக்கிரத்தில் குணமடையாமல் இருந்தால், நீங்கள் ஆரும் வெளியிலிருந்து நல்ல டாக்டரையும் கொண்டுவந்து காட்டி நல்ல வைத்தியம் செய்ய வேண்டும். அப்படி செய்வதற்கு சட்டத்தில் அனுமதி உண்டு. போலீசாரின் மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம். அவர்கள் சட்டத்துக்கு மீறி சர்வதிகாரம் செலுத்துகிறார்கள். நாம் போராடியே எமது சாதனைகளை அடைய வேண்டும். எப்படியாவது மணியத்துக்கு சிறந்த சிகிச்சை விரைவில் செய்து அவரின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். அதற்கு வேண்டிய பண உதவிகள் அனுப்புவோம். இன்று விடுதலை தினமாகிய படியால் தபால் கந்தோர் மூடி இருக்கிறது. நாளைக்கு தந்தியில் காசு அனுப்புவோம்.

எங்களுக்கு உடனே உங்கே வந்து மணியத்தைப் பார்க்க இருக்கும் அவா அளவு கடந்தது . ஆனால் நாளை காலை ஒன்பது மணிக்கு சண் உக்கு ஒரு வழக்கு. அதுவும் மே தினத்தையொட்டி போலீஸ் வைத்தது. நாளையின்று காலை நானும் இவரும் அல்பேனியாவுக்கு போகிறோம். மாத முடிவில் திரும்பிடுவோம். ஆனபடியால் உங்கே வர
முடியாத நிலையில் இருக்கிறோம். எங்கள் அருமை தோழர் மணியத்திடம், நானும்சண்உம் மிக அன்புடன் விசாரித்ததாக சொல்லுங்கள். மனதை தளரவிடாது மாவோவின் சிந்தனையால் சக்தியை ஊட்டி தைரியமாக இருக்கும்படி சொல்லுங்கள். அவர் சீக்கிரத்தில் பூரண சுகம் அடைய வேண்டும் என்பதே எமது பிரதான வேலை.. உங்கே அளிக்கப்படும் சிகிச்சை சரி இல்லாவிடில், வெளியிலிருந்து நல்ல டாக்டர்களை வருவித்து தாமதிக்காமல் வேண்டியவற்றை செய்யவும். அதற்கு அவர்கள் அனுமதி தர சட்டம் இருக்கிறது. சட்டத்தையும் மீறி மறுத்தால் போராட அஞ்சவேண்டாம். எதற்கும் எமது காரியாலயத்திற்கு தந்தி மூலமோ அல்லது டெலிபோன் மூலமோ தேவையானவற்றுக்கு அறிவியுங்கள். எஸ்.டி பண்டாரநாயக்காவுக்கும் அறிவிக்கலாம். அவர் சீக்கிரம் உங்கே வருவார். பிள்ளைகளை துக்கப்படவிடாமல் சந்தோஷமாக இருக்கப் பண்ணுங்கள். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் நன்மைக்கே. எமது பலம் அதிகரிப்பது கண்டு எமது எதிரிகள் அஞ்சுகிறார்கள். அதனால் அடக்குமுறைகளை அளவுக்கு மீறி கையாளுகிறார்கள்.

வேறு என்ன எழுத? எழுத எழுத எவ்வளவோ எழுதலாம். நேரில் கண்டு கொள்ள இயலாமைக்கு மிகவும் வருந்துகிறோம். தைரியத்தை கைவிட வேண்டாம். புரட்சி வணக்கங்கள்.

பரமேஸ்வரி அக்கா.

தோழர் சண் இவர் மீதும் என் மீதும், குழந்தைகள் மீதும் கொண்டிருந்த அன்பு தோழமையைத் தாண்டியது. பின் நாட்களில் தோழர் மணியமும் தோழர் செந்தில்வேலும் எப்படி ஒருவர் நினைப்பதை மற்றவர் புரிந்து கொள்வாரோ? அந்த உறவு நிலை இவர்களிடம் இருந்தது. வலியால் மிகத் துடித்தார். முதன் முதல் அவருக்கு சில தோழர்கள் சாராயத்தை முட்டையுடன் கொடுக்கும் படி கொண்டு வந்து தந்தனர். நித்திரை வரும் என்றனர். இதற்கிடையில் தோழர் சண் வெளிநாடு சென்றதை பலரும் வந்து விமர்சிக்க ஆரம்பித்தனர். சில வீறாப்பான தோழர்கள்ஊர்வலம் போய் நீ அடி வாங்கு. வெளிநாடு போறேன் என்று போகட்டும்என்று ஆவேசமாகப் பேசினார்கள். இவர்களில் தோழர் .ரி மூர்த்தி, வி. கந்தசாமி, நீர்வை போன்றோர் இவரது நிலையைக் கண்டு மிகக் கோவத்துடன் இருந்தனர். ஆனால் ஒருபோதும் தோழர் மணியம், தோழர் சண்ணை விட்டுக் கொடுத்து பேசியதில்லை. அவர் பக்கத்து நியாயங்களை தானாகவே சொல்லிக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் எனக்கும் கோவம் வந்தது. இங்கேயே மருத்துவம் பார்ப்போம் என்று சொன்னேன். ஆனால் தோழர் போக முடிவு எடுத்தார். வலது கையால் மிக அழகான ஆங்கில தமிழ் எழுத்துக்களை எழுதுவார். என்னை அவரது அழகான கையெழுத்தும் ஈர்த்தது உண்மையே. ஆனால் மற்றைய அனைத்து வேலைகளையும் இடது கைகளாலேயே செய்வார். காவல் படை தாக்கிய போது இடது கையை தனது தலையில் அடிபடாது மறைத்துக் கொண்டாராம். அவரது தோள் பட்டையின் ஒரே இடத்தில் பதின்மூன்று அடிகளும், அடி வயிற்றில் பலமான தாக்குதலும் விழுந்ததாக பின் மருத்துவ அறிக்கையில் (Xray) வந்தது.

இடது கை தோள் மூட்டில் தகரம் பொருத்தப்பட்டும், இடது கை சின்ன விரல் கம்பி கோர்க்கப்பட்டும் இருந்தது. எஸ். டி. பண்டாரநாயக்க அவர்கள் இத்தாக்குதல் பற்றி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள். கால்களை கீழே வைக்க முடியாத , நடக்க முடியாத நிலையில் கதிரையில் வைத்துத் தூக்கி ஏற்றி பின் நடையரின் காரில் பலாலி விமான நிலையம் சென்று விமானம் மூலம் கொழும்பு சென்றார். சிங்கள பாரம்பரிய முறிவு, நெறிவு வைத்தியரிடம் விசேட வைத்தியம் செய்விக்கப்பட்டது.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி 23/7 ஸ்கோஃபீல்ட் ப்ளேஸ், இல்லத்தில் வைத்தியப் பராமரிப்பில் இருந்தாலும் தனது சொந்த வேலைகளாகிய உடை மாற்றுதல், உணவு உண்ணுதல், கழிவுகள் அகற்றி சுத்தம் செய்தல் போன்ற பேருதவிகளை தோழர் ஹன்சூர் அவர்களே செய்தர்கள். “காலத்தினாற் செய்த உதவி... ஞாலத்தின் மாணப் பெரிது”. இப்படியே மாதக்கணக்கில் வைத்தியம் நடக்கையில் ஒரு தடவை விமான மூலம் வந்து திரும்பினார். அவர் இறக்கும் வரை இடது கையை மேலே தூக்க முடியாத நிலையிலும், தான் ஒருசுகதேகிஎன்று காட்டிக் கொண்டு (1969-1989) வாழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும். இந்த தாக்கம் எங்கள் ஏழு வருட தாம்பத்திய வாழ்வையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. இவை எதையும் அவர் யாரிடமும் சொன்னதில்லை. மிக மிக உயர்ந்த மனிதர். சில சந்தர்ப்பங்களில் அவர் கண்களில் ஒரு தளதளப்பு வரும். நானும் அவரை கவலைப்பட விட்டதில்லை. நிமிர்ந்த நடையுடன் சுத்தமான தன் இரு உடைகளையும் தோய்த்து உடுத்தி வெள்ளை வெளீர் என கம்பீரமாகவே இருப்பார். ஏனெனில், ‘மற்றத் தோழர்கள் போராட்டக் குணத்தை விட்டு விலகி விடுவார்கள்என்ற முன் எச்சரிக்கையே அது (இந்த வரலாற்றை நான் முன்னொரு தடவை எழுதி இருக்கிறேன்).தீண்டாமைக்கு எதிரான வெகுஜன மார்க்கம், எஸ்.டி. பண்டாரநாயக்கா வருகை, தோழர் சண்ணின் மகள் இராதா எங்கள் வீட்டில் சில நாட்கள் இருந்தமை பற்றியும் அடுத்து எழுதுவேன்.

தினபதி பத்திரிகையில் வெளி வந்த 1969 ம் ஆண்டு மே தின போராட்டம்.

18

ஒக்டோபர் எழுச்சியும் சாதி ஒடுக்குமுறையும்

தோழர் மணியம் அவர்கள் தனது மத்திய கமிட்டிக் கூட்டத்திற்கு கொழும்புக்குப் போயிருந்த வேளை 23/07, ஸ்கொவில் பிளேஸ், கொள்ளுப்பிட்டி வீட்டிற்கு தோழர் நா.சண்முகதாசன் அவர்களைச் சந்திக்கச் சென்றாராம். அங்கே இருந்த இராதா தானும் மணியம் மாமாவுடன் யாழ்ப்பாணம் போகப் போகிறேன் என்று உத்தரவு பெற்றுக் கொண்டு, நாங்கள் வசித்த காலையடி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். செல்லமாக வசதியாக வளர்ந்த இளம் பெண். வசதி குறைவான எம் வீட்டில்,எம்மால் முடிந்த உச்சபட்ச வசதிகளைச் செய்து அவரைக் கவனமாகப்பார்த்துக் கொண்டோம். முதன் முதலாக முகம் பார்க்க பெரிய கண்ணாடியும், சாப்பிட மேசையும் அவசரமாக வாங்கினோம். அழகான அச்சிறு பெண்ணைப் பார்க்க ஊர்ப் பெண்களும் வந்தனர். எங்கள் மூன்று குழந்தைகளுடனும் தானும் ஒரு குழந்தையாக விளையாடினார். எங்கள் கீர்த்தியை அவருக்கு நிறையவே பிடித்துப் போனது. தான் சிறு குழந்தையாக இருந்த காலத்தில் வைத்து விளையாடியகண் மூடித் திறக்கும் பொம்மைஒன்றைக் கொண்டு வந்து குழந்தைகளிடம் கொடுத்தார். அந்தப் பொம்மைக்கு சிவப்புநிற சட்டை அணிவிக்கப் பட்டிருந்தது. அந்தப் பொம்மையை நீண்டகாலம் பாதுகாப்பாக வைத்திருந்தோம்.

இராதா காரைநகர்கஜோரினாபீச் பற்றிக் கேள்விப்பட்டு இருந்தாவாம். அவவின் வேண்டுகோளை நிறைவேற்ற, எமது நிலையத்துப் பிள்ளைகளும் நாங்களும் மதிய உணவும் தயாரித்துக் கொண்டு கடற்கரை சென்று நீராடித் திரும்பினோம். நாங்கள் 5 வருடங்கள் காரைநகரில் வாழ்ந்திருந்தும் ஒரு நாளாவது கடற்கரை போனதில்லை.அடுத்த நாள், கட்சியுடன் தொடர்பான சில ஊர்களுக்கு அவரை அழைத்துச் சென்ற போதும் நீண்ட நேரம் செலவிட முடியாமல் போனது. அடுத்தடுத்த நாள் தோழருடன் இராதாவும் கொழும்பு சென்றார். பின் அவர் சீனாவில் அக்கியூபன்ச்சர் மருத்துவத்தை சங்காய் நகரில் படிக்கச் சென்றார். அவர் தான் வைத்துக் கொள்வதற்காக குழந்தைகளின் படங்களைக் கேட்டார். அதற்காக இப்படத்தை அசோகா ஸ்ரூடியோவில் எடுத்தோம். இந்த நாளும் என்னால் மறக்க முடியாத மகிழ்வான நாள்.
பபியின் சட்டையை இராசாத்தி தன் கையால் தைத்துத் அன்பளிப்பாகத் தந்தார். இந்தச் சீலை தோழர் மான் முத்தையா அவர்களின் மனைவி தந்தது. மஞ்சள் நிறத்தில் கறுப்பு போடர். என்னிடமிருந்த நல்ல புடவை இதுவே. அதன் நிறம் மாறும் வரை அதை உடுத்தினேன். அவர்களுடனான நட்புப் பற்றியும் சொல்வேன் (அவர்கள் அடிக்கடி மலேசியா போய் வருபவர்கள்.) இன்றும் மறக்க முடியாத பசுமையான நினைவுகளாக இருக்கின்றது.

மூன்று குழந்தைகள் சத்தியராசன், சத்தியமலர், சத்தியகீர்த்தி (1968ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்)

பிள்ளைகள் பிறந்த காலங்களில் சரியான கவனிப்போ, உணவோ கிடைக்கவில்லை. தோழரும் காலை போய் இரவு வருவார். இரவு உணவை சமைத்து இருவரும் சாப்பிடுவோம். தங்கை வரும் நாட்களில் ஆசைக்கு ஏதாவது சமைத்து எடுத்து வருவார். தம்பி பள்ளிப்படிப்பில் இருந்தார். இவை எல்லாம் உடல் பருமனை அதிகரித்தது. கால் வீங்கி நடக்க முடியவில்லை. பக்கத்தில் இருந்த டாக்டர் சோமாஸ் என்பவர் வாதம் என்று சில மருந்துகள் தந்தார். இருந்தும் என்னால்
சரியாக நடக்க முடியவில்லை. யாழ் நகரில் சாதீயக் கொடுமைகள் தலை விரித்து ஆடின. அரசாங்க அதிபர்கள் கண்துடைப்பாக சில நிகழ்வுகளை அரங்கேற்றினர். இருந்தும் அடக்கு முறை தொடர்ந்தது. மலேயன் கபேயில கூட பெரிய போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. இந்த நிலைமையில், கிராமப் புறங்களில் இன்னும் மோசமாக இருந்தது. கோவில்கள், தேநீர்க் கடைகளில் (உரும்பிராய், நெல்லியடி, சுண்ணாகத்தில் நிலத்தில் நைந்துபோன சாக்கைப் போட்டிருப்பார்கள் அல்லது நிலத்தில் இருந்துதான் சாப்பிட வேணும்.) சோடாப் போத்தலில் தான் தேநீர் கொடுப்பார்கள்.

1966 ஒக்டோபர் எழுச்சிப் போராட்டங்களுக்கு முதல், மிக மோசமான நிலையில் தமிழ் மக்கள் சாதியால் பாகுபடுத்தப்பட்டு இருந்தனர். கறள் பேணியில் அல்லது சிரட்டையில் அல்லது போத்தலில் தண்ணி குடுப்பார்கள். மற்றையவர்கள் கதிரையில் இருந்து பித்தளைப் பேணியில் தேநீர் குடிப்பர். இந்த நிலைமைகளில் தான் 1966 ஒக்ரோபர் எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சிசாதி அமைப்பு தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்.’ கொம்யூனிஸ்ட் கட்சி தான் அதை ஏற்பாடு செய்தது. திட்டமிடப்பட்ட எழுச்சி சுண்ணாகத்தில் ஊர்வலம். யாழ்ப்பாணம் முத்த வெளியில் பொதுக் கூட்டம். சுண்ணாகத்தில் ஊர்வலத்தை ஏற்பாடு செய்யக் காரணம், வி. பொன்னம்பலம் காலத்தில் இருந்து சுண்ணாகம் பிரதேசம் இடதுசாரிகள் செல்வாக்கு கூடிய இடமாக இருந்தது. அங்கு தான் கட்சி காரியாலயமும் செங்கொடியைக் கம்பீரமாக பறக்கவிட்டும் இருந்த இடம். அதை விடவும் எஸ்.ரி.என். நாகரத்தினமும் அவர் உறவுகளும் புடவைக் கடை முதலாளிகளாக செல்வாக்குடன் வாழ்ந்தனர். இவ் எழுச்சி பற்றி நிறைய நூல்கள் வெளி வந்திருக்கின்றன. நிச்சயமாக அவற்றை வாசித்து அன்றைய காலகட்டத்தை விளங்க முற்படுங்கள்.
அக்டோபர் எழுச்சியின் போது தோழர்கள் கே. . சுப்பிரமணியம், கே. டானியல் , வீ. . கந்தசாமி , டாக்டர் சு. வே. சீனிவாசகம் , எஸ். ரி. என் நாகரத்தினம் ஆகியோர் தலைமை ஏற்றுச் சென்றனர். அவர்களுடன் கட்சி வாலிபர் இயக்கத்தைச் சேர்ந்த எம். .சி. இக்பால், கு.சிவராசா நா. யோகேந்திரநாதன், செந்திவேல், சூடாமணி, கி. சிவஞானம்,
கே. சுப்பையா, இரகுநாதன் ஆகியோர் முன்னணியில் நின்றனர். ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் சுன்னாகம் சந்தை வளாகத்தில் 25 நவம்பர் 1966 அன்று நடைபெற்றது. தோழர் கே. . சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன், எஸ். டி. பண்டாரநாயக்கா, கே. டானியல், வி. . கந்தசாமி,சுபைர் இளங்கீரன் உட்படப் பலர் உரையாற்றினர். இதில் எஸ்.டி. பண்டாரநாயக்கா பற்றி அவருக்கும் எனக்குமான அக்கறைகள் குறித்தும் நிச்சயமாகப் பகிர வேண்டும். அடுத்து அது பற்றிச் சொல்வேன்...

19

சாதி வன்முறைகளைப் பார்வையிட்ட எஸ்.டி.பண்டார நாயக்க

1966 இல் போராட்டம் நடைபெற்றமையே தேநீர்க் கடைகளில் சிரட்டைகளில் தேநீர் கொடுப்பது, தாகத்தால் தண்ணீர் கேட்கும் மக்களுக்கு குவளைகளில் தண்ணீர் தராமல் கைகளை ஏந்திக் குடிக்க வைப்பது, பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியாமை, குளங்களில் குளிக்க முடியாமை, ஆலயங்களில் நுழைய அனுமதி மறுப்பு, திருவிழாக்களில் தேர் சில தெருக்களுக்கு போகவிடாது திருப்புதல், பொது மயான உரிமை இல்லை, பொது மயானத்தில் சாதி வாரியாக இடம் ஒதுக்கீடு, தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு, பாடசாலைகள், மருத்துவம் என எல்லாவற்றிலும் ஒடுக்குமுறை. இப்படிப் பல.. பல. இதன் பிரதிபலிப்பாக ஒடுக்கப்படும் மக்கள் மீது வன்முறைகளும் இடம்பெற ஆரம்பித்தன. இந்நிலையில், முன்னாள் கம்பஹா தொகுதி பாராளுமன்ற அங்கத்தவராக இருந்த எஸ்.டி. பண்டாரநாயக்க அவர்கள், யாழ்ப்பாணத்தில் நடக்கும் சாதி அடக்கு முறைகளையும், ஒடுக்கப்பட்டோர் முகங்கொடுத்த இன்னல்களையும் நேரில் பார்வையிடுவதற்காக 1968ம் ஆண்டு, சில தடவைகள் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவருடன் ஒரு புத்த பிக்குவும், சில சிங்களத் தோழர்களும் வந்தார்கள். அவர்களுடன் தோழர் மணியம் அவர்களும் உடன் சென்று பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும், பிரச்சனைகளையும் காட்டி விளங்கப்படுத்தினார்.

இந்த நிலையில், ஏன் தென்னிலங்கை எம். பி. க்கு இருந்த அக்கறை வட பகுதி தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு
இருக்கவில்லையா?” என்று நண்பர்கள் நினைக்கலாம் பாவம் அவர்கள்! ஒடுக்கப்பட்டோர் குடிசைகளுக்குத் தீ மூட்டிய உயர்சாதியினரின் வெறுப்பைத் தேடிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் கையறு நிலைமைகளையும் எஸ்.டி. பண்டாரநாயக்க கேட்டறிந்து நேரில் பார்த்தார். நிச்சாமத்தில் எரிந்த வீடு ஒன்றை அவர் பார்வையிட்ட படம் இன்றும் அக்கொடுமைகள் சொல்லும்.

எஸ். டி. பண்டாரநாயக்க அவர்கள் தான் கேட்ட, பார்த்த நிகழ்ச்சிகள் பற்றி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள் அந் நேரம் அது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அடுத்து வந்த தேர்தல் முடிவுகளிலும் வெளிப்பட்டன.உயர்சாதியினர் அனைவரும் கெட்டவர்கள் அல்ல. ஒரு சில வக்கிர உணர்வு கொண்டவர்களே தீயிட்டு குடிசைகளை அழித்தவர்களாவர்.

மான்முத்தையா என்ற இடைச் சாதித் தோழர் ஒருவரை , அவரது உறவினர்கள் சங்கானைக் கிராமத்தில் வசிக்க விடாமல், அவரது வீட்டிற்கு கல் எறிந்தும், கிணற்றுக்குள் குப்பைக் கூளங்களைப் போட்டும் உடனடியாக வேறு கிராமத்துக்கு இடம் பெயர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கினர். அது பற்றி தோழர் சண் எழுதியிருந்தார். அந்தச்
சண்டியர்களுள் ஒருவர், எனது தந்தையாரிடம் வந்துஉங்கடை மருமேன் பள்ளரோடு சேர்ந்து அவன்களுக்காக எம் பி. மாரைக் கூட்டிக் கொண்டு வந்து காட்டுறானாம். உங்கடை மேள் கெதியிலை வெள்ளைச் சீலையோடுதான் சீவிக்கப் போறா எண்டதைத் தான் சொல்லிவிட்டுப் போக வந்தனான்என்று சொல்லிச் சென்றாராம்.

எனது தந்தையார் பயந்த சுபாவம் கொண்டவர். “மணி, ஏன் மணியத்துக்கு இந்தத் தேவை இல்லாத வேலை எல்லாம்.
அவனவன் தங்கடை உரிமையளுக்கு தாங்கள், தாங்கள் எல்லோ வாதாடி போராடி பெற வேணும் நீ உழைச்சு சாப்பாடு போட்டால் அவராலை சும்மா இருக்க முடியுதில்லையாமோ? அந்த முத்தன் வந்து என்னட்டை சொன்னத்தை அவருக்கு மண்டையிலை ஏறுமாச்சாடை கட்டாயம் சொல்லுஎன்று பயந்து கொண்டு சொன்னார். நான் இதை தோழருக்குச் சொல்லவே இல்லை. சொன்னாலும் முன் வைத்த காலைப் பின் வைக்கப் போகிற ஆளா அவர்? சங்கானைக்கு வந்திருந்த வேளையில் எஸ். டி. பண்டாரநாயக்க அவர்கள் நாம் வசித்த, காலையடி வீட்டிற்கும் வந்திருந்தார். நான் நடக்க முடியாமல் கால்களை நிலத்தில் வைக்க முடியாமல் அவஸ்த்தைப் படுவதைக் கண்ணுற்ற அவர் அடுத்த தடவை வந்த போதுமுடக் கொத்தான்எனப்படும் ஒரு மூலிகையைக் கொண்டு வந்து தந்துஇதனுடன் கொத்தமல்லியும் சேர்த்து அவித்துக் குடியுங்கஎன்று ஆலோசனை கூறினார்.

நானும் அந்நேரம் சிங்களம் கற்றிருந்தமையால் தட்டித் தட்டி சிங்களத்தில் பேசினேன். அது மணியம் தோழருக்கும், தோழர் எஸ்.டி க்கும் மகிழ்வைத் தந்தது. அவரது மருத்துவம் பொய்க்கவில்லை. நானும் அதன்படி அவித்துக்
குடித்து சுகம் பெற்றேன்.

மனிதாபிமான சுபாவமுள்ள அவர் மேற்படி தீயிட்ட சம்பவத்தை பாராளுமன்ற கூட்டங்களில் எடுத்துக் கூறியுள்ளார். அதனால் தங்கள் கை வரிசை பாராளுமன்றம் சென்றதோடு மாத்திரமன்றி பத்திரிகைகளிலும் செய்தி வெளியானதால் சம்பந்தப்பட்டோர் பிறகு அடங்கி நடக்கத் தொடங்கினர்தட்டிக் கேட்க ஆளில்லா விட்டால், தம்பி... சண்டப் பிரசண்டம் ஆடுவான்என்று நாட்டுப் புறத்தில் ஒரு முதுமொழி ஒன்று உண்டு. அது மட்டுமல்லாது பல வழக்கறிஞர்களின் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். மட்டுவில் மோகனதாஸ் சனசமூக நிலையத்தில் நடை பெற்ற பகிரங்கக் கூட்டத்தில் மொழி பெயர்ப்பாளரான தோழர் சிவதாசன் வர முடியாது போனதால் தோழர் மணியம் அவர்களே ஆங்கில உரையை தமிழில் மொழி பெயர்த்தார். அனைத்து சாதியினருடனும் இணைந்து அப் போராட்டத்தை நிகழ்த்தியமையே வெற்றிக்கு வழியமைத்தது.

நாங்கள் காலையடியில் உள்ள ஏகாம்பரம் சிவபாக்கியம் அவர்களின் வீட்டில் வசித்த அந்த இரண்டு வருட காலங்களில் வந்து போனோர் அநேகர். அவர்களுள் தோழர் சண்முகதாசன் குடும்பம், தோழர்கள் நீர்வைப்பொன்னையன் குடும்பம், தோழர் திருஞானமூர்த்தி (.ரி மூர்த்தி) குடும்பம், எஸ்.ரி.என். நாகரத்தினம் குடும்பம், செ. யோகநாதன் குடும்பம், நெல்லண்டைத் தோழர் குமாரசாமி குடும்பம், பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவராக இருந்த தோழர் கதிரவேலு, (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தந்தை) தோழர் . சிவதாசன், தோழர் வி.. கந்தசாமி, என்.கே. ரகுநாதன், தோழர் டானியல், தோழர் சுப்பையா, தோழர் நல்லப்பு, தோழர் கதிரேசு, தோழர் சின்னத்தம்பி, தோழர் மாதகல் கந்தசாமி, தோழர் இக்பால், தோழர் கன்சூர், தோழர் சலீம், தோழர் இளங்கீரன், தோழர் தருமலிங்கம், தோழர் சூடாமணி, தோழர் இராசையா, தோழர் பசுபதி, என இன்னும் பல தோழர்கள் , நண்பர்கள் வந்து போனார்கள். எவ்வளவு தோழமைகள்? வசதி குறைவான வீட்டில் எதிர்கால நம்பிக்கைகளுடன் சேர்ந்து செயற்பட்டோம். அவர்களுள் சகோதரி மட்டுவில் சரோஷினி முக்கியமானவர். அவர் தான் கைத்தறியில் வேலை செய்து சிறிதளவு காசு சேமித்து என் கைக்குள்
தந்தவர். தோழர் ஊர்வல நிகழ்ச்சியில் பங்குபற்றி உடல் முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கலாம் ஜேவிபி காலம் எனச் சொல்லி காவல் படையின் கொடுமைகளும் நாம் அடைந்த வேதனைகளும் அடுத்துத் தொடர்வேன்.......

குறிப்பு : எஸ்.டி.பண்டாரநாயக்க ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்.இவர் எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் உறவினர். இந்தியாவில் உயர்கல்வியை படித்த காலத்தில் , சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்றோரை சந்தித்தாகச் சொன்னார். விவசாயத்திலும், மூலிகை வைத்தியத்திலும் நாட்டமுள்ளவர். இரண்டாம் உலகப் போரின் பின் , அவர் அரசியலில் நுழைந்தார். எஸ். டபிள்யூ. ஆர். பண்டாரநாயக்கவுக்காக பிரச்சாரம் செய்து புதிதாக அமைக்கப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சியில் (எஸ்.எல்.எஃப்.பி ) சேர்ந்தார். அவர் 1952 இல் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், இருப்பினும் சிங்கள மட்டும் சட்டம் குறித்து எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் பதவியை ஏற்கவில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கீழ் எஸ்.எல்.எஃப்.பி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான 1971 ஜேவிபி இல் இணைந்தார். அவருடனும் அவர் குடும்பத்துடனும் நட்பு நீள்கிறது. அவர் இறப்பதற்கு ஒரு வருடங்களுக்கு முன்னர் அவரை என் குடும்பத்தினருடனும், தோழர் சுப்பையாவுடனும் சென்று பார்த்து வந்தேன். 96 வயதில் அவர் கண் பார்வையை இழந்திருந்தார். அழகான அவரை அந்நிலையில் பார்த்தது மனதில் வேதனை தந்தது. அவர் பற்றிய ஒரு தனிக்குறிப்பு எழுதவேண்டும்.

20

மணியம் தோழர் மீது பொலிஸின் பார்வை

1969ல் நாங்கள் கொழும்பு செல்லவேண்டி வந்தது, ஒன்று - தோழர் மணியம் அவர்களை அழைத்து வரவும் மற்றைய காரணம் இராதா தனது அக்குபங்சர் வைத்தியப் படிப்பை சீன மக்கள் குடியரசில் படிப்பதற்காக அங்கு புறப்பட இருந்தார். அவவை விமான நிலையம் சென்று வழியனுப்பி வைக்கவுமாக நாங்களும் அழைக்கப் பட்டிருந்தோம். நானும், குழந்தைகளும் எனது தம்பியுடன் புகைவண்டி மூலம் பிரயாணமானோம். தம்பி , எங்களைக் கொள்ளுப்பிட்டி வீட்டில் சேர்த்து விட்டு, அவர் தனது பயணத்தை கண்டிக்கு மேற்கொண்டார். தம்பி, அவர்கள் அந்தக் காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்.

இராதாவுக்குப் பிறகு அந்த வீட்டில் குழந்தைகளே இல்லாத படியால் எங்கள் குழந்தைகளுடன் அவர்கள் எல்லோரும் குழந்தைகளாக மாறி விளையாடினார்கள். ‘கண்ணைப் பொத்தி விளையாடல் என்றொரு விளையாட்டு. இராதா.. குழந்தைகள் மூவரில் ஒருவருக்கு கண்களைப் பொத்தி மற்ற இருவரையும் பிடித்துக் கொண்டு வரும்படி சொல்கிற ஒரு விளையாட்டு எத்தனையோ வருடங்கள் கழிந்தும்நேற்று நடந்தது போல இருக்கிறது.

கண்ணாரே கடையாரே காக்கணவன் பூச்சியாரே

ஆச்சி என்ன காய்ச்சினவ?

கூழ்
கூழுக்குள்ளே விழுந்தது என்ன ?

எனக்கொரு உனக்கொரு ...

பிடிச்சுக் கொண்டு ஓடி வா..”

இப்படி அந்தக் கண்ணாம்பூச்சி விளையாட்டு எங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு நன்றாகப் பிடித்து விட்டது. “இன்னும் இன்னும்என்று கேட்டுத் தொடரச் சொன்னார்கள். சும்மா வா சொன்னார்கள்.குழந்தைப் பிள்ளைக்கும் குட்டி நாய்க்கும் இடங்கொடுக்கக் கூடாதுஎன்று.

இரண்டு நாட்கள் கழிந்து இராதாவின் பயணநாள். அதிகாலையில் எழுந்து புறப்பட்டுச் சென்று கொழும்பு விமான நிலையத்தை அடைந்தோம். பயணியின் பிரயாணப் பெட்டிகள், கடவுச்சீட்டுப் பரிசோதனைகள் முடிந்ததும் இராதா, எமக்குக் கிட்ட வந்து குழந்தை கீர்த்தியைத் தூக்கிக் கொஞ்சி மற்றெல்லோரிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு உள்ளே சென்று விட்டார். பயணிகளை அனுப்ப வந்த அனைவரும் மேல் மாடிக்குச் சென்றோம். இதற்கு முன்னர் விமானத்தைப் பார்த்தறியாத குழந்தைகள் ஆரவாரமாகக் குதூகலித்தனர். பிரயாணிகளுடன் மேலே எழுந்த விமானத்துக்கு சகலரும்டாட்டாகாட்டிய பின் கீழே இறங்கி வந்து தோழர் சண்ணின் கொள்ளுப்பிட்டி வீட்டைச் சென்றடைந்தோம். தோழர் சண் எங்கள் மீது வைத்திருந்த அக்கறையும் அன்பும் அவரது நடத்தையில் தெரிந்தது. அது எனக்கு ஆறுதலைத் தந்தது.

சாயந்தரமானதும் குழந்தைகளுக்கு காலி முகத்திடல் கடற்கரைக்கு தானே காரை ஓட்டி அழைத்துச் செல்வதாக கூறி அப்படியே செய்தார் தோழர் சண். அங்கே அநேக பட்டங்கள் பறந்தன. அவை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன. சிலர் பந்து விளையாடினார்கள். வேறு சிலர் குதிரை மேல் ஏறி உலா வந்தனர். எங்கள் வீட்டுக் குழந்தைகளையும்
ஒவ்வொருவராக குதிரை மேல் ஏறி விளையாட வாய்ப்புக் கிடைத்தது. வீடு திரும்பு முன் எலிபன்ற் கவுசில் ஐஸ்கிரீமும் குடித்து பலூன்களும் வாங்கினார்கள். மேற்குக் கடலுள் சூரியனின் அஸ்தமனம் சிவப்பு மஞ்சள் நிறத்தில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ரம்மியமான காட்சியாகத் திகழ்ந்தது. அதை நான் ரசித்ததை போல முன்னோ பின்னோ ரசிக்கவில்லை. கிராமத்தில் காணக்கிடைக்காத அந்த இயற்கைக் காட்சிகள் குழந்தைகளுக்கு மாத்திரமல்ல; பெரியவர்களுக்கும் மிகப் பிடித்தமான அற்புதமான காட்சிகள் தான். குழந்தைகள் சுற்றியிருக்க அவர்களின் லயிப்பு எங்களையும் தொற்றிக்கொள்ளும் தானே? வீடு வந்து இறங்கும் வேளை குழந்தை கீர்த்திஎன்டை (செ)ருப்புப் போச்சுஎன்று அழத்தொடங்கி விட்டார். அவ்வளவு சனக்கூட்டம் உள்ள கடற்கரையில் அந்தச் சின்னச்செருப்பை எங்கே தேடுவது....? குழந்தை 3 வயது வரையும் கதைக்காமல் இருந்தவர். அதனால் தோழர் சண்ணும், இராதாவும் ஏதாவது கதை கொடுத்தபடி இருந்தார்கள். சில சொற்கள் தவிர பேச்சு வரவில்லை. செருப்பு நிகழ்ச்சியால் வாய் திறந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்த நாட்காலையில் குழந்தை கீர்த்திக்கு புதிய, பெறுமதியான சப்பாத்துக்கள் கிடைத்தன. தான் தான் கீர்த்திக்கு பேச்சு வரப் பண்ணியதாக தோழர் சண் எப்போதும் சொல்வார்.

தோழர் மணியத்தின் தங்கை சிவநேசம் (என்னுடன் நல்லூரில் அறைத் தோழியாக இருந்தவர்), அவிசாவளையில் குடும்பத்துடன் வசிக்கிறா, அவவின் கணவன் அவிசாவளை போலீஸ் நிலையத்தில் கடமையாற்றுகிறார். நாம் அங்கு செல்ல வெளிக்கிட தோழர் சண்முகதாசன் அவர்கள் தனது வாகனத்தையும், சாரதியையும் தந்துதவினார். ஒரு மணித்தியாலத்தில் அவர்களதுகுவாட்டஸ்போய்ச் சேர்ந்து விட்டோம். திரு.சின்னத்தம்பு அவர்கள் எம்மை, தமது வசிப்பிட வழியைக் காட்டி விட்டு தனது கடமை நிமித்தம் சென்று விட்டார். செல்லக்கா (சிவநேசம்) இடியப்பமும் அவித்து, சொதியும் வைத்து எங்களுக்கு பரிமாறினா. சாப்பிட்ட கையோடு நாங்கள் கொழும்புக்குத் திரும்பி வந்து அடுத்த நாட் காலை புகைவண்டி மூலம் யாழ்ப்பாணம் வந்து வீட்டை அடைந்தோம். தோழரை வீட்டிற்கு அழைத்து வந்ததும், கீர்த்திக்கு பேச்சு வந்ததும் மகிழ்ச்சியானவை. இப்படியே நாட்கள் ஓடின.
1970
ம் ஆண்டில் நாடு முழுவதும் ஜனதா விமுக்தி பெரமுன JVP என்ற இயக்கம் மிக வேகமாக சிங்கள மக்கள் மத்தியில் பரவி வளர்ச்சி கண்டிருந்தது. அதன் அங்கத்தினர் சிலர் யாழ்ப்பாணம் வந்து கம்யூனிஷ்ட் கட்சியையும் சந்தித்து தமக்கு ஆதரவு தரும்படி கேட்டிருந்தனர். எஸ்.டி பண்டாரநாயக்காவும் ஜேவிபி உடன் இணைந்து கொண்டார். இதனாலும் இடதுசாரிகள் மீது பொலிசார் சந்தேகம் கொண்டிருந்தனர் போலும்.

ஒரு திங்கட்கிழமை காலை... அயல் ஊர்க்காரரான, எனக்கு தெரிந்த அன்பான ஒருவர் போலீஸ் சிஐடி(CID) யாக இருந்தார். எங்கள் வீட்டிற்கு வந்து மிகவும் சாந்தமாகச் சொன்னார்அண்ணை மீதும் ஒரு கண் விழுந்திட்டுது. போலீஸ் வரும் போது அவர் வீட்டில் இருந்தால், கைது செய்து கொழும்பிற்கு தான் அனுப்புவார்கள். பார்த்து நடக்கச் சொல்லுங்கள்என்று ஒன்று மாறி ஒன்று தொடர்வேன்.....

21

ஜே.வி.பி. மீது பொலிஸ் அடக்குமுறை

ஜே.வி.பி. (JVP) என அழைக்கப்படும் இயக்கம் , இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர என்பவரால் (Rohana Wijeweera) 1965 மே 14 அன்று இக் கட்சி நிறுவப்பட்டது. சோசலிச சமத்துவத்திற்குப் பாடுபடப் போவதாகக் கட்சி அறிவித்தது. அது தொடர்பாக அரசியல் வகுப்புக்கள் பலவற்றை நடத்தினர். இவற்றால் கவரப்பட்ட படித்த வேலையற்ற கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், பெருமளவாக ஜே.வி.பி யில் இணைந்தனர். இரகசியமான முறையில் ஆயுதப் புரட்சிக்கு வேண்டிய ஆயத்தங்களையும் செய்து வந்தனர்.

1971 மார்ச்சில் ஜே.வி.பி.யின் இரகசிய ஆயுதக்கிடங்கு பற்றி ஆளும் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசிற்குத் தெரிய வந்தது. இதனால் தான் சீன சார்புடைய கம்யூனிஸ்ட்களையும் கைது செய்ய ஆரம்பித்தனர். மார்க்சிய கொள்கையுடன் மக்கள் விடுதலைக்கான, மக்கள் அரசியலை முன்னெடுத்த என் கணவர் போன்றோர் ரோகண விஜயவீராவுடன் இணையவில்லை. இருந்தும் காவல்படை அதனை பிரித்துப் பார்க்கவில்லை. இவர்களும் ஆயுத பாணிகள் எனக் கருதினர். இவர்களுடன் தோழமையாக இருந்த எஸ்.டி. பண்டாரநாயக்காவும் சில தோழர்களும் ஜேவிபி உடன் இணைந்தமையால் சந்தேகம் வலுத்தது. காவல் துறையைச் சேர்ந்தவர் வந்து சொல்லிச் சென்றதும் எனக்கும், என் குழந்தைகளுக்கும் ஒரே பதற்றமாகி விட்டது. “மழை விட்டும் தூவானம் நிற்கவில்லைஎன்ற கதையாக இருக்குதே
என்று இருந்தது. போலீஸ்காரர் வந்தது பற்றியோ, அவர் என்னுடன் படித்தவர் என்றோ ஒருவருக்குமே சொல்லவில்லை. அன்று மத்தியானம் பக்கத்து வீட்டுப் பெரியம்மா வந்திருந்த போது அவவுக்கு மாத்திரம் மேற்படி விபரத்தைக் கூறினேன். அவர் ஆறுதல் கூறினார். அவ என்னைவிட என் கணவன் மீது மிகுந்த அன்பும், மதிப்பும் வைத்திருந்தார். ஊரில் சிறு பிரமுகராக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒவ்வொருவரும் - கம்யூனிஸ்ட் ஒருவர் தங்கள் ஊரில் குடியிருந்தது பற்றி பல அதிருப்திகளை வெளிப்படுத்தினார். (இவர் பற்றி முன்னரும் சொல்லியிருந்தேன்.) நான் அவரையிட்டும் பயம் கொண்டேன். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி டாக்டர் சோமஸ்கந்தர் வசித்து வந்தார். அவரது அடிவளவு பெரிய விசாலமானது. அந்த வளவில் சணல் பயிரிட்டிருந்தது. அது நன்றாக வளர்ந்து சடைத்து இருந்தது. அதன் நீட்சி அளவு எங்கள் வளவதை் தாண்டிச் செல்லும். நேரடியாக எங்கள் வளவின் பின்புறம் பற்றைகளும் சிறு மஞ்சமுண்ணா மரமுமாக இருந்தது.உள்ளே யாரும் மறைந்து இருந்தால் வெளியே தெரியாது. ஓலைகள் அற்ற முள்வேலிக் கட்டைகள் தான் சீரற்று இருந்தது. நாங்கள் இருந்த வீட்டில் தனிக் கிணறு இருந்தது. அதனால் குடி நீரை பெரியம்மா வீட்டில் எடுப்போம். அதைவிடவும் நல்ல தண்ணீர் பறாளாய் வயல் கிணறுகளில் என் தம்பி அல்லது மூத்த அக்காவின் மகன் வீட்டிற்கு வரும் வேளைகளில் எடுத்து வருவர்.

அப்பா, அம்மா பகலில் இல்லாத வீடு எமது. இக்காலப் பகுதியில் தோழரது தலைமறைவு வாழ்வால் குழந்தைகளும் பல நட்பைத் தேடிக்கொண்டனர். அதனால் ஊரில் உள்ள சிறுவர்கள் எல்லாம் பாடசாலை முடிந்து பகல் வேளைகளில் எங்கள் வீட்டில் தான் விளையாடுவார்கள். இராசன், பபி, கீர்த்தி, கோணேஸ், கேதீஸ், காந்தன், Mangales, பவானி, ரமணி ,மல்லிகா,Ritchy, Thasan, புலேந்திரன், நிர்மலன் எனப் பலபேர். இவர்களின் தலைமை (Ramani Nadesan) ரமணி. அந்தக் கிணற்றுக்குள் இலைகள், உப்பு, மிளகாய்துாள் எனப் பல பொருட்களைப் போட்டு விளையாடி என்னிடம் ஏச்சும் வாங்கியிருக்கிறார்கள். ஆனால் என் பிள்ளைகளை மிக அன்பாகப் பார்த்துக்கொள்வார்கள். பல புத்திமதிக் கதைகள் சொல்வேன். இந்த நிகழ்வால் போலீசார் வரும் வேளையில் இவர்களும் நின்றால் தோழர் ஒளித்துக் கொள்வது சிரமமாக இருக்குமே என்ற பயம் வேறு....

அன்று வார இறுதி, பல நாட்களுக்குப் பின் தோழர் வீட்டிற்கு வந்திருந்தார். மடியில் நெருப்பைக் கட்டியபடி அவசரமாக சமைத்துக் கொண்டிருந்தேன். என் அம்மாவும் வந்திருந்தார். அவருக்கு எதுவும் நான் சொல்லவில்லை. திடீரென வீட்டின் முன்னால் ஒரு பொலீஸ் ஜீப் வந்து அதிலிருந்து குதித்தனர் சிலர். அவர்கள் விட்டிறங்கியது தான் தாமதம்.... தோழர் வீட்டின் பின் புறமாக ஓடி மறைந்து விட்டார். குழந்தைகள் அப்பாவை பின் தொடர்வதா... முன்வரும் பொலிசாரை எதிர் கொள்வதா என திகைத்து நின்றனர். எங்கள் வாடகை வீட்டின் அமைப்பு றோட்டில் நடப்பது அனைத்தையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. (இன்று அது இடிக்கப்பட்டு புது வீடாகிவிட்டது.) வீட்டை சுற்றிவளைத்த பொலிசாரில் யாரையும் தெரியவில்லை. வந்த இன்ஸ்பெக்டர்நீங்கள் மனைவியா? ஆசிரியரா? மூன்று குழந்தைகளா?‘ என தனக்குத் தெரிந்தவற்றை கேள்விகளாக்கிக் கொண்டிருந்தார். அம்மாவை இங்கு கூட்டி வந்த என் தம்பி, எங்கள் மூத்தமகன் இராசனை கூட்டிச் சென்று விட்டார். பவானி என்ற குழந்தையும் நின்றார். அவவையும் சேர்த்தே மூன்று என்றார். போலும். “எங்கே புருஷன்? எங்கே போனவர்? தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சுட உத்தரவுஎன்றார். ‘எனக்கு எதுவுமே தெரியாது.இன்று தான் வந்தார். சாப்பாடு குடுக்க சமைத்துக்கொண்டிருந்தேன்என்றேன். அதற்கு அவர்நாங்கள் எப்பிடியும் பிடித்துப் போடுவோம். வந்தால் எங்களிடம் வந்து சரணடையச் சொல்லுங்கோ. இல்லது சுட்டுவிடுவோம்என்றார். அன்று எங்கள் வீட்டிற்கு வந்திருந்த எனது அம்மாநீ போய் மணியத்தைக் கூட்டிக் கொண்டு வாஎன்று தொடர்ந்து சொன்னபடியே இருந்தா பெரிய கிளியின் மகள் பவானி கைக்குழந்தை அந்தக் குழந்தை என் தோளில் படுத்திருந்தா. போலீசார் பெரிய அறைக்குள் இருந்த புத்தகங்கள், பத்திரிகைகள், ஆல்பங்கள் சகலவற்றையும் எடுத்து தம்முடன் கொண்டு சென்றனர். கீர்த்தியும் , பபியும் திகைத்துப் போய் எனக்குள் ஒளித்திருந்தனர். என் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை. மிக நல்ல உண்மையான, சுயநலமற்ற ஒருவர் இவர்களால் சுடப்படுற நிலையில் இருக்கமாட்டார் என்று. காதலும், கலியாணமுமாக பதினைந்து வருடங்கள் அவரது ஆளுமைகளில் நான் கரைந்து கொண்டு இருந்தாலும், துன்பம் வந்தபோதெல்லாம் பறாளாய் முருகனையும், பத்திரகாளி தாயையும் கும்பிட்டு வைத்துக் கொள்வேன். இது தோழருக்கு தெரிந்தாலும் எனக்கான இடைவெளிகளில் நுழைந்ததில்லை. அன்றும் தெய்வங்கள் என்னுடன் நிற்பதாக சத்தியவானைக் காத்த சாவித்திரி கணக்கில் நின்றேன். என் அம்மாவின் நச்சரிப்பு என் குழந்தைகளுக்கும், எனக்கும் எரிச்சலூட்டின. அவருக்கு தன் மகள், பேரக்குழந்தைகள் பற்றிய அக்கறை. எனக்கோ, குழந்தைகளுக்கோ அவர் தான் உலகம். வீட்டைச் சுற்றி நின்ற பொலிசாரும், தோழரைக் கலைத்துச் சென்ற பொலிசாரும் வந்தனர். தோழர் அவர்களுடன் இல்லை. மனது ஆறதலடைந்தது.

எப்படித் தப்பினார்? யார் காப்பாற்றினார்? தொடர்ந்த பொலிஸ் அச்சுறுத்தல்..... தொடர்வேன்.....

22

குழந்தைகளின் சிரமங்கள்

பொலிசார் வீட்டிலிருந்து எடுத்த அல்பங்கள், பிரசுரங்கள், சில பத்திரிகைகள் என எடுத்துக்கொண்டு விலகிச் சென்றனர். அதுவரை அழாமல் திகைத்திருந்த இரு குழந்தைகளும், அம்மாவின் திட்டுதல்கள் காரணமாக அப்பா... அப்பா என அழ ஆரம்பித்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அயலவர்கள் வரத் தொடங்கினர். அவர்களை விலத்தியபடி பெரியம்மா வந்தார். “ரீச்சர்... ஒண்டுக்கும் பயப்பிடாதையுங்கோ. உங்கடை மனுசன் வீரவான். சத்தியவான் அவரை ஒருத்தரும் ஒண்டும் பண்ணமுடியாது. கையிலை கிடந்த கொக்கத் தடியால் முள்ளுக்கம்பியை அறுத்து விட்டேன். அவர் பாய்ந்து சணலுக்காலை ஓடிப் போய்விட்டார். கொஞ்சநாளுக்கு இங்காலை வரவேண்டாம் எண்டு சொல்லி விட்டனான்.” என்றா. (இச் சந்தர்பத்தை தோழர் பல தடவைகள் தம் தோழர்களுடன் அத்தாயின் சமயோசிதமும், தன்மேல் கொண்ட பாசம் பற்றியும் சொல்லுவார்.)

இதன் பின்னர் அடிக்கடி பொலிசார் வருவது சகஜமாகியது. இதனால் இளைய மகன் கீர்த்தி மேசை மேல் ஏறி நின்றுசிரட்டையைக் கவிட்டு வைத்து எறும்பு மொய்த்தபின், மரத்தில் ஏறி பொலிசாரின் தலையில் போடுவேன்எனக் கூட்டம் பேச ஆரம்பித்தார். வீட்டிற்கு வரும் இளம் தோழர்கள் அதனை ஊக்கப்படுத்துவார்கள். எனக்கோ ஒரே பயம். இருந்தும் அடுத்தடுத்த கிழமைகளில் வீட்டிற்கே வராமல், சில தோழர்கள் வீட்டில் மாறி, மாறி அவரும், தோழர் S.T.N. நாகரத்தினம் தோழரும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டனர். அதைப் போல மற்ற மற்ற தோழர்களும் தங்களுக்கு நம்பிக்கையான வீடுகளில் தலைமறைவு வாழ்வை வாழ்ந்தார்களாம்.

இந்நேரத்தில் , சிங்கள மொழித்தேர்ச்சி பெறுபேறு திணைக்களத்தால் அனுப்பப்பட்டு வேலை உறுதி செய்யப்படும் வரை கொஞ்ச நாட்கள் வடலியடைப்பு போக வேண்டிய உத்தரவு வந்து விட்டது. காலையில் கீர்த்தியை வடலியடைப்பில் தவமணி என்ற ஆசிரியை நடாத்தும்நேசறிக்கு தோழர் கதிரேசு வந்து தனது சைக்கிளில் ஏற்றி கொண்டுபோய் விட்டுச் சென்றுவிடுவார். நானும், குழந்தையும் பின்னேரம் வீடு திரும்பும் வரை... குழந்தை பபி, நாம் குடியிருந்த வாடகை வீட்டின் படிக்கட்டில், அமெரிக்கன் மிசன் பள்ளியால் மத்தியானம் வந்து வெய்யில் சூட்டுக்குள் கையைத் தலைக்கு வைத்துக்கொண்டு உறங்கி, விட்ட கண்ணீர் கையின் மடிப்புக்குள் தேங்கி நிற்கும். இந்தக் கொடுமைகளை நான் யாரிடம் போய்ச் சொல்லி அழுவேன்? மூத்தவர் இராசரை தங்கை தன்னுடன் அழைத்து வைத்திருந்தார். இதற்கிடையில் என் தங்கை, தான் காதலித்த சிவசுப்பிரமணியம் என்ற கணித ஆசிரியரை திருமணம் செய்து கொண்டார். (சென் ஜோன்ஸ் கல்லூரியில் உயர்தர மாணவருக்கான ஆசிரியர்) வீட்டிற்கு தோழர் வருவதில்லை. மீண்டும் என் கால் வலி ஆரம்பித்தது. நான் நடக்க முடியாமல் படுக்கையில் இருந்த அந்த ஒரு சில மாதங்களில் அம்மா வீட்டில் தங்கியிருக்க நேரிட்டது. மகள் பபி குழந்தைப்பிள்ளை. அவவை மெய்கண்டான் பாடசாலைக்கு மாற்றினோம். தங்கைக்கு மூத்த மகன் பிறந்திருந்தார். அம்மாவோ சுகயீனமானவர். அவர்களுக்கு இடைஞ்சலாக நானும் போய்ச் சேர்ந்தேன்.

என் மகள் பபிக்கு அடுப்பில் வைத்த பால் பொங்குதா எனப் பார்த்துச் சொல்ல, கண் எட்டாது. மூத்தவர் இராசன் பெரிய பலகைக்கட்டை எடுத்து வந்து தங்கைக்கு கொடுத்ததை அழுதபடி பார்த்திருந்தேன். இராசருக்கும் ஒரே வேலை என் துணிகள் கழுவுகிறது. தம்பி, தங்கையை, ஆட்டுக்குட்டியைப் பார்க்கிறது என சுழண்டபடி இருப்பார். அதற்குள் என் அம்மாவினதும், உறவினரதும் கதைகள் மனதை நிறைய பாதித்தன. அந்த நாட்களை நான் திரும்ப நினைக்க விரும்புவதில்லை.கடைக்குட்டி கீருவுக்கு 5 வயது. ஒருநாள் தோழர் கதிரேசு வந்துதோழர் மணியம் கீர்த்தியை அழைத்து வரச் சொன்னார். திரும்பி வர ஒரு கிழமையாகும், எனச் சொல்லச் சொன்னார்என்றுவிட்டு , கீர்த்திக்கான உடுப்புகளைத் தரச் சொன்னார். இராசரே அந்த ஆயத்தங்களைச் செய்தார். என் வீட்டாருக்குப் பயம். தான் ஒளித்துத் திரிகிறது காணாது சின்னப் பாலகனை ஏன் கூப்பிடுறார் என்று. அவர்களுக்கு மறைத்து என்னாலும் ஒன்றும் செய்யமுடியாத நிலை. என்னிடமிருந்த காசு கொஞ்சமும் கொடுத்து அவரை அனுப்பினோம். நீண்ட நாள் காணாத அப்பாவைப் பார்க்கும் சந்தோஷத்துடன் போனார். இது 1971 ஆம் ஆண்டில் மற்றவர்களுக்குத்தெரியாமல் தந்தையாரிடம் அவரை சேர்த்த போது, தந்தையார் உருவமாற்றத்துடன் இருந்தாராம். இதனைப் பின்னர் அவர்களின் கதை சொல்லல் மூலமே அறிந்துகொண்டேன். ரகசியமாக கொழும்புக்கு அழைத்துச் சென்றதே சிறைப்பட்டிருந்த தோழர் சண்ணை சந்தித்து ஓர் இரகசிய கடிதத்தை சேர்ப்பிக்க. தோழர் சண்ணுக்கு ரகசியக் கடிதத்தை அனுப்ப, ராதாவுடன் கீர்த்தியையும் அனுப்பினர். அந்த நேரத்தில் தோழர் மணியம் வித்தியாசமாக ஆடை அணிந்திருந்தார். ராதாவால் அவரை முதல் நொடியில் அடையாளம் காண முடியவில்லை.

இதில் இணைக்கப்பட்ட புகைப்படம் கொழும்பில் கீர்த்தி இருந்தபோது எடுக்கப்பட்டது. இந்த சட்டை வெட்டு துண்டுகளைப் பயன்படுத்தி லூயிஸ் ஐயாவால் தைக்கப்பட்டு அவர் கீர்த்திக்கு வழங்கியது. அங்கு, கொட்டாரோட், பொறளையில் உள்ள கட்சிக் காரியாலய விறாந்தையில் லூயிஸ் ஐயா என்ற தையல்காரத் தோழர் ஒருவர் தையல் தொழில் நடாத்திக் கொண்டிருந்தார். அவருக்கு குழந்தை கீருவைப் பார்த்தவுடன் அவருக்கு தான் ஏதாவது அன்பளிப்பு செய்ய வேண்டும்என்ற ஆவல் வந்திருக்க வேண்டும். அவரும் கஷ்டப்பட்டவரே. தனது கையால் ஒரு அழகியசேர்ட்தைத்து குழந்தைக்கு அணிவித்து மகிழ்ந்தாராம். “தினைத்துணை நன்றி செயினும், அதனைப் பனைத்துணையாகக் கொள்வார் பயன் தெரிவார்அந்தச்சேர்ட்நீண்ட காலம் பத்திரமாகப் பேணி வைக்கப்பட்டிருந்தது. கீர்த்தி தன்னைச் சிறையில் வந்து பார்த்ததும், தேவையான தகவலை கச்சிதமாகச் செய்ததும் கீர்த்தி மேல் தோழர் சண்ணுக்கு ஈடுபாட்டை அதிகரித்தது. (தோழர் சண் சிறையால் வந்த பின் அல்போனியா சென்று திரும்பும் போது ஒரு பெரிய றொக்கற் ஒன்றை கீர்த்திக்காக வாங்கி வந்து கொடுத்தார். அது மூன்று தரம் சுத்தி நெருப்பு மாதிரி லைற் வீசி திறக்கும். அதை பெரிய பொக்கிசமாக கீர்த்தி வைத்திருந்தார்).

சில மாதங்களில், அரசினரும் தங்கள் புலனாய்வில் உண்மை இல்லை என்பதனை உணர்ந்து தமது தேடுதல் வேட்டையைக் கைவிட்டனர் போலும். காலையடி, பண்டத்தெருப்புக் கிராமத்திலிருந்து ஒரு சில மாதங்கள் வடலியடைப்பு நிலையத்திற்கும், வழக்கம்பரை காந்திஜி மாதர் சங்க நிலையத்திற்கும் சேவையாற்றி விட்டு தொல்புரம் மத்தி அரசினர் நெசவு நிலையத்திற்கு மாற்றலாகி வந்தேன். மூத்த குழந்தை இராசன் சிறிய தாயுடன் இருந்து விக்ரோறியா கல்லூரிக்குச் சென்று வந்தார். மகள் பபியை பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் இருந்து பண்டத்தெருப்பு மகளிர் கல்லூரிக்கு மாற்றுகிற வேலையும் நடந்தது. மாதகல் கந்தசாமியின் மனைவி என்னுடனும் நட்பாக இருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தாலும், மாதர் சங்க நிகழ்வுகளை இணைந்து செய்தமையாலும் பழக்கம் ஏற்பட்டிருந்தது. தோழர் மாதகல் கந்தசாமி தோழர் மணியம் மீது மாறாத பற்றுக்கொண்டவர். அவர்கள் இருவரும் பபியை பாடசாலை மாற்ற வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டினர். குழந்தை கீர்த்தியை தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலயத்துக்கு அருகில் அமைந்திருந்த பாலர் பாடசாலையில் சேர்த்தோம். அங்கே அநேக குழந்தைகள் இருந்தார்கள். கீர்த்தி தினமும் தன்னுடன் வடலியடைப்பு நேஸரி வகுப்பில் படித்த மணிவண்ணனை மறக்க முடியாமல் தினமும் கதைப்பார். அது போல
துரை என்ற குழந்தை நண்பன் கிடைத்தார். அவருடனே போய் அவருடனேயே திரும்பி வருவார்.

தொடர்வேன்....

23

வாடகை வீட்டுக்குத் திண்டாட்டம்

ஒவ்வொரு கிராமத்திலும், 5 வருடங்கள் என்ற ஒழுங்கின் படி, எனக்கு வழக்கம்பரை, பண்ணாகம் தெற்கு... மாற்றல் வந்து விட்டது. அதிகாலை எழுந்து சமைத்து, அந்த உணவையும் எடுத்துக் கொண்டு 2 சின்னக் குழந்தைகளையும் கையில் பிடித்துக்கொண்டு... ‘காயாப்பனைஎன்ற பெரிய வெளியைத் தாண்டிப் போக வேண்டும். மழை வெள்ளம் முழந்தாள் அளவு. குழந்தைகளுக்கு இடுப்பளவு குடை பிடிக்க முடியாது காற்று சுழற்றி அடிக்கும் உடுப்புகள் நனைந்து உடம்பு நடுங்கும் எனது வேலையிடத்திற்கு பக்கத்தில் உள்ள பண்ணாகம் மெய்கண்டான் பாடசாலையில் குழந்தைகள் இருவரையும் சேர்த்தேன். மூத்தவர் இராசன் என் தங்கையுடன் தங்கியிருந்து சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கு போய்க் கொண்டு இருந்தார். பல நாட்கள் கண்ணீருடனே நாம் நடந்து போகும் அந்தக் காயாப்பனை வெளியைக் கடந்திருக்கிறேன். என் கவலைகளை வெளியில் சொல்ல எனக்கு யாரும் இருக்கவில்லை. சொல்ல விருப்பமுமில்லை. எல்லாம்இவரேஎன்று இருந்த எனக்கு அவர் எங்கே? எப்படி இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அந்தக் காயாப்பனை என்ற பனங்கூடலின் வலது கைப்பக்கமாக ஒரு இடி கிணறு இருந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் நல்லதங்காள் கதை நினைவு வரும். சீ! இது என்ன சீவியம்....! ஒரே ஒரு கணம் தான் தடுமாற்றம் உடனே அகன்று விட்டது! "அம்மா! காலிலே என்னமோ முள்ளுக் குத்திட்டுது. என்னைத் தூக்குங்கோ.." என்று குழந்தை கீர்த்தி
அழுததால், தோன்றிய கணமே அந்தக் கோழை எண்ணம் நெஞ்சிலிருந்து அகன்று விட்டது. எனக்கு நானே சொல்கிறேன்பார்க்கிற வேலையையும் காப்பாற்றி நிரந்தரமாகி விட்டாய்! உனக்கு இனி ஆயுள் பரியந்தம் எந்த வித பாதிப்பும் வராது”. ‘வெற்றிக்கு வலிகள் தேவைதானே?’

பபிக்கும் கீர்த்திக்கும் குக்கல் வருத்தம் வந்தது. தங்கைக்கு சிறு குழந்தை. நான் வேறு இடத்திற்கு போக வேண்டிய கட்டாயம். பண்ணாகம் வழக்கம்பரையில் என்னிடம் பயின்ற தையல்முத்து என்ற பெண் என் மீதும் குழந்தைகள் மீதும் மட்டற்ற அன்புடையவர். நான் நடக்க முடியாமல் இங்கும், அங்குமாக அலைவது அவருக்கு கவலையளித்தது. அவரின் தந்தையார் மாட்டு வண்டில் ஓட்டுபவர் ஐந்து பிள்ளைகள். நானும் இரு குழந்தைகளும் சுமையாக அவர் வீட்டில் ஒருவாரம் இருந்தோம். இராசன் மட்டும் தங்கை வீட்டில் இருந்தார். இந்த விபரங்கள் எதுவும் தோழருக்கு தெரியாது.
இப்போதைய காலம் மாதிரி தொலைபேசி வசதி எங்கே இருந்தது? அவர் எந்த ஊரில் இருந்தார் என்பது அவர் வந்து சொல்லும் வரை தெரியாது. மொழி தேர்ச்சி பெறாத காரணத்தால், தொல்புரம் மத்தியில் கடமையாற்றிய ஆசிரியை அரசாங்கத்தால் வேலை நீக்கப்பட்டு விட்டார். இந்தச் செயல் எனக்கு மிகவும் மனதை வருத்தியது. என்னைப் போலவே அவவுக்கும் 3 குழந்தைகள் என்ன செய்வது?

அரசாங்கக் கோழி முட்டை குடியானவனின் அம்மியை உடைக்கும்என்பது பழமொழி. அதன்படி, தொல்புரம் மத்திக்குச் சென்று.. பொறுப்பு ஏற்றுக் கொள்ளும்படி உத்தரவு வந்தது. தோழரும் வேலையிடத்திற்கு வந்து, மீண்டும் காலையடி வீட்டிற்கு சென்று தோழர் கன்சூர், தோழர் கதிரேசு உதவியுடன் வீடு மாற ஆயத்தமானோம். எனது கணவனை போலீஸ் தேடியதும், சிலமாதங்கள் அவர் தலை மறைவாக இருந்ததும் தொல்புர மக்கள் அரசல்... புரசலாக அறிந்திருப்பார்கள் போலும், அந்தக் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுப்பது சிரமமாக இருந்தது. என்னுடன் படித்த சிவசிதம்பரம் என்ற ஒருவர் தனது மாமியாராகிய பாறுவதி என்ற ஒரு தாயாரிடம் இரு வீடுகள் இருப்பதாகவும், தான் அவவிடம் எங்களைப் பற்றிக் கூறி இருப்பதாகவும் சொன்னார். சரி என வீடு பார்க்கச் சென்றோம். ஒரு கையொழுங்கை. அதன் இடையில் ஓர் பொதுக் கிணறு. அது தாண்டிச் சென்றதும் இடது புறத்தில்வடிவ புது வீடு. இன்னும் ஓர் முடக்குத் திரும்பினால் நடந்து போகக்கூடிய குச்சு ஒழுங்கையினுள் ஓர் பழைய ஓரறை வீடு. தோழருக்கு இந்தக் குச்சு வீடு தான் பாதுகாப்பு எனப் பிடித்துவிட்டது. பத்து ரூபா வாடகை. கிணறும் இருப்பதால் மற்றவர்களுக்கு எமது நடமாட்டம் தெரியாது. பெரிய வளவு. கோடியில் கக்கூசு. ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. கிணறும் கக்கூசும் வெகு தூரம். எனக்கும் குழந்தைகளுக்கும் நடக்க கஷ்டம். பழைய வீடு இருந்தும் அவரின் பாதுகாப்பு முக்கியம் என்பதால் இந்த வீட்டைத் தெரிவு செய்தோம். அதன்படி எமக்கு வீடு கிடைத்தது. தோழர் ஹன்சூர், தோழர் கதிரேசு அவர்களின் உதவியுடன், காலையடி சிவம் ரீச்சர் வீட்டில் இருந்த பொருட்கள் யாவும் ஒருலாரிமூலம் பாறு ஆச்சி வீட்டிற்கு வந்து சேர்ந்தன.

காரைநகரில் இருந்து காலையடிக்கு வரும்பொழுது தனியாளாக கட்டில்களைக் கழற்றி அடுக்கிக் கட்டி எடுத்து வந்தவருக்கு... 1969 மே தின தாக்குதலினால், தோள்மூட்டுக் கழன்றதனால் கட்டிலின்நட் ஆணிகளைஸ்பனர்பிடித்து அந்தமோல்ட்ஆணிகளைக் கழற்றவோ திருப்பிப் பூட்டவோ முடியாமற் போய் விட்டது. இராசனையும் எம்முடன் அழைத்து வைத்திருந்தோம். அவர் விக்ரோறியா கல்லூரியில் படித்தார். கீர்த்தியையும் நேசறியில் சேர்த்து பபியையும்,
பண்டத்தெருப்பு, மகளிர் கல்லூரியில் சேர்த்து, சீனனின் வானில் போய் வர ஏற்பாடு செய்தோம். இப்படி இருக்கையில், சிங்களம் சித்தியடைந்த திரட்டுப் பணம் கைக்கு வர, பெரிய கட்டில் வாங்கினோம். சில கடன்களையும் கொடுத்தோம்.

இதற்கு முந்திய வருடம் அவர் முள்ளானை, விளான், இளவாலை என்ற குச்சு கிராமங்களில் தலை மறைவு வாழ்வு வாழ்ந்திருக்கிறார். அதனால் நன்றி சொல்ல அவ்வீடுகளுக்கும் சென்று வந்தோம். எங்கள் வீட்டின் கோடியில் கக்கூசு. பின் வீடு பெரிதாக இருந்தது. ஆனால் அவர்களுடைய கழிவறையும் எங்களுடையதற்கு அண்மையில் இருந்தது. வேலி ஓட்டைக்குள்ளால் அவர்கள் வீட்டைப் பார்க்க முடியும். யார் எவர் என்ற விபரம் தெரியவில்லை. ஒருநாள் இவர் அவசரமாக "மணி.. பின்னாலை இருக்கிறது போலீஸ் இன்ஸ்பெக்டர் இராஜேஸ்வரன் எங்கடை சொந்தக்காரர். ஒளிக்கத் தெரியாமல் உடையார் வீட்டில் ஒளித்த கதை என்றார்”. ஒரே பயமாகிவிட்டது. அந்த விபரம். எமக்கு நீண்ட காலம் தெரியாமலே இருந்தது. ஆனால் ஜே. வி. பி. என்ற இயக்கத்தையும் அரசாங்கம் 4000 இளைஞர்களை அழித்து அடக்கி, ஒடுக்கி விட்டது. அதனால் போலிஸ் இலாகாவுக்கும் தேடுதல் வேட்டை இல்லாமற் போனது. அப்பாடா என்றிருந்தது. இருந்தும் தோழர் தன்னை அடையாளம் காட்டாமலே இருந்து வந்தார். ஆனால் தோழமைகள் மெது மெதுவாக இடம் தேடிக் கண்டு பிடித்து வர ஆரம்பித்தனர்.


தொடர்வேன்.....

24

சொந்த நிலம்

எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரே ஒரு குடும்பம் தான் இருந்தனர். வயதான தாய் தங்கமுத்து ஆச்சியும், தந்தையுடன் ஓர் முதிர் கன்னியும் இருந்தனர். அவர்கள் கச்சான் , கடலை வியாபாரமும், கூலி வேலை செய்வதுமே தொழில். மற்றைய வீடுகளின் கோடிப்பகுதியே எமக்கு அயலானது. பங்குக் கிணறு அடுத்த வளவில் குண்டுமணி மரம். குழந்தைகளுக்கு அதைப் பெறுக்கி தோழர் நிற்கும் நேரங்களில் கணக்குச் சொல்லிக் கொடுப்பார். அக்கால கட்டத்தில் தான் செ. யோகநாதன் அவர்களுக்கு கொழும்புத்துறையில் ஓரளவு வசதியான குடும்பத்தில் திருமணம் நிச்சயமானது. தோழர் மீதும் என் மீதும் மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்திருந்தார். பெண் பார்க்க சென்ற போதும் நாங்களும் போனோம். பின் அவரின் திருமண நாளன்று, நீண்ட நாட்களின் பின் ஒரு சந்தோசமான சூழலை அனுபவித்தோம்.

அந்தக் காலப் பகுதியில் மீண்டும் கட்சியினுள் கருத்து மோதல்கள் ஆரம்பித்தன. பல தமிழ், சிங்கள தோழர்கள் வந்து மணிக்கணக்கில் பேசினர். எனக்குத் தெரிந்து தோழர் சண் அளவிற்கு, இவரால் மிக நேசிக்கப்பட்டு மதிக்கப்பட்டவர் தோழர் வி.. கந்தசாமி. ஒரு தடவை தோழர் மணியமும் அவரும் எமது காலையடி வீட்டிற்கு வந்த போது, தோழர் மணியம் பஸ் தரிப்பிடத்தில் இருந்து நடக்க முடியாது இருந்த அவரை தன் கைகளில் காவி வந்ததாகச் சொன்னார். திருமணம் செய்யாமல் முழுநேர ஊழியராக வாழ்வை அமைத்துக் கொண்டவர் என்ற மரியாதை எப்பவும் எனக்குமுண்டு. என் பிள்ளைகள் மீது அதீத அன்பு காட்டியவர். அவரது பேச்சுக் கேட்பதற்காக அந்தக் காலங்களில் இளைஞர்கள் கூட்டத்திற்கு வருவர். மீண்டும் பிரிவோ என்கிற பயத்தை தோழர்களின் வருகைகளும், கதைகளும் உணர்த்தின. தோழரிடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்ட போதுஉட்கட்சி போராட்டம் என்பது, சிறந்த மக்களுக்கான அமைப்பை ஒற்றுமையுடன் கொண்டு செல்ல இவை போன்ற கருத்தை கருத்தால் புரிந்து கொள்ளுவதன் மூலமே முடியும். இவை இருப்பது தான் சரிஎன்றார். எனக்கு இருந்த ஒரே கவலை பிரிவு வந்துவிடுமோ என்பதே. ஒருநாள் காலை தோழர் வீட்டின் வளை மீதுகொள்கையற்ற நடைமுறை குருட்டுத்தனம்; நடைமுறையற்ற கொள்கை மலட்டுத்தனம்" என்று எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டார். தோழர் வி.. கந்தசாமி தனியே வந்தார். சுக விசாரிப்புகளின் பின்னே வீட்டு வளையைப் பார்த்தார்.
"
! எனக்காகத் தான் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டாரா?" என்று கேட்டார். அவரிடம் இருந்து தகவல் அறிய நான் முற்படவில்லை. அதை நான் எப்போதும் செய்ததும் இல்லை. “வந்தேன் என்று சொல்லுங்கள். குழந்தைகளை கவனமாகப் பாருங்கள்என்று தோழர் வி.. கந்தசாமி அவர்கள் சொல்லிச் சென்றார். ஏனோ எனக்கு கண்ணீர் தளம் தட்டியது.

ஜே.வி.பி. பிரச்சனையால் தோழர் சண் ஜெயிலில் இருந்தார். அத்தருணம் வாட்சன் பெனார்டோ, றொசாரியோ, ராமையா, .ரி. மூர்த்தி (செங்கொடிச் சங்க தோழர்கள்), HLK கரவிட்ட, நிகால் டயஸ் என சில தோழர்களுடன் நீர்வை பொன்னையன்) வி.. கந்தசாமி, கார்த்திகேசன் மாஸ்ரர், தோழர் கதிரேசு என சிலரும் தோழர் சண்ணை கட்சியில் இருந்து வெளியேற்றுவதாக கூறிப் பிரிந்தனர். தோழர் மணியம் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் உரையாடல்களில் 1969 இல் நடந்த சட்டமறுப்பு ஊர்வலத்தின் பாதிப்பு பற்றி தலைமையைக் குற்றம் சாட்டியது என் காதுகளில் அரசலாகக் கேட்டது. நான் அது பற்றித் தோழருடன் இறுதி வரை கேட்டதே இல்லை.பின்னர் , பிரிந்த அவர்கள் வேறு ஒரு பெயருடன் இயங்கினர். இது கட்சிக்குள் நடக்க வட பகுதியின் கிராமமான நிச்சாமத்தில் சாதியினருக்கிடையிலான சண்டை வலுக்கத் தொடங்கியது தோழர்கள் தருமு, நல்லப்பு ,விக்கினராஜா, சின்ராசு, பசுபதி, இராசையா என பல தோழர்கள் அடிக்கடி வருவர்.

மீண்டும் பொலிசாரின் தொந்தரவுகள் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் ஆரம்பமாகின. அந்தக் காலப் பகுதியில் தோழர் மணியம் அவர்களின் சிறு வயது நண்பரான சில்லையூர் செல்வராஜன், பிபிசி ஆனந்தி மூலம் ரேப் றெக்கோடர் ஒன்றை கொண்டு வந்து தந்தார். அதனால் இராசன் உலக செய்திகள், சினிமா பாடல்கள் கேட்க ஆரம்பித்தார். அதே காலப்பகுதியில் தோழர் சண் அவர்களும் சுற்றியோடும் றொக்கட் ஒன்றைக் கொடுத்தார். அந்த நேரத்தில் வெளிநாட்டு பொருட்கள் பார்ப்பது அபூர்வம். இதனால் விக்ரோறியா பாடசாலைப் பொருட்காட்சியிலும் அவை இடம் பெற்றன. இதனிடையே நான் பிறந்த வீட்டை என் தங்கைக்கும், தம்பிக்கும் இரு சம பங்காக என் பெற்றோர் எழுதிக் கொடுத்தனர். இதனால் என் தந்தை கொஞ்சம் கவலை கொண்டிருந்தார். நானும் சண்டை போடவில்லை. தோழரைத் தேடிபல சாதியினரும், பல நேரங்களில் வருவர். காவல் படை தேடி வரும். நிம்மதியற்ற வாழ்வு இது. இதை யாருக்கும் தெரியாமல் வாழ்வதே எனக்குப் பிடித்திருந்தது. என்ன ஒன்று? ‘குரங்கு குட்டி காவியது போல்குழந்தைகளுடன் பெட்டி படுக்கையும் சுமந்து அலைந்தேன். இதை என் தந்தை சொல்லி சொல்லி கவலைப்படுவார். பின் அவரின் வற்புறுத்தலினால் எனது தம்பி எனக்கொரு நிலத்தை வாங்கித் தந்தார். ஐயா... அதாவது எனது தகப்பனார்வீடு வளவை ஈடு மீட்டு எம்மை நிம்மதிப்படுத்தியமணிபிள்ளைஎன்று உறவினர்க்கும் அயலவர்க்கும் கூறுவாராம். நிலம் வாங்கிய நாளில் இருந்து கதியால் போட்டு வேலி அடைத்தல் வளவில் உள்ள பூனைக்களாஞ்சிப் பற்றைகள் வெட்டி அகற்றுதல் முதலில் குடியேறுபவர்களுக்குத் தான் நாலு பக்க எல்லையும் வரும். எமக்கு நாற்பக்க வேலி அடைப்புக்கே பெரிய செலவு ஏற்பட்டது. நாம் குடியிருந்த வீட்டிற்கு முன் வீட்டில் வசித்த ஆறுமுகம் அப்புவும், தங்கமுத்து ஆச்சியும் தங்கள் வீட்டு வேலை போல, நேரம் காலம் பார்க்காமல் துப்பரவுப் பணிகளைத் திறம்படச் செய்து தந்தனர். இதில் கொஞ்சமும் ஈடுபாடோ, கவனமோ இன்றி இவர் இருந்தார். “இழப்பதற்கு ஏதுமற்ற வாழ்வு இதுஎன்று சொல்வார். பின் ஏன் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று கேட்டால் படிப்பின் அவசியம் பற்றியும், அது சமூகம், தேசம், உலகம் என்று எவ்வளவு தாக்கத்தைத் தரும் என வகுப்பெடுப்பார். இரவி, சந்திரன், தேவர், யோகேஸ்வரன், தயாளன், கிருட்டி, வேல்முருகன் என்ற இளைஞர் கூட்டமே வந்தது பற்றி தொடர்வேன்....

25

சத்தியமனை பிறந்தது

'நினைவூட்டி’ - நான் இத் தொடரை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டதாய்ச் சொல்கிறது. ஏனோ இவற்றையெல்லாம் என்னுறவுகளுடன் பகிர்வதன் மூலம் பல உண்மைகளை சொல்வது மாத்திரமல்ல, என் கடந்த காலத்தை தொகுத்து நினைத்து அழுது, சிரித்து, சில நேரங்களில் இளம் பெண்ணாக உணர்ந்து, பல மனநிலைகளுடன் பயணிக்கிறேன்.
என் நினைவுகளுக்கு மதிப்புக் கொடுத்து ஆதரவு தந்த அன்பு மனங்களுக்கு நன்றிகள்.

அந்த வளவு 4 பரப்பு நிலம். அதற்கு ரூபா 6000/= வேண்டும். ஆனால், தம்பியிடம் இருந்ததோ ரூபா 3000/= மாத்திரமே. மிகுதிப் பாதிக் காசுக்கு நான் தங்கைக்கு அன்பளிப்பாக கொடுத்த (அந்தக் காலத்தில் கடனா மாதம் மாதம் பணம் கட்டி அம்மா மூலம் வாங்கிய நகை அது. என் தங்கையின் திருமணத்தின் பொருட்டு முத்துக்குமாரு என்ற வியாபாரியிடம் வாங்கினது), வெள்ளைக்கல் அட்டியலை அவ ஒரு நாளும் அணிந்ததே இல்லை. ‘பளிச்சென மின்னுகிற கவர்ச்சியினால் அது பாவிக்கப்படாமலே இருந்தது. அந்த அட்டியலை வாங்கியமுத்துக்குமாருநகைக்கடையில் திருப்பிக் கொடுத்து அந்தப் பணத்தால் மிகுதிக்காசைக் கொடுத்து உறுதி எழுதி முடித்தோம். வாங்கும் போது ஒரு பழைய கிணறும், மூன்று பனைகளும், நான்கு தென்னை மரங்களும் இருந்தன. எனது பெற்றார்மணிப்பிள்ளை உழைக்கிற காசு வாடகைக்குப் போகுது. கெதியாக ஒரு மண் வீடாவது கட்டினால் கெதியிலை குடியிருக்க வந்து விடுவாஎன்று சொல்லி... கிடுகினால் வேய்ந்த ஒரு மண் வீட்டினை ஆக்கினார்கள்.

இந்த செயற்பாடுகளில் விருப்பமின்றியே தோழர் இருந்தார். ஒரு நாள் தோழர் கொழும்பிற்கு சென்றுவிட்டார். திரும்பிவர எப்படியும் மூன்று, நான்கு நாட்கள் ஆகும். அதற்குள் வந்த ஒரு நல்ல நாளில் பால் காச்சலாம் என ஐயா சொன்னார். சரி என ஒரு சாயந்தரம் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று பால் காய்ச்சி, பொங்கல் வைத்தேன். முதல் நாள் கட்டாயம் அங்கு தான் படுக்க வேண்டும் என்று ஐயா சொல்லிவிட்டார். ஒரு சாண் உயரத்துக்கு மண் குந்து. சுற்றிவரக் கிடுகினால் தட்டி. ஒரு அறை. அதற்கு பெரிய நிலையும் கதவும். மற்ற சமையல் அறை உட்பட ஐந்து சிறிய
நிலை கதவுகளும், ஒரு யன்னலும் வைத்து வெளியே அழகில்லாமல் உள்ளே அழகானபர்ணசாலையாக அமைத்துத் தந்தனர்.
மெழுகாத நிலத்தில் பாய் விரித்து குழந்தைகளை ஐயா, அம்மாவுடன் படுக்க ஆயத்தம் செய்தேன். இப்படி ஒரு நிகழ்வை தோழர் இன்றி செய்கிறேனே என வருத்தம் இருந்தாலும், இத்தகைய சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார் தானே என எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன். இரவு திடீரென தோழர் படலையில் வந்துஇராசன்எனக் கூப்பிட்டார். படுத்திருந்த குழந்தைகள் மூன்றும் துள்ளிக்குதித்து ஓட அவர் விறு, விறு என முன்னோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். ஐயா பொங்கல் பானையைத் தூக்கி என்னிடம் தந்துஇதைச் சாப்பிடக் குடுஎன்றார். அவர்கள்
வேகத்திற்கு என்னால் தொடரமுடியாமல் ஓடி ஓடிப் போனேன்.

இந்த சம்பவம் என்னால் மறக்க முடியாத ஒன்றே. குழந்தைகள் தவறு செய்தால் தாங்களாகவே முழந்தாளில் இருப்பார்கள். அன்று நானும் சேர்ந்து இருந்தேன். ஒருவாறு அவரைச் சாந்தமாக்கி , சிரிக்கப் பண்ணி ஐயா, அம்மா தனிய இருக்கும் நிலை தன்னால் வந்ததையிட்டு வருந்தினார். பின் வீட்டிற்கு என்ன பெயர் வைப்பது என குழந்தைகளிடம் கேட்டார். ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்ல மூத்தவர் இராசர் சொன்னசத்தியமனைஎல்லாருக்கும் பிடித்தது. அந்த வெள்ளம் சுற்றி நின்ற சிறு மண் கொட்டில் தான் எங்கள்சத்தியமனை’.

ஆகாயத்தாமரைஎன்ற செடி படர்ந்திருந்த அந்தக் கிணற்றுக்குசெடிக்கிணறுஎன்று தான் விற்றவர்கள் சொல்வார்கள். அந்தக் கிணற்றைக் கலக்கி இறைப்பித்து பல தடவைகள் சாம்பிராணிப்புகை காட்டிகுளோறின்போட்டு எவ்வளவோ காசு செலவு செய்து ஆடுகால், துலா, குளிக்கும் தொட்டி, துணி துவைக்கும் கல், சீமெந்தினால் வாய்க்கால்கள் என்று பல வேலைகள் செய்து அழகாக்கி தந்தவர் ஈசக்காவின் தகப்பனார் தான். திரு. பூலோகவாத்தியார் வார இறுதி நாளில் வந்து தனது நீர் இறைக்கும் யந்திரம் மூலம் இறைத்து உள்ளே இறங்கிச் சேறு, பாசி ஆகியவைகள் அகற்றி அந்தக் கிணற்றை நல்ல தண்ணீர்கிணறுஎன்ற நிலைக்கு மாற்றித் தந்தார்.

இது இப்படி நடக்க நிச்சாமத்தில் இரு ஜாதியினரிடையே சண்டை உருவானது. ஒடுக்கப்படும் மக்களை உயர்சாதியினர்
காவற்படையின் உதவியுடன் தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தோழர் நல்லப்பு தலைமறைவாக எங்கள் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தார். பொங்கல் வந்த போது தோழர் நல்லப்பு கரும்பு, வாழைப்பழம், மோதகம், வடை, பொங்கல் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார். குழந்தைகளுக்காக அடுத்த வருடம் சத்தியமனைக்குப் போய் கொண்டாடுவோம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார். பிள்ளைகள் மூவருடனும் குழந்தையாக மாறி விளையாடுவார்.

நாங்கள் வசித்த தொல்புரம் கிராமத்திற்கு, ஒரு நாள் சாயந்திரம் நிறைய இளைஞர்கள் வீட்டுக்கு வந்து இருந்தனர். அவர்களில் சிலரை எனக்கு அடையாளம் காணமுடிந்தது அவற்றுள் யோகேஸ்வரன், அவருடைய சிறிய தாயார் காலைடியில் நாம் வசித்த வேளையில் என்னிடம் பயின்றவர். அதன் மூலம் அவர்கள் குடும்பத்தில் எனக்கு நெருக்கம் இருந்தது. அடுத்து இரவி, என்னுடைய வீட்டிற்கு எதிர்புறத்தில் அவரது வீடு இருந்தது. மிகவும் அமைதியானவர். படிப்பில் மிகவும் கெட்டிக்காரனாக இருந்தார் என்று அறிந்திருந்தேன். அவர் எங்கள் வீட்டுக்கு வருவார் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவருடைய அப்பா மிகத் தீவிரமான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர் என அவரைப்பற்றி அறிந்து இருந்தேன். வேல்முருகன், தேவராஜா, கிருஷ்ணதாஸ் புதியவர்கள். தயாளன் சாமி வாத்தியாரின் மகன். சந்திரகாசன் அழகரட்னம் அவர்களுடைய மகன் என்பதை அறிந்து கொண்டேன். இவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் தோழர் மணியம் அவர்களைச் சந்திக்க, அன்று அவர் வீட்டில் இருக்கவில்லை. என்னுடன்
சும்மா அளவளாவிக் கொண்டிருக்க, தோழரும் வந்து விட்டார். ஒரு இளைஞர் கூட்டம் திரளாக வந்து இருந்தது தோழருக்கு நம்பிக்கையூட்டியது. கட்சியின் புதிய திட்டங்களுக்கு அவர்கள் வந்தது தோழருக்கும் மிகவும் சந்தோஷமாய் இருக்கும் என நானும் நினைத்தேன். பின்னர் அவர்களின் வருகை அடிக்கடி நிகழ்ந்தது. நீண்ட நேரம் பல கதைகள் பல விடயங்களைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ரவி அப்பொழுதுதான் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி படிப்பை முடித்திருந்தார். யோகேஸ்வரன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தார். சந்திரஹாசன் கட்டிடகலை வரைஞர் பட்டத்திற்கு தெரிவாகியிருந்தார். அவர் ரவியின் சொந்த மைத்துனர். தேவராஜா சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். எல்லோரும் மாணவர்களாக இருந்தனர். அதில் கிருஷ்ண தாசன், தயாளன் வேல்முருகன் என்பவர் வேலைக்கான தேடுதல்களில் இருந்த காலம். இப்படி இருக்கையில் தோழர் மணியம் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார். இளைஞர்களுடைய வருகை அனேகமாக ஒவ்வொரு நாள் சாயந்திரமும் நிகழ்ந்தது. அந்த காலகட்டத்தில்தான் சிங்கள தோழர்கள் பலரும் வருவர். சமால் சில்வா, ரட்னாயக்கா, காந்தி அபயசேகரா எனப் பலர்....

தோழர் நல்லப்பு படுகொலை, காலையடி இளைஞர்கள் தேர்தலை பகிஷ்கரித்து கிளம்பி சண்டையும், சிறைவாசமும். தொடர்வேன்....

26

தேர்தல் பகிஷ்கரிப்பு இயக்கமும் - துப்பாக்கிச் சூடும்

நிச்சாமத்தில் தோழர் . நல்லப்பு ஒரு ஏழை விவசாயி. என் பாசமிகு சகோதரர், அயராத உழைப்பும், உடற்பலமும், இரக்க குணமும் கொண்ட மனிதர். இவை அடை மொழிகளோ, சம்பிரதாய சொல்லலங்காரங்களோ அல்ல. பழகியோரால் இன்று வரை நேசிக்கப்படும்மனிதர்’. உயர்சாதி எனச் சொல்லப்படும் ஒருவரது காணியை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். சாதீய ஒடுக்குமுறையின் ஒருவகைப் பாதிப்பு இந்த குத்தகை நிலத்திலும் பிரதிபலித்தது. பணமும், சலுகையும் மிக்க அவர்கள் காவற்படையின் உதவியுடன் இவர்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் சண்டைகள் இடம்பெற்று வந்தன. ஒரு தடவை நேரடியாகவே தோழர் நல்லப்பு காவல் அதிகாரியுடனும் முரண்பட வேண்டியதாகிவிட்டது. இதன் பின்பு அவர் தலைமறைவாக வாழ ஆரம்பித்தார். அதன் போது எமது வீட்டிலும் சில நாட்கள் தங்கியிருந்தார். இவர் பயிரிடும் மரக்கறிகளை பண்டத்தெருப்பு பனிப்புலத்தைச் சேர்ந்த வண்டி ஓட்டுனர் மூலமே சந்தைகளுக்கு விநியோகிப்பார். இதை அறிந்த காவற்படை அந்த வண்டியையும் அவரையும் அழைத்து அதனுள் தாங்கள் மறைந்திருந்து இவரது இருப்பிடத்தை அறிந்து கொண்டனர். வண்டி ஓட்டுனர் என வெளிப்பட்ட தோழருக்கு காவற்படையினரும் இருப்பது தெரிந்து பனை வெளிக்குள் ஓட ஆரம்பித்தார். அந்த அன்பு மகனை துவக்கெடுத்து ஓர் காக்கியுடை சுட்டழித்தது. இதன் ரணம் எம் குடும்பத்தை நீண்ட நாட்கள் ஆட்டிப்படைத்தது. தோழர் மணியம் எப்போதும் வெள்ளையுடையுடன், முகச் சவரம் செய்தே காணப்படுவார். ஆனால் இவரது இழப்பால் முகச் சவரம் செய்யாது தாடியுடன் நீண்ட நாட்கள் இருந்தார். அவரது வாழ்நாளில் இரு தடவைகள் மட்டுமே தாடி வளர்த்தார். ஒன்று இது மற்றையது பற்றி பின்னர் சொல்வேன்.

தோழர் நல்லப்புவின் எழுச்சிமிகு மரண ஊர்வலம் சங்கானை நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. அவரது நினைவு மலரில் பல ஆக்கங்கள் இன்றும் என் பிள்ளைகளுக்கு நினைவில் இருக்கும். ஏனெனில் அதை அவர்கள் உரத்த குரலில் திரும்பத் திரும்ப வாசிப்பார்கள். புதுவை இரத்தினதுரை பாடல் வரிகளில்.... நிச்சாமம் தோழர் . நல்லப்பு பற்றிய கவிதை ;
வாய்க்கால் வரம்பருகே வளர்ந்து வரும் செங்கீரை
பூக்காத காவிடையே பூத்த ஒரு செம்பருத்தி......
என்றே உனை நினைந்து இறுமாந்திருந்த வேளையில்
எம் கன்றைத் துவக்கெடுத்து ஒரு காக்கி உடை சுட்டழிக்கும்
என்றா நினைத்திருந்தோம் இல்லையடா இல்லையடா.....”

எனது மூத்த மகன் இராசர் இந் நிகழ்வால் பெரிதும் உடைந்து போனார். அவரது கையெழுத்தில் தோழர் நல்லப்பு பற்றி
எழுதியதை இணைத்துள்ளேன்.

தோழர் நல்லப்பு பற்றி மூத்த மகன் இராசர் எழுதியது

அவரது நினைவு நூல் எம்மிடமிருந்தது. பின் தேசியகலை இலக்கியப் பேரவையினர் எமது இடம் பெயர்வின் பின்னர் எம் பல நூல்களைப் பாதுகாத்தனர். அவர்களிடம் இருக்கக்கூடும். அன்று நான் எழுதிய கவிதையின் ஒரு பகுதி இங்கு....

சிந்தனை விரிந்த பின்பு…. {ஆக்கம் :- தமிழ் மங்கை }

சிந்தனை விரிந்த பின்பு சீறிவரும் உணர்வினாலே
உந்தனை நினைத்தோம் நல்லப்பு என்னும் வீரனே
நிந்தனை செய்தால் போராட்டம் நின்று விடுமோ
வந்தனை செய்வோம் மார்க்சின் வழிவந்தோர் நாமெல்லாம்
அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழல் என்ற வரலாற்றை
காண்பித்தீர் உந்தன் இறப்பதனால்
இரக்கமற்ற ஆயுதப்படை செயலால்
உரமாகி நம்மையெல்லாம் உருவாக்கியே வளர்த்தீர்.
நல்லப்பு என்பவனின் அன்பினால் மனமுருகி
சொல்லப்பு என்ற உடன் சுறுசுறுப்பாய் குழந்தை....
கொல்லப்பட்டிறந்தார் என்றும் கொள்கைப் பிடிப்பினில்
வல்லவனாய் வாழ்ந்தவனின் வாழ்வும் நிறைந்தன்றோ!

இந்தக் காலகட்டத்தில் தான் இரவி, தேவர், சந்திரன், தயாளன் வருகை தோழர் மணியத்திற்கு மருந்தாக அமைந்தது. 1977 தேர்தல் காலம் ஆரம்பமானது. காலையடி கிராமம் தமிழர் கூட்டமைப்பின் பிரதான வாக்கு வங்கிக் கிராமமாக அமைந்திருந்தது. சிறு சிறு முரண்பாடுகள் வந்தாலும், அமிர்தலிங்கம் அவர்களின் அயற்கிராமம் வேறு. சொல்லவேண்டுமா? ஐம்பது, அறுபதுகளில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் கலந்து கொண்ட போதிலும், பின்பாராளுமன்றம் திருடர் குகைஎன்ற கோசத்துடனே பாராளுமன்றத் தேர்தல்களில் ஈடுபாடின்றி இருந்தனர். இந்நிலையில் அந்தத் தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற முடிவுடன் காலையடி மன்ற இளைஞர்கள் வேலைகளை ஆரம்பித்தனர். எனினும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் என்ற முறையில் பிரச்சனைகளை உருவாக்கி ஊர் மக்களின் நல்லுறவை சிதைக்க வேண்டாம் என தோழர் மணியம் வலியுறுத்தினார்.
இருந்தும் இள இரத்தம் பயமறியாது தானே? ஊர் பெரியவர்களின் கூட்டங்களுக்கு மக்கள் செல்வதை தடுக்க முற்பட்டனர். அது சம்பந்தமாக அம் மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தினர். பல முற்போக்கு நாடகங்கள், கண்காட்சிகள், கருத்தரங்கம் என நடத்தி வந்தனர். இரவியும் புதிதாக ஆசிரிய தொழிலில் இணைந்திருந்த வேளையிலும் இதன் பொருட்டு ஊர் திரும்பியிருந்தார். முதலில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையைத் தடுத்த தோழர்
மணியம் அவர்கள், நிலமை எல்லை மீறியதால் அவர் நேரடியாக களத்திற்கு விரைந்தார். தன் பாதுகாப்பின் பொருட்டு கைத்துப்பாக்கி ஒன்றை தன்னுடனே வைத்துக் கொள்வார். அதையிட்டு நான் பயப்படாத நாளில்லை. குழந்தைகளின் கண்களில் படாமல் அதை வைத்திருந்தார்.
அங்கு இரவியின் தாய் மாமன் சண்முகலிங்கம் மாஸ்டர் மற்றும் மிக நெருங்கிய உறவுகளுக்கு எதிராகவே இவ் ஒழுங்கு நடைபெற்றது. நடைபெற்ற தள்ளுமுல்லில் இடுப்பிலிருந்த துப்பாக்கி கீழே விழ அதை ஆமியில் வேலை செய்த ஊரவர் எடுத்துவிட்டார். பிரச்சனையை பெரிதுபடுத்தவேண்டாம் என்ற நோக்கில் தோழர் மணியம் இளைஞர்களை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். துப்பாக்கியை மீண்டும் எடுக்கும் வழி தோழருக்கு தெரியாத ஒன்றல்ல.
துப்பாக்கியை எடுத்தவர்களுக்கு அது பற்றிய போதிய அறிவு இருக்கவில்லை போலும். விசையை அழுத்த உள்ளிருந்த குண்டு கல்லில் பட்டு தெறித்த கற்துண்டு அங்கிருந்த சிறு பையனின் கையில் காயத்தை உண்டு பண்ணியது. பொலிசில் போய் அவர்கள் முறைப்பாட்டை செய்திருந்தனர். இதை உணர்ந்த தோழர் இரவு வீட்டிற்கு வரவில்லை. இந்த இளைஞர்கள் தேவராஜா, தயாளன், இரவி, யோகேஸ்வரன் அனைவரும் எம் வீட்டிற்கு வந்துவிட்டனர். தேனீர் தயாரிக்க உள்ளே சென்ற வேளை வாகனம் உள் நுழைய முடியாத எம் ஒழுங்கையினுள்ஆள்காட்டிஒருவருடன் காவற்படை வீட்டை சுற்றிவளைத்தனர்.....
தொடர்வேன்....

நான் இக்குறிப்பை தோழர் மணியம் மூலமும், இளைஞர்களின் வாய் மூலமும், நான் கண்கண்ட சிலதுமாக எழுதியுள்ளேன். இதன் விபரக்குறிப்பை இரவி விபரமாக எழுதியுள்ளார். அதன் லிங்க் வருமாறு : https://t.ly/26bV

“1977 தேர்தலும் எமது பகிஷ்கரிப்பு நடவடிக்கையும் - அதன் பிரதிபலிப்பும்

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னிறுத்திய நிலையில் மக்கள் அங்கீகாரத்தை வழங்க வேண்டிய தேர்தல் களமாக 1977 பாராளுமன்றப் பொதுத் தேர்தலை அறிவித்திருந்தார்கள். அந்தவேளையில் எமது ஊர் கூட்டணி ஆதரவாளர்கள் அம்மன் கோயில் பிரச்சினை காரணமாக இரண்டுபட்டு இருந்தனர். முன்னர் அமிர்தலிங்கத்தின் கோட்டையாக கருதப்படுகிற எமது ஊரில் தேர்தல் காலத்தில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்துகிற எமதூர் கூட்டணியினரால் இத்தகைய முக்கியத்துவமிக்க சூழலில் அவர்கள் இடையேயான பிளவு காரணமாக ஒரு சிறு கருத்தரங்கைக் கூட நடாத்த இயலவில்லை. அவர்கள் பலவீனப்பட்டிருந்த அந்த வேளையில் எமது கட்சி வேலை மிக மும்மரமாக நடந்து வந்தது. ஊரின் மிகப்பெரும்பாலான இளைஞர்கள் எமது வாலிபர் சங்கத்தில் இணைந்திருந்தனர்.
ஏனையவர்களும் எமது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தனர். அந்த தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற எமது கட்சி முடிவை பிரச்சாரப்படுத்தும் கூட்டம் ஒன்றினைக் காலையடியில் நடாத்த வேண்டும் என்ற எமது வாலிபர் சங்க முடிவை ஊரின் இளம் தலைமுறையின் பலரும் அங்கீகரித்திருந்தார்கள். இந்த முடிவை வாலிபர் சங்கம் எடுத்தபொழுது நான் அங்கு இருக்கவில்லை. பூண்டுலோயாவில் ஆசிரியர் பணியில் சேர்ந்திருந்த ஆரம்பகாலமது.

நான் ஊர் வந்து தோழர் மணியத்தை சந்தித்த பொழுதுவாலிபர் சங்கம் முடிவு குறித்து கட்சியின் வட பிரதேசக் குழுவுக்கு உடன்பாடு இல்லை, மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள் எனக் கோரப்பட்டுள்ளதுஎனக் கூறியிருந்தார். அப்போது எமது ஊர் சார்ந்து நான் மட்டுமே கட்சி உறுப்பினர். நான் அங்கம் வகித்த சங்கானைக் கிளையில் இவ்விவகாரம் பேசப்பட்டது. அங்கும் எமது கட்சியின் முதல்கூட்டத்தை உங்களூரில் நடாத்துவதற்கு இது ஏற்புடைய தருணமாக இருக்காது என்ற முடிவே ஏகமனதாக முன் வைக்கப்பட்டது. இந்த அறிவுறுத்தல்களுடன் மீண்டும் எமதூர் வாலிபர் சங்க கிளையைக் கூட்டும்படி கோரி கட்சி நிலைப்பாட்டை முன்வைத்தேன். மிகப் பெரும்பாலானவர்கள் கூட்டத்தை நடாத்தியாக வேண்டும் என விடாப்பிடியாக இருந்தனர். பெரும்பான்மை முடிவு காரணமாக கட்சி பின்னர் தலையிடவில்லை. கூட்ட ஏற்பாடுகள் முனைப்பாகி மேடை நிர்மாண வேலைகள் மும்முரப்பட்டிருந்த பொழுதே கூட்டணிக்கார குழப்பகாரர் குறுக்கீடுகளைத் தொடங்கிஇரத்த ஆறு ஓடும்என்ற எச்சரிக்கைகளை விட்டபடி அங்கும் இங்குமாக போக்குக்காட்டி ஊடறுத்துக்கொண்டு உலாவினர். அவர்கள் அனைவரும் என்னை மிக நேசிக்கும் உறவினர்.
இருந்தும் கொள்கை முரண்பட்டிருந்தோம். நிலைமை மோசமாகும் எனத் தெரிந்த போது கிருஷ்ணதாசனும் வேறொரு தோழரும் தோழர் மணியத்திடம் ஆலோசனை பெறச் சென்றனர். நான் சங்கானை நிச்சாமம் சென்று கட்சிக்கிளைத் தோழர்களைச் சந்தித்தேன்.
தருமண்ணையும் வேறோரிரு தோழர்களுமாக கலந்துரையாடினோம். அவ்வளவுடன் ஏற்பாடுகளை நிறுத்தி கூட்டத்தை வேறொரு நாளுக்கு பின்போடுவதாக அறிவித்து விடலாம் என சங்கானைத் தோழர்கள் முடிவு தெரிவித்தனர். கூட்ட களத்துக்கு நான் திரும்பி நிலைமையைச் சொன்னேன். கிருஷ்ணதாசன் தோழர் மணியம் அவர்களுடன் உரையாடல் எப்படி இருந்ததென்பதைச் சொன்னார்.
முன்னரே இப்படி ஆகும் என்பதைக் கூறிக் கூட்டத்தைக் கைவிடுங்கள் என்று ஆலோசனை சொன்னோம்; நடாத்தியே தீருவோமென்று முனைந்தீர்கள். இப்போது வெருட்டலுக்குப் பயந்து கைவிடுவதா? இல்லையா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்என்று மணியம் தோழர் சொன்ன பொழுது, எமது தோழர்கள் இல்லைப் பின் வாங்குவது தவறாக அமையும் என்று கூறிவிட்டு வந்திருக்கிறார்கள்.

பல தோழர்கள் மிகுந்த உறுதியோடு வேலைகளில் ஈடுபட்டபடி.... கூட்ட நேரம் நெருங்கிவிட்டது. தமது அச்சுறுத்தலுக்குச் சளைக்காமல் கூட்டத்தை நடாத்தப்போகிறார்கள் என்பதை அந்தக் சண்டித்தன உறவினர்கள் புரிந்து கொண்டு மதுவருந்தி முறுக்கேறியவர்களாக வந்து சண்டித்தனத்தில் இறங்கினர். கைகலப்பு வலுத்தது. முற்றிலும் எமது வாலிபர் சங்க தோழர்களே எதிர் தாக்குதலை நடாத்தி அவர்களை முறியடித்துக் கொண்டிருந்தோம். நான் கூட்டத் தளத்திலிருந்து சற்று தூரமாக ஒரு தரப்புடன்; அங்கே குழப்ப வந்ததில் தலைமை தாங்கிய எனது மாமாவும், இன்னொரு ஒன்றுவிட்ட மாமாவும். அவர்களால் என்னைத் தாக்கவும் முடியாமல் பின்வாங்கிப் போய்க்கொண்டிருப்பதில் அவர்களைக் கலைப்பதில் எனது கவனம்.அந்த வேளை கூட்டக் களத்துக்கு தோழர் மணியமும் சங்கானைத் தோழர்களும் வந்திருந்தனர்.
எமது தோழர்களே எதிரிகளை முறியடிப்பர் என்ற நிலையில் சண்டையில் கலக்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஆயினும் வெறியேறிய சண்டித்தன உறவினர்கள் வலிந்து இவர்களை மல்லுக்கட்டிப் பிடித்திழுத்தபொழுது அரையில் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி கீழே விழுந்துவிட்டது. நிலைமையை விளங்கிய தோழர்கள்
அங்கிருக்க வேண்டாம் என முடிவு செய்து திரும்பி விட்டனர். கீழே விழுந்த துப்பாக்கியை மீளப்பெறுவதோ, வெறியேறிய அக்காடையர்களைத் தாக்குவதோ வந்திருந்த சங்கானைத் தோழர்களுக்குப் பெரிய விடயம் கிடையாது. நீண்ட காலத்தில் கொம்யூனிஸ்ட்டுகளாக நாங்கள் எமது சொந்தப் பலத்தில் முன்னேற வேண்டும்என்ற ஒரே நோக்கத்தால் களத்தை விட்டு வெளியேறினர். பின்னர், ஊருக்குள் அவர்கள் வராமலே மரியாதையுடன் கைத்துப்பாக்கியை எம்மிடம்
சேர்த்துவிட வேண்டும் என்ற ஒரு சொல்லுக்குப் பயந்து இவர்கள் அதனைக் கொண்டு போய்க் கொடுத்தவர்கள்தான். கைத்துப்பாக்கியை எடுத்து வந்தவர்கள் நடையர் கடையடியில் அதனை இயக்க முனைந்த பொழுது வெடிக்கவில்லை. “விளையாட்டுத் துவக்கை வெருட்டக் கொண்டு வந்திருக்கிறாங்கள்என்று சொல்லி ஓங்கி விசுக்கி விசையை அழுத்தி குலுக்கிய போது வெடித்த சன்னம் நிலத்தில் மோதிப்பறந்தது. மண்ணிலிருந்து பறந்த கல்லொன்று பக்கத்தே இருந்த சிறுவனின் கையில் சிராய்த்துப் போனதில் இரத்தக் காயமானது. உடனே அவனை எடுத்துச் சென்று பொலிசில் நாங்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஏற்பட்ட காயமென்று முறைப்பாடு செய்து சங்கானை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தனர். காவல்துறையில் முறைப்பாடு போயிருக்குமென எங்களுக்குத் தெரியும். ஆயினும் தோழரை இணைத்திருப்பர் என்று நினைக்கவில்லை. அவருடன் ஆலோசிப்போம் என்று அவர் வீட்டுக்குச் சென்றோம். அவர், முறைப்பாட்டை தன்னை இணைத்தே கொடுப்பர் என முன்னனுபவங்களால் புரிந்தவராதலால்
வீட்டுக்கு வரவில்லை. நாங்களோ அந்தளவு தெளிவற்றவர்களாக அவரது வருகைக்காக காத்திருந்தோம். ஒரு ஜீப் தான் வந்தது. பொலிசுக்கும் எங்களைவிட அவரைப் பிடிப்பதே அரசியல் முக்கியத்துவம் மிக்கது என்பது தெரிந்திருந்தது. நாலைந்து காவலர்கள் படலையைத் திறந்து உள்ளே வந்துமணியம் எங்கே, நீங்கள் யார்?” எனக் கேட்டனர். அவர்
இங்கு இல்லை, அவரைப் பார்ப்பதற்கு வந்தவர்கள் நாங்கள் என்றோம். ‘உன்னுடைய பெயரென்ன?’ என்று முதலில் தயாளனை ஒரு காவலர் கேட்டார். கதிரையில் வைத்திருந்த தனது சேர்ட்டைப் போட்டு தெறிகளைப் பூட்ட நேரமெடுப்பது போலப் பாவித்து நிதானமாகரா....நா..தன்என்றான்.அப்படி அவன் செய்ததால் எனக்குத் தெரிந்தது சொந்தப் பெயரைச் சொல்லக் கூடாது என்பது. அடுத்து என்னைக் கேட்ட பொழுதுநடேசன்என்றேன். மூன்றாவதாக
தேவரும் வேறு பெயரைத்தான் சொன்னார். நாலாவதாக யோகேஸ்வரன் சொந்தப் பெயரையே சொல்லிவிட்டார். கூட்டத்துக்கு வரவிருக்கும் தோழர்களை பஸ்ஸிலிருந்து அழைத்து வருவதற்காக அரசடிக்கு அவர் போயிருந்த பொழுதுதான் சண்டை நடந்தது. தனது பெயர் முறைப்பாடு செய்யப்பட்டிருக்காது என்று அவர் நினைத்து விட்டார். உடனே ஒரு காவலர், இந்தப் பெயர் இருக்கு எனக்கூறி யோகேஸ்வரனை அழைத்தார். இன்னொருவரோமணியத்துடன் நாலு பேர் மேல் தானே முறைப்பாடு உள்ளது. நாலு பேரையும் கூட்டிப் போவோம்என்று எல்லோரையும் அழைத்துப் போனார். ஜீப்படியில் போய் ஏற முற்பட்ட பொழுது, வீடு காட்ட அழைத்து வரப்பட்ட முறைப்பாட்டுக்காரரில் ஒருவரான எமது ஊரவர் ஒருவர் எங்களைக் காட்டி, ’இவர்கள் தான் ஆட்கள் என்றார்’. பொலீஸ் நிலையத்தில் இறக்கப்பட்டு வாங்கொன்றில் இருத்தப்பட்டு பதிவுக்காக விசாரணை! முதலில் என்னிடம்உன்னுடைய பெயர் என்னஎன்றார். ‘ரவீந்திரன்அடிக்கப் போவதாக பாவனை காட்டிய போதிலும் அடிக்காமல் விளக்கம் கேட்டார். நான்ஓம்என்னுடைய முழுப்பெயர் நடேசன் ரவீந்திரன்என்றேன். என்னுடைய முழுப்பெயர் சமயோசிதத்தால்தான் அடி விழவில்லை என்று அப்போது நினைத்தேன்.பின்னர் தான் தெரியும், நாங்கள் கைதாகிக் கொண்டு செல்லப்பட்டதும்
மணியம் தோழரின் குடும்பத்தவர்கள் அருகிலிருந்த ராஜசுந்தரம் சேரிடம் சென்று விடயத்தைக் கூறி இருக்கிறார்கள். அவர் சிபார்சு காரணமாகவே நாங்கள் தாக்கப்படாமல் இருந்திருக்கிறோம். மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நால்வருக்கும் ஒரு வாரம் விளக்கமறியல். அந்த இடைக்காலத்தில் நடந்த தேர்தலின் பொழுது தேர்தலைப்
பகிஷ்கரிக்க கூட்டம் நடாத்த எத்தனித்து சிறைப்பட்டிருந்த நால்வரின் வாக்குகளும் பிரிவினையை அங்கீகரிக்கும் மக்கள் ஆணைக்குரிய கணக்கெடுப்புக்குள் கொண்டுவரப்பட்டு இருந்தது. ஓமோம், கூட்டணிக் களவாணிகள் எங்களது வாக்குகளையும் ஆள் மாறாட்டத்துடன் தாங்களே போட்டிருந்தனர்.

ஒரு வாரத்தில் நாங்கள் பிணையில் விடுவிக்கப்படும் வரை தோழர் மணியம் தலைமறைவாக இருந்து பின்னரே வெளிப்பட்டு அவரும் ஒரு நாளில் பிணை பெற்றார். காயம்பட்டவர் துப்பாக்கிச் சன்னத்தால் அன்றிக் கல்லுப்பட்டுத்தான் என்ற வைத்திய அறிக்கை வந்திருந்தது. தவிர, கைத்துப்பாக்கியைமரியாதையாகசங்கானைத் தோழர்களிடம் கொண்டு போய்க் குடுத்துவிட்டதைப் போலவே எமக்கெதிராக சாட்சி சொல்லத் திராணியையும் அவர்கள் பெற்றில்லை என்பதனால் வழக்கு ஒரு வருடமளவில் இழுபட்ட பின்னர் தள்ளுபடியானது. அந்த நிகழ்வில் மணியம் மற்றும் சங்கானைத் தோழர்கள் நாங்களே எங்கள் பலத்தில் போராட விட்டுப் போனதாக அல்லாமல் அன்றைக்கு அவர்களே களமாடி இருப்பின் எமதூர் குடிகாரக் கூட்டம் அன்றைக்கே ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருப்பர். அதை வழக்காக ஆக்க முயற்சித்திருக்கவும் மாட்டார்கள். பின்வாங்கிப் போனதைப் பலவீனமெனக் கருதித்தான் தமிழீழம் காண முற்பட்ட அவர்கள் ‘‘சிறீலங்கா பொலிசில்எங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தனர். வெறி முறிந்து நிதானத்துக்கு வந்து, அடுத்தடுத்த நாட்கள் ஊருலகத்தில் நடமாடத் தொடங்கியபோதே சங்கானைத் தோழர்களுடன் சேட்டை விட முடியுமா என்ற யதார்த்தம் எமதூர் பிரிவினை வீரர்களுக்குத் தெரிந்துமரியாதையாககொண்டு போய்த் துப்பாக்கியைக் கொடுத்திருந்தனர். எம்மைச் சுயமாக களமாடி அனுபவம் பெற இடமளித்துடன் எமக்குப் பின்பலமாக இருந்து பல வகை
உதவிகளையும் சங்கானைத் தோழர்கள் செய்தமையாலேயே நாங்கள் பலமான கொம்யூனிஸ்ட்டுகளாகத் தொடர்ந்து முன்னேற முடிந்தது. நான் பலரிடமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கிறேன்நான் ஒரு கொம்யூனிஸ்ட்டாக நீடித்து இருக்க இயலுமானதற்கும் தொடர்ந்தும் உயிருடன் உலவ முடிவதற்கும் நிச்சாம - சங்கானைத் தோழர்களே காரண கர்த்தாக்கள்என்பதாக!

நிச்சாமத்துக்கென் வணக்கம்!

27

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. 1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச்சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்பட்டது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்து பெருந்திரளான மக்கள் சென்று பார்த்து வந்தனர். தமிழ்நாட்டு அறிஞர்களுடன் எங்கள் நாட்டு அறிஞர்களும் பங்கு பற்றினர். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து அறிஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

எனது மாணவிகளுக்கும் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பிறந்து விட்டது. தோழர் அந்த நாட்களில் அரசியல் வேலை அதிகமானதால் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மாணவர்களுடன் செல்லும்படி சொன்னார். அதன்படி இறுதி நாள் நிகழ்ச்சிக்கு சகலரும் புறப்பட்டுச் சென்றோம். காரைநகரில் இருந்து சங்கானை போகும் பஸ்சில் சனநெரிசல் அதிகமாக இருந்தமையால். புன்னாலைச் சந்தியில் போய் இறங்கி அங்கிருந்து யாழ் போகும் பஸ்சில் போனோம்.
அன்று சிறு மழையும் தூறிக் கொண்டு இருந்தது. நாங்கள் முத்த வெளிக்குப் போகாது ஒரு புடவைக் கடைக்குள் ஒதுங்கினோம். சிறிது நேரத்தின் பின்னர் வாண வேடிக்கை போன்ற பெரிய வெடிச் சத்தத்தைத் தொடர்ந்து சனங்கள் அங்கும், இங்கும் ஓடுவதைப் பார்த்தோம் ஏதோ... ஒரு பெரிய அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டும் என்ற கிலேசமும் உண்டானது. நாங்கள் எப்படியும் அத்தனை குமர்ப் பிள்ளைகளையும் பெற்றாரின் கையில் ஒப்படைக்க வேண்டிய பாரிய பொறுப்பு எனக்கு அந்தப் புடவைக்கடைறகுமானியாஎன்ற பெயரில் நீண்ட காலம் வியாபாரம் செய்யும் வர்த்தகர்கள். அவர்களே எங்களுக்கு ஒருலாரிஒழுங்கு செய்து தந்தார்கள். எனது மூத்த மகன் மிகச் சிறியவர். பதினொரு வயதுகள் நிறைந்த சின்னப் பையன் தான் காவல். லாரி ஓட்டுனருடன் உதவிக்கும் சிலர் வர முயன்றனர். அவர்களின் பேச்சும், நடத்தையும் சரியாக இருக்கவில்லை என முறைப்பாடு செய்தார். அதனால் அவர்களை நிறுத்தி இரு உதவியாளர்களுடன் அந்த வாகனத்தில் ஏறி நாமெல்லோரும் ஊர் வந்து சேர்ந்தோம். ஒவ்வொரு பிள்ளையையும் பெற்றாரின் கைகளில் ஒப்படைத்த திருப்தியில் உறங்கி விட்டோம்.
மறுநாள் காலைப் பத்திரிகையில்மின்கம்பி அறுந்து விழுந்ததனாலும், சனங்களின் கால்களால் உழக்குப் பட்டதனாலும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பதினொரு பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு
நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர் எனச் செய்தி வெளியாகியதாக தோழர் சொன்னார். எங்கள் வீட்டிற்கு அயலில் உள்ள கேசவராஜா என்ற மாணவனின் பெயரும் அதில் இடம் பெற்று இருந்தது. வாசித்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனோம். மிகவும் கெட்டிக்கார பிள்ளை. தாயின் கதறல் ஊரிலுள்ள அனைத்துத் தாயாரும் தங்கள் குழந்தையை இழந்ததாக எண்ணி வருந்தினர். தொல்புரம் மத்தி நிலையப் பிள்ளைகளும் திறமையும், நல்லொழுக்கமும், கீழ்ப்படிவும் உள்ள நன்மாணாக்கர்களாக விளங்கினர். நான் முன்பு சில மாதங்கள் கடமையாற்றிய வடலியடைப்பு, வழக்கம்பரை காந்திமகான் ஞாபகார்த்த் நிலையம் போன்ற இடங்களில் வேலை செய்த பிள்ளைகளும் எங்களை மறக்க முடியாமல் வந்து போவார்கள். அவர்களில் சிலர், தங்கள் பிள்ளைகளுடன் வெளிநாட்டிலும், மற்றையோர் நாகேஸ்வரி கோவிலர், பகவதி செல்லர், புஷ்பராணி முத்துக்குமாரு, வள்ளியம்மை செல்லத்துரை, ஸ்ரீரஞ்சனி இராமமூர்த்தி, சோதிமணி கதிரவேலு, பவளமலை முருகேசு, பொன்மலர், மகாலட்சுமி வைத்திலிங்கம், தில்லைநாயகி, சகுந்தலா சகோதரிகள், செல்வநாயகி, அருந்தவநாயகி, சரஸ்வதி ஐயாத்துரை, சற்குணவல்லி, நா.சரஸ்வதி, நா.அன்னம் (இந்தப் பிள்ளையை IPKF காலத்தில் அநியாயமாகச் சுட்டு விட்டார்கள்) சாந்தநாயகி, ரஞ்சி தேவானந், சுசீலா தவராசா இன்னும் சிலர் 1971ல் மாற்றலாகி வந்ததிலிருந்து இற்றை வரை, நாங்கள் தொல்புர வாசிகளாகவே இருக்கிறோம்.

இடையில் மூளாய்க்கு மாற்றல் வந்தபோதும் அத் தொடர்பு நீள்கிறது. புதிய பதிவின் பிறகு எம் வீடு சுளிபுரம் தெற்கு, தொல்புரம் மேற்கு, சுளிபுரம். தொல்புரம் கிராம எல்லைக்குள் இணைக்கப்பட்டது. வழக்கம்பரை முத்துமாரி ஆலயந் தொடக்கம் பன்னமூலை, வட்டு மேற்கு, மடத்துக்கரை, டச்சுறோட்,மூளாய் கிழக்கு, பாணா வெட்டி, கொற்றாவத்தை, சுளிபுரம் சந்தி, மன்ன தோட்டம் ஆகிய குறிச்சிகளை எல்லையாகக் கொண்டது. பெரியதும், சிறியதுமாக பதின்மூன்று கோவில்களும், ஐந்து பள்ளிக் கூடங்களும், ஒரு டிஸ்பென்சரியும், ஒரு சந்தையும், மூன்று வாசிகசாலைகளும் இங்கு உண்டு. இங்குள்ள மக்கள் அநேகர் நன்கு கற்று அரசாங்கத்தொழில் புரிபவர்களகவும், சிலர் வைத்தியசாலைகளில் கடமை ஆற்றுபவர்களாகவும், ஒரு சிலர், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களாகவும், வேறு சிலர் உள்ளூரிலேயே கட்டிடங்களை நிர்மாணஞ் செய்யும் தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் விளங்குகின்றனர். அநேகருடைய சமயம் இந்து சமயமாகவே இருக்கிறது. இங்கு வாழ்கிற மக்கள் நிறைந்த தெய்வபக்தியும், நன்றி மறவாமையும் கொண்டவர்கள். புதிதாக வந்தோரை மதித்து அயலவராக ஆபத்து வேளைகளில் ஓடிச் சென்று உதவும் பரோபகார சிந்தை கொண்டவர்களாகவும் வாழ்கின்றனர். அதனால் இக்கிராமத்தில் திருடர்கள் பயமும் கிடையாது. முப்பது வருடங்களின் முன்னர் இருந்த ஒரு சில மண்வீடுகள் இப்போ கல்வீடுகளாக மாறி உள்ளன. கல்வியிலும், செல்வத்திலும் தன்னிறைவு கொண்ட மக்கள் இங்கு வாழ்வதால் பசி, பட்டினி என்ற சொல்லுக்கே இடம் கிடையாது.

எனது மாணவிகளாக இருந்தவர்களில் இருவர் இறந்து விட்டனராம். ஒன்பது பேர் வெளிநாடுகளில் வாழ்கிறார்களாம். குடும்ப நண்பர்களாக அன்று தொடக்கம் இன்று வரை வாழ்பவர்களில் அமரர் சிவப்பிரகாசம், அன்னபூவதி இணையர்களின் பிள்ளைகள் விஜயலட்சுமி, விஜயகுமார், விஜயராணி (பொன்னார் ரீச்சர்), விஜயமாலா, விஜயரஞ்சனி , அம்பிகா, கண்ணன், டாக்டர் தாரணி வரை சகலரும் எமது உறவுக்கும் மேலாக அன்பும், பாசமும் கொண்டவர்கள். விஜயகுமார் யாழ் மாவட்டம் முழுவதும் விரும்பிக் கேட்டு மின்னிணைப்பை செய்து கொடுப்பவராக விளங்குகிறார். அவர் மகன் இம்முறை .பொ. உயர் தரத்தில் அகில இலங்கை ரீதியில் முன்னணியில் வந்து எமக்கு பெருமை தேடித்
தந்துள்ளார். மாணவிகளாக விளங்கியவர்களில் நாகேஸ்வரி கோவலர் குடும்பமும், ரஞ்சினி குடும்பமும் நட்புடன் விளங்குகின்றனர். “மாபிள்ஸ்என்ற தொழில்நுட்ப நிறுவன உரிமையாளர்களான கிருஷ்ணசாமி ரகுலிங்கம், சந்திரிகா ரகுலிங்கம், அவர்களது பிள்ளைகள் டாக்டர் விஷ்ணுப்பிரியா, அரவிந்தன் அவர்களும் அன்று போல் இன்றும் பாசப்பிணைப்புடன் விளங்குகிறார்கள். தொல்புரத்தில் பிறந்து வளர்ந்தவர்கள், பிறந்த மண்ணிலே பற்பல மறக்க முடியாத, காலத்தால் அழியாத வரலாற்றுச் செயல்களை, நிகழ்ச்சிகளை செய்து வைத்துப் போய் இருக்கிறார்கள். அவர்களுள் காரைநகர் கோவள வெளிச்ச வீட்டினைக் கட்டிய மேஸ்திரி மீசை நாராயணர், இந்தியாவிலிருந்துசீன்எனப்படும் திரைச்சீலைகளை இறக்குமதி செய்து எம் நாட்டில் வரலாறு சம்பந்தமான இயல், இசை, நாடகங்களை மேடை ஏற்ற ஊக்குவிப்பு நல்கியசீன் செல்லையாஎன அழைக்கப்படும் அமரர் திரு.செல்லையா.

அடுத்து தனது கல்லூரி ஆசிரிய சேவைக்கு மேலாக, உள்ளூரில் உள்ள மாணவர்களுக்கு தன் வீட்டில் இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் அருள்மிகு சின்னம்மன் ஆலயத்தில் பஷணை நடாத்தி தேவார, திருவாசகங்களை ஓதுவார் மூர்த்தியாகவும் கடமையாற்றிய அமரர் திரு. சின்னத்துரை ஆசிரியர் அவர்கள். அடுத்ததாக சிறு வயதிலேயே ஆர்மோனியம் வாசிக்கும் திறமையினால், கிராமத்திலுள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்து வரலாற்று நாடகங்களைப் பழக்கி அவற்றை ஆலய முன்றலில் மேடை ஏற்றி ஊரவர்கள் வந்திருந்து பார்த்து மகிழ வைத்த பெருமைக்கு உரிய ஆசிரியர், அதிபர் அமரர் திரு.நா. முருகையா ஆசிரியர் ஆவார்.
அவரிடம் பாடங் கேட்ட பெருமையும் எனக்குண்டு. ஆசிரியரின்குந்தியின் செல்வன்என்ற புராண நாடகம் ஒரு சிவராத்திரி நித்திரை விழிப்பிலன்று சின்னம்மன் ஆலயத்தில் மேடை ஏறுகிறது. தன் குழந்தை கர்ணனை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் மிதக்க விடும்போது அந்தத் தாய் சொல்லி அழும் வார்த்தைகள் கல் மனதையும் கரைக்க வல்லது.

இந்தக் கட்டத்தில் முருகையா வாத்தியாரின் ஆர்மோனிய வாசிப்பில் எழும் சோகப்பாடல் அலாரிப்பு அவருக்கு நிகர் அவரே தான். அவரது அடியொற்றி மு.சடாச்சரம் என்பவர் திகழ்கிறார். முருகையா அதிபர் அவர்கள் பிறந்த நாட்டை விட்டு கனடா, மொன்றியல் மாநிலத்தில் வாழும் போதும் சென்ற இடமெல்லாம் தனது திறமையை வெளிப்படுத்தும் செயலில் மும்முரமாக இயங்கி வந்திருக்கிறார். அந்த மாநில ஆளுநர்கள் இவரைப் பாராட்டி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த விபரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன. இவரைப் போலவே இவரது துணைவியார் திருமதி விசாகபூசணி
ரீச்சரும் மிகத் திறமைசாலி தான். அவவைப் போலவே அவவின், சகோதரங்கள் பாங்கர் குகபூசணி இராமலிங்கம், ஆசிரியை ஒருவர் (பெயர் மறந்து போச்சு) துளசி, சைலொளி பவன் கந்தையா, கோமதி.....இன்னும் சில சகோதரங்கள் சகலரும் கல்வி, கேள்விகளிற் சிறந்து விளங்கியவர்கள். அதே போலவே முருகையா, விசாகபூசணி இணையர்களின் பிள்ளைகளும் கல்வி, சங்கீதம், நடனம், விஞ்ஞானம், மிருதங்கம் இவற்றில் சிறந்தவர்கள். இவர்களின் மூத்த மகன் தான் ரஷ்ய நாட்டுப் புலமைப் பரிசில் பெற்றுக் கற்ற பின் கனடா மூர்த்தி என்ற மதிப்புடன் சிங்கப்பூர் நூலகம், ஒளிபரப்பு சேவை இவற்றில் கடமையாற்றிய மு.நாராயணமூர்த்தி யாவார். ஒரு தடவை அதாவது நான் சிங்கையில் இருந்த காலத்தில்... சிங்கை நூலகத்தில்காலச் சக்கராஎன்ற நிகழ்ச்சியை இந்தக் கனடா மூர்த்தி வெற்றிகரமாக ஒழுங்குபடுத்தி நிறைவேற்றிக் காண்பித்தார். சிங்கப்பூர் நாட்டிற்கு வருகை தந்திருந்த ரஷ்ய பேராசிரியரின் ரஷ்ய மொழி உரையைத் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார். எனக்கு அதைப் பார்க்க எவ்வளவு பெருமையாக இருந்தது.அவரைப் போலவே அவரது தங்கைமாரும், தம்பியும் கல்விமான்களே. பெரிய தங்கை ஜெகதாம்பிகை கிருபானந்தமூர்த்தி, லலிதாம்பிகை (கனடா), சாரதாம்பிகை (ஜேர்மனி), விசாகதாசன் (கனடா), இவர்களும்புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’ என்ற முதுமொழிக்கமைய சங்கீத, நடன வல்லுநர்களே. இவர்களது வாரிசுகளும் வரலாறு படைக்கும் செயல்களில் தம்மை ஐக்கியப்படுத்தி இருப்பது பாராட்டிற்கு உரியது.

தினமும் முகநூலில் நாளொரு வெண்பாவோ கலிப்பாவோ எழுதி எமது ரசனைக்கு விருந்தளிக்கும் ஓய்வு பெற்ற வங்கியாளர் திருமதி குகபூசணி இராமலிங்கம் அவர்கள் கொஞ்ச நாட்கள் அமரர் டாக்டர் தம்பையா அவர்களிடம் சிங்கள மொழி பாடங்கேட்டு பேறு பெற்றவராவார். அன்னார் டாக்டர் தம்பையா உலகப் பொதுமறையாம் திருக்குறளை சிங்கள மொழியில் மொழி பெயர்த்த பெருமைக்கு உரியவராவார். காரைநகர் கோவள வெளிச்ச வீட்டினைக் கட்டி முடித்த, பெருமைக்கு உரியவர் மீசை நாராயணர் என்ற மேஸ்திரி மேதை ஆவார். அவரது வாரிசு வழியில் சீன் செல்லையாவின் மகளாகப் பிறந்த சர்வ ஐஸ்வரியம் என்ற மகளும், திரு. சின்னத்துரை ஆசிரியரின் வாழ்க்கைத் துணைவியாராக வாழ்ந்த அமரர் நந்தபாலன், மதி என்ற நந்தாவதி, லதா என்ற ஜெயாவதி, ஜெயாவர் என்ற நான்கு பிள்ளைச் செல்வங்களின் அன்னை ஆவார். (இதில் அவர் மகன் நந்தபாலன் சிறப்பான மெக்கானிக், சிறந்த வண்டி ஓட்டுனர். அவரை புலி ஆயுததாரிகள் அநியாயமாகச் சுட்டு அழித்தனர்.) அன்னாரது துணைவியார் பிள்ளைகள் கனடா நாட்டில் வசிக்கிறார்களாம். எனது தந்தையார் சிறு பையனாக இருந்த காலத்தில் அவரது தந்தையாரிடம் மேஸ்திரி மீசை நாராயணர் வருவாராம். அவர்சகுந்தலை சரித்திரம்என்ற நாடகத்தையும் நடித்தவராம்.

அவர் கூறிய ஒரு பழைய வரலாற்றுக் கதை ஒன்று உண்டு. அதாவதுமுற்குகன்என்ற பெயருள்ள மீனவர் ஒருவரின் மீன் வலையில் ஆமை ஒன்று அகப்பட்டதாம். அதனைக் கரையில் விடலாம் என்று அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வி கண்டனவாம். அந்த ஆமையானது ஓடிச்சென்று கடலுள் மறைவதனால் அந்த மீனவர் களைத்துப்
போனாராம். அப்போது அசரீரி ஒன்று கேட்டதாம்ஆமை பிடுப்பவர் மல்லாத்துவர். நாமது சொன்னால் பாவம்என்று.
உடனே அந்த மீனவர் ஆமையைப் புரட்டி விட்டாராம். அப்படியே நிலத்தில் உறைந்து போன ஆமையை அசைக்கவே முடியவில்லையாம். அத்துடன் அதன் நிறமும் பொன்னாக மாறி விட்டதாம். அதுவே பொன்னாமை காலப்போக்கில்பொன்னாலைஆனதாம்.

* இந்த வரலாற்று உண்மை மீசை நாராயணர் என்ற பெரியாரின் வாயிலாக கேட்டறிந்து என் தந்தையார் எனக்குக் கூறிய
சரித்திர உண்மைஆகும். இதனை விட, மீகாமன், வெடியரசன், வேலுப்பிள்ளை, வைத்தியப்பா போன்ற நாடக நடிகர்கள் வாழ்ந்த மண்தான் தொல்புரம் என்ற பழம்பதியாகும்.

நாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த, வைத்தியம் கந்தப்பு அவர்களும் கிராம மக்கள் நோயுற்ற போது வைத்தியம் செய்து சுகப்படுத்திய கைராசிக் காரராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவரது வாரிசுகளாக கச்சேரி யோகேஸ்வரனும், தங்கை கோமகளும் திகழ்கிறார்கள். நினைவை விட்டு அகலாதவர்கள் இன்றுவரை ரீச்சர்என்று சொல்லியபடி என்னை வந்து பார்த்துப் போகிறார்கள். தியாகு வாத்தியார் என நாங்கள் அன்புடன் அழைக்கும் கிருஷ்ணர் அவர்களின் மகன் நடராஜா, தான் தலைவராக இருக்கும் தொல்புரம் சர்வோதயம் அமைப்பில் வந்து உரையாற்றும் படி பல தடவைகள் கேட்டிருந்தார். சில ஆண்டுகாலம் அந்த ஊரில் உள்ளவர்களுடன் என்னையும் இணைத்துக் கொண்டேன். அந்த மாணவிகள் என்னைத் தங்கள் உறவாகவே கருதிப் பழகினார்கள். இன்றும் பழகுகிறார்கள். எங்கள் சத்தியமனையில் இருந்து மிக அருகில் அமைந்திருக்கும் சர்வோதயத்தில் தான் என் பேத்தி சுபாரா சிறுவர் கல்வியைத் தொடங்கினார். நான் தான் அவரைத் தூக்கிச் செல்வேன். அதிலிருந்து ஆரம்பித்த சர்வோதய உறவு இன்றும் தொடர்கிறது.

பொக்கணைஎன்ற பொது நிலத்தில் விளையாட்டுப் போட்டிகள், சர்வோதயம் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி, சமூக விளையாட்டுத்திடல், பெரியவர்களுக்கு கருத்தரங்கம், இசைப்பயிற்சி என்பன வழங்க எல்லோரும் இணைந்து செயற்பட்டு வருகிறார்கள். இந்த ஊரின் சமூகக் கட்டமைப்பும், ஒழுக்கநெறியும்
ஆச்சர்யத்திற்குரியதே!
தொடர்வேன்....

28

மகனின் சிறுபொறி கையெழுத்துப் பத்திரிகை

நாங்கள் தொல்புரத்தில் வாழ்ந்த காலத்தில் அதாவது 1975ம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஆடி மாதம் திகதி ஞாபகம் இல்லை. (ஜூலை 2) ஒரு மாலைப் பொழுதில் அயலவர்கள் சொன்னார்கள். அதுபொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய முன்றலில் மாநகரசபை முதல்வர் திரு அல்பிரட் துரையப்பா சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்
என்ற செய்தியாகும். மறுநாள் காலை, செய்திப் பத்திரிகையில்வழமை போல ஞாயிற்றுக்கிழமைகளில் பொன்னாலையில் அமைந்த விஷ்ணு ஆலயத்திற்கு யாழ் நகரசபை முதல்வர் வழிபாட்டிற்கு வருவார்என்று அறிந்திருந்த ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் சுட்டுக் கொன்றதாகவும், போலீசார் புலன் விசாரணை நடத்துவதாகவும் செய்தி வெளி வந்தது. என்னுடனும், என் கணவருடனும் வந்து பழகும் சுந்தரத்திற்கும், சந்ததியாருக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்பது அன்றைய பொழுதுகளில் எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஜே.வி.பி தெற்கில் கிளர்ச்சி செய்ய, வடக்கில் புதிதாக இதென்ன களேபரம் என மனது பதைபதைத்தது.

1975ம் ஆண்டின் இறுதியில் இந்தச் சத்தியமனைக்கு மெது மெதுவாக அங்கும் இங்குமென குடியிருக்க வந்து விட்டோம். முன் வீட்டு தம்பி, செல்வம் என்று அழைக்கப்படும் நாகராசா தனது வண்டில் மூலம் எமது வீட்டுத்தளபாடங்களை இரண்டு தடவைகளில் கொண்டு வந்து இறக்கினார். எங்கள் சத்தியமனை தனி நபருக்கான ஒழுங்கையில் அமைந்திருந்தது. ‘அப்பச்சியார்என்ற என் தந்தையின் நண்பரான தொழிலாளி, கொஞ்சம் வசதியாகவே வாழ்ந்திருக்கிறார். பின்னர் ஏற்பட்ட நோய் அவரை வறுமைக்குள் நிறுத்தியது. அவரது நாற்சார வீட்டின் முன் கதவு நிலைகளில் உள்ள சிற்பங்கள் என் தந்தையால் செய்யப்பட்டவை. அப்பாச்சியார் இறந்த பின்னர் அவரின் இரண்டாவது மகளின் திருமண செலவிற்காக இக் காணியை விற்றபோது, எனது தந்தையார் அதனை எனக்காக வாங்கினார். நிச்சயமாகசத்தியமனையின் வரலாற்றிற்காக தனி ஒரு அத்தியாயம் வரலாறு சார்ந்து சேகரித்து வைத்துள்ளேன். பின்னர் தனியாகப் பதிவிடுவேன். ‘சத்தியமனைகொட்டிலாக இருந்த போது என் தந்தையார் மீண்டும் பால் காய்ச்ச வெளிக்கிட்டார். அங்கே நீற்றுப் பூசணிக்காய் கட்டப்பட்டிருந்ததை தோழர் மணியம் கண்டு விட்டார். கொக்கைத்தடி எடுத்து வந்து அதனை அறுத்துக்கீழே விழுத்தி விட்டார். நான்எதற்காக இப்படி செய்தீர்கள்?” என்று கேட்டதற்குஇது எல்லாம் மூட நம்பிக்கைஅது இது என்று சமாளித்து விட்டார். எனது தகப்பனாருக்கு இந்தச் செயல் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்தது. “நாங்கள் கட்டுகிற வீடுகளுக்கு எல்லாம் அந்த திருஷ்டிப்பூசணி கட்டாமல் விட மாட்டோம். ஒரு வீட்டுக்காரனும் அதை அறுத்து எறிவதில்லை. இது என்ன கொடுமைஎன்று கவலைப்பட்டார். அதன்படி சில நாட்களில் எனக்கு நடக்க முடியாமல் வந்து மூளாய் ஆஸ்பத்திரி அறையில் தங்கி இருந்து வைத்தியம் நடந்தது. “உன்ரை மனிசன்ரை சண்டித்தன வேலை உன்னையெல்லோ பாட்டத்திலை விழுத்திப் போட்டுதுஎன்று ஐயா கவலைப்பட்டார். அந்நேரம் எங்கள் மூத்தமகன் இராசன் ஒரு சிறு குடிலைக் கட்டினார். அங்கு இருந்து படிப்பார். ஒவ்வொரு நாளும் தந்தையார் வாசிக்கும் ஐலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் தமிழில் மொழி பெயர்த்து வைக்க வேண்டும். நட்ட தென்னை, மாவிற்கு தண்ணீர் இறைக்க வேண்டும் தம்பி கீர்த்தி துலா மிதிக்க அண்ணன் தண்ணீர் இறைப்பார். தங்கை புலமைப் பரிசிலில் சித்தி பெற்றமயால் பண்டத்தெருப்பு மகளிர் கல்லூரி விடுதியில் சேர்த்திருந்தோம். தந்தையுடன் உள்ள ஈடுபாடு அவரது சில நாள் பிரிவையும் தாங்க முடியாது தவித்தார். அவரின் துயரம் பயத்தைத் தந்தது. பெண்பிள்ளை தனித்துவமாய் ஆளுமையுடன் வளர வேண்டும் என்பதற்காக அவரை விடுதியில் சேர்த்தோம். எட்டிப் போய்ப் பார்க்கும் தூரத்தில் இருந்தாலும் , வீட்டில் நாங்கள் நால்வரும் ஒரே அழுகை.

இப்படியே நாட்கள் ஓடி 1977ம் ஆண்டுத் தேர்தல் வந்தது. இடது கம்யூனிஷ்ட் கட்சி தேர்தலைப் பகிஸ்கரித்த காலம் அது. தேர்தல் வருகிறது என்றால் வடபகுதித் தமிழ் மக்களுக்கு தன் வீட்டுத் திருமணம் போன்ற ஒரு உற்சாகம் பரபரப்பு இரவு பகல் பாராமல் பிரச்சார வேலைகள், தேர்தல் விஞ்ஞாபன அறிக்கைகள், நோட்டீசுகள் மதில் சுவர்களில் ஒட்டுதல், கூட்டங்களுக்கு பேச்சாளர்களை ஒழுங்கு செய்தல், வீட்டிற்கு வீடு சென்று வாக்குச் சேகரித்தல் இப்படியான ஆரவாரங்களில் எமது அயலவர்கள் இயங்கனர். சில மாதங்கள் ஓடின. வட்டுக்கோட்டைத் தொகுதியில் கடந்த தேர்தலில் திரு அமிர்தலிங்கம் அவர்களைத் தோற்கடித்து திரு தியாகராஜா அவர்கள் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் 1977 தேர்தலில் 71% வாக்குகளைப் பெற்று திரு. திருநாவுக்கரசு அவர்கள் வெற்றி பெற்றார்கள். எங்கள் வீட்டிற்கு அருகே வசித்த திரு இராஜசுந்தரம் மாஸ்ரரும் எலக்சன் கேட்டார். அவர் 873 வாக்குகளே பெற்றார். இறுதி நாள் அவர் வீட்டில் சாப்பிட்டோர் தொகை விழுந்த வாக்குகளை விடவும் அதிகம் என ஊரில் இன்றும் பேசுவர். இந்தத் தேர்தல் கலவரத்தால் எம் இளைஞர்களை விடுவிக்கவும், தோழர் மணியத்தை சிறை வைக்காத வகையில் வெளியில் எடுக்கவும் அவரே உதவினார். அந்த நன்றி மனது முழுக்க இருந்தாலும் அத் தேர்தலை நானும் சேர்ந்து பகிஷ்கரித்தேன். நான் காரைநகரில் வசித்தமையால் திரு. தியாகராஜா அவர்களை தெரிந்து வைத்திருந்தேன். நல்ல மனிதர். ஆனால் அவர் படு தோல்வியடைந்தார். மூத்தவர் இராசர் மெது மெதுவாக தானே சில அரசியல் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். தனது கொட்டிலில் ஓர் உண்டியல் வைத்து கட்சிக்கு நிதி சேகரிக்க ஆரம்பித்தார். வீட்டிற்கு வரும் தோழர்களை அணிதிரட்டிசத்தியமனைஎன்ற கொட்டிலைச் சுற்றி மேதின ஊர்வலம் நடத்தினார். தோழர் மணியம், நான், இரவி, தேவர், சந்திரன், தயாளன், கிருட்டி, வேல்முருகன் , சுரேஷ் என்ற சுரேந்திரன் சுந்தரலிங்கம், பபி, கீர்த்தி என பலரும் கோஷமிட்டபடி ஊர்வலம் போவோம்.

இது பற்றிப் பேச, தோழர் மணியம், என் மூத்தவர் இராசன் தவிர மற்ற அனைவரும் இன்றும் இருக்கிறார்கள். கட்டாயம் அவர்கள் இந்த அனுபவத்தைப் பகிர வேண்டும். எம் குழந்தைகளை தோழர் அப்படி வளர்த்தார். மூன்று குழந்தைகளும்
உலகப் படத்தில் எல்லா நாடுகளையும் குறித்துக் காட்டுவார்கள். மூத்தவர் இராசர் அதன் சிறப்புகள் அவற்றின் அரசியல் நிலவரம் பற்றிப் பேசுவார், எழுதுவார். திடீரென அவருக்கு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கும் ஆசை வந்தது. அது தான்சிறு பொறி’. அது பற்றித் தொடர்வேன்.

29

சத்தியமனையில் பத்திரிகை ஆபிஸ்

தொல்புரத்தில் இருந்து சுளிபுரத்திற்கு நிரந்தரமாக தங்க முடிவெடுத்தோம்.வீடு கட்ட நிலம் இருந்தால் அரச கடன் பெறலாம். ஆனால் மாதம் மாதம் சம்பளத்தில் கழிப்பார்கள். அதனை விட தோட்டம் செய்வதாக இருந்தால் சலுகை முறையில் மலிவாக நீர் இறைக்கும் இயந்திரம் வாங்க முடியும். நிச்சாமத்து மார்கண்டர் என்ற தோழருக்கு அது தேவையாக இருந்தது. நான் சென்று கையெழுத்துப் போட்டு அதனை வாங்கிக் கொடுத்தேன். அவரது மைத்துனர் தோழர் பழனி. அவரை என் தம்பி என்றே சொல்வேன். தோழர் நல்லப்புவிற்கு பின் என்னுடனும் குழந்தைகளுடனும் பாசமும், அக்கறையும் காட்டியவர். தோழர் மார்கண்டர் வளவுப் பனை மரங்களை தறித்து சீவி எடுத்து தோழர் பழனி கொண்டு வந்தார். சீமெந்து, மணல் வாங்க லோன் போட வேண்டும். அந் நேரம் தோழர் மணியம் பிள்ளைகளை அருகிருத்திவீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம்? வீட்டு அமைப்பு எப்படி?” என குழந்தைகளிடம் கேட்டார். ஆளுக்கு பல வடிவங்களும், பல பெயர்களும் சொன்னார்கள். என் மூத்தவர் இராசனே வீட்டின் அமைப்பையும், பெயரானசத்தியமனைஎன்றும் சொன்னார்.

இப்போது எங்களால் முடிந்தது ஒரு அறை மாத்திரமே. இராசனின் அமைப்பை அடிப்படையாக வைத்து அதனைக் கட்ட ஆரம்பிப்போம். அம்மாவுடன் சேர்ந்து தென்னம்பிள்ளை கிடங்கில் இருந்து எடுத்த கற்களை சிறு சல்லிக் கற்கள் ஆக்க வேண்டும். சல்லி வாங்கும் செலவை இதன் மூலம் சமாளிக்கலாம். நாளையில் இருந்து ஆளுக்கு தனித்தனி சல்லி உடைக்க வேண்டும் என்றார். என் ஐயாவின் இரு சுத்தியலும், என் அத்தானின் சிறிய சுத்தியலும் கிடைத்தது. கல்லு உடைக்க ஆரம்பித்தோம். மூன்று சிறு அறையும், விறாந்தையும். அதுவேசத்தியமனை’.

ஆனால் அது கொட்டில் வீட்டில் தான் நடைமுறை ஆனது. இராசன் தானே கிடுகு பின்னி இருந்த சிலாகை, பூவரசு குற்றி என சிறு கொட்டிலை அமைத்தார். அதனுள் ஒரு சிறிய மேசை, கதிரை. ‘தொழிலாளிபத்திரிகைக்கான உண்டியல். ஒரு நாள் பத்திரிகை ஆரம்பிப்பதற்கான கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தினார். அதில் இரவி, சந்திரன், தேவர், கிருட்டி, தயாளன், சுரேஷ், பபி, கீர்த்தி, நான், தோழர் மணியம் கலந்து கொண்டோம். என்ன பெயர் என்பதில் இரு அணிகளாகி சண்டை போட்டனர். இறுதியில் மூத்தவர் இராசன் சொன்னசிறுபொறிஅங்கீகரிக்கப்பட்டது. ‘சிறு பொறி தான் பெரும் காட்டுத் தீயை உருவாக்கும்என தலைவர் மாஓவின் விளக்கமும் சொன்னார். பத்திரிகை ஆசிரியராக பபியும் மற்றைய உறுப்பினர்களும் தெரிவாகினர். அன்றில் இருந்து மாதம் தோறும்தொழிலாளிபத்திரிகை போன்று சிறுபொறியும் வெளிவரும். முன்பக்க படங்களை கிருட்டியும், கவிதைகளை சந்திரனும், சிறு கதைகளை இரவியும், கட்டுரைகளை அவரும் எழுதினர்.

1977 ம் ஆண்டு எனது மகள் வயசுக்கு வந்து விட்டா. மிக விரைவில் முழுக வார்த்து விட்டு பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அன்று எனக்கு நிலையத்தில் கணக்கெடுப்பு. எனக்கு மகளுடன் நிற்க முடியாத இக்கட்டான நிலைமை எனது தங்கை தான் தனது கல்லூரிக்கு லீவு போட்டு விட்டு வந்து நின்றா. சில வீடுகளில் உறவினர்கள் இல்லம் நிறையக் குழுமி இருப்பார்கள். ஒரே ஆரவாரமாக இருக்கும். தங்கச்சி தான் சம்பிரதாய முறைப்படி உடனடியாக தோய வார்த்து விட்டு கத்தரிக்காயை நெருப்புத் தணலில் வாட்டிப் பிழிந்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறா. சாதாரண சாப்பாடுகளுக்கே போக்குக் காட்டுகிற எனது மகள் கத்தரிக்காய் தண்ணீர் குடிப்பாளா...? தனக்கு ஒன்றுமே வேண்டாம் என்று மறுத்து விட்டாவாம். வெறும் கோப்பி மாத்திரம் குடித்தாவாம்.பச்சை அரிசியை நன்றாக அவியவிட்டு, தேங்காய் பாலும் நிறைய
விட்டுபாற் பொங்கல்ஒன்று செய்து வீட்டில் உள்ளவர்களுக்கும், அயலில் உள்ளவர்களுக்கும் பகிருவார்கள். அந்திப் பொழுது தான் நான் வீட்டிற்கு வந்தேன். சரி... ஐந்தாம் நாள் பால் அறுகு வைத்து தோய வார்த்து விட்டு மறுநாள் பள்ளிக்கூடம் அனுப்புகிற அலுவல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் எங்கள் பெரியம்மா வந்திருந்து எனக்கு எல்லாமாக இருந்தார். அதற்கு கதை, கவிதை ஓவியங்களை ஒழுங்குபடுத்தினார். நண்பர்கள் சிலரும், ஒரு சில
உறவினர்களும், எங்கள் ஆசிரியைகள் ஆறு பேரும் வந்திருந்தனர். கட்சி தோழர்கள் சிலர் டானியல், எஸ் ரி.என் தருமு, காலையடி இளம் தோழர்கள் என சிலரும், எமது அன்புக்குப் பாத்திரமான அம்மம்மா (நாகரத்தினம் ஜெகநாதன்) ரீச்சர் தனது பங்களிப்பாகஜடைநாகம்எனப்படும் பின்னல் மாலையுடன், கொண்டை மாலை, கழுத்துக்கு மாலை என்று தானே கைப்படச் செய்து கொண்டு வந்து பிள்ளையை அலங்கரித்து விட்டா. மான் முத்தையா மாமி ஒரு சங்கிலியை அணிவித்தா. காரைநகர் சந்திராலயா குணம் மாமா உடுத்துகிற சேலையை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

ஆலாத்திஎனப்படும் நிகழ்வும் சிறப்புற நடந்தது. திருமதி. பரிபூரணம் இராசசுந்தரம் (பரி அன்ரி) வந்திருந்து வாழ்த்திச் சென்றார். எனது தங்கை குடும்பம், அக்காவின் மகள் குடும்பம் வருகை தந்திருந்தனர். எனது மாணவிகள் சகலரும் வந்திருந்தனர். மதிய போசன வேளை நேரம் எங்கள் ஆசிரியைகளுள் ஒருவர்நான் அவசரமாக வீட்டிற்குப் போக வேண்டும்என்று கூறிப் புறப்பட்டார். அவர் போன பின்னர் தான் தெரிந்ததுஅவவின் தோட்டத்தில் மிளகாய்ப் பழம் ஒடிக்கிற ஒரு நிற்சாமத்துப் பெண்மணி எங்கள் வீட்டில் நிற்கிறாவாம். அவவும் தானும் ஒரே சபையில் இருந்து சாப்பிட்டால், தனது கெளரவம் என்னாவது? என்று கூறித்தான் போனாவாம். பிறைசூடிக் குருக்களின் அக்கா புஷ்பமும் ஒரு ரீச்சர் தான். அவர்கள் ஒருவரும், வந்து நிற்கிறவர்கள் என்ன சாதி? என்ற ஆராய்ச்சியில் இறங்கவில்லை. அந்த ஒருவருக்குத் தான்சாதித் திமிருடன் வாழுந் தமிழன் ஓர் பாதித் தமிழனடா...” என்ற பாடல் பொருந்தும் போலும்.

வந்திருந்த அனைவரும் மகளை வாழ்த்தி, உணவு உண்டு புறப்பட்டுப் போனார்கள். அந்த ஒரு ரீச்சரின் செயல் மட்டும்
நீண்ட நாள் என் மனதை விட்டு அகலவில்லை. தமிழனே மற்றத் தமிழனை, ஓரங்கட்டி நடத்தும் எனச் சொல்லப்படும் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் எவ்வளவு நல்லவர்கள் என நினைத்தேன். வீட்டிற்கு வந்த அவர்களிடம் அன்பை மட்டுமே கண்டேன். இது பற்றித் தோழரிடம் சொன்னபோதுநீ எம் தோழர்களை மட்டுமே பார்த்திருக்கிறாய். ஏற்றத் தாழ்வு என்பது பரந்து நிற்கிறது. இதை மாற்றவே முயல்கிறோம். என்று உன்னைப் போல எல்லோரும் இணைந்து நிற்கிறார்களோ? அன்று தான் இவை சமப்படும் என்றார்.


தொடர்வேன்........

30

கந்தன் கருணை நாடகம்

என் கே ரகுநாதனால் எழுதப்பட்டாலும், ‘அம்பலத்தாடிகள்என்னும் கலைக்குழுவினரால் கிராமங்கள் தோறும் அரங்காகியகந்தன் கருணை' நாடகத்தில் இளைய பத்மநாதனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ‘கந்தன் கருணைதாளலய நாடகம் ஆக்கப்பட்டு பல மேடை கண்டது. சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான விழிப்புணர்வாக அது அமைந்திருந்தது. தோழர்களின் நடிப்பு, இசை, காட்சியமைப்பு எல்லாம் திரைப்படம் பார்த்த உணர்வுடன், சமூகம் சார்ந்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தியது. எங்கெல்லாம் நடந்ததோ அநேகமான இடங்கள் நாங்களும் சென்றோம். அதனை குழந்தைகள் வீட்டில் வந்து நடிப்பார்கள். நெல்லியடியில் நடந்த போது ஸ்ரேசன் மாஸ்ரராக இருந்த தோழர் சிவஞானம் வீட்டில் தங்கினோம். அந்த நேரத்தில் மூத்தவர் இராசனின் காலில் எக்சிமா வந்து கால் முழுவதும் புண்ணாக இருந்தது. சிவஞானம் தோழரின் தாயார் எண்ணைய் ஒன்று தயாரித்து தந்தார். அதன் வீரியத்தால் பின் அது மாறிவிட்டது. அந்த உறவுகள் பல பிரிவுகள் வந்த போதும் தொடர்ந்தது. சிவராசா, பாஸ்கரன், சிவம்... எனப் பல தோழர்கள் இன்றும் நினைவாடுகிறது.

1975ல் தோழர் மணியம், சிங்களத் தோழர் காந்தி அபேசேகர, தோழர் செந்திவேல், சிங்களத் தோழர் ரத்நாயக்க சீனா சென்று வந்தனர். எங்கு சென்றாலும் தோழர் மணியம் எழுதும் கடிதங்கள் உலக அறிவையும், சமூக அக்கறையையும் தூண்டுபவையாகவே இருக்கும். தேடி அறிவதிலும் , தன் அறிவை வளர்த்துக் கொள்வதிலும் தினசரி வாசிப்பை விடிகாலையிலேயே ஆரம்பிப்பார். எப்போதும் தோழர் மணியம் கையில் ஒரு சிறு சஞ்சிகையோ, பத்திரிகையாவது கையில் வைத்திருப்பார். அவரைப் போல மூத்தவர் இராசனும் வாசிப்பில் மிக்க நாட்டம் கொண்டவர்.

தோழர்கள் காந்தி அபயசேகர, எஸ்.கே. செந்தில்வேல் மற்றும் ரத் நாயக்க ஆகியோருடன் 1975 இல் சீனக் குடியரசின் பயணத்தின் போது தோழர் மணியம் அவர்கள்

நாங்கள் ஒரு அறைசத்தியமனையில் வசித்த காலத்தில் தோழர் சண் வந்திருந்தார். “! இது தான் தோழர் மணியம் கட்டிய வீடா?” எனக் கேட்டார். அதில் ஒரு பரிவும், இரக்கமும் இருந்தது. இராதாவின் திருமணத்தின் பின் ஐந்து வருடங்கள் நான் அவரைப் பார்க்கவில்லை. நீண்ட நாட்களின் பின் குழந்தைகளைப் பார்த்து அவர் உற்சாகமானார். அவர்கள் மூவருமே இந்த வீடு கட்ட பாடுபட்டார்கள். அதனாலும், சரியான போசாக்கு இன்மையாலும் சிறு குழந்தைகளாக இருந்த வனப்பை இழந்திருந்தார்கள். நேரமின்றியே நாட்கள் ஓடின. மீண்டும் கட்சியில் பிளவு. இது என்னை மட்டுமல்ல வீட்டில் அனைவரையும் மிகவும் பாதித்தது. நிச்சயமாக கோட்பாடு சார்ந்த முரண்பாடுகளாகத் தான் இருக்கக் கூடும் என ஊகித்தேன். ‘முரண்பாடு பற்றிநூல்கள் எல்லாம் இத் தோழர்களும் படித்திருப்பார்களே... என மனது அடித்துக் கொண்டது. தோழர் மணியம் அவர்களும் ஓய்வின்றியே இருந்தார். உண்மையில் நான் அவரிடம் இது பற்றிக் கேட்கவில்லை. இந்தியாவில் பாலதண்டாயுதம் என்ற தோழரும் அவரது மனைவியும் கட்சி பிளவடைந்த போது கொள்கை முரண்பாட்டால் அவர்களும் பிரிந்தனர் என வாசித்திருந்தேன். தோழரை நானும் கஷ்டப்படுத்தக் கூடாது என நினைத்தேன். ஆனால் என் மூத்தவர் எல்லாவற்றையும் உணர்ந்து அறியும் தன்மையைக் கொண்டிருந்தார். அவரே சில விஷயங்களைச் சொல்வார். தோழர்கள் செந்தில், தணிகாசலம், நவரத்தினம், வன்னியசிங்கம், சுப்பையா, நிச்சாமத்து தோழர்கள், காலையடித் தோழர்கள் என அனைவரும் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். சிங்களத் தோழர்கள் பற்றிய விபரம் முதலில் எனக்குத் தெரியவில்லை.

இக்காலகட்டத்தில் தோழர் செந்தில்வேல் அவர்கள் தன் சொந்த மைத்துணி அவர்களை திருமணம் செய்தார். பெரிய கொட்டகை போட்டு வைபவத்தை அவரது உறவினரான ஒரு பொறியியலாளர் நடாத்தி வைத்தார். இரவு அவர்கள் வீட்டில் தங்கி அடுத்த நாள் வீடு திரும்பினோம். பிரிவு தந்த வலியை மறக்கடிக்கவென வேலை மாற்றமும் வந்தது. தொல்புரம் மத்திய அரசினர் நெசவு நிலையத்திலிருந்து மூளாய் நிலையத்திற்கு மாற்றல் கிடைத்தது. அங்கு திருமதி கமலா மகாலிங்கம் என்ற ஆசிரியரிடமிருந்து நிலையத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஒவ்வொரு நிலையத்திற்கு செல்லும்போது தேய்வடைந்த நிலையில் இருக்கும் இடத்தை மிகுந்த சிரமத்துடன் மாணவர்களைச் சேர்த்து, வளர்த்து உயர்ந்து வரும் நிலையில் அடுத்த இடத்திற்கு மாற்றல் வந்து விடும்....

தொடர்வேன்.......

31

அர்த்தமுள்ள வாழ்வின் அற்புதங்கள்

கட்சியைக் கட்டி வளர்ப்பதற்காக தோழர் மணியம் ஓய்வின்றி அலைந்து கொண்டிருந்தார். சிங்களத் தோழர்களும் தொடர்பில் இருந்தனர். சிலர் தென்னிலங்கையிலிருந்து வந்து போனார்கள். ‘தொழிலாளிபத்திரிகை நின்றது. ‘பாட்டாளிபத்திரிகை வந்தது. பின்தொழிலாளிபத்திரிகைவாசகர் வட்டம்என என் மூத்தவரால் அமைக்கப்பட்டது. இப்பிரிவின் பின்சிறுபொறி வாசகர் வட்டம்என பெயர் பலகை மாறியது. அக்கால கட்டத்தில் வறுமை ஒரு பக்கம் இருந்தாலும் புகைப்படம் எடுத்து வைக்கும் சூழலும் இல்லை.

முதன் முதலாக 1978 ஆம் ஆண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (இடது) என்ற பெயரில் நிறுவப்பட்டது. இதன் நிர்வாக பொதுச் செயலாளராக தோழர் கே.. சுப்பிரமணியம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.வட மாகாணத்தில் மாத்திரமன்றி, இலங்கையின் பல பகுதிகளிலும் பழைய தோழமைத் தொடர்புகள் விட்டுப் போகாவண்ணம் ஒன்றிணைத்து , பல புதிய தோழர்களின் அர்ப்பணிப்புடனும், அரசியலுடனும், மக்கள் இலக்கியமும் இணைந்ததாக இக்கட்சி வளர்ந்தது. தேசிய கலை இலக்கியப் பேரவைக்கான வளர்ச்சியும், அதன் சஞ்சிகையானதாயகம்' பல தரப்பட்ட முற்போக்கு சிந்தையுடைய எழுத்தாளர்களை இணைத்து வெளி வரத் தொடங்கியது. அதன் ஆசிரிய தலையங்கம் தோழரே எழுதி வந்தார். கட்சியும் முதலில்பாட்டாளிஎன்றும்செம்பதாகைஎன்று பின்னரும் பத்திரிகையையும் நடத்தத் தொடங்கியது. அதன் திருத்தங்களுக்கு எனதும், மூத்தவரின் உதவியைக் கோருவார். புத்தக நிலையமும் பல பிரச்சனைகளுடன் திண்டாடியது.

அது எழுத்தாளர் டானியலின் கட்டிடத்தில் இருந்தது. இது சம்பந்தமாக தோழர் மணியத்திற்கு பல கடிதங்களை எழுத்தாளர் டானியல் அவர்கள் போட்டபடியே இருந்தார். அவற்றில் சிலது இன்றும் இருக்கிறது. இதனால் தோழர் பெருதும் மனத்துயருற்றார். ஒரு கட்டத்தில் மார்க்சிய நூல்களும், முற்போக்கு படைப்புகளும் றோட்டில் எடுத்து வீசப்பட்டன. அவை இரவு முழுவதும் மழை நீரில் மிதந்தன. இச் செய்கை எனக்கு எழுத்தாளர் டானியல் மீதிருந்த
மதிப்பையும, அன்பையும் கேள்விக்குள்ளாக்கியது. எங்கள் திருமணத்திற்காக இரு சில்வர் சட்டிகளை அவர் தந்திருந்தார். ‘டானியல் மாமாவின் சட்டிகள்என்பதே அதன் பெயர். எம்மிடமிருந்த பெறுமதியான பொருட்களில் அவை முதன்மையானது. பின் அதனைப் பாவிப்பதற்கே மனது கூசியது. இது உண்மை. ஆனால் இவை எதையும் நான் யாருடனும் அவ்வேளை பகிரவில்லை. இதே நேரம் அச்சடிப்பதற்காக மாதகல் கந்தசாமி சீனாவிலிருந்து ஓர் தட்டச்சு இயந்திரத்தை கட்சியிடம் கொடுத்திருந்தார். அதனை திரும்ப பெற அடிக்கடி வந்தார். இவை பற்றி என் மூத்தவர் மனம் வெதும்பிப் பகிர்வார். ஒரே நேரத்தில் பல கஷ்டங்களை எதிர் நோக்கும் நிலமைக்கு கட்சி சென்றது. சளைத்து விடாத தோழர்கள் நம்பிக்கையுடன் இயங்கினர். இனவாதமும், தமிழ் உணர்வும் (வெறி) மக்களிடையே ஊட்டப்பட்டன. தேசியம் பேசியபடி கட்சியும் வளர்ந்தது. தொடர்ந்தும், கூட்டங்கள், ஊர்வலங்கள், இலக்கிய சந்திப்புகள் என தொடர்ந்தன. கவிஞர் முருகையன், .ஜே கனகரத்தினா, சிறீமனோகரன், பெற்றோலியம் கதிரவேலு (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தந்தை), சதா, நடனசபாபதி பேராசிரியர்களான கைலாசபதி தில்லைநாதன், நுகுமான், மௌனகுரு சிவசேகரம் என பலரின் ஊக்குவிப்பும், வழிகாட்டலும் உதவின.

தோழர் மணியம் அவர்களின் மறைவின் பின்னர், 1991 ஆம் ஆண்டு நடந்த தனது இரண்டாவது தேசிய மாநாட்டில் தனது பெயரைபுதிய ஜனநாயகக் கட்சிஎன மாற்றிக்கொண்டது. பின்னர், 2010 யூன் மாதத்தில் கொழும்பில் இடம்பெற்ற 5வது அனைத்து இலங்கை மாநாட்டில் தனது பெயரைபுதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சிஎன மாற்றிக் கொண்டது. இன்று தோழர் சி.கா.செந்திவேல் அவர்கள், இதன் பொதுச் செயலாளராக வழி நடத்தி வருகிறார்.
மக்களின் அடிப்படை உரிமைக்கான வாழ்வாதாரத்தை, சகலரும் ஏற்றத் தாழ்வுகள் கடந்து பெறவேண்டும் என்ற உணர்வுடன் கடந்த நாற்பதாண்டுகளாகப் போராடும், செயற்படும் எம் கட்சிக்கும், தோழர்களுக்கும் இந்தத் தாயின் புரட்சிகர வாழ்த்துக்கள். நான் பிறந்த நாட்டில், அறிவு தெரிந்த நாளில் இருந்து படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வலர்களையும், முன்மாதிரியாக வாழ வேண்டும் என்ற தியாக மனம் உள்ளவர்களையும் பார்த்துப் பார்த்து ஆடம்பரமற்ற, சிக்கனமான அதே நேரத்தில் மற்றவர்களுக்கு சரீர உதவியாவது செய்கிற மானிட வாழ்வு எவ்வளவு கிடைத்தற்கரிய ஒரு பெரும் பேறு என்பதனை முதலில் நான் படித்த பாடசாலையும், அடுத்து தோழர் மணியம் அவர்கள் தனது உத்தியோகத்தை இழந்த பின், மேற்கொண்ட வாழ்க்கையையும் ஒருங்கு சேரப் பார்த்த போது, ஒரே ஒரு சீவனுக்கு ஆதரவாக, ஒத்துழைப்பாக என்னால் பங்களிக்க முடியுமா? என்று யோசித்த போது சிலர், ஒரு குடும்பத்துக்கு சிலர் ஒரு சமுகத்திற்கு சிலர் நாட்டிற்கு இப்படி தம்மை அர்ப்பணித்து வாழ்ந்த வாழ்கிற அந்த அர்த்தமுள்ள வாழ்வு எவ்வளவு அற்புதமான செயல்களை உள்ளடக்கியது என்று உணர முடிந்தது. சிந்தனையில் நினைக்கையில் புத்தகத்தில் வாசிக்கையில்முடியும்என்று தெரிந்த அந்தப் பாதை....! நடந்து செல்கையில் கடக்க முயற்சிக்கையில் எவ்வளவு கரடு முரடானது எவ்வளவு வழுக்குப் பாறைகள் நிறைந்தது எவ்வளவோ மேடு பள்ளங்கள் சூறைக்காற்று எரிமலைத்தீப்பிளம்பு நிறைந்தது என்று கண்கூடாக முகங் கொடுக்க வேண்டி இருந்தது. யாவற்றையும் கடப்பது பெரிய சிரமம் என்று ஒவ்வொரு காரியத்தை செய்யும் போது எமது முன்னோடிகள் பலர் கைக் கொண்ட காரியங்கள் அவர்களது சொந்த வாழ்க்கையை எவ்வளவு பாதித்து இருக்கும்...?

தோழர்கள் கே.டானியல், எஸ்.சிவதாசன் ஆகியோருடன் தோழர் மணியம் அவர்கள்

எங்கள் கிராமத்தில் சுழிபுரத்தில் நா.சேனாதிராசா என்ற ஒரு பெரியார்தேச ஊழியன்என்ற பெயரில் பல அற்புதமான, புதிய கருத்துக்களை எழுதி அதனை கல்லூரி மதில், தபாற்கந்தோர் மதில்போன்ற சுவர்களில் ஒட்டி விடுவார். ஆனால்! அதனை சிலர் வாசிப்பர் பலர்வாழத் தெரியாத மடையன்என்று கூறி விட்டு நடந்து போய் விடுவார்கள். இதிலிருந்து என்ன கருத்தை அறிய முடிகிறது என்றால்தனி மரம் தோப்பு ஆகாதுஎன்பது உண்மை தனி ஒருவன், தனது குடும்பம், பெற்றார், மனைவி,மக்கள் என்று வாழ்வது தான் உலகியல் நடைமுறையில் உள்ள வழமை.

அதை விட ஆயிரத்தில் ஒருவர் சமூக சேவை என்று புறப்பட்டால் அவனை உலகோர்வாழத் தெரியாத மடையன் பைத்தியக்காரன்என்று எள்ளி நகையாடுவர். நாம் வாசித்த வரலாற்று நூல்களில் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை விழிப்புணர்வுகளை ஊட்டுபவர் சொந்த வாழ்வில் வறுமை, நோய், துன்பம், கை வரட்சி போன்ற இல்லாமை இயலாமை ஆகிய இடர்களுக்கு ஆளாவார்கள். ஆயுள் முழுவதும் அதனை கைக் கொள்ளவோ முன்னெடுக்கவோ முடியாமல் இடை நிறுத்தம் செய்கிற இக்கட்டான நிலையால் பின்னடைவு காண்பர். லட்சத்தில் ஒருவர் தனது மூதாதையோரின் சொத்தை வைத்து அதனை தனது லட்சியத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் பயன் படுத்துவர். ஒரு சிலர் தனது வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்புடன் ஓரளவுக்கு தன்னால் முடிந்த நற்காரியங்களைச் செய்வர். சிலர்தானுண்டு தன் குடும்பம் உண்டுஎன்று ஒருவருக்கும் தீங்கில்லாமல் அமைதியாக வாழ்ந்து முடிப்பர். இப்படி உலகில் பிறந்த மக்களின் வாழ்வு பல ரகம்.

தொடர்வேன்.......

32

தமிழ் தேசிய விடுதலையை நோக்கி மூத்த மகன்

‘Red Banner’ என்ற கட்சியின் ஆங்கிலப் பத்திரிகையும், ‘செம்பதாகைஎன்ற தமிழ் பத்திரிகையும் ஒழுங்காக வர ஆரம்பித்தது. தோழர் அந்த வேலைகளிலும், கட்சியை மக்களிடம் கொண்டு செல்வதிலும் மும்மரமாக இயங்கினார். அதிகாலை நாலு மணிக்கு முதலே எழுந்து எழுதுவார். அடிக்கடி கடிதப் போக்குவரத்துக்கள் இடம் பெற்றன.1979 இல் மக்கள் சீனக் குடியரசுக்கு தோழர் கே. தணிகாசலம் (தாயகம் இதழின் ஆசிரியர்) அவர்களும் தோழர் மணியம் அவர்களும் சென்று வந்தனர். எங்கு சென்றாலும் தோழர் மணியம் எழுதும் கடிதங்கள் உலக அறிவையும், சமூக அக்கறையையும் தூண்டுபவையாகவே இருக்கும்.

தோழர் கே.. சுப்பிரமணியம் அவர்கள் 1979ல் மக்கள் சீனக் குடியரசின் பயணத்தின் போது தோழர் தணிகாசலம் (தாயகம் இதழின் ஆசிரியர்) அவர்களுடன்

1979 ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் குன்மிங்கிற்குச் சென்றதைப் பற்றி எனக்கு எழுதிய கடிதம்.

மணி- (வள்ளியம்மை),

Dec 1ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரை வியட்நாம் எல்லைப் புறமுள்ள சீனாவின் யுனான் மாகாண குன்மிங் நகரத்தில் தங்கினோம் .இங்கு சீன வியட்நாம் எல்லை யுத்தம் நடந்தது தெரியும் தானே? பல இடங்களைப் பார்வையிட்டோம். இந்த மாகாணத்திலுள்ள ஜனத் தொகையில் 1/3 பகுதியினர் 22 தேசிய சிறுபான்மையினக் குழுக்கள். அதிகம் கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. இங்கே தான் உலகத்திலேயே மிகப் பெரிய கற்காடு இருக்கிறது ( Stone Forest ). இத்தாலி தேசத்திலும் இருக்கின்றது. அது சிறியது தினசரி பல ஆயிரக்கணக்கானோர் வெளிநாட்டவர்கள் உட்பட பார்த்து மகிழ்வர். இயற்கை வளங்களுடனும் வகை வகையான பூந்தோட்டங்களுடனும் பண்டைய கலையைச் சித்திரிக்கும் கட்டிடங்களும் ஓவியங்களும் நிரம்பப் பெற்றுள்ளது, பலவித தானியங்கள், மா, பலா உட்பட பலவகை கனிவகைகள் இங்கு இருக்கின்றன.’’

1980 ம் ஆண்டு என் தங்கை லட்சுமிப்பிள்ளை, தனது கணவன் படிப்பிக்கும் நைஜீரிய நாட்டிற்கு பிள்ளைகளுடன் போய் விட்டார். தம்பி 1974 ம் ஆண்டு தானாக விரும்பி திருகோணமலையில் திருமணம் செய்து அங்கேயே வேலை பார்த்தபடி இருந்துவிட்டார். என் பெற்றோர் தாங்கள் கட்டிய வீட்டைப் பேண வேண்டுமென அங்கேயே இருந்தனர். அம்மா இடை இடை சத்தியமனைக்கு வந்து தங்கிச் செல்வார். என் குழந்தைகள் தான் அவர்களின் மலம் சலம் எடுத்து ஊத்தி கழுவிப் பார்த்தனர். அதிலும் குறிப்பாக என் இளைய மகன் கீர்த்தி மூன்று நேரமும் உணவு கொண்டு போகிற வேலையையும் சேர்த்துச் செய்தார். தங்கை 7 மாதங்கள் கழிந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு பெற்றாரின் இறுதிக் காலத்தில் குடும்பத்துடன் வந்தார். ஐயா இறந்து ஏழாம் நாள் அம்மாவும் இறந்தார்.
கணவனைக் கூடையில் சுமந்த நளாயினியின் கதையை, அம்மா சொல்லி அழுது, பல தடவைகள் நானும் சேர்ந்து அழுதிருக்கிறேன். ஐயாவின் அனைத்தையும் சகித்து வாழ்ந்தார். அழகான, படித்த என் அம்மா கடைசிக் காலங்களில் ஆளுமை இழந்தது மட்டுமல்ல, தன்னுணர்வையும் இழந்திருந்தார். அவை எல்லாம் இன்றுவரை எனக்கு மாறாத கவலை. என் குழந்தைகள் என்னைப் பார்க்கும் விதம் கண்டு வெட்கிக்கொள்வேன். நான் அப்படி இருக்கவில்லையே
என்று. குறைந்த அளவு பொருளாதாரமும், உறவுகள் அற்ற வாழ்முறையும் அரசியல் பின்புலமும் என் வாழ்வை, வேறு மாதிரி அமைக்க வைத்தது. இதனை நான் முதல் அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளேன்.

ஐயா, அம்மா இருவரினது இறுதி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு அவரவர்கள் தங்கள் தங்கள் ஊருக்கும், நாட்டிற்கும் திரும்பி போய் விட்டனர். தாத்தா, ஆச்சி வாழ்ந்த வீடு என்று இராசனும், கீர்த்தியும் காலை, மாலை விளக்கேற்றி வணங்கினர். இங்கு சத்தியமனையில் ஒரு அறை வீட்டையும் லோன் எடுத்துத் தான் கட்ட முடிந்தது. சம்பளம் குறைந்து வரத் தொடங்கியது. வீட்டிற்கு மின்சார இணைப்பு இருந்தால் குழந்தைகளின் கல்விக்கும், வீட்டுத் தோட்டம் செய்ய மோட்டர் பொருத்தலாம் என எண்ணினோம். பக்கத்தில் இருந்த இராஜசுந்தரம் மாஸ்ரர் குழந்தைகள் படிக்க வேணடுமென தன் வீட்டில் இருந்து இரு மின்குமிழ் எரிவதற்கான இணைப்பைத் தந்தார். நாம் மின்சாரம் எடுப்பதாயின்
ஐந்து தூண்கள் நடவேண்டும். இணைப்பிற்கும் பணம் வேண்டும். என் தாலியை வங்கியில் அடகு வைத்து இணைப்பை எடுத்தோம். வேறு எதுவும் எங்களிடம் இல்லை. என் தங்கையின் சில நகைகள் என்னிடம் இருந்தன. சரி மோட்டர் பொருத்தினால் தென்னை, பப்பா, மா, வாழை, கமுகு, மரக்கறிகள் உற்பத்தி செய்தால் தங்கை திரும்பி வருவதற்கு முதல் அதனை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் வங்கியில் அவரது தாலிக் கொடியை அவரது அனுமதி கோராமல் அடகு வைத்துவிட்டேன். மோட்டர் மூலம் தண்ணீர் இறைப்பதால் வளவு சோலையாகியது. தங்கையின் நகையை மீட்பதற்காக சிறிது சிறிதாக பணத்தை சேகரித்தோம். அதற்கு பிள்ளைகள் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

பிள்ளைகள் படிக்கிறார்கள்என்ற மகிழ்ச்சி எனக்கு. மகள், பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் 5 ம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சையில் திறமைச் சித்தி பெற்றதனால், அங்குள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் படியான ஒரு வாய்ப்பு வந்தது. நாளடைவில், விடுதியின் சில சுகாதார குறைபாடுகளினால், பழையபடி வீட்டிலிருந்து போய்ப் படிக்கும் நிலைமைக்குத் திரும்பினா. அவவின் நிதியைச் சேகரித்து பள்ளி அதிபர் ஒரு தொகைப் பணமாக தகப்பனை அழைத்துக் கொடுத்தார். அப்பணத்தை பபி தகப்பனுக்கு ஒரு நீல நிற பைசிக்கிள் மூலம் பரிசளித்து மகிழ்ந்தார். கீர்த்தியை விக்டோரியா கல்லூரியில் இருந்து, இவரது சகோதரன் இலங்கைநாயகம் மகாஜனா கல்லூரியில் சேர்ந்து விட்டிருந்தார்.
ஊரவர்களும் பாராட்டிஉங்களுக்கென்ன ரீச்சர்! இராசயோகமெல்லோ...? இராசன் அடுத்த வருசம் யூனிவசிற்றிக்குப் போய்விடுவான். பபி தன்ரை படிப்பைத் தானே சமாளிப்பா, இப்ப கீர்த்திக்கும் ஸ்கொலர்ஷிப் வரப்போகுதுஎன்று கூறிபாலன் பஞ்சம் பத்து வயது வரை தான்என்ற பழமொழியையும் சொன்னார்கள். ஆனால், பூமி பொறுக்கவில்லை.

என் மூத்த மகன் தனது அரசியல் பார்வையை வேறு கோணத்தில் செலுத்தத் தொடங்கினார். இது எனக்கு தெரியாது. விடுதலைப் போராளிகள் அரசியல் ஆலோசனை பெற தோழரிடம் வரும் போது இவர் மாத்திரம் அவற்றை செவிமடுப்பார். அவர்களுடன் உறவு கொண்டாடுவார். அதை நாங்கள் பெரிதாகப் பார்க்கவில்லை. சின்னப்பையன் என நினைத்தேன். சிறப்பாக என்சிஜி (NCG) இல் சித்தி எய்தி உயிரியல் துறையில் படித்த அவர் சில வேளைகளில்
வீட்டிற்குத் தாமதமாக வருவது, ஏதாவது எழுதுவது அப்படி தன் உயர்கல்வி ஆர்வத்தை தளர விட்டு விட்டார். அவருடன் படித்த செல்வி பவானி ஞானச்சந்திரமூர்த்தி வைத்திய பீடத்திற்கு தெரிவானார். செல்வன் சுரேந்திரன் சுந்தரலிங்கம் பொறியியல் துறைக்குத் தெரிவாகி யப்பான் நாடு சென்றார்.

ஆனால்...... இராசன்....! பக்கத்து வீட்டு நண்பனான இராஜசுந்தரம் மாஸ்டரின் மகன் பரன்நீங்கள் அவரைப் பொலிற்றிக்கல் சயன்ஸ் (Political Science -அரசியல் அறிவியல்) எடுக்க விட்டிருந்தால் திறமான மாணவனாய்ப் பல்கலைக்கழகம் போய் இருப்பான், அவனுக்கு அங்கிளைப் போல பொலிற்றிக்ஸ் (அரசியல்) தான் எந்த நேரமும் வாயில் வரும்என்று கூறினார். உண்மை தான்.!

இராசன் ஏழாம் ஆண்டு படிக்கும் போதேசிறுபொறிஎன்ற ஒரு கையெழுத்துப் பத்திரிகையைத் தொடக்கினார். அதன் முக அட்டையை கிருஷ்ணதாசன் தான் வரைந்து கொடுப்பார். இது பற்றி முன்னர் சொல்லியிருக்கிறேன். அந்தப் பத்திரிகையில் இந்தியா, இலங்கை, வியட்நாம், சீனா. ரஷ்யா நாட்டு நிலவரங்கங்கள் எழுதப்பட்டிருக்கும். நானோ, அன்றி தகப்பனோ பள்ளி ஆசிரியர்களாக இருந்திருந்தால், அவரது ஆற்றல்களைத் தெரிந்து படிக்கும் துறையை வழிகாட்டி இருக்கலாம். அநேகமாக பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றிய பெற்றார் தமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி எந்நேரமும் விழிப்புடன் இருந்து வெற்றி கண்டோரும் உண்டு. எனக்கும்எழுதா விதிக்கு அழுதால் போல் தீருமோமா?” என்ற வாழ்வோட்டமாக இருந்தது. பண்ணாகத்தில்பாலமோட்டை சிவம்என்றொரு தம்பி, சுளிபுரத்தில் காந்தீயம் சந்ததியார், என்றொரு தம்பி, மேற்குச் சுழிபுரம் இறாத்தலடி சுந்தரம் சிவசண்முகமூர்த்தி என்றொரு தம்பி இவர்கள் நான் வேலைக்குப் போன பின், எமது வீட்டுற்கு வந்து இராசனைச் சந்திப்பார்களாம். எமது வீட்டைப் போலவே இரண்டு வீடுகள் தள்ளி இருந்த மனோன்மணி ரீச்சர் வீட்டிலும் இப்படி சில நண்பர்கள் கூடிக் கதைப்பார்களாம்.

இந்த விபரங்கள் காலங்கடந்த பின்னர் தான் அறியக் கிடைத்தன. நான் வேலை என்றும், அவர் கட்சிப் பணி என்றும் அலைந்தோம். அத்துடன், 1981 கலவரமும் ஆரம்பித்து.... என் சோதனை காலம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
தொடர்வேன்.......!

33

மூத்த மகனைக் காணவில்லை

தேசியம் சார்ந்த அரசியல் உணர்வு, தேசிய இனங்களாய் பிளவு பட்டு அரசியலாக்கிக் கொண்டிருந்தது. சிறு சிறு அசம்பாவிதங்கள், தேடல்கள், கைதுகள் என நடந்தன. நாச்சிமார் கோவிலடியில் கூட்டணியினர் மாவட்ட சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகினர். இருவர் மரணமடைந்தனர். அதைத் தொடர்ந்து 1981 மே 31 இரவு
ஆரம்பமான இவ் வன்முறைகளின் போது யாழ்ப்பாண நகரில் உள்ள முக்கிய சந்தை, வணிக நிறுவனங்கள், ‘ஈழநாடுபத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணப் பொது நூலகம், ஆகியன முற்றாக எரியூட்டப்பட்டன. இது சுண்ணாகம், காங்கேசந்துறை வரை நீண்டது. கிட்டத்தட்ட எழுபத்தையாயிரத்துக்கு மேற்பட்ட அரிய நூல்கள் யாழ் நூலகத்தில் எரிந்தணைந்தன. தோழரும் இவற்றிற்கெதிராக அரச மிலேச்சத் தனத்தைக் கண்டித்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

நானும் ஐயா, அம்மாவின் சுகயீனத்தையும், மறைவையும் ஒட்டி மூன்று மாதங்கள் லீவில் இருந்தேன். மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். குழந்தைகள் மீதான கவனம் குறைந்தது. அவர்களுக்கும், தோழருக்கும் அடிக்கடி உடல்நலம் குறைந்தது. அரச ஊழியர்கள் என்று கூப்பனையும் நிறுத்திவிட்டார்கள். வீட்டு லோனினால் மாதாந்தம் ரூபா 80/= வீதம் சம்பளத்தில் கழிக்கப்படும்போது ஏதோ ஒரு பெரிய பாதிப்புக்கு ஆளாகி விட்ட உள்ளுணர்வு வருத்தியது. வளவில் ஏற்கெனவே நாட்டிவைத்த மரவள்ளிதான் கை கொடுத்து உதவியது.

இலங்கையில் சுய பொருளாதார உணவு உற்பத்தி என்ற துறையில் ஈடுபட்ட விவசாய மக்கள் புகையிலை, வெங்காயம், மிளகாய் உற்பத்தியில் அதிக சிரத்தை செலுத்தி வடமாகாணத்தைபணக்கார மாகாணம்என்ற பெயர்எடுக்க வைத்தனர். அரசாங்க ஊழியர்களுள் ரூபா 300/= சம்பளம் பெறுவோர் வேறு எந்த பக்க வருவாயும் இல்லாத குடும்பங்கள்பிச்சை போடவும் வழியில்லை; பிச்சை எடுக்கவும் கெளரவம் விடாதுஎன்ற இரண்டுங்கெட்டான் நிலையில் வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு முகங்கொடுத்து வாழவேண்டிய நிலை! நாம் கட்டிய சத்தியமனை ஒரு அறை வீடு, கொஞ்சம் கொஞ்சமாக கட்டி, அரையுங் குறையுமாக யன்னல் வைக்க வேண்டிய இடைவெளிக்கு சாக்கு மறைப்புப் போட்டு,முன் நிலைக்கே கதவும் போடாதுஅடையா நெடுங் கதவும் அஞ்சேல் என்ற சொல்லும் வேண்டும்என்று வயது வந்த பெண் குழந்தையுடன் உள்ளத்திற்கு வள்ளிசாக ஒரு மாதிரி மேற் கூரைக்கு, முதலே கைவசம் இருந்த பனைமரங்கள், ‘சீற்பாவித்து வீடு என்று சொல்லக்கூடிய ஒரு உருப்படியான இல்லம் ஒப்பேறியது. முதலே கட்டப்பட்ட ஒரு அறை, முன் பக்ககிறில்எனப்படும் சீமெந்து ஓட்டைக்கல்லுகள் கூட வைத்து இடைவெளி நிரப்பப்படவில்லை.

இந்த நிலையில் தம்பிக்கு, திடீரென தன்னையறியாமல் சிறுநீர் போகிற ஒரு வருத்தம் வந்து விட்டது. யாழ். பெரியாஸ்பத்திரியில் சோதித்த வேளை,“முள்ளந்தண்டினுள் இருக்கும்ஸ்பைனல் கோட்நசுங்கப்படுவதனால் தான் இப்படி நடக்கிறதுஎன்றனர். அதனால் உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய, இரத்தம் கொடுக்கிற ஆட்கள் என்று பற்பலமுன்னேற்பாடுகள் செய்ய வேண்டி இருந்தது. அதனால், எங்கள் குடும்பமே முழுப்பேரும் ஆளுக்கொரு வேலையாக ஓடித் திரிந்து 4 மணித்தியால ஒப்பிறேசன் நடைபெற்று முடிந்தது. ‘கலீற்றர்எனப்படும் சிறுநீர் வெளியேற்றி பொருத்தப்பட்டது. இரண்டு வாரங்கள் வைத்தியசாலையில் தங்கிப் பின்னர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இந்த வேளையிலும், நான் வேலைக்கு லீவு போட்டுவிட்டு தம்பியைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்தேன். தம்பி இன்றுவரை அதனைச் சொன்னபடி இருக்கிறார். மச்சாளும் வேலை பார்க்கிற ஆளாக இருந்ததனால், வார இறுதியில் வந்து பார்த்து விட்டு போய் விடுவா. கைக்குழந்தை கிரி எங்களுடன் இருப்பார். அப்படியே காலங்கள் ஓடிக்கொண்டிருக்கையில், சுளிபுரத்தில் இருந்து மூளாய் வரை நடந்து போய் வருவேன். கால்கள் ஓய்வின்றி நகர்ந்தது. இவ்வேளைகளில் என் மூத்த மகன் தாத்தா, ஆச்சி வீட்டில் விளக்கு வைக்கப் போவதாகச் சொல்லி விடுதலைப் போராளிகளுடன் சந்திக்கும் இடமாகவும், தங்கவைக்கும் இடமாகவும் அதனை மாற்றிக்கொண்டார்.

பகல் பொழுது முழுவதும் ஆரம்ப போராளிகளின் காவல் அரணாக செயற்பட்டார். காலை போய் மாலை வந்து சேலையைக் கழட்டி குசினிக் கதவில் போட்டு விட்டு சமைக்கத் தொடங்குவேன். இவை பற்றி தெரிந்த இளைய மகனும் எதுவும் எனக்கு சொல்லவில்லை. குழந்தைகளுடன் பேசவும் நேரம் கிடைப்பதில்லை. தோழரும் இரவில் தான் வருவார். நாட்கள் ஓடின. நன்றாகப் படித்த மகனும் பல்கலைக்கழகம் செல்லத் தேர்வாகவில்லை. இவை பெருந்துயரைத் தந்தது. வயிற்றுச் சாப்பாட்டிற்காக ஓடிப் போய் குழந்தைகளின்
கல்வியை இழக்கிறேனோ என்ற பயம் வர ஆரம்பித்தது. ‘கொழும்பு இன்ர கொன்டினல் ஹோட்டலில்மனேஜராக தோழர் பரமானந்தம் இருந்தார். அவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார். தன் மனைவி இரசாயணவியல் ஆசிரியராக உள்ள சுண்டுக்குளியில் எங்கள் மகளை சேர்க்குமாறு சொல்லுவார். அவர்கள் வீடு சுண்டுக்குளியில் இருந்தது. அதிகாலை மகளுடன் சுண்டுக்குளி செல்வதற்காக தோழர் யாழ்பாணம் சென்றார்.

அன்று அதிகாலை சித்திரா அச்சகத்தில் என் தம்பியாக உணர்ந்த விடுதலைப் போராளி சுந்தரத்தை சுட்டுக் கொன்றார்கள். இதனை அறிந்த தோழர் சுண்டுக்குளி செல்லாமல் மீண்டும் சுளிபுரம் திரும்பினார். இந்த விடயம் எல்லோரையும் பாதித்தது. மார்க்சிய அறிவையும், சந்தேகங்களையும் தீர்க்க போராளி சுந்தரம் அடிக்கடி வந்து போய் அன்பையும் வளர்த்துக் கொண்டார். மூத்தவர் இராசன் இதனால் கடும் சினம் கொண்டார். இதன் விளைவை அன்று நான் உணரவில்லை. நாட்கள் ஓடின, அன்று நவராத்திரி. குலதெய்வம் பத்திரகாளி கோவிலின் ஒன்பதாம் பூசை. எங்கள் வீட்டுப் பூசை. நான் பிறக்க முன்பிருந்தே நாங்களே செய்வோம். நான் வீட்டை விட்டுப் போன பின் என் தங்கை செய்து வந்தார். பின் அவர் நைஜீரியா போனபின் தம்பி பணம் அனுப்புவார். நான் போய்ப் பொங்குவேன். நானும், பிள்ளைகளும், பொங்குவதற்கு ஆயத்தமாக அரிசி, பயறு, பால், விறகு, பானை, அகப்பை, வாழை இலை சகிதம் கோவிலுக்குப் போய்விட்டோம். இராசனையும் அழைத்தேன்நீங்க போங்க, சற்றுப் பொறுத்து நான் வருகிறேன்என்றார். ஆனால், கோவிலுக்கு வரவில்லை. இரவு எட்டு மணிக்கு பூசை முடிந்து, நாம் வீட்டிற்கு வர ஒன்பது மணியாகி விட்டது. வழமையாக நவராத்திரி, திருவெம்பாவைப் பூசைக்காலத்தில் கோவிலில் இருந்து திரும்பியதும், எங்கள் அயலவர்கள் அனைவருக்கும் கோவில் பிரசாதங்கள் பகிருவோம். அன்றிரவு இராசன் வீட்டில் இல்லாத படியால் நானும், கீர்த்தியும் தான் வீடுவீடாகச் சென்று அனைத்து அயலவர்களுக்கும் கொடுத்து வீடு திரும்பினோம். யாராவது சிநேகிதன் வீட்டிற்குப் போயிருப்பான். எல்லா வீடுகளிலும் ஆயுத பூசை தானே பொங்கல், பலகாரம் சாப்பிட அழைத்திருப்பார்கள்என்று நினைத்துக் காத்திருந்தோம். இந்தக் காலமென்றால் கைபேசி மூலம் சகலருடனும் தொடர்பு கொண்டு விபரமறிய முடியும். அந்தக் காலத்தில் அந்த வசதிகள் ஒன்றும் இல்லையே! நள்ளிரவாகியும் இராசன் வீட்டிற்கு வரவில்லை. எனக்கு அழுகை தான் வந்தது. நான் யாரைக் கேட்பேன்?
எங்கே தேடுவேன் எனக்கோ கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டது போன்ற ஒரு திகைப்பும், தடுமாற்றமுமாக இருந்தது.
தோழருக்கு எதைச் சொல்ல? நானும் மகளும் அழுதபடியே இருந்தோம். இளைய மகன் கீர்த்தி வெளியில் போவதும் வருவதுமாக இருந்தார். தோழரின் சைக்கிள் மணிச் சத்தம் கேட்டால் மூன்று குழந்தைகளும் ஓடிப்போய் சைக்கிளை வாங்குவார்கள். பின் கால் கழுவி வீட்டிற்குள் வருவார். அன்று அவர் வந்ததும் இராசர் இல்லை. எதுவும் கேட்கவில்லை. “குழந்தைகள் சாப்பிட்டார்களா? இன்று என்ன நடந்தது...?” என வழமையான கேள்விகளைக் கேட்ட போது மகள் அழுதபடி அண்ணாவைக் காணவில்லை என்றார்.

தொடர்வேன்......

1983ம் ஆண்டு கதவுகள் இல்லாதசத்தியமனைநுழைவாயிலுக்கு முன்னால், வைத்திய கலாநிதி
எஸ்.விசாகரனால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இடமிருந்து புளட்டின்மீரான் மாஸ்ரர் எனப்படும் மகன் சத்தியராசன், விடுதலைப்புலிகளின்விஜிஎன்கிற பொன்னையா லம்போதரன், எஸ். சுதாகரன், தோழர் கே.. சுப்பிரமணியம் மற்றும் எஸ். கிருபாகரன் ஆகியோர்கள் உள்ளனர்.

34

போராளியாய் போனான் மூத்த மகன்

இராசனைக் காணவில்லை என்றதும் நாங்கள் சேர்ந்து அழ ஆரம்பித்தோம். அவர் கதிரையில்தொப்என இருந்தார். சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. கீர்த்தியைக் கூப்பிட்டு சில விசாரணைகள் அவரது கேள்விகளின் படி கீர்த்திக்கு கொஞ்சமாவது தெரிந்திருக்கும் என்ற தொனி இருந்தது. எங்கை போய் விடுவான்? ‘அவன் வருவான்என்றார். ஆனால் இரவு அவர் சாப்பிடவில்லை. அதிகாலை மூத்தவர் இராசர் வீட்டின் கோடிப்பக்கத்தால் வந்து குசினிக்குள் நுழைந்தார்.
கத்தி அழவோ, கண்டபடி அடிக்கவோ முடியாது விம்மலை அடக்கியபடிஏன் ராசா?’ என்ற கேள்விக்கு, ‘அப்பா என்ன சொன்னார்?’ என்ற பதில் வந்தது. தம்பி, தங்கையைக் கூட்டிக் கொண்டு கோடியில் நின்று கதைத்தார். நானும் போனேன். ‘நீங்கள் போய் அப்பாவிடம் விளக்கம் சொல்லி மன்னிப்புக் கேளுங்கள்என்றோம்.’ 'ஏனப்பு?’ அவங்கள் பெரிய ஆட்கள். நீங்கள் குழந்தை. அவர்கள் அரசியல் வேறை.... அப்பா சரியான கோவத்தில இருக்கிறார்அம்மா... உங்களுக்கு ஒண்டும் விளங்காது. நான் இனி இஞ்சை வரேல்லை. போறன்...” “ஐயோ அண்ணா...” என மற்ற இருவரும் குளறி அழ ஏதோ சமாதானமாகி குசினிக்குள் ஒளித்துக் கொண்டார்.

நான் தோழரிடம்பொடியங்கள் ஏதோ படம் போட்டவையாம் அங்கேயே படுத்துவிட்டாராம். பயத்தில் உள்ளுக்குள்ள ஒளித்து நிற்கிறார்என்று பொய் மேலை பொய் சொல்லி மகனின் தவறை மெழுகி மறைக்கும் சாதாரண தாய் போல்
ஆனேன். ஆனால் அவரது நடவடிக்கைகள் மாறின. தினமும்ஐலன்ட்ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம் உட்பட பிரதான செய்திகளை மொழி மாற்றம் செய்து வைப்பது அவரது கடமைகளில் ஒன்று. புதிதாக நட்ட தென்னை, மா, வாழைக்கு தண்ணி இறைக்க வேண்டும். அவை எல்லாவற்றையும் இளையவர் கீர்த்தி அண்ணைக்காக செய்தார். மூத்தவரின் வருகைப் பிழைகளை தோழரிடம் மறைத்தது நான் செய்த பெரும் தவறு. காலங்கள் ஓடின. இராசரின் அரசியல் சேர்க்கை மனதுக்கு வேதனை தந்தது. கணவரைத் தேடி காவற்படை வந்த காலம் போய் மகனைத் தேடி இராணுவம் வரப்போகிறது எனப்பயமும் வந்தது.

1981ல், ஆனைக்கோட்டை பொலிஸ் காவல் நிலையம் தாக்கப்பட்டது தொடர்பாக சதாசிவம் சிவசண்முகமூர்த்தி என்ற சுந்தரத்தையும், கணபதிப்பிள்ளை கதிர்காமு கந்தசாமி என்ற சங்கிலியனையும், கணபதிப்பிள்ளை சிவனேசன் என்ற பாலமோட்டை சிவத்தையும் தேடி வந்த ராணுவத்தினர், அவர்களை பிடிக்க முடியாமல் நமது கிராமத்தில் பலரைக் கைது செய்தனர். இவர்களுள் பண்ணாகத்தைச் சேர்ந்த ஆறுமுகம் சேயோன் குறிப்பிடத்தக்கவர்.

1982ல், காரைநகர் கடற்படை முகாமிற்கு தரை வழிப்பாதையாக யாழ் காரைநகர் றோட் பயன்பட்டது. நான் வேலைக்கு நடந்து போகும் பாதையில் இருந்தபாணாவெட்டியாழ் - காரைநகர் றோட் சந்தியில், ஒரு மாலைப் பொழுதில் ரோந்து சென்ற கடற்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து, எங்கள் அயலில் சமயத் தொண்டுகள் ஆற்றி வந்த குடும்பத்தில் இருந்து கணபதிப்பிள்ளை மயில்வாகனம் என்ற குழந்தையை இராணுவம் கைது செய்தது. அதே போல சுளிபுரம் பத்திரகாளி கோவில் சந்தியில் சைக்கிள் கடை வைத்திருந்த மயில்வாகனம் சின்னையா என்பவரையும் சந்ததியார், பாலமோட்டை சிவம் என்போர் தொடர்பு காரணமாக கைது செய்தனர். ஹெலிகொப்ரர் தாழப் பறப்பதும், இராணுவ ஊர்திகள் கிராமத்தினுள் வரவும் ஆரம்பித்தன.

1983 மே மாதத்தில் வவுனியாவில் விமானப் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதலில் காயம்பட்ட நெடுந்தீவை சேர்ந்த அமிர்தலிங்கம் ராமநாதன் என்ற அற்புதத்தை காப்பாற்றுவதற்காக பண்ணாகத்தைச் சேர்ந்த சிதம்பரநாதன் என்ற குமார் வீரமரணமடைந்தார். அவரது மரண செய்தி அறிந்து அஞ்சலி செலுத்துவதற்காக சுவரொட்டிகளை இராசர் ஏற்பாடு செய்தார். எமது வீடு பிரதான றோட்டின் சமாந்தரமான உள் ஒழுங்கையுள் இருந்தது.
முன் வளவுகள் வெளியாக இருந்தமையால் எம் வீட்டிலிருந்து றோட்டைப் பார்க்க முடியும். எமது வீட்டைப் போலவே இரண்டு வீடுகள் தள்ளி இருந்த மனோன்மணி ரீச்சர் வீட்டினுள் இராணுவ ஊர்திகள் வர ஆரம்பித்தன. அவர்களது மூத்த மகன்ஆர் ஆர்எனப்படும் வேலாயுதம் நல்லநாதர் ராசரின் உற்ற நண்பர் அவரும் காணாமல் போய்விட்டார். சிறிது நாட்களில் இராசரும் வீட்டை அடிக்கடி புறக்கணிப்பு செய்தார்.

1983 ஜூலை வந்தது. யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஜுலை 23ஆம் தேதி இரவு தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் 13 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இதனால் கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. கொழும்பு - வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட எங்கள் ஊர் மயில்வாகனம் சின்னையா, ஆறுமுகம் சேயோன், கணபதிப்பிள்ளை மயில்வாகனம் என 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். நாடே கொந்தளித்தது. சொல்ல வேண்டுமா?

என் மூத்தவர் வீட்டிலிருந்து முற்றாக வெளியேறினார். இதனால் தோழர் மிகக் குழம்பிப் போனார். என் மீது குற்றங்களைச் சுமத்தினார். நான் என் சிறிய மகன் மீது குற்றங்களைத் திருப்பினேன். கண்ணீரும் கவலையுமாக இருந்தோம். சித்தங்கேணி சந்தியில்ஆற்றல் மிகு கரங்களிலே ஆயுதங்கள் ஏந்துவதே மாற்றத்திற்கான வழி. மாற்றுவழி ஏதுமில்லை!” என மிகப் பெரிய சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. என் மகனின் கையெழுத்து! எனக்குத் தெரியாதா என் மகனின் எழுத்தை? அதே போல யாழ் ஸ்ரான்லி றோட் வைத்தியசாலை மதிலில்நாட்டிற்கு உழைத்து நிற்கும் நல்ல தமிழ் தாய்க்குலமே, வீட்டிற்கு ஒரு மகனை வீரமுடன் தாராயோ..?” என எழுதி எழுதி ஒட்டியிருந்தார். அந்த றோட்டினால் செல்லும் யார் கண்களிலும் அந்தச் சுவரொட்டிகள் தப்பாது. தோழரும் அந்தக் கையெழுத்துகளை கண்டுபிடித்திருப்பார். தான் தேச ஒற்றுமையின் மூலம் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக் கொடுக்கலாம் என வாழ, மகனோ இனங்கள் பிரிந்து போராடி உரிமை பெற நினைப்பது வீட்டினுள் எவ்வளவு பெரிய முரண்?

மட்டக்களப்பு சிறையுடைப்பும்.... போராளிகள் சேர்க்கையும்..


தொடர்வேன்......

35

மட்டக்களப்பு சிறையுடைப்பு

இராசரின் கல்லூரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய மேலும் இருவரைப் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டேன். சுளிபுரம் விக்ரோறியா கல்லூரியின் தலை சிறந்த மாணவர்களாகவும், சாரணிய படைப்பிரிவு தலைவர்களாகவும், சிரேஷ்ட மாணவ முதல்வர்களாகவும் விளங்கிய புளட் அமைப்பின் படைத்துறைக் கண்ணன் என்ற வடலியடைப்பு சோதீஸ்வரனும், சுரேஷ் என்ற சுரேந்திரன் சுந்தரலிங்கமும் நமது வீட்டில் இருந்த தோழரின் புத்தகங்களை வாசித்து தமது அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்கள். சுந்தரம், சந்ததியார் என அறிமுகத்தைச் சொல்லி முதலில் வீட்டிற்கு வந்தாலும், அது தோழரிடம் கலந்துரையாடலுக்கானதென பிந்தியே புரிந்து கொண்டேன். 'புதியபாதையின் சில இடதுசாரிய போக்கிற்கு இவரது கலந்துரையாடல்கள் வழிவகுத்திருக்கலாம். சுந்தரத்தின்புதிய பாதைபத்திரிகையை சட்டரீதியாக அச்சிட்டு விநியோகம் செய்வது கண்ணனதும், சுரேஷினதும் பிரதான வேலையாக இருந்தது. சுந்தரத்தின் படுகொலையை அடுத்து, அவர்கள் இருவரும் காணாமல் போய்விட்டார்கள். அதில் கண்ணனை இராசரே பாதுகாப்பாக வைத்திருந்ததாக பின்னாளில் கண்ணன் வந்து சொன்னார்.

இராசர், தனது அரசியல் நிலைப்பாட்டால் பெரிய மனத்துயரை மட்டுமல்ல, வீட்டின் புரிந்துணர்வையும் ஆட்டம் காண வைத்திருந்தார். இதனால் தோழர் நிம்மதி குலைந்திருந்தார். சுளிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் இராசர் அரசியல் வகுப்பு எடுப்பதாக மகளிடம் படிக்க வரும் எமது ஊர் பிள்ளைகள் சொன்னார்கள். பின் பல பாடசாலைகள் (அநேகமான யாழ் மாவட்ட பாடசாலைகள் அனைத்தும்) கோவில்கள், வாசிகசாலைகளில் இராசர் கூட்டம் பேசுவதாகவும் பல இளைஞர்கள் வீட்டைவிட்டு ஓடியதாகவும் கதைகள் வர ஆரம்பித்தன. குறிப்பாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இராசர் அரசியல் வகுப்பு எடுத்ததாகவும் அதனை அடுத்து ஒரு வகுப்பு மாணவர்கள் அனைவரும் இந்தியா சென்றதாகவும் அறிந்தேன். அவர்களில் எனது வகுப்பு மாணவிகள் பூலோகவதியின் மகன் காந்தன் அடுத்ததாக பண்ணாகம் அமுதவல்லியின் மகன் கணதேவகுரு, மற்றும் சங்கரத்தை சசிதரன், நாகலிங்கம் மாஸ்டரின் மகன், சித்தங்கேணி சிவச்சந்திரன், கண்ணதாசன் என பலர் சென்றார்கள். அது மட்டுமல்ல அவர்களில் சிலர் கடலில் இறந்து விட்டார்கள்.

முன்னர் நான் எழுதிய கவிதை ஞாபகம் வருகிறது

தந்தை தாய் அனுமதிக்க மாட்டார்கள் என்பதனால்
முந்தித் தானெடுத்த முடிவினை நிறைவேற்ற
சுந்தரத்தின் வழிபார்த்து சந்ததியின் உபதேசத்தால்....
பந்தபாசங் களைத்துறந்து... பக்தியாய்த் தமிழின் மேலே....
சிந்தனை செயல்கள் யாவும் சிதறாமலே நடந்து....
நிந்தனை அனுபவித்து நேசித்த விடுதலையை...
அந்தகராய்ச் சிறைச்சாலை அரணான கோட்டைகுள்ளே....
விந்தையாய் வருடங்கள் யுகங்களாய்க் கழிந்தனவாம்!
அந்திப் பொழுதினிலே அன்பான வீட்டைவிட்டு....
சந்திக்குப் போகாமல் சந்துபொந்து வழி பார்த்து....
புந்தியைக் கல்லாக்கிப் புறப்பட்டுப் போனவர்கள்....
சிந்தையில் விடுதலையை நேசித்த குற்றத்திற்காய்....
வந்தனை செய்தார்கள் வாதாடினால்நாடுஎன்று
மந்தமாய் மறுதலிப்பு மாற்றமாய்ப் போனதாலே....
எந்தன் மகன் மாத்திரமா? எத்தனையோ ஆயிரம் பேர்....
சொந்த பந்தங்கள் துடிக்கச் சொர்க்கம் போனாரோ?”

என் பிறந்த வீட்டில் நூற்றுக்கணக்கான காலணிகள் கிடந்ததாக என் உறவினர் ஒருவர் வந்து சொன்னார். படகில் இந்தியாவிற்கு போவோர் காலில் செருப்பணிந்து படகினுள் அனுமதிக்கப்பட மாட்டார்களாம். இது என் இளையவர் சொன்ன கதை. ஆளைத் தேடி வரும் இராணுவம் செருப்புக் குவியலைக் கண்டால் என்னாகுமோ என்ற பயம். இராசரை ஏசியபடியே இருந்தேன். அது அவரின் சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. இளையவர் போய்ச் சொன்னாரோ என்னவோ? அந்த செருப்புகளை எல்லாம் சாக்கில் கட்டி யாரோ எடுத்துப் போனதாக அயலவர்கள் சொன்னார்கள்.

1983 செப்டம்பர் 23 அன்று இலங்கை மட்டக்களப்பில் சிறையுடைப்பு இடம்பெற்றது. 1983 யூலை 23-25 ஆகிய நாட்களில் இடம்பெற்ற கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகளின் போது உயிர் தப்பிய தமிழ் அரசியல் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டனர். அவற்றுள் 41 தமிழ் அரசியல் கைதிகள் அங்கிருந்து தப்பியோட திட்டம் தீட்டினர். வெளியிலிருந்து கடத்தப்பட்ட சில ஆயுதங்களின் உதவியுடன் அவர்கள் சில குழுக்களாக சிறையில் இருந்து தப்பினர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அங்கு வேறு காரணங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருந்த 150 கைதிகளும் தப்பினர். இச்சிறையுடைப்பில் டக்ளஸ் தேவானந்தா,இராமலிங்கம் பரமதேவா, பனாகொடை மகேஸ்வரன், எஸ். . டேவிட், மாணிக்கதாசன், பரந்தன் இராசன், வாமதேவா, பாபுஜி, வரதராஜபெருமாள் என அறிந்தவர்களும், மற்றும் சில விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களும் தப்பினர். அதற்கு மிக உதவியாக
இருந்தவர்கள் இராசதுரை ஜெயச்சந்திரன் என்ற பார்த்தனும், இராமலிங்கம் வாசுதேவாவும் ஆகும்.

தந்தை வீட்டில் நிற்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, இவர்கள் இருவரையும் ஒருநாள் இராசர் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்கள் அப்பாவை சந்திக்க விரும்புகிறார்கள் என்றார். எனக்கு இராசரைக் கண்ட சந்தோசத்தை விட, இது சங்கடமாக இருந்தது. நான் தேனீரை வைத்துக் கொடுத்துவிட்டு... தந்தைக்கும், மகனுக்குமான அரசியல் முரண் பற்றி சொன்னேன். பின் அவர்கள் தோழரைச் சந்தித்து இருக்கக்கூடும். அது பற்றி எனக்கு இன்றுவரை தெரியவில்லை. ஆனால் இராசர் சிறையுடைப்பு நிகழ்வில் தப்பியோரை, பங்குகொண்டோரை காப்பாற்றி தமிழகம்
அனுப்பி வைக்க நிறையப் பாடுபட்டதை பின்னர் அவர் நண்பர்கள் சொன்னார்கள். இச் சிறையுடைப்பின் விபரணத்தை இராசரின் நண்பர் ஸ்ரீஹரன் சிவசிங்கராஜா அண்மையில் பகிர்ந்திருந்தார். அதனை இதில் இணைக்கிறேன், பாருங்கள்...https://m.facebook.com/story.php?story_fbid=10159033644236111&id=581066110&sfnsn=mo

மட்டக்களப்பு சிறையுடைப்பு

மட்டக்களப்பு சிறையுடைப்புநடாத்தப்பட்டு அரசியற்கைதிகள் மீட்கப்பட்ட சம்பவம் நடந்தாயிற்று. அன்றைய காலத்தில் மிகவும் பரபரப்பானதும் திகில் நிறைந்ததுமான இந்தச் சிறையுடைப்புச் சம்பவம் பல கைதிகளை விடுவித்ததன் பின்னர், விடுவிக்கப்பட்டவர்கள் தாம் சார்ந்திருந்த விடுதலை இயக்கங்களில் மீண்டும் இணைந்து கொண்டார்கள். அன்றிருந்த சூழலில் சிறையுடைப்பு என்பது இராணுவ முகாம்களைத் தாக்கி வெற்றி கொள்வதையும் விடவும் ஒரு வீரதீர சம்பவமாக மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி அலையை ஏற்படுத்தும் என்பது இயக்கங்களின் கணிப்பாக இருந்தது. அதுமட்டுமன்றி இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வந்த மக்கள் இந்தச் சிறையுடைப்பை ஒரு வெறும் சாகச இராணுவ நடவடிக்கையாக மட்டும் பார்க்காமல் எல்லா இயக்கங்களையும் சார்ந்த கைதிகளின் உயிர் மீட்பு நடவடிக்கையாகவும் அதுவரையும் அவர்கள் கோரி நின்ற இயக்கங்களின் ஒற்றுமைக்கான ஒரு நடவடிக்கையாகவும் கண்டார்கள். இச் சிறையுடைப்பில் விடுவிக்கப்பட்ட பலர் இன்று உயிருடன் இல்லை. சிலர் இன்றும் சாட்சிகளாய் வாழ்கிறார்கள்.

இப்போது திரும்ப புளட்டினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுர விடயத்துக்கு திரும்பி வருவோம். இவ்வளவு பாத்திரங்களும் பங்களிப்புகளும் சம்பவங்களும் நடந்தபோதும் அவ்விபரங்கள் மற்றைய இயக்கங்களால் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியில் சொல்லப்பட்டபோதும் முன்னர் கூறியபடியே துண்டுப்பிரசுரம் வெளியிடும் வேலைகள் ஆரம்பமானது.அதற்கான உள்ளடக்கத்திலும் தனித்து உரிமை கோருவதிலும் எழுந்த விமர்சனங்களையும், மறுப்புகளையும், தீர்மானம் மேற்கொள்ளும் தலைமைகள் உள்வாங்கவில்லை. துண்டுப்பிரசுரத்தை அச்சேற்றுவதற்கு அன்றைய சூழலில் ஊரடங்கு உத்தரவு கெடுபிடிகள் மற்றும் அச்சம் காரணமாக அச்சகங்கள் தயங்கி நின்றன. ஆனாலும் எப்படியாவது அச்சேற்றி மக்கள் மத்தயில் விநியோகிக்க வேண்டும். துண்டுப்பிரசுர வாசகங்கள் கையெழுத்துவடிவில் என்னிடம் வந்து சேர்ந்தது. இப்போது இதனை அச்சேற்றும் பொறுப்பும் என்னிடம் தரப்பட்டது. கையில் கையெழுத்துப்பிரதி வரவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவும் நிலைமை இறுக்கமாகியது. ஊரடங்கு உத்தரவு வேளையில் அச்சகம் எதுவும் திறந்திருக்காது. எப்படி இந்த நெருக்கடிக்குள் துண்டுப்பிரசுரத்தை அச்சேற்றுவது என்று பரந்தாமனும் நானும் அலைந்துகொண்டிருந்தபோது காலால் மிதித்து இயக்கும் அச்சு இயந்திரம் பற்றியும் அதற்குரிய
சொந்தக்காரர் இன்னார் இன்ன இடம் என்ற தகவல் கிடைத்தது. மிகவும் ஒதுக்குப்புறமான ஒரு சொந்தக் குடியிருப்பு வீட்டில் அந்த அச்சியந்திரம் இருந்தது. அதனால் பிரதான வீதிகளுக்கு அண்மையாக இல்லாமல் அது ஒதுக்கமான ஒழுங்கைகளால் சென்றடையும் இயல்பிலேயே பாதுகாப்பு மிகுந்த இடமாக இருந்தது. அதன் சொந்தக்காரர் இந்த துண்டுப்பிரசுரத்துக்கான அச்சுக்கோர்ப்பு வேலையை தான் செய்து தருவதாகவும், மை மற்றும் பேப்பர் கைவசம் இருப்பதால் அதற்குரிய செலவையும் அச்சுக்கோர்ப்பதற்கான கூலியையும் தரும்படியும், அந்நாட்களில் யாரும் துணியாத இவ் வேலையை செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் இவ்வளவு இருந்தும் மின்சாரத்தில் இயங்காத அச்சியந்திரத்தை கால்களால் மிதித்து உழக்கி இயக்கி அச்சேற்றும் பொறுப்பு உங்களுடையது என்றார். எப்படி அதனை இயக்குவது என்பதனையும் சொல்லித் தந்தார். தன்னுடைய வீட்டினுள்ளே தனியாக இருந்த அச்சுக்கூடத்திற்கு எந்தவித அசுமாத்தமோ பரபரப்போ இல்லாமல் வந்து அச்சியந்திரத்தை மிதித்து இயக்கி அச்சேறிய துண்டுப்பிரசுரங்களை வெட்டி பொதியாக்கும் வரை அரச உளவு அல்லது மாற்றாருக்கு செய்தி கசியாதபடி தன்னுடைய பாதுகாப்பு பற்றிய அவதானத்துடனும் இரு நாட்கள் முழுவதுமாய் எங்களிருவருக்கும் அவர் அச்சு மிதிக்கும் வேலை தந்து கொண்டிருந்தார். இப்போது துண்டுப்பிரசுரம் சாக்குப் பொதிகளில் தயாராகிவிட்டது. இருள்கவிழ்ந்த பின்னர் அவருடைய வீட்டிலிருந்து அவற்றை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் வரை அவர் பாதுகாப்புணர்வில் அவதானமாக இருந்தார். இயல்பாகவே தனது ஒரு சிறு பங்களிப்பு என்ற உணர்விலேயே இந்த அச்சேற்றும் பணியை அவர் செய்தாரே ஒழிய எவ்வித உத்தரவோ அல்லது அழுத்தமோ அல்லது ஆயுதம் தரித்த இயக்கமொன்றின் நடவடிக்கை என்ற அச்சவுணர்வுடனோ அவர் இருக்கவில்லை. கைத்துப்பாக்கி இடுப்பில் செருகியிருக்குமாற்போல காட்டிக்கொண்டு அல்லது உரப்பைக்குள் ஆயுதத்தை மறைத்து எடுத்துச் சென்று அவர்களை மறைமுகமாக அச்சப்படுத்தியோ மக்களுக்கு உள்ளுர பய உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை அந்நியப்படுத்தி காரியங்களை நிறைவேற்றிக் கொண்டன இயக்கங்கள். சயிக்கிள்களைத் தவிர எங்களிடம் இவை எதுவும் இருக்கவில்லை. அப்படி ஒரு நடைமுறையை கைக்கொண்டவர்களுமல்ல, எதிர்த்தவர்களாக இருந்தோம். அவரைச் சார்ந்து ஒரு குடும்பம் இருந்தது. அவர் எவ்வியக்கத்தையும் சார்ந்த அனுதாபியாக கூட இருக்கவில்லை. சாதாரண ஒரு உழைப்பாளிப் பொதுமகன். ஆனால் தான் உணர்ந்து கொண்ட நியாயத்துக்கான தனது பங்களிப்பாக அவர் இந்த அச்சு
வேலையை எடுத்து நிறைவேற்றித் தந்தார். அவர் பெற்றுக்கொண்ட கூலி தனது உழைப்பின் ஒரு நியாயமான பகுதியேயாகும். இப்போது துண்டுப்பிரசுரப் பொதிகள் சைக்கிள்களில் அச்சக வீட்டிலிருந்து இடம் மாற்றப்பட வேண்டும். இரவிரவாக சயிக்கிளில் இன்னொரு ஒதுக்கமான ஆனால் வேறெவரும் குடியிருக்காத மிகவும் சன சந்தடி மிகுந்த எனது, இரவு வேளை தங்குமிடத்துக்கு மாற்றியாயிற்று. இப் பொதிகள் இங்கிருந்து கைமாற்றப்பட வேண்டும். ஒரு கருக்கலான மாலைப்பொழுதில் அவர்கள் வர இருக்கிறார்கள். வந்தவர்களும் சைக்கிள்களில் தான் வந்தார்கள். துண்டுப்பிரசுரம் அடங்கிய பொதிகள் கைமாறின. அப்படி வந்தவர்களுக்கு தலைமை தாங்கி வந்தவர் என் கண்களில் படவில்லை. சில மீற்றர்கள் தொலைவில் நின்று அவர் என்னைப் பார்த்திருக்கிறார். அவரைப்பற்றி அறிந்திருந்தும் முன்னரோ அதற்குப் பின்னரோ இலங்கையில் இருந்த காலத்தில் நேரடியாக என்றும் கண்டதில்லை. ஆனால் இவர் இலங்கை அரசாங்கத்தினால் (1984) கைது செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்படுகிறார்.

மக்களின் விடுதலைக்காக போராடுவதாக புறப்பட்ட இயக்கங்களே ஒடுக்குமுறையாளர்களாகின்றனர். இயக்கங்களிடையே ஒற்றுமையைக் கோரி நின்ற மக்களுக்கு ஒடுக்குமுறையையே பரிசாக வழங்குகின்றனர். அனைத்து இயக்கங்களும், மற்ற இயக்கத்தினர் மேலான படுகொலைகளை ஏவிவிட்டதன் மூலம் தமது பாசிச முகத்தினை வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவால் வகுத்துக் கொடுக்கப்பட்டு ஒப்பேற்றப்பட்ட அனுராதபுர நகர சிங்களப் பொதுமக்கள் படுகொலையை அடுத்து இலங்கை இந்திய ஒப்பந்தம் யூலை மாதம் 26 இல் 1987 இல் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து வந்த மாதங்களில் இவர் விடுதலையாகின்றார். 13 வருடங்களுக்குப் பிறகு 1995 இல் இன்னொரு நாட்டில் என்னை விசாரித்துக் கொண்டு அவர் வருகிறார். இன்றைய காலங்கள் போல் அன்று தொடர்பாடல் தொழில்நுட்பம் இல்லாத காலம். வெறும் விலாசத்தை வைத்துக் கொண்டு தேடி வருகிறார்.

பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை
வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்
வாசலிடைக் கொன்றை மரம்.”

வில்வராய முதலியாரைத் தேடிவந்து அவரது மகனிடமே வீட்டுக்கு வழிகேட்ட கூழங்கைத் தம்பிரானுக்கு பாட்டிலே பதில் சொல்லி வழிகாட்டிய சின்னத்தம்பிப் புலவர் போல் ஏறத்தாழ எனது இருப்பிட விலாசத்துக்கு வந்த பின்னரும் கூட வந்து சேர்ந்த இடம் சரிதானா என உறுதிப்படுத்த அங்கே தொலைவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அக் குழந்தையின் சாயலைக் கண்டு தான் வந்து சேர்ந்த இடம் சரிதான் எனக் கண்டு நீ இன்னார் மகன் தானே என அறிமுகப்படுத்திக் கொண்டு அக் குழந்தை வழிகாட்ட வீடுவந்து சேர்கிறார். ஆச்சரியம் எதுவெனில் எனது முகச்சாயலை வெகுதொலைவில் நின்று இருளிலும் 13 வருடங்களுக்கு முன்னர் அடையாளம் வைத்து அந்த ஞாபகத்தில் அந்த முகச்சாயலை எனது மகனின் முகத்திலும் அவதானித்து இவ்வாறு எனது வீட்டுக்கு வருகிறார் அவர். இப்போதுதான் நான் முதற்தடவையாக நேரில் அவரைப் பார்க்கிறேன். திருமணமாகி தனது துணைவியாருடன் எமக்கு மிக அருகில் இருந்த
நகரத்தில் தான் அவர் ஜக்கிய நாடுகள் அகதிகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அகதி அந்தஸ்துடன் வசித்து வந்தார். பின்னர் எமது நகரத்துக்கே இடம்பெயர்ந்து வந்துவிட்டார். காலங்கள் கடந்தன. சில காலம் கனடாவில் தற்காலிகமாக தங்கிவிட்டு நோர்வே தொரம்சோ நகரத்துக்கு மீளவும் வருகிறார். இந்தியாவுக்கு செல்கின்ற அவரது பயணத்தில் ஒரு இடைத்தங்கலாக எனது வீட்டில் தங்கியிருந்து பின்னர் தனது முன்னைய நகரத்துக்கு செல்வதற்காய் அவரை நான் படகேற்றி அனுப்பி வைக்கின்றேன். அங்கிருந்து அவர் அடுத்து வரும் நாட்களில் சென்னை செல்லவிருப்பதாக சொல்லி விடைபெறுகிறார். அதற்கப்பால் சென்னையில் அவர் கார் விபத்தில் காலமான செய்தி வந்து சேர்கிறது. எனது
பிள்ளைகளால்புரபசர்என அழைக்கப்படும் அவர் இங்கிருந்து படகில் புறப்படும் நாளன்று இங்குள்ள பிரபலமான மலையுச்சி ஒன்றுக்கு அவர்களை கேபிள் கார் வழி அழைத்துச் சென்று மலையுச்சியில் எம்.ஜி.ஆர் பாடலானஅதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்என்ற பாடலை பாடி ஆடிமகிழ்ந்ததாக அறிந்தேன். இதோ 17ம் நிமிடத்திலிருந்து அவரது குரலைக் கேளுங்கள். https://youtu.be/dEBDUZxaMmk“-

ஸ்ரீஹரன் சிவசிங்கராஜா

31 அக்டோபர், 2020

நாட்டில் இனவாத உணர்வு மேலோங்கியது, இருந்தும் தோழர் தனது கட்சி வேலைகளை வழமை போல அதிகாலையில் எழுந்து எழுத ஆரம்பிப்பார். தோழர்களின் சந்திப்புகளும் தொடர்ந்தது. நான் பயந்தவாறே எங்கள் சத்தியமனையின் மீது இரண்டு, மூன்று தடவைகள் ஹெலிகொப்டர் தாழப் பறந்தது. அடுத்த நாள் அதிகாலை எம் வீட்டு லைட்கள் திடீரென எரிந்தன. எழுந்து பார்த்தால் எங்களைச் சுற்றி இராணுவம். சொன்னால் நம்ப கஷ்டமான ஒன்றே. சத்தியமனைக்கு கதவுகள் இல்லை. “அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும் உடையான் சடையப்பவள்ளல்...” எனச் சொல்லி அப்படியே திறந்திருந்தது.

நாய் கூடக் குரைக்கவில்லை. நாங்கள் ஒரு நாய் வளர்த்தோம். அதன் பெயர்கிட்டுஒரு பசுவும் வளர்த்தோம். அதன் பெயர்பட்டு’. (1983 தைப்பொங்கல் அன்று சர்க்கரைப் பொங்கலை நிறைய வைத்து, ‘பட்டுஇறந்து போனது. என் அயலவர்கள் சொன்னார்கள்...”தலைக்கு வந்தது... தலைப்பாகையுடன் போய்விட்டது”. இராசருக்கு வர இருந்ததைபட்டுகாப்பாற்றி இருக்கு என்று. அதனால் நானும் மனம் ஆறி இருந்தேன்.) வாகனத்தின் இயந்திரத்தை நிறுத்திவிட்டு, வாகனத்தை கைகளால் தள்ளியபடி இராணுவம் வந்திருக்கிறார்கள். அதனால் சத்தம் எதுவும் கேட்கவில்லை. சுற்றி நின்ற இராணுவம்சத்தியராஜன் சுப்பிரமணியம்’, ‘மீரான் மாஸ்ரர்என்று கனக்க கேட்க ஆரம்பித்தனர். அக்கணம் தான் தோழர் வி.பொன்னம்பலம் அவர்கள் சூட்டியசத்தியராஜன்என்ற பெயர் மட்டும் இல்லை, இன்னொரு பெயருக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் எனப் புரிந்தது. இந்தியாவிற்கு போனது, வந்தது, ஆட்களை சேர்க்கிறது, அனுப்புறது அது இது என வீட்டாருக்குத் தெரியாத எல்லாம் அவர்களுக்கு தெரிந்திருந்தது. தோழர் தனது கொள்கை நிலைப்பாட்டை சொல்ல வெளிக்கிட.... வந்த மேஜர் தோழரையும் அவரது அரசியல் பற்றியும் அக்குவேறு ஆணி வேறாகச் சொன்னார். அவர் முஸ்லீம் சமூகத்தவராக இருக்கலாம். அவரின் பேச்சு அது போல இருந்தது. அது மாத்திரமல்ல மகனைத் தங்களிடம் ஒப்படைக்கும் வரையில்ஆனையிறவு இராணுவ முகாமிற்கு மாதத்தில் ஓர் நாள் வந்து பதிய வேண்டும்என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். நான் அவசர அவசரமாக எனக்கு தெரிந்த சிங்களத்தையும், தைரியத்தையும்பத்திரகாளி ஆச்சியை நினைத்தபடி மகனின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை நாங்கள் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாது. தந்தை சிங்கள, தமிழ் மக்களின் வாழ்வின் மேம்பாட்டிற்காகவும்.... தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் அரசியலுக்காக நீண்ட காலம் வாழ்ந்துவருகிறார். அதனைவிட அவர் நோயாளி வருவது கஷ்டம் என்றேன். வந்த இராணுவ மேஜர், “அப்பா தனக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார் என அறிந்தால் உங்கள் மகன் இயக்கத்தை விட்டு விலகி, உங்கள் மகனாக உங்களிடம் வருவார்என்றார்.

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தோழர் மனம் வருந்துவது மிக்க வேதனை தந்தது. விநோதங்கள் காட்டிய என் மூத்த குழந்தை எங்கே, எப்படி இருக்கிறானோ? சாப்பிட்டானோ? என்னவோ அழுதபடியே இராணுவம் கிளறிப் போட்ட புத்தகங்களுடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்து இராசருக்கு வந்த வேலைக்கான கடிதம் ஒன்று உடைத்து வாசிக்கப்பட்டு இருந்தது. அதை வாங்கிப் பார்த்த தோழர்எல்லாமே முன்முடிவுடன் தான் செயற்பட்டு இருக்கிறார்... கேட்டால் ஒண்டுமே தெரியாது என்கிறீர்கள். ‘தாயின் மூக்கை கடித்த திருடன் கதைதெரியும் தானே?” என்றார். நான் சிலதை மறைத்தேன். ஆனால் அன்று, எனக்கும் ஒன்றுமே தெரியவில்லை. வீடு வேலை சமையல் என என் நாட்கள் போயின. பச்சைத் தென்னை மட்டையை வெட்டி.... சமைத்த அடுப்பில் காயவைத்தால் தான் அடுத்தநாள் சமையல். கண்ணீர் ஓடவே பல ஆண்டுகள் இதைச் செய்தேன். மீண்டும் பத்திரகாளி ஆச்சியை தான் கும்பிட்டேன். இராணுவம் மோப்பம் பிடித்துவிட்டார்கள். மற்ற இரு பிள்ளைகளுக்கும் தொல்லை தான் கொஞ்ச நேரத்தால் அயலில் இருந்த இராஜசுந்தரம் மாஸ்ரர் வந்தார். “ஒண்டுக்கும் பயப்படாதையுங்கள். கீர்த்தி எங்கடை வீட்டில் வந்திருந்து படிக்கட்டும். மகளைக் கவனமாக வைத்திருங்கள்என்றார். இரவியும் கலவரத்தினால் பூண்டுலோயாவில் இருந்து தப்பி ஊர் வந்து சேர்ந்தார். அவரிடம் நடந்த அனைத்தையும் கீர்த்தி சொன்னார். தோழர் கவலையாக இருப்பது இரவியையும் வருத்தியது. ஆனையிறவு போகத்தான் வேண்டுமானால், துணையாக தானும் வருகிறேன் என்றார்….

தொடர்வேன்....

36

அப்பா பொதுச்செயலாளர்! மகன் மீரான் மாஸ்டர்!

எமது ஊரில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வீட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். பிள்ளைகளைக் காணவில்லை என்றதும் எங்கள் வீட்டிற்கு ஓடிவரும் பெற்றோர்களுக்கு எங்கள் வீட்டின் அரசியல் முரண்பாட்டை விளங்கிக்கொள்ளும் பக்குவம் இருக்கவில்லை. அது இருந்திருந்தால் வந்து இருக்கமாட்டார்கள் தானே? தோழருக்கு அவர்களின் பெரும் ஓலம் கேட்கவிடாமல் நான் பட்டபாடு இன்றும் நடுங்க வைக்கிறது. நானும் என் மூத்த குழந்தை சாப்பிட்டானோ? தூங்கினானோ? என்று உளறுவதை எங்கு சென்று முறையிட எனத் தவிக்கிறேன். எங்கள் படலையருகில் வந்தவுடன் தலையை விரித்தபடி வந்து மண்வாரித் தூற்றியோரும் உண்டு.

தோழர் ஆனையிறவு இராணுவ முகாமிற்கு மாதத்தில் ஓர் நாள் இரவியின் உதவியுடன் சென்று கையெழுத்து போட்டு வந்தார். பலர் வெளிநாடுகளுக்கு சென்றனர். இத்தாலியில் இருந்த தோழர் சோ.தேவகுமாரனுக்கான (குமார்) காணொளி உரையாடலின் போது தோழர் உரையாடிய சில பகுதிகளின் காணொளி உரைவடிவம். அவருடன் தோழர்கள் சோ. தேவராஜா , சி.கா. செந்தில்வேல் ஆகியோர் உடன் இருந்தனர். அந்த உரையாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன்.

இலங்கையிலிருந்து போயிருக்கக்கூடிய தமிழ்த் தோழர்கள், அங்கிருக்கக்கூடிய சிங்களத் தோழர்களுடன் ஒன்றுபட்டு தேசத்தின் ஐக்கியத்தையும், சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக கூடப்பாடுபடவேண்டும். மற்றது இங்கே உண்மையிலேயே பொருளாதார நெருக்கடி காரணமாகத்தான் உழைப்பு பிரச்சனை சம்பந்தமாகத்தான் அவர்கள் போகவேண்டி வந்தது. சரி அவை அந்த நிலைமையை எடுத்திருந்தாலும் கூட, எதிர்காலத்திலையும் அதை நாட்டின்ரை, தேவைக்கும், நன்மைக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் அவை உழைப்பினம் என்று நம்பிக்கை. ஆனால் அவை செய்வினம் என்று தான் நம்புகின்றேன் . குமார் இப்போ இரண்டாவது முறை வந்து போய் இருக்கிறார். அவருக்கு இத்தாலி அனுபவங்கள் கூட இருக்கும். இத்தாலி நாட்டிலை சரியான மாற்றங்கள் எற்பட்டு இருக்குது. அவையின்ரை பொருளாதார, சமூக அபிவிருத்திகள் கூட நடந்திருக்கிறது. இன்னும் இங்கிருந்து போனவை இத்தாலி நாட்டு பொருளாதரத்தை கட்டி எழுப்புவதற்கும் , அதன் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் அங்கே அவை பாடுபடும் அதே வேளை, எங்கடை நாட்டு சுதந்திரத்தை பாதுகாக்கின்றதற்கும், அதின்றை பொருளாதரத்தை கட்டி எழுப்புவதிலையும் அவை கூடுதல் பங்கு வகிக்கவேண்டும். அதற்கு அவை அங்கேயுள்ள இலங்கை இளைஞர்களை அணிதிரட்டுவது
அவைக்கு கல்வியறிவைக் கொடுக்கிறது, நாட்டு நிலைமைகளை விளங்கப்படுத்துவதன் மூலம் அவை கூடிய சேவையை ஆற்ற முடியும்.”
இதன் காணொளி இணைப்புசத்தியமனைவலைத்தளத்தில் உள்ளது. (https://sathiamanai.blogspot.com/1982/06/?m=1)

1984 முற்பகுதியில் பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்கள் அயல் நாடு புறப்படுமுன் தேசிய கலை இலக்கியப் பேரவை ஏற்பாடு செய்த பேராசிரியர் கைலாசபதி அவர்களின் நினைவு கூட்டத்தில் பங்குபற்ற யாழ்ப்பாணத்துக்கு வந்து எங்களது வீட்டில் தங்கியபோது தான் எனக்கு அவருடன் பேசி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அது பற்றி அவரும் பின்னர் எழுதியிருந்தார். இடையில் இராசர் சில தடவைகள் இந்தியா போய் வந்தாராம். அதிவிரைவுப் படகுகளைப் பயன்படுத்தி நமது ஊர் திருவடிநிலை கடற்கரையிலிருந்து ஐம்பது நிமிட நேரத்திற்குள் தமிழகத்தின் கோடியாக்கரையை அடைந்துவிடுவார்களாம். இடையில் நேவி/கடற்படையைக் கண்டால் அவ்வளவு தான். இப்படிப் போய் வந்த ஒரு தடவை என்னையும் சகோதரர்களையும் பார்க்க, இராசரும் திருகோணமலையைச் சேர்ந்தகிருஷ்ரிஎன்ற இராசேந்திரராசா வசந்தராசாவும் வந்தனர். ஐந்து நிமிடங்கள் கூட நிற்கவில்லை. என் கையால் தேத்தண்ணி கூட வைத்துக்கொடுக்க முடியவில்லை. அவனுக்கு ஆமிக்காரர் வந்திடுவார்கள் என்ற பதட்டத்தை விடவும் தந்தையார் வந்திடுவார் என்ற பயமே அதிகமாக இருந்தது. எனக்கும் அதே உணர்வு தான். போனபின்பு இருந்து அழுதேன். சில மாதங்கள் போக, போராடப் போன போராளி மகன்களைப் பற்றி பெற்றோர் பெருமையுடன் பேசிய ஒரு காலமும் இருந்தது. அதுவரை மரணங்கள் எதுவும் பெரிதாக நிகழவில்லை.

இந்தக் காலத்தில் தான் வடலியடைப்புஜனாஎன அழைக்கப்பட்ட ஜனார்த்தனன் மோட்டார் சைக்கிள் விபத்தில் காலமானார். அவரது வீட்டிற்கருகாமையில் என்னுடன் வேலை செய்த ஆசிரியர் கமலா இருந்தார். இராசர் தான் அவரது இறுதி நிகழ்வை முன்னின்று நடத்தியதாகச் சொன்னார். ஒஸ்திரோவொஸ்கியின்வீரம் விளைந்ததுநாவலை எடுத்து நிலத்திலிருந்து வாசித்தபடி இருந்த அழகான அந்த சிறு பையனின் நினைவு எனக்குள் அடிக்கடி வரும். இந்த நேரத்தில்
பெற்றோலியம், கோப்பிரேஷன் முன்னாள் அதிகாரியான தோழர் கதிரவேலு (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தந்தை) எம்முடன் சில காலம் வந்து தங்கியிருந்தார். அதனால் மணியம் தோழரும் அதிக நேரம் வீட்டில் இருந்தார். எனக்கு அவர் மீது தனி அன்பும் மதிப்பும் இருந்தது. அவரை கவனித்துப்பார்க்கக் கிடைத்ததை ஒரு அண்ணனுக்கு செய்த பாக்கியமாக கருதினேன். உண்மையில் ஓர் அண்ணன் போல உதவியற்று தனித்திருந்த போது நம்பிக்கையும் அன்பையும் தந்தவர். இவரும், தோழரும் சத்தியமனையில் இருந்தமையால் இராசரும் வீட்டை வருவதை நிறுத்திவிட்டார். இங்கு தோழரோ கொள்கையற்ற நடைமுறையும், நடைமுறையற்ற கொள்கையைப் பற்றியும் எனக்கு
மட்டுமல்ல வருபவர்களுக்கும் போராட்ட வடிவத்தின் அனர்த்தப் போக்குகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அதைவிடவும் இந்தியா போராளிகளை உருவாக்குவதிலும் பயிற்சி அளிப்பதிலும் உள்ள முனைப்பையும், ஆபத்தையும் தோழர் விமர்சித்தபடி இருந்தார். அதனை சில இளைஞர்கள் உற்றுக் கேட்டனர். சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. இலங்கை அரசும் திட்டமிட்ட குடியேற்றங்களில் முனைப்புக் காட்டியது. இதே காலத்தில் கட்சியும் இலங்கை முழுவதும் ஓரளவு வியாபிக்க ஆரம்பித்தது. இரவியும் மலையகத்தில் வேலை செய்ததனால் அங்கு புதிய பல தோழர்கள் தோழர் தம்பையா இராஜேந்திரன் உள்ளடங்கலாக உருவாகினார்கள்.

1984ல் இலங்கை கயூனிஸ்ட் கட்சியின் (இடது) முதலாவது தேசிய மாநாட்டின் போது தோழர் கே.. சுப்பிரமணியம் அவர்கள்

1984 செப்டம்பர் 2,3 நாட்களில் கட்சியின் முதலாவது தேசியக் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் தோழர் கே . சுப்பிரமணியம் அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாக வடிவங்களும் சீர்குலைந்தன. திருடர்களும், குற்றவாளிகளும், தீயசக்திகளும் இந்த நிலையைத் தமக்கு சாதகமாக்கிக் கொள்ள முற்பட்டனர். இயக்கங்களின் பெயர்களையும் பயன்படுத்திக் கொண்டனர். அப்போதெல்லாம் மக்களுக்கு சில இயக்கங்களின் பெயர்கள் தான் அறிமுகம். இயக்கங்களில் இருந்த பல உறுப்பினர்களை மக்களுக்கு தெரியாது. இரகசியமாக இயங்கிய கால கட்டம் அது. “நானும் இயக்கம்தான்என்றுசட்டைக் கொலரைத்தூக்கி விட்டபடி திரிந்தவர்களை அப்போதெல்லாம் காணவே முடியாது. சிலதை நினைக்க, பெற்ற வயிறு பற்றி எரிகிறது. எனது மகன் மாத்திரமல்ல; பல தாய்மாரின் பிள்ளைகள் வீடு விட்டுப் பறந்து விட்டார்கள். வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் அழுத பெற்றார் ஏராளம். பள்ளிப்படிப்பை, ஏன்.... பல்கலைக்கழகப் படிப்பைத் துறந்தவர்கள் அநேகர். குடும்பத்தில் ஒரே ஒரு பிள்ளைகளும் அவர்களுள் அடங்குவர். அவர்கள் எங்கு போனர்கள்? உள்நாட்டிலா? அல்லது இந்தியாவிலா....? என்பது கூட யாருக்கும் தெரியாது. அத்துடன் சில சனங்கள் ஒரு புரளியைக் கிளப்பி விட்டனர். அதுபெற்றார் அரசாங்க ஊழியர்களாக இருந்தால், அவர்களது தொழில் பறிக்கப்படும்என்பது தான் அது. அப்படியாயின், பல போராளிகளின் பெற்றார், குறிப்பாக தாய்மார் அரசாங்க சேவகர்களே. வெலிக்கடைச் சிறைச் செய்தியை வானொலியில் செவிமடுத்த மலேசிய நாட்டு வாலிபர்கள் கூட, தங்கள் குடும்பத்தைத் துறந்து.... நாடு விட்டுப் போனதாக நாளா வட்டத்தில் அறியக் கிடைத்தது. சில வீடுகளில் பெண்பிள்ளைகள் கூட அப்படிப் போய் விட்டனராம். ஊரிலிருந்து தோழரின் சகோதர முறையானவரின் மகளும் இயக்கத்தில் இணைவதற்காக இந்தியா சென்று விட்டார். அவருடைய தாயார் முதற் தடவையாக வீட்டிற்கு வந்தார். ஆனால் அவர் புரிந்துணர்வுடன் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட புறப்பட்டனர். இப்படியே சில மாதங்கள் கழியசில பொடியள் இந்தியாவில்
இருந்து வந்து நிக்கிறான்களாம். அவன்களைப் பிடிக்க ஆமியையும் அரசாங்கம் இறக்கப் போகுதாம்என்று பொதுசனங்கள் கதைத்தார்கள்.

இதற்கிடையில் கார்த்திகைமாத விளக்கீடு வந்தது. இராசன் வீடு விட்டுப் போன பின்னர் எந்தவிதமான பலகாரமும் நான் வீட்டில் செய்வதில்லை. ஒரு வேளை 1984 கார்த்திகை விளக்கீடு என்பதால் இராசன் வீட்டிற்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அன்று கொழுக்கட்டை அவித்தேன். ஏனென்றால், அவன் சிறு பிள்ளையாக இருந்த நாளிலிருந்தே.... என் ஐயாவுடன் சேர்ந்து விளக்கீட்டிற்கு குலைவெட்டிய வாழைக்குற்றியை அழகாக வெட்டி கேற்றடியில் ஒரு கிடங்கு வெட்டி, காய்ந்த கொப்பறைத்தேங்காய்ப் பாதிக்குள் இலுப்பெண்ணெய் விட்டு எரிப்பார்கள். பகல் முழுவதும் முட்கிழுவைத் தடிகள் வெட்டி அதற்கு வெள்ளைப் பழந்துணி சுற்றி, அவற்றை இலுப்பம் எண்ணெய்க் கிண்ணத்துள் அமிழ்த்தி வைப்பார்கள். பெரிய சிப்பி தேடி எடுத்து அவை அம்மிக்கும், உரலுக்கும் விசேட தீபங்கள். அரிசி மாவைக் கரைத்து அதற்குள் வலக்கையைத் தோய்த்துமாவிலி சங்கிலிவருசமொருக்கா வா.... வா....’ என்று பாடி கதவுகளில் கையடையாளம் வைப்பார்கள். சிறுவர்களுக்கு அது ஒரு சந்தோசமான நாளாகவே கழியும்.

நாம் நினைத்தது போலவே இரவு ஏழு மணியளவில் இராசனுடன், பொன்னாம்பி (இன்றைய பரீஸ் சுகன் கனகசபை) என்ற ஒரு தோழரும் வந்தனர். அவர்களுக்கு நான் வாழைப்பழத்துடன், கொழுக்கட்டையும் கொடுத்தேன். இராசன் கொழுக்கட்டையை இரண்டாகப் பிய்த்துதம்பிக்கு ஒரு வாய், தங்கச்சிக்கு ஒரு வாய்எனத் தீத்தி விட்டார். அந்நேரம் மின்சாரம் திடீரென நின்று விட்டது. இரண்டு நிமிடங்கள் கழிந்ததும் திரும்ப மின்சாரம் வந்தவுடன், “நல்ல சகுனம் தான்என்று கூறியபடி அவர்கள் அவசரமாகப் புறப்பட்டுப் போனார்கள். அந்த நாள் இராசன் சத்தியமனைக்கு கடைசியாக வந்த நாள். அவருடன் வந்த சுகன் கனகசபை என்ற தம்பி இப்பவும் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறார். இன்றுவரை எம்முடன் தொடர்பில் இருக்கிறார். அதே காலப்பகுதியில் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆறு போராளிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பின்னர் 1988ல் என் மகன்மீரான் மாஸ்ட்ர்கூறியதுதனக்கு இச்சம்பவத்துடன் நேரடியான தொடர்பு இருக்கவில்லை என்றும் தனக்குத் தெரிந்திருந்தால் அதனை தடுத்து
நிறுத்தி இருப்பேன் என்றும் தெரிவித்தார்.” இந்த சம்பவத்தில் இறந்த அனைவரும் எமது குடும்பத்துடன் மிக நெருக்கமாக பழகியவர்கள். அவர்களின் குடும்பத்தின் துயரத்தில் நாமும் பங்கேற்கிறோம். இங்கே அவர்களின் குடும்பத்துடன் நாம் இன்றும் பழகியபடி இருக்கிறோம்.

நமது ஊர் விக்டோரியா கல்லூரி உட்பட பண்டத்தரிப்பு, சித்தங்கேணி, வடக்கம்பிராய், பறாளாய் முருகன் ஆலயம், திருவடிநிலை, மாதகல், சங்கானை இதற்குள் அடக்கப்பட்ட சகல கிராமங்களையும் உள்ளடக்கி 11-12 -1984 தொடக்கம் 72 மணித்தியால ஊரடங்கு சட்டம் போடப்பட்டு தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.

அதுபற்றித் தொடர்வேன்....

37

மீரான் மாஸ்டர் கைதானார்

இராசர் விளக்கீட்டில் அன்று எமது வீடு மட்டுமல்ல, தொல்புரத்தில் உள்ள திரு. சின்னத்துரை சிவப்பிரகாசம் வீடு, திரு. இராஜசுந்தரம் மாஸ்ரர் வீடு என தனக்கு விருப்பமானவர்களையும் சுகனுடன் சேர்ந்து சென்று பார்த்து வந்திருக்கின்றார். அந்நேரம் இராஜசுந்தரம் மாஸ்ரர் ஆமி சுளிபுரத்தை சுற்றிவளைக்கப் போகிறார்கள். நீ இங்கு நிற்காதே எனச் சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல அடுத்த நாள் எங்கள் வீட்டிற்கும் வந்து இந்தச் செய்தியைச் சொல்லிச் சென்றார்.
1984
மார்கழி 11 அதிகாலை இலங்கை இராணுவம் நமது ஊர் உட்பட மாதகல், சில்லாலை, பண்டத்தரிப்பு, சங்கானை , சித்தங்கேணி, வடக்கம்பிராய், விக்டோரியா கல்லூரி, பறாளாய் முருகன் ஆலயம், திருவடிநிலை, இதற்குள் அடக்கப்பட்ட சகல கிராமங்களையும் உள்ளடக்கி 72 மணித்தியால ஊரடங்கு சட்டம் போடப்பட்டு தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.
கீர்த்தி இராஜசுந்தரம் மாஸ்ரர் வீட்டில் தான் போயிருந்து படிப்பார். இராசருக்கும் முதலே அறிவுறுத்தல் கொடுத்தபடியால் பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கையும் இருந்தது. அதனால் நாங்கள் ஓரளவு பயம் குறைந்திருந்தாலும் ஏதோ ஒரு பதட்டம் என்னுள் இருந்தது. தோழர் திடீரெனஇராசன் ஊரிலா நிற்கிறார்?” எனக் கேட்டார். “ஓம் அப்பிடித்தான் கீர்த்தி சொன்னவர். வாத்தியாரும் ஆமி வர இருக்குது கவனம்என்றவர் என்று சொல்லி கொண்டேன். ‘ம்என்ற அரைச் சொல் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. அதற்கு முதல் ஒரு சில மாதங்கள் இருக்கும் பத்திரிகையில் ஓர் செய்தி
வந்திருந்தது. ‘லவன்என்ற ஒரு மருத்துவ கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டபோது கொடுத்த வாக்குமூலத்தில், “தனக்கு மீரான் மாஸ்டர் என்பருடன் தொடர்பு இருந்ததாகவும், அவரேமாஓவின் இராணுவப்படைப்புகள்நூலை மொழிமாற்றம் செய்வதாகவும்குறிப்பிட்டிருந்தார். அச்செய்தியை நிச்சயமாக தோழரும் பார்த்திருப்பார். ஆனால் அது பற்றி எதுவும் கேட்கவில்லை. அன்று திடீரென அந்த நினைவும் வந்தது.

புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் வந்து நிற்பதை அறிந்து தான் இத்தேடுதல் என்றும் மக்கள் கதைத்தனர். அன்று தோழர் வீட்டிலேயே இருந்தார். மதியம் வீட்டில் இருந்த முருங்கைக்காய் கறியும், மரத்து வாழைக்காய் பொரியலும் செய்துவிட்டு சாப்பிடவே மனமின்றி தவிப்புடன் இருந்தேன். தோழரின் முகத்திலும் அமைதி தெரியவில்லை. அது என் பிரமையாகக் கூட இருந்திருக்கலாம். இரவு ஏழு மணியிருக்கும் இரவியும் இன்னும் சில இளைஞர்களும் வீட்டை வந்தனர்.

அது தோழருக்கு மிகுந்த கோவத்தை ஏற்படுத்தியது. இப்படி ஓடித்திரிவது தான் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். “ஏன் வந்தனீங்கள்என்று தனக்கு தெரிந்த மறுமொழியை மறைத்தபடி கேட்டார். இரவி எதுவும் சொல்லவில்லை. கீர்த்தி இராசர் வந்தது பற்றி இரவிக்கு முதலே சொல்லியிருந்தார். அதனால் தான் வீட்டின் நிலமையை அறிய இவ்வளவு பதட்டமான நிலையிலும் ஓடி வந்தார். இரவியும் இளவயதினரே. ஆசிரியராக இருந்தாலும் அவரது வயது சந்தேகத்தை தோற்றுவிக்கும். “ஊர் முழுவதும் ஆமி. கவனமாக போய் வீட்டிலேயே இருங்கள் அதுவே பாதுகாப்புஎன்று சொல்லி
அனுப்பி வைத்தோம். இரவு கடந்தது. அடுத்த நாளும் இதே போன்றே கடுமையாக தேடுதலும் கொலைகளும் அதிகரித்த நாளாகும். அன்று தான் குணதிலகம் பாஸ்கரன் அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை பாதுகாக்கும் பணியில் ஓடியவர் மூட்டு சந்தைக்கு அருகில் சூடுபட்டார். இவரை காயங்களுடன் பாதுகாக்க முடியா நிலையாகும். இருந்தும் அன்றிரவு இவரது அண்ணர் பாதுகாக்க முயற்சி செய்தும் இவர் மரணமாகிவிட்டார். இதே நாள் தான் பறாளாய் முருகன் ஆலயத்தின் முன்றலில் நடந்த எதிர்மறை போராட்டத்தில் கந்தையா ஜங்கரன் அவர்களுக்கு சூடுபட்டது. இவர் காயங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்டு முகாமில் வைத்தியம் கிடைக்காமல், மரணமானார். இதேநாளில் எமது ஊரில் பல அயலூரவர்கள் இறந்தனர். எமது அயல் கிராமத்தவர் பலரையும் எமது ஊர் நோக்கி நகர்த்தியவர்கள் அவர்கள் இடங்கள் தெரியாமை, மழைவெள்ளம், அவர்கள் பலர் காயங்களுடன் வைத்தியம் அற்று இறந்தவர்கள் பலர். திருநாவுக்கரசு ஜெகதீஸ்வரன், கதிரமலை நந்தீசன் இருவரும் மூன்றாம் நாள் அம்மன் கோயில் சுற்றாடலில் வைத்து சூடுபட்டு இறந்தனர். இவர்கள் மட்டுமல்ல அன்று எமது ஊரில் 21 பேர்களுக்கு மேல் உயிர் நீர்த்தனர். மூன்றாம் நாள் இடையிடை துவக்குச் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. 15 மார்கழி 1984 அன்று காலை 7 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட, சாயந்திரம் அயலவர்கள் கொஞ்சம் நடமாடத் தொடங்கினர். எல்லோரும் இராசனைப் பற்றியே வந்து விசாரித்தனர். அவன் வந்து நின்ற நாட்கள் அனைத்தும் மக்கள் சந்திப்புகளை பாடசாலை, கோவில்கள், சனசமூக நிலையங்கள் என நடத்தினாராம்.
அதனால் எம்மூர் மக்களும் தங்கள் வீட்டுப் பிள்ளை போல, ஒருத்தர் மூலம் ஒருத்தர் விசாரித்துக் கொண்டனர். ஊர்கள் எல்லாமே மரண ஓலங்கள். யார் இறந்தனர் என ஒவ்வொருவரும் தெரியாமல் அவரவர் உறவுகளை தேடும் படலம் ஒருபக்கம், இறந்தவர்கள் வீட்டில் மரணஒலம், காயப்பட்டவர்கள் தப்புவார்களா? என்ற ஓலம், கைதானோர் எங்கு? என்ற கேள்விக்கு பதில் தெரியாதோர். காணாமல் போனவர் கிடைப்பாரா? என்ற ஓலம். அவ்வளவு மக்களும் ஊரில் சில நாட்கள் நடைப் பிணங்களாகவே உலா வந்தனர். அடுத்த நாள் அதிகாலை மூளாயில் இருந்து இராசருடன் படித்த பெண் பிள்ளை (பெயர் மறந்துவிட்டது) தனது தம்பி சங்கானையில் சுடப்பட்டதாகச் சொல்கிறார்கள். உண்மை அறிவதற்காக வந்தேன் என்றார். பின் விசாரித்ததில் பொன்னாலை ஞானகணேஸ் என்றபாபுவாகனத்தில் வைத்து சுடப்பட்டு இறந்ததாகச் சொன்னார்கள். நான்கோ ஐந்தோ பெண்குழந்தைகளுடன் பிறந்தவர். உயரமான அழகான பையன். யாழ் இந்துக்கல்லூரியில் படித்தார். என்னை மீறி அழுதேன். பாபு இறந்த சம்பவத்திலேயே (சங்கானை சந்தைக்கு முன்பாக) “அழியாதகோலமும் வசந்தனும் (சுன்னாகம்) காயமடைந்திருந்தார்கள். பாலமோட்டை சிவம், சின்ன மென்டிஸ், கோபு (சுழிபுரம்) மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்கள்என சாயந்தரம் அளவில் கீர்த்தி வந்து சொன்னார். “அண்ணாவைப் பற்றி ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் பாவித்த வெள்ளை நிற கார் பறாளாய் வெளியில் வைத்து ஆமி கொண்டு போனதாம்என்று பபியும் கீர்த்தியும் அழுதார்கள். எனக்கும் பயம் ஏற்பட்டது. யாரிடம் போய் கேட்பது. இரவி வந்தார். நாங்கள் மூன்று பேரும் அவரிடம் தான் எம் சுமைகளை இறக்கி வைத்தோம் அவரும் விசாரித்து வருவதாகப் போனார்.

இராசரின் சில நண்பர்கள் வந்துஅங்கு நின்றார், இங்கு நின்றார்எனச் சொன்னார்கள். அவர் கடைசியாக வீட்டை வந்தபோது வெள்ளை நிறத்தில் கை இல்லாத பனியன் போன்ற ஒன்றைப் போட்டிருந்தார். அதை தம்பிக்கும், தங்கைக்கும் காட்டிபுலட் புரூவ் ஜக்கட்’ (Bullet Proof Jacket) என்று விளக்கமும் சொன்னார். வாழை தண்டு நாரின் பின்னல் போன்ற துணி. நானும் தொட்டுப் பார்த்தேன். அடுத்தநாள் ஒரு இளைஞர் வீட்டை வந்தார். அவர் அதே ஆடையை அணிந்திருந்தார். பபி குளறி அழுதபடி எங்கடை அண்ணா எங்கை? இதை அவர் போட்டுக்கொண்டு வந்தார். அது இது என்று கண்டபடி திட்டி தீர்த்துவிட்டாள். அவர்களும் இராசனைத்தான் தேடித் திரிகிறார்கள் என்பது பின்னரே புரிந்தது. 5ம் நாள் சாயந்தரம், “பறாளாய் வயல் வெளியில் யாரையோ ஆர்மி சுட்டு இரத்தம் கிடக்குதுஎன்ற செய்தி காதில் கேட்டு பபியும், கீர்த்தியும் பறாளாய் வெளிக்குப் புறப்பட்டுப் போனார்கள். காலையில் போனவர்கள் மாலை தான் வீடு வந்தனர்.

வரும் போது கையில் இரத்தம் தோய்ந்து.... காய்ந்து போன அறுகம் புல் கொண்டு வந்துஇது அண்ணாவின் இரத்தம்என்று அழுது வீட்டின் தாழ்வாரத்தில் செருகிப் பத்திரப்படுத்தினர். முதன் முதலாக தோழர் அழுதார். எங்கே என் குழந்தை? என்ன நடந்தது? அவன் இறந்திருக்க மாட்டான் எனத் தோழர் சொன்னார். நானும் வேண்டாத தெய்வம் இல்லை. தொடர்ந்து இரண்டு நாளாக அழுதபடியே இருந்தோம். தோழர் வழமையாக இரவுச் செய்தி வானொலியில் போடுவார்.
செய்தியில்தமிழீழ விடுதலைக்கழக அரசியற் துறையைச் சார்ந்தமீரான் மாஸ்டர்என அழைக்கப்படும் சுப்பிரமணியம் சத்தியராஜன் கைதானார்எனச் சொன்னது. பபி குளறி அழுதது இராசரைப் போய் பார்க்கும் வரை தொடர்ந்தது. என் மகன் இறந்து விட்டானோ ஒருவித பயத்துடன் இருந்த எனக்கு என் மகன் உயிரோடு இருக்கிறான் என்பதே ஓரளவு ஆறுதல் தந்தது. ஆனால் அவனுக்கு கிடைக்கும் தண்டனைகள் பயத்தையே தந்தது. எனக்கு முதன் முதலில் விநோதங்களைக் காட்டிய என் குழந்தை பட்ட வேதனைகள் எவ்வளவோ? என தாய் மனம் பதைபதைத்தது. வீட்டில் தோழருடன் பகிர முடியாத சூழலில் உழன்றேன். இருந்தும் ஒருநாள் விடுதலையாகி வருவான் என மனதைத் தேற்றி ஆலய வழிபாடுகளில் என்னை இணைத்துக் கொண்டேன்.

இராசனுடன் பல இளைஞர்கள், குருநகர் இராணுவமுகாம், கோட்டை இராணுவமுகாம், பலாலி இராணுவ முகாம், பின்னர் பூஜா, வெலிக்கடை. என்ற சிறைக்கூடங்களின் சிறை வாழ்வு.......

இதுபற்றி தொடர்வேன்.

38

பெற்ற மகனுக்கு உயிர் கொடுத்த நான் பெறாத மகன்

1984 டிசம்பரில் 72 மணித்தியால ஊரடங்கு வேளையில் இலங்கை ராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது பிடிபட்ட எனது மூத்த மகன் இராசனை ராணுவத்தினர் எங்கே வைத்திருக்கிறாரகள் என்ற விபரம் எங்களுக்குத் தெரியவில்லை. பக்கத்தில் வசித்து வந்த கல்லூரி அதிபர் திரு.வை. இராசசுந்தரம் அவர்கள் தான் தனக்கு அறிந்து கொள்ள முடியும்
என்று ஆறுதல் கூறினார். அதன்படி பெப்ரவரி மாதக் கடைசியில் குருநகர் இராணுவ முகாமில் பல இளைஞர்களுடன் இராசனும் சிறை வைக்கப்பட்டிருப்பதாக அறிந்தோம்.(அப்படியான நல்ல மனிதனைக் கூட சில ஆயுததாரிகள் கடத்திச் சென்று அழித்து விட்டார்கள். உடம்பைக் கூடக் கொடுக்கவில்லை அது பற்றி பின்னர் சொல்வேன்)

கைதியைப் பார்ப்பதாயின் பார்க்கப் போகிறவர்கள் தங்கள் பெயர், முகவரி, அடையாள அட்டை முதலிய விபரங்களைக் கொடுத்து யாழ். அரசாங்க அதிபரிடமிருந்து பெற்ற ஒரு அனுமதிக் கடிதத்தையும் பெற்றுக் கொண்டு போக வேண்டும். அதன்படி ஒருநாள் இராசசுந்தரம் அதிபர் அவர்களுடன் நானும், எனது மகளும் ஒரு வாடகை வாகனத்தில் புறப்பட்டுச் சென்றோம். அதிபரின் இளையமகன் பரனும், அதிபரின் மனைவியும் வைத்தியர் கண்ணுத்துரையைப் பார்ப்பதற்காக எம்முடன் வந்தனர். எம்மை வாகனத்துள்ளே இருக்கும்படி கூறிவிட்டு அதிபர் இராசசுந்தரம் அவர்கள் யாழ். கோட்டை முகாமுக்கு தான் சென்று வருவதாக கூறிச் சென்றார். அன்றே இராசரைப் பார்த்துவிடலாம் என நினைத்த எமக்கு ஏமாற்றமே கிடைத்தது. அவர் வரும்வரை நாங்கள் ஆஸ்பத்திரியில் காத்துக் கொண்டிருந்தோம். இராசர் பிடிபட்ட கவலையில் நாங்கள் இருக்க சில பக்குவமற்றவர்கள்இராசனை முகமூடி போட்ட ஆள்காட்டி போல இராணுவம் அங்கு, இங்கு என அழைத்து வந்ததாகவும்பயமூட்டினர்.

இந்த பறாளாய் பிள்ளையாரை நான் முட்டி போட்டு, தலையில் குட்டாமல் ஒருபோதும் நகர்ந்ததில்லை இதன் பூசகர் பிறைசூடிக்குருக்கள் எங்களுடன் (சுந்தரம், சந்ததி, குகபூசணி..என சிலர்) சிங்களம் படித்தவர். நான் விட்ட கண்ணீர் அவர் அறிவார். இதன் வயல் வெளியில் தான் இராணுவத்தைக் கண்டதும் வாகனத்தைவிட்டு இறங்கி ஓட, இராசரைக் காப்பாற்ற ஒற்றையாய் நின்று தனிச் சமர்புரிந்து மரணமானார் ஜெயமனோகரன் சரவணமுத்து. (அவரை நண்பர்கள்தோழர் ரங்கன்எனவும் செல்லமாகஆடுஎனவும் அழைப்பார்களாம்.) மாதகலைச் சேர்ந்தவர். என் மகள் பபியுடன் அவர் தங்கை ஜெயபவானி ஒன்றாகப் படித்தவர். அந்த மகனின் இரத்தம் தோய்ந்து.... காய்ந்து போன அறுகம் புல் தான், என் மகனின் இரத்தம் எனசத்தியமனையின் வாசலில் வைத்திருந்தோம்.

அன்றே இறந்து போக வேண்டிய இராசனை மேலும் பதினைத்து வருடங்கள் வாழ வைத்த அந்த ஜெயமனோகரன்
குழந்தையை இன்றும் நினைத்தபடியே... மூன்று மாதங்கள் கடந்தன. எம் ஊருக்கு இராணுவம் வரவில்லை. இராசர் காட்டிக்கொடுத்திருந்தால் எம் ஊரின் அரைவாசி தாய்மாரும் என்னுடன் சேர்ந்து இராணுவமுகாம் ஏறி இறங்கியிருப்பர். அநேகமாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருத்தராவது பயிற்சிக்கு சென்றனர். எந்த அனர்த்தமும் இடம்பெறவில்லை. அதை உணர்ந்து ஊரவர்கள் மீண்டும் நெருங்கிவர ஆரம்பித்தனர். அவனது மௌனமும், மறைப்புகளும் அவனுள் ஏற்படுத்தியிருக்கும் ரணம் பற்றி நினைத்து வெந்து மடிந்தேன்.

1985 ம் ஆண்டு மார்ச் மாதமளவில் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை பார்க்கிற அனுமதி அவர்களின் தாய்மாருக்குக் கிடைத்தது. அதுவும் யாழ். அரசாங்க அதிபரின் அனுமதிக் கடிதம் பெற்றுக் கொண்டுதான் முகாமுக்குள் போக முடியும். இராசசுந்தரம் அதிபராலும் அதை இலகுவாகச் செய்ய முடியவில்லை. அரச அதிபரின் அனுமதியை அவரவரே பெறவேண்டியிருந்தது. அரச அதிபரின் வாகனத்தை அத்துமீறி கடத்தி பாவித்ததாக அரசின் குற்றச்சாட்டு என் மகன் மீது இருப்பதாக அதிபர் இராசசுந்தரம் கூறினார். மகனது இயக்கத்தின் தலைவரின் உபயோகத்திற்காக அவ்வண்டியை கடத்தியதாக மகனின் நண்பர்கள் சொன்னார்கள். அரச அதிபரை சந்திக்க பல தடவை முயன்றேன். முடியவில்லை. கச்சேரிக்குச் சென்று எங்கள் அடையாள அட்டை இலக்கத்தைப் பதிவு செய்த கடிதம் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். என்னைப் போன்ற பல தாய்மாரை அங்கு காணக்கூடியதாக இருந்தது. எங்கள் அயலவரான வேலுப்பிள்ளை என் கஷ்டத்தைக் கண்டு நீங்கள் வீட்டை போங்கோ.
நான் எடுத்து வந்து தருகிறேன் என்றார். அதுவும் சாத்தியமாகவில்லை. நீண்ட முயற்சியின் பின் அரசதிபரின் கடிதம் கிடைத்தது. நான் தனியாக சென்று இராசரைப் பார்ப்பதாக இருந்தேன். தோழரோ பபியையும் அழைத்துச் செல்ல வலியுறுத்தினார். அழகான இளஞ்சிறு பெண்ணை எப்படி இராணுவ முகாமிற்கு கூட்டிச்செல்லமுடியும்?
தோழரோஅவர் இந்த உலகை தைரியத்துடன் எதிர் நோக்கி வாழ முற்படவேண்டும். அதற்கான சந்தர்ப்பம் இது. அவள் புத்திசாலி. தைரியசாலி அவள் உமக்கு பாதுகாப்பாக இருப்பாள். கூட்டிச் செல்லுங்கள்என்று விட்டார்.

எனது வேலை மத்திய அரசாங்கத்தின் சிறு கைத்தொழில் இலாகாவினுடையது. எங்கள் மாதச் சம்பளம் கச்சேரியால் வழங்கப்படும். எங்களது வரவு செலவும் அங்குதான் சமர்ப்பிக்கப்படும். எப்படியும் மாதத்தில் இருதடவை கச்சேரி செல்லுவேன். பபியும் தனது கல்விக்காக சுண்டுக்குளி சென்றுவருவார். ஆனால் இடையில் இருந்த குருநகர் எமக்குத் தெரியாது. 782 காரைநகர் பஸ்சில் அதிகாலை ஏறி யாழ் நகரை அடைந்து மீண்டும் கச்சேரிக்கு செல்லும் சிறு வாகனம்
ஒன்றில் நெருங்கியடித்து, சென்ற் பற்றிக்ஸ் பாடசாலையடியில் இறங்கி நடக்கவேணும். வார இறுதியில் மட்டுமே கைதிகளைப் பார்க்க முடியும். இருவருக்கு மட்டும் அனுமதி. அந்த தெரு வெறிச்சுப்போயிருந்தது. இராசரைப் பார்க்கப்போகிறமே என்ற துடிப்பு கால் வலியையை மறக்கடித்தது. முள்ளுக்கம்பிவேலி ஆரம்பமானது. குருநகர் முகாம் நோக்கிச் சென்றோம். அங்கும் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பால் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்றாலும், உள்ளேயுள்ள இராணுவ அதிகாரியிடம் வந்த வாகன இலக்கம் தொடக்கம், பார்வையிடச் சென்றவர் விபரங்கள் அரசாங்க அதிபரின் கடிதம் யாவும் ஒப்படைத்துத் தான் கைதியைப் பார்க்க அனுமதிப்பார்கள். அங்கு தகரக் கொட்டகையும், தண்ணீர் பானையும் நீண்ட வாங்குகளும் போடப்பட்டிருந்தன. ஹெலிகொப்டரின் சத்தம் கேட்டாலே கக்கூசின் பிளேற்றுக்குள்ளோ, குசினியிற்குள்ளோ அடைக்கலமாகும் நாம், அந்தப் பெரிய வானூர்தி ஏறுவதையும், இறங்குவதையும் அருகிலிருந்து பார்க்க முடிந்தது. அது சுழற்சிய காற்றாடிகளால் எழுந்த தூசிகளும் சேர்ந்து கண்ணீரைக் கட்டுடைத்தது.

நீண்ட நேரத்தின் பின்னர் பார்வையிடுவதற்கு பெயர்களை ஒவ்வொருவராக அழைத்தனர். அனுமதி பெற்றபின் மகளும்
நானும் அந்தக் கட்டிடத்தின் பின்புறமாக அழைத்துச் செல்லப்பட்டோம். அந்தக் கட்டிடமானது வீடமைப்பு இலாகாவினால் குடியேற்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தொடர்மாடிக் கட்டிடமாகும். அங்கு தான் இராணுவத்தினரும், கைதிகளும் இருந்தனர்.என்னைப் போல இன்னொரு தாயும் வந்திருந்தார். அவ தான் கொக்குவில் குடியிருப்பு என்று கூறினார். வேறு சிலரும் இருந்தனர். அவர்கள் வேறு காரியத்திற்காக வந்திருந்தனர். சில நேரத்தின்
பின்னர் இராசனை இரு ராணுவ வீரர்கள் ஆயுதசகிதம் அழைத்து வந்தனர். இராசனது கைகள் விலங்கிடப் பட்டிருந்தன. கண்களுக்குக் கீழே ஏதோ... ஒரு வட்டவடிவில் சூட்டுக் காயங்கள் அரை குறை ஆறாத வடுக்களாகத் தெரிந்தது. அதைப்பற்றி ஒன்றையும் நான் கேட்கவில்லை. அழகான, கம்பீரமான என் குழந்தை கோலம் கெட்டு, ஆளுமை இழந்து, வெளிறி அந்நியன் போல நின்றான். அந்தக் கணம் இன்றுவரை என் கண்ணில் இருந்து அகலவில்லை. பெரும் ஓலம் என்னுள் அடங்கி நெஞ்சை இறுக்கியது. தாரையாய் கொட்டிய மூவரின் கண்ணீருக்கு தடையேது? ஏதும் பேசவில்லை.
ஆயிரமாயிரம் கேள்விகள் மூவருள்ளும் அடங்கி அமிழ்ந்தது.
அப்பாவையும் தம்பியையும் கவனமாக இருக்க சொன்னார். தவளத் தெரியாத காலத்தில் பல நாட்கள்இராசர் உமக்குத் துணையாக இருப்பார்என தோழர் என்னை விட்டு சென்றிருக்கிறார். எனக்கு காவலரணாக இருந்த என் மூத்த செல்வம், ஓயாது பேசிப், பாடி முழங்கும் என் தீரன் மௌனமாய் கையில் விலங்குடன் பார்த்த திரை - விடுதலையாகியும் மறையாது நின்று நிலைத்தது. ஏனெனில், பக்கத்தில் ராணுவ வீரன் கையில்மைக்இருந்தது. நாம் எந்த விதமான சாப்பாட்டுச் சாமான்களும் எடுத்துப் போக வில்லை. அந்த விபரமும் எமக்குத் தெரியாது. எந்த நேரமும் கையில்
பேனையும். புத்தகமுமாய் இருந்த குழந்தை அவன்இராசா புத்தகங்கள் ஏதும் கொண்டு வந்து தரவாஎனக் கேட்டேன். அவசரமாக மறுத்த அவன் தங்கையினதும், தம்பியினதும் கல்வியை வலியுறுத்தினான். அவன் நிறுவ முயன்றது எனக்குப் புரிந்தது. எங்கே பிடிப்பட்டீர்கள்? என்ன நடந்தது? யார் யார் உங்களுடன் இருக்கிறார்கள்? பல கேள்விகள்
கேட்கத் தோன்றாமலே நேரம் ஓடி முடிந்தது. சில நிமிடங்களின் பின்னர் இராசனை அந்த இராணுவ வீரர்கள் உள்ள அழைத்துச் சென்றனர். அவன் திரும்பிப் பாராது உள் சென்றான். இப்படி நான்கு, ஐந்து தடவைகள் பார்த்தேன்.

இராசர் மீது மாறாத அன்பு கொண்ட தொல்புரத்தைச் சேரந்த சிவப்பிரகாசம் விஜயலட்சுமியும் பத்திரகாளி கோவிலடியைச் சேர்ந்த சின்னையா ஞானாம்பிகையும் என்னுடன் வந்து இராசரைப் பார்த்தனர். வெய்யில் சுட்டாலென்ன கால்கள் உழைவெடுத்தாலென்ன பிள்ளையைப் பார்க்க வேண்டுமே என்ற தவிப்பில் எப்போ கதவு திறக்கப்படும் என்று துடிப்புடன் காத்துக் கிடப்போம். முதலில் சென்றவர்களுக்கு முதலில் காட்டுவார்கள். அந்த ராணுவ வளாகத்தினுள் இலங்கை வங்கியும் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. 1983 கலவரத்தின் பின் வெளிநாடு சென்ற பிள்ளைகளின் தாய்மார் மகன்மார் அனுப்பும் பணத்தை பெற்றுக் கொள்ள அங்கு நின்றார்கள். “பாவம் செய்தவளவை கைதியைப் பார்க்கப் போட்டு வருகினம். நாங்கள் செய்த புண்ணியம் . எங்கடையள் தப்பிப் போய் அங்கையிருந்து அனுப்பும் பணத்தை எடுக்க வந்திருக்கிறம்என்று எமது காது படக் கூறிய தாய்க்குலத்தின் குரலையும் கேட்டுக்கொண்டு வெளியே வந்தோம். அந்த நேரம் அது கோவத்தை ஏற்படுத்தினாலும் எம்சமூகக் கட்டமைப்பு பக்குவமடையாமைக்கு அரசியலறிவுப் பஞ்சமே காரணம். அதனை சரியாக பிரயோகிக்காமல் தேர்தலை முன்னிறுத்தியே அன்றும் இன்றும் அரசியல் செய்யப்படுகிறது.

மூன்று மாதத்தின் பின்னர் கைதிகளை யாழ். கோட்டைக்கு மாற்றினார்கள். ஏனெனில், குருநகர் கட்டிடத்தை விட, கோட்டைக் கட்டிடம்அகழிசூழ்ந்த பாதுகாப்பாக இருந்தது தான், காரணம். “அரசாங்கக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்என்றொரு பழ மொழி இருக்கிறதல்லவா?....

அது பற்றித் தொடர்வேன்.....

39

யாழ். கோட்டை சிறையில் மகன்

வார இறுதி நாளில் சிறைக்கைதிகளைச் சந்தித்தல் என்ற கிரமப்படி நாங்கள் குருநகர் தடுப்பு முகாமுக்குச் சென்றோம். அங்கு போன பின்னர் தான் அறிந்தோம். ‘கைதிகள் யாழ். கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டு விட்டார்கள்என்று. அதிகாலை எழுந்து சமையல் செய்து இராசரைப் பார்க்கப் போகிறோம் என்று கிளம்பியது. இராசரைப் பார்த்து திரும்ப சாயந்தரம் ஆகிவிடும். ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கலாம் என்றது இராணுவத்தின் பொது அறிவித்தல். ஆனால் அவர்களுக்கு ஏற்ற நேரமே பெயரை அழைப்பார்கள். அது ஒழுங்கற்ற முறையில் செயற்பட்டது. அங்கு உணவோ, உடையோ கொடுப்பதற்கு அனுமதியில்லை. குழந்தை மிகவும் மெலிந்திருந்தது மனதிற்கு வேதனையாக இருந்தது. என்னுடன் படித்தவர்களுக்கோ, என் சக ஆசிரியர்களுக்கோ கணவரும், மகனும் அரசியலில் உள்ளவர்களாக வாழ்வு அமையவில்லை. அதிலும் இருவருமே அரச படையினால் தேடுதலுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுபவர்களாக கேள்விப்பட்டதும் இல்லை. எனது சக ஆசிரியர் மாவிட்டபுரத்தை சேர்ந்த நாகராஜேஸ்வரியின் சகோதரனே இராணுவத்தால் தேடப்பட்ட நாகராஜா மாஸ்டர். பின் அவர் இந்தியா சென்றுவிட்டார். உருத்திராச்சி ஆசிரியையின் தம்பி சந்ததியாரும் ஆரம்ப காலத்திலிருந்து இருந்தவர்கள். மற்றும்படி அந்த நேரத்தில் வேறு எவரையும் தெரியவில்லை. என் கஷ்டங்களை யாரிடமும் பகிர்ந்ததில்லை. அதற்கு எனக்கு நேரமும் இருக்கவில்லை. குருநகர் முகாமிலிருந்து இராசரை கோட்டைக்கு மாற்றியதையும் நீண்ட காத்திருப்பின் பின்னரே சொன்னார்கள். பிறகு என்ன? ஒரே நடைதான். யாழ். பேருந்து நிலையத்திலிருந்து சுற்று வழிப் பாதையாக... மணிக் கூண்டு கோபுரத்திலிருந்து.... கிழக்கு நோக்குச் சென்று... றிம்மர் மண்டப வாயில் கடந்து இரண்டாம் குறுக்குத் தெரு வரை நடந்து அங்கிருந்துகோட்டை இராணுவ முகாம்வாசலைச் சென்றடைய இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக நேரம் போய் விடும். பார்த்த இடமனைத்தும் இராணுவம். பொது சனமோ, பிற வாகங்களோ எதுவுமில்லை. மயான அமைதி. குருநகர் முகாமில் ஹெலிவரும். வங்கியில் பணம் எடுக்க பொதுமக்கள் வந்தனர். யாழ். கோட்டை இராணுவ முகாமானது சுற்றுப்புறம் முழுவதும் அகழிகளால் சூழப்பட்டு அதற்குள் முதலைகள்நிறைந்திருக்குமாம்.


யாராவது கைதிகள் தப்பி ஓட முயன்றால், அந்த முதலைகளிடமிருந்து தப்ப முடியாதாம். அவ்வளவு பாதுகாப்பு அரண்களையுடைய கோட்டையின் உள்ளே கைதிகளை வைத்திருந்தனர். அந்தக் கோட்டைக்குள் முற்காலத்தில் கைதிகளைத் தூக்கிலிட்ட தூக்குமரமும் இருக்கிறது.. இவ்வளவு பாதுகாப்பு மிக்க கோட்டை சுவர்களின் மத்தியில் கைதிகளை ராணுவத்தினர் அடைத்து வைத்திருந்தனர் உச்சி வெய்யில் தலையைச் சுட்டெரிக்க ஒருவாறு கோட்டையை அண்மித்து விட்டோம். நிச்சாம சாதீய போராட்டத்தின் விளைவாக தோழர்கள் தருமு, பழனி, நடேசன் என சிலர் சிறையிருந்த காலத்தில் தோழர்களைப் பார்க்க அங்கு சென்றிருக்கிறேன். அப்போது அச்ச உணர்வு ஏற்பட்டதில்லை. அங்கு சிறைவைக்கப்பட்ட பல கைதிகளின் கதைகளை கேட்டும், படித்தும் இருந்தேன். வழி நெடுக காவலில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களிடம் எமது அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளே சென்றோம். வழமையாகத் தாய்மார் தான் வருவார்கள். ஆனால், என்னுடன் மகளும் வருவார். எனக்கு உள்ளூரப் பயம்தான். அழகான குமர்ப் பிள்ளை ராணுவத்தினர் ஏதாவது சீண்டல்கள் செய்வார்களோ என்ற பீதி தான். ஆனால் ஒரு நாளாவது ஒருவரும் எந்த விதமான இடைஞ்சலும் செய்யவில்லை. அவர்கள் ஏழைக்குடும்பத்துப் பிள்ளைகளாக இருந்தார்கள் போலும்.


உள்ளே சென்று அங்குள்ள அதிகாரியிடம் எமது அடையாள அட்டை, அரசாங்க அதிபரின் அனுமதிக்கடிதம் ஆகியவற்றைக் காட்டிடோக்கன்எனப்படும் நம்பர் கடதாசியைப் பெற்றுக் கொண்டு பார்வையாளர்கள் உட்காரும் வாங்கில் அமர்ந்து கொண்டோம். எங்களுடன் வேறு இருவர் இருந்தனர். சம்பிரதாயமான புன்முறுவல் கூட அற்றவர்களாய் அமர்ந்திருந்தோம். கோட்டையின் உட்பக்கத்தில் இருந்து தான் ஒரு ஜீப்பில் கைதிகளைக் கொண்டு வருவார்கள். வருகை தந்திருக்கும் நம்பரின் படி கைதிகளை ஒவ்வொருவராக அழைத்து வந்து காட்டுவார்கள். அவர்களும் பக்கத்தில் தமிழ் தெரிந்த இராணுவ வீரர்கள் நிற்பார்கள். பெரும்பாலும் அவர்கள் முஸ்லீம் சமூகத்தினர் என்று புரிந்து கொண்டேன். முதல் தடவை இராசரை கோட்டையில் பார்த்த நாள் மறக்க முடியாத ஒன்று. இராசருடன் நின்ற இராணுவ வீரன்உனது பெற்றோரை மேயர் சந்திக்க வேண்டும் என்று சொன்னார் தானே? நான் அழைத்து வருகிறேன். விலகி விலகி நில்லுங்கள்என்று சொல்லி உள்ளே சென்றார். மூவர் கண்களிலும் நீரோட பார்த்து நின்றோம். பேசவில்லை. எழுபத்திஇரண்டு மணிநேர பாரிய சுற்றிவளைப்பின் போது பிடிபட்டவர்களில் வயதில் குறைந்தவர் என்றாலும் அவர்களால் குறிவைக்கப்பட்டவர்களில் ஒருத்தனையாவது பிடித்துவிட்டோம் என்ற திருப்தி போலும். சிறிது நேரத்தில் எங்கள் மூவரையும் அதிகாரியின் அறையினுள் அழைத்துச் சென்றார். “அம்மா கதிரையில் இருங்கோஎன தமிழில் சொன்னார். நான் இருக்கவில்லை. அவர் திரும்பவும் சொன்னார். கதிரையின் நுணியில் இருந்தேன். அவர் எழுந்து அலுமாரியை திறந்து ஒரு பொதியை எடுத்து வந்தார். ஆறடிக்கு மேல் உயரமுள்ள சிவத்த நிறமுள்ள முஸ்லீம் இனத்தவர். நீண்ட வருடம் அவரது பெயர் ஞாபகத்தில் இருந்தது இப்போது மறந்துவிட்டேன். பொதியில் இருந்து கைத்துப்பாக்கியையும், சன்னங்களையும் எடுத்தார். ஐயோ...! என் பிள்ளையை என் கண்முன்னே சுடப்போகிறாரோ என்று பயந்து எழுந்து விட்டேன். ஏனென்றால் இராசரின் நண்பரான கேதீஸ்வரன் என்பவர் யாழ் நாகவிகாரையை சிலர் கொழுத்தி அழித்தபோது தடுத்தார். பின் கைது செய்த இளைஞர்களுடன் சேர்த்து அவரையும் இராணுவம் கொலை செய்தது. இக்கதையை இராசரே எனக்கு சொன்னவர். அதனால் இந்த அதிகாரி எதற்கு இதை எடுத்தார் என்ற படபடப்பு அதிகமானது.


இராசர் முகத்தைப் பார்க்கிறேன் சலனமற்றிருந்தது. “அம்மா இந்த துவக்கு எங்களிடம் கூட இல்லை ரஷ்யா நாட்டு 1984ஆம் தயாரித்த பிஸ்டல். இதை உங்கள் மகன் வைத்திருந்தார். இந்த உடை குண்டு துளைக்காத அங்கி. இவற்றுடன்
தான் உங்கள் மகன் பிடிபட்டார். நான் உங்கள் வீட்டிற்கு உங்கள் மகனைத் தேடி வந்திருக்கிறேன். ஞாபகம் இருக்கிறதா?” எனக் கேட்டார். எனக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. இராணுவம் வீட்டினுள் வந்து விட்டுது என்ற பயமும் அச்சமுமே மேலெழும். யார் முகத்தை நினைவில் கொள்ள முடியும்? அந்த அதிகாரி எல்லாம் அறிந்தவராக இருந்தார். மகள் பபி கேவிக்கேவி அழுதபடி நின்றாள். அவளைப்பார்த்துநீங்களும் புளட்டா? சிவப்பும், கறுப்பும் சட்டை போட்டிருக்கிறீர்கள்என்றார். அன்று தான் எனக்குத் தெரியும் அந்த அமைப்பிற்கு என்று வர்ணம் இருப்பது. பின்உள்ளே வரும் போது ஏதாவது கரைச்சல் இருந்ததா?” என்றும் கேட்டார். வெள்ளைவெளேரென இராசர் போட்டிருந்த அந்த கவச உடை மண்ணில் உருட்டியெடுத்தது போல இருந்தது. அது என் கண் முன்னே ஓடியது. அதை பபிக்கும், கீர்த்திக்கும் விளங்கப்படுத்தும் போது நான் போனேன். அதனால் அறியமுடிந்தது. இன்று அதைக்கண்டு பபியும் அழுவார் என்பது தெரிந்தது. எல்லாவற்றிற்கும் தலையை அசைத்த நான் வாயைத்திறந்துஎன் மகனுக்கு சாப்பாடு சமைத்து எடுத்து வந்து கொடுக்கலாமா?” எனக் கேட்டேன். அதற்கு அவர் மற்றைய அறையில் இருந்த சிங்கள அதிகாரியிடம் கேட்ட பின் தாராளமாக கொண்டுவாருங்கள் என்றார். ஆனால் இராசருடன் பேசவில்லை. சந்தர்ப்பமும் தரவில்லை. உணவு கொடுக்கலாம் என்பது தெரியாததால் எதுவுமே இன்றி அடுத்த கிழமைக்கான நம்பிக்கையை மட்டும் சுமந்து வெளியேறினோம்.திரும்பவும் இராசரை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்று விட்டார்கள். இப்படிச் சில வாரங்கள் கழிந்தது.

பின்னர் ஐப்பசி மாதத்தில் கந்தஷட்டி விரதம் ஆரம்பமாகியது. அதற்கு சிறைக்கைதிகள் ஐந்து நாட்கள் பால், பழம் ஆறாம் நாள் உபவாசமும், மறுநாட்காலை உபவாசத்திற்கு சைவச் சாப்பாடும் வீட்டிலிருந்து பெற்றுக் கொள்வதற்கு, ராணுவ அதிகாரியிடம் அனுமதி பெற்றிருப்பதால் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் மாத்திரம் வீட்டுச்சாப்பாடு பெற்று உண்ண அனுமதி பெற்றிருந்தனர்.

அரக்கர்களின் கட்டளைப்படி மீன் சுமக்க மறுத்த தேவர்களைச் சிறையில் வைத்ததாகவும் அவர்கள் வேதனை தாங்க முடியாமல் சிவனை வேண்ட அவர் முருகனாக அவதரித்து தேவர்களைக் காக்க, அசுரர்களுடன் போர் புரிந்த வரலாறே கந்த புராண வரலாறும் கந்த ஷட்டி விரதமும் ஆகும். அதன் பிரகாரம் பால், பழம் கொண்டு போய்க் கொடுப்பதும், பாறணையில் அன்று மரக்கறிச் சாப்பாடு கொடுப்பதும் 1985, 1986 ஆகிய இரண்டு கந்த ஷட்டிக் காலத்தில் எமக்குக் கிடைத்தது. பக்கத்து வீட்டு இராசாத்தியக்கா வீட்டுப் பசுப்பாலைக் காய்ச்சி, அதற்குள் கற்கண்டும் போட்டு ,கழுவிக் காய வைத்த, வெந்தயமும், வாழைப்பழம், பப்பாப்பழம் கிடைத்தால் மாதுளம் பழம் இவற்றையும் எடுத்துச்செல்வோம். இதில் எங்களுக்கிடையே பெரிய தகவல் தொடர்பும் நடந்தது.

அது பற்றித் தொடர்வேன்...

40

சுடுதண்ணிப்போத்தலில் கடித பரிமாற்றம்

யாழ்ப்பாணம் கோட்டைக்குச் செல்வது மிக, மிகச் சிரமம். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் கோட்டைக்கு போகவென
காரைநகர் பஸ்சிலிருந்து இறங்குபவர்கள் நானும் மகளும் தான். என்னைப் போன்ற வேறு சில தாய்மார்கள் காரைநகரில் இருந்தும் வந்ததை பின் அவர்களின் மகன் மாரின் விடுதலையின் பின்னர், எம் வீடு தேடி வந்து அவர்கள் சொன்னதன் மூலம் அறிந்துகொண்டேன். வைத்தியசாலை போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் யாழ்ப்பாணம் வருவதில்லை.

ஒரு நாள் அங்கே ஒரு மின்சாரக் கம்பத்தில் ஒரு இளைஞனின் சடலம் சுடப்பட்டுக் கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் கை, கால்கள் நடுங்கத் தொடங்கி விட்டது. ‘யார் பெற்ற பிள்ளையோ...?’ என. மக்களுக்கு மரண தண்டனைகளை போராட வெளிக்கிட்ட துப்பாக்கி வைத்திருந்தோர் வழங்கினர். இது எனக்கு மிகுந்த கோபத்தையும், வலியையும் ஏற்படுத்தியது.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்குப் பக்கத்தில் அதாவது புல்லுக்குளம், முனீஸ்வரர் ஆலயம் கழிய கோட்டை வந்து விடும். ஆனால், அப்படிப்போக முடியாது. ஆஸ்பத்திரி வீதி, மணிக்கூண்டு வீதி, கிழக்கே திரும்பி இரண்டாம் குறுக்குத் தெரு சென்று பின்னர் மேற்கு நோக்கிச் சென்று நெடுந்தூரம் நடந்து கோட்டை 4 வது வாசலை சென்றடைய வெகு நேரமாகி விடும். தண்ணீர்த் தாகம் வாட்ட வழியில் காவல் நிற்கும் சிப்பாய்களிடம் அடையாள அட்டையைக் காட்டிய
பின்னர் உள்ளே செல்ல வேண்டும். என்னைப் போன்ற பல தாய்மார்கள் அங்கே வருவார்கள். அவர்களுடன் நட்பு ஆரம்பமாகியது. அது சிறைச்சாலை எல்லை கடந்து ஒருவரின் வருகைக்காக மற்றவர் காத்திருந்து வளர்ந்தது. இது பற்றி பின்னாளில் இராசரோடு சிறைவைக்கப்பட்டிருந்த சக இயக்கங்களின் போராளிகளே குறிப்பிட்டுள்ளனர். .பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தை சேர்ந்த சுபத்திரன் (றொபேட்), குமார் (திருகோணமலை) குமார் (மலையகம்), ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த குரு, செட்டி, காரைநகர் சோதி, புளொட் இயக்கத்தைச் சேர்ந்த மாறன், செல்லக்கிளி மாஸ்டர், ஈரோஸ் இயக்கத்தைச் சேர்ந்த அன்புநாதன், தங்கவடிவேல், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ரவி, முரளி ஆகியோர் தமது இளமைக் காலத்தை எனது மகனுடன் சிறையில் தொலைத்ததுடன் தமிழ் அரசியல் கைதிகளின் நலன்களை பேண சிறையில் இணைந்து செயற்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

அடுத்த கிழமைக்கு எடுத்துவரும் உணவு வகைகளை பங்கிட்டு எடுத்துச் செல்வது பற்றிய முன்முடிவுகளை மற்றைய தாய்மாருடன் பேசி எடுப்போம். கைதிகளை சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அவர்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து காட்டுவார்கள். ஒரு தடவையில் ஒருவரைத்தான் அழைத்துக் கொண்டு வருவர். ஐந்து நிமிடங்களின் பின்னர் திரும்பவும் ஏற்றிச் சென்று விடுவர். இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை காட்டுவார்கள். இராசர் பிடிபட்டபின் கீர்த்தியை ஊரில் வைத்திருப்பது பயத்தை தந்தது. அதனால் இராசரை தேடி இராணுவ தேடுதல் அதிகரித்த காலத்தில் கீர்த்தியை மகாஜனா கல்லூரியில் இருந்து தோழர் சிவதாசன் (இவரது மைத்துனரும் கூட), யாழ் இந்துக்கல்லூரி விடுதியில் சேர்ந்துவிட்டிருந்தார். இந்த நிலையில் கீர்த்தி இலங்கையில் இருப்பது என்னளவில் பயத்தைத் தந்தது.

கீர்த்தி கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். அவரது சிறுவயது நண்பரான சைலகாந்தனின் அக்கா சந்திரமலர் கட்டிடகலை வரைஞராக கொழும்பில் இருந்தவர். ஊருக்கு வந்த வேளையில் சொன்னார், “தனக்கு தெரிந்த ஒருவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புகிறார். பத்துப் பேரை சேர்த்துக் கொடுத்தால் ஒருவரை இலவசமாக கூட்டிச் செல்வார். என் தம்பியுடன் கீர்த்தியையும் அனுப்புவோம். அங்கு சென்று அவர்கள் படிக்கலாம் தானேஎன்றார். எனது வருமானம் குடும்பத்தை நடத்தவே போதாது. பயணத்திற்கு பணம் தேவை இல்லை என்கிற வாய்ப்பை பயன்படுத்தினால் என்ன? என்று இந்த ஏழைத் தாய் மனம் ஏங்கியது. மூத்தவரை பிரிந்து இருந்த எனக்கு இது நல்ல முடிவாகப்பட்டது. ஆனால் நிச்சயமாக தோழர் சம்மதிக்கமாட்டார் என்பது தெரிந்தது.

ஒருவழியாக நானும், பபியும் அழுது, கெஞ்சி அவன் தொடர்ந்து படிப்பான் என்ற வாக்குறுதியை முன்னிறுத்தி சம்மதம் வாங்கினோம். விடுதியில் இருந்து விலகி கொழும்பில் மருமகன் ரவியின் உறவினர்கள் வீட்டில் சில வாரங்கள் தங்கி இருந்தும் எந்தவிதமான அனுகூலமான பயண சமிக்ஞையும் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் இருவரும் மீண்டும் சத்தியமனைக்கு வந்தார்கள். அதன் பின்னர் கீர்த்தி அவரது நெருங்கிய நண்பர் சங்கரன் சிவரத்தினம் உதவியுடன் வீட்டிலிருந்தே படிக்க ஆரம்பித்தார். இப்படியே மூன்று மாதங்கள் கழிந்த பின்னர் ஐப்பசி மாதத்தில் கந்தசட்டி விரதம் ஆரம்பமாகியது.

1985
ம் ஆண்டு கந்தசட்டி விரதத்திற்கு வீட்டிலிருந்து பால், பழம் வரவழைத்து உண்ணலாமென்றும், ஆறாம் நாள் பாறணைச் சோறும் எடுப்பித்துச் சாப்பிடலாம்என்று ராணுவ மேலதிகாரி உத்தரவு கொடுத்திருப்பதாகவும் மகன் என்னிடம் கூறினார். அந்தக் கிழமை முழுமையும் லீவு எடுத்திருந்தேன். பாலும், பழமும் தான் சாப்பாடு. அதிகாலை எழுந்து ராசாத்தி அக்காவை எழுப்பி பால் கறந்து,பாலைச் சூட்டுடன் சுடுதண்ணீர்ப் போத்தலுள் ஊற்றிக் கொள்ளுவேன்.
(
நேரம் மாறி பால் கறக்க பால்காரர் பொதுவாகச் சம்மதிப்பதில்லை. இராசர் மீதிருந்த அன்பாலும், என் மேல் இருந்த மரியாதையாலும் அவர் எதுவுமே சொல்லாமல் பால் தர சம்மதித்தார்). இளநீரை வெளிமட்டைகள் நன்றாகச் சீவி எடுத்து விளாம்பழக்கோதினால் தட்டிவிடத் துவாரம் வரக்கூடியதாக (ஏனெனில்... உள்ளே எந்த வித ஆயுதங்களும் கொடுக்கவும் கூடாது. வைத்திருக்கவும் கூடாது.) இப்படி ஐந்து நாட்கள் கழிய சூரன் போரிலன்று உபவாசம். ஆறாம் நாள் காலையில் பாறணைச் சாப்பாடு கொண்டு போய்க் கொடுக்கலாம். முதல் நாள் இயல்பாக உணவைக் கொடுத்து, சிறுகதை பேசி, முகம் வருடி, முத்தமிட்டு நகர்வேன். இரண்டாம் நாள் அயலவர் ஒருவரிடம் வாங்கிய வேறு ஒரு சுடுதண்ணிப் போத்தலில் பாலை காய்ச்சி வழமைபோல் பழங்களும் எங்கள் வீட்டிலே வாழை, மாதுளை இளநீர் இருந்தது. அவற்றையும் அயலவர் தரும் வேறு பழங்களையும் எடுத்து சென்றேன்.

முதன் நாள் கொடுத்த சுடுதண்ணிப் போத்தலை இராசர் எடுத்து வந்திருந்தார். அதனைத் தரும் போது தங்கையின் கையை அழுத்திசுடுதண்ணிப் போத்தல் கவனம். கவனம்என்றிருக்கிறார். கோட்டைவாசல் தாண்டியதும் பபி சொன்னார். “flask இனுள் ஏதோ இருக்க வேணும். திறந்தால் தான் தெரியும்என்றார். உயர அரண் கட்டி அமர்ந்திருக்கும் இராணுவவீரர்கள் கண்காணித்தபடியே இருப்பர். பஸ்சினுள்ளும் ஒற்றர்கள் இருந்தால் ஆபத்தே என்பதால், சத்தியமனை சென்றதும் ஆவலுடன் திறந்து பார்த்தோம். ஏமாற்றமே மிஞ்சியது. கழுவப்படாமல் புளித்துப்போயிருந்த பால் மட்டுமே இருந்தது. தோழர் வீட்டிற்கு வர விபரம் சொன்னோம். சுடுதண்ணீர் போத்தலை வாங்கிப் பார்த்தவர், பிளாஸ்ரிக்கினால் ஆன அடிப்பாகத்தைக் கழட்டினார். உள்ளேஅம்பிசிலின் குளிசை அளவுகுற்றியான சிறுதுண்டு கீழே விழுந்தது. “பாம்பின் கால் பாம்பறியும்என்பர். எடுத்து மெதுவாக விரிக்க அது ஒரு சிகரட் ஈயப்பேப்பர். அது அவர் தோழர்களுக்கான கடிதம். இரகசிய சொல்லாடலுடன் எழுதப்பட்டிருந்தது. அதனை இராசருக்கு பழம் கொண்டுவரும் நண்பர் மூலம் உரியவர்களிடம் சேர்ப்பித்தோம். பின் அவர்களின் பதிலும், எங்களது அன்புமாக அடுத்த நாள் எம் சிகரட் ஈயக் கடிதத்துடன் சுடுதண்ணிப்போத்தல் பரிமாற்றம் தொடர்ந்து நிகழ்ந்தது.

மகன் ராசன் சிறையிலிருந்த போது இரகசியமாக தந்த சிறு துண்டு (இரகசிய கடிதம்) வைக்கப்பட்டிருந்த சுடுதண்ணீர்ப் போத்தலின் அடிப்பாக அமைப்பு.

(பின்னர் 1988ல், இது பற்றிய விபரிப்பாக, இராணுவத்தினால் வீசப்படும் சிகரட் ஈயப்பேப்பரையும், பேனை கூர்களையும் சேர்த்து அதன் மைகளை ஒன்றினுள் செலுத்தி உபயோகித்ததாகச் சொன்னார்.) தோழருக்கும் இராசரின் நிலை கவலையை அளித்தது. கொள்கையளவில் இரு துருவங்களாக இருந்தாலும் தந்தைக்கான கடமைகளையோ, அவர் சொல்பவற்றையோ சிரமேற்கொண்டு செய்யும் குழந்தையே அவர். முதன் முதல் விநோதங்கள் காட்டிய மூத்த குழந்தை சித்திரவதைகளை அனுபவித்தபடி இருப்பது தோழருக்கும் வேதனையே.

1985 ஆவணி 7ம் திகதி எங்கள் அயலவரான இராஜசுந்தரம் அதிபர் அவர்களை இனந்தெரியாதோர் கடத்தினர். யார் எவர் என்ற விபரமும் தெரியவில்லை. இது எம் எல்லோருக்கும் துக்கத்தையும், கோவத்தையும் ஏற்படுத்தியது. இாணுவ கைது சம்பந்தமான அனைத்திற்கும் ஆறுதல் தந்த நம்பிக்கைக்கே பிரச்சனை என்றால் யாருக்கு யார் இருக்கிறார்கள்
என்ற கேள்வி எழுந்தது. தோழரும், இராசரும் இதை அறிந்து துடிதுடித்து விட்டார்கள். பலரிடம் தொடர்பு கொண்டும் உண்மை நிலை தெரியவில்லை. இதே நேரம் கோட்டை முகாமில் இருந்து இராணுவத்தால் ஏவப்படும் ஷெல் சத்தத்தினை உணர்ந்து ஒலி இடைவெளியைக் கணித்து சைரன் ஒலி எழுப்பும் கருவியை போராளிகள் யாழ் நகரில் பொருத்தியிருந்தனர். அதைவிடவும் இராணுவ நடமாட்டத்தை துல்லியமாக கவனித்து இராணுவத்தை கோட்டைக்குள் முடக்க ஆரம்பித்தனர். இராணுவம் கடல் மார்க்கமாவும், வான்மார்க்கமாவும் பயணங்களை ஆரம்பித்தனர். இதனால் கோபமுற்ற இராணுவம் மூர்க்கமாக நடந்தது. இராசரின் தோற்றத்தில் கண்டல் காயங்கள் தெரிந்தன. மக்களை உள்ளே வர அனுமதித்ததே தங்களின் ஊடாட்டத்திற்கு உதவும் என எண்ணியே. அதுவும் அதிக அளவு பலனை அவர்களுக்கு கொடுக்கவில்லை போலும். அதனால் கடும் சினம் கொண்டிருந்தனர். புன்முறுவல் செய்யும் சில சிப்பாய்கள் கூட பாராமுகமாகவும் நடந்தனர்.

பலாலி இராணுவ முகாமில் இருந்த காலத்தில் வழமை போல நாங்கள் கோட்டைக்குச் சென்று விட்டோம். அங்கு உள்ளே சென்ற பின்னர் தான்கைதிகளின் பாதுகாப்பிற்காக பலாலிக்கு மாற்றிவிட்டோம்என்று கூறினார்கள். என்ன செய்வது...? அங்கிருந்து திரும்பவும் யாழ். பேருந்து நிலையத்திற்கு வந்து பலாலி முகாமின் அனுபவ அவஸ்தைகளும், அவலங்களும் பற்றித் தொடர்வேன்.....

41

பலாலி இராணுவ முகாமில் மகன்

இராசரைப் பார்க்க விடிய எழுந்து அவசரமாக சமையல் முடித்து ......... என்று மகளையும் அழைத்துக்கொண்டு கோட்டை முகாம் சென்றால், உள்ளே சென்ற பின்னர் தான் கூறினார்கள்.. ”கைதிகளின் பாதுகாப்பிற்காக பலாலிக்கு மாற்றிவிட்டோம்என்று.

பலாலி விமான நிலையத்திற்கு தோழர் சண்ணையும், தோழர் எஸ் டி பண்டாரநாயக்காவையும் வரவேற்பதற்காக குழந்தைகளுடன் 1966ல் சென்றிருக்கிறேன். என் தங்கை பலாலி ஆசிரியர் கலாசாலையில் இருந்த போது கூட அங்கு செல்லவில்லை. அதனைவிட பலாலி பற்றித் தெரியாது. தோழரின் உறவினர் பலர் அதனைச் சூழ உள்ள கிராமங்களில் இருப்பதாகத் தெரியும். இராணுவமுகாம் எப்படி? எங்கே எனத் தெரியாது. 1948 ஆம் ஆண்டில் இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட முதல் இராணுவத் தளமாகும். இந்திய தமிழர்களின் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க 1952 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவம் "ஆப்ரேஷன்ஸ் மான்டிக்காகநிறுவப்பட்ட தலைமையகம். பின் விரிவடைந்து மிகப் பெரிதாகியுள்ளது. அதிக பாதுகாப்பும், கடற்படை, விமானப்படை என அருகருகே இருப்பதால் மிகப்பெரிய இராணுவத் தளமாக மாறியது. இராசரை அங்கு மாற்றியாகிவிட்டது. மீண்டும் புதிய விசாரணைகள், புதியவகைச் சித்திரவதைகள்... என்னவெல்லாம் நடக்குமோ என மனது துடித்தது. என்ன செய்வது...? அங்கிருந்து திரும்பவும் யாழ். பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கிருந்து காங்கேசன்துறை செல்லும் பஸ்ஸில் ஏறி காங்கேசன்துறை சந்தியில் இறங்கி நெடுந்தூரம் வழி நடந்து நேர் றோட்டால் போனால் ஒரு கி.மீ. தூரத்திலுள்ள முகாமுக்கு சுற்று வழிப்பாதைகள் கடந்து செய்கை பண்ணப்படாமல் சிதைந்து போன தோட்ட நிலங்கள் ஆழமான தண்ணீர் வாய்க்கால்கள் ஏற்ற இறக்கங்கள் தாண்டி ஒரு இடம் போனால் இது பாதையல்ல, வேறு பாதை என்பார்கள். இருவர் கைகளிலும் பாரம் வேறை. நல்ல பாதணிகள் இல்லை. கண்ணி வெடிகள் இருக்குதா இல்லையா எனத் தெரியாது, என் சிறுபெண்ணையும் அழைத்துக் கொண்டு சுற்றி அலைந்தேன். சரியான நடைபாதையில்லை. வழியில் பல இராணுவச் சிப்பந்திகளின் பரிசோதனைக்கு முகங்கொடுத்து உள்ளே சென்றால்.....! “நேரம் ஐந்து மணிக்கு மேலாகி விட்டதால் பார்க்க முடியாது...” என்று கூறித் திருப்பி விட்டனர். திரும்பி வீட்டிற்கு வருவதாயின் பஸ்சுக்கு கையில் காசு இல்லை. யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை சென்றதால் காசு முடிந்து விட்டது. இத்தனைக்கும் எமக்குயார் உதவுவார்...? என்று நினைத்த போது எனது கணவனின் மூத்த தமையனின் மகள்(வெள்ளையம்மா)தங்கமனோரதி தனது தாய்வழி உறவினரின் வீட்டில் தங்கி இருப்பதாகத் தெரியும். ஒரு விவசாயக்குடும்பம் அவர்களிடம்கொல்லங்கலட்டி பாதிரி தங்கராசா என்று அழைக்கப்படும் அம்பலப்பிள்ளை தங்கராசா வீடு கிட்ட இருக்கிறதா?” என்று கேட்டேன். அவர்கள் வீட்டு மகன் ஒருவர் உடனே தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு விரைந்து சென்றார்.


அரை மணித்தியாலத்தில் அவருடன் வெள்ளையம்மாவும் வந்து விட்டா. நான் தயங்கி தயங்கி பேசியதைப் புரிந்து கொண்டு தானாக யோசிக்கும் புத்திசாலியான அந்தப் பிள்ளை கிட்ட வந்து தான் கொண்டு வந்த ஐம்பது ரூபா பணத்தை என் கைக்குள் வைத்துசின்னம்மா இரவாகி விட்டது. நீங்கள் இனி காங்கேசந்துறைச் சந்திக்குப் போய் அங்கிருந்து தெல்லிப்பழைச் சந்தியில் இறங்கி அங்கே அச்சுவேலியில் இருந்து மூளாய்க்குப் போகும் தட்டி வான் பிடித்து சுளிபுரம் போகவேணுமேஎன்று பதைபதைப்பாக எம்மை பஸ்சைப் பிடித்து விரைவாகப் போகும்படி தூண்டிஅடுத்த முறை நானும் அண்ணையைப் பாக்க வருவேன்என்றும் சொன்னார்.


காங்கேசன்துறை சந்தி பஸ் தெல்லிப்பழைச் சந்தி தட்டி வான் சுளிபுரம் சத்தியக்காட்டுச் சந்தைச் சந்தியில் வந்திறங்கி வீடு வர உடம்பிலே தெம்பே இல்லாமல் கால்கள் ஒன்றோடொன்று பின்னத் தொடங்கி விட்டன. என்னையும் மகளையும் காணவில்லை என்று தோழரும், கீர்த்தியும், இரவியும் அலைந்தனராம். மைத்துப் போன உணவையே நாங்கள் இரவுணவாக்கிக் கொண்டோம். இப்படி எத்தனையோ நாட்கள். கோட்டையில் இருந்ததை விட இராசர் கொஞ்சம் நம்பிக்கையாக பேசினார். வழக்கு தாக்கல் செய்வது பற்றியும்சர்வதேச மன்னிப்புச் சபை’ (Amnesty International) உடனான பகிர்தல்கள் பற்றியும் எனது மகளுக்கு புரியக்கூடிய மொழிநடையில் பேசினார். அங்கு இருந்த இராணுவத்தினரும் தாய்மார்கள் வந்து காத்திருக்கும் நேரங்களில் வந்து பேசுவார்கள். ‘உணவுக்கப்பல்வந்திருப்பதாகச் சொல்லுவார்கள். தங்கள் தங்கள் பெற்றாரை பல நாட்களாய் பார்க்கவில்லை என்பார்கள். இப்படி ஒரு பொழுது நாங்கள்
முகாம் சென்று பார்த்து திரும்பும் போது நாங்கள் பத்துப் பதினைந்து பேர் இருப்போம். வழியில் ஒரு சிறுவன்உங்களை பொறுப்பாளர் சந்திக்க வேணுமாம். நீங்கள் தான் ஆட்களைப் பாக்கப் போறம் எண்டு போய் இராணுவத்திற்கு தகவல் கொடுப்பதாக எங்களுக்கு செய்தி வந்திருக்கிறது. இப்ப நீங்கள் உண்மையை எல்லாம் சொல்ல வேணும்என்றான். அதிகாலை வெளிக்கிட்டது, பசிக்களைப்பு, சுற்றி நடந்த களைப்பு எல்லாத்தையும் விட தினமும் என்னென்ன சித்திரவதைகளை அனுபவிக்கிறானோ? குழந்தை என்ற தவிப்பு இதில்.... இந்தமாதிரியும் நினைக்கிறார்கள் என்றவுடன் என் மகள் கொதிப்படைந்து விட்டாள். “நேற்றைக்கு இயக்கத்திலை சேர்ந்திட்டு, நாங்க கஷ்டப்பட்டு கைதிகளை பார்க்க வந்தால் விசர் கதை கதைக்கிறீங்கள். நாங்கள் கனதூரம் போக வேண்டும். வர முடியாது முடியாதுஅது இது என்று பேசிவிட்டாள். அவன் தகவல் சொன்னானோ என்னவோ தெரியவில்லை சிறிது நேரம் கழித்து ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் துவக்குடன் வந்தனர். வந்தவன்யார் நேற்றுத் தான் இயக்கத்தில சேர்ந்தது எண்டு சொன்னது?” என்றான். நான் சரியாய் பயந்துவிட்டேன். சில பெண் பிள்ளைகளையும் புலிகள் கடத்தி கொலை செய்ததை அறிந்திருந்தேன். நின்ற எல்லாச் சனமும் பபி தான் என்று சொல்லப் போகுதுகள் என நினைக்க பபிஓம் நான் தான் சொன்னனான். எங்களுக்கு இது தான் வேலையோ?” என்றாள். அங்கே நின்ற அனைத்துத் தாய்மாரும்நாங்கள் எல்லாரும் தான் சொன்னனாங்கள். அந்தப் பிள்ளை மட்டும் சொல்லேல்லைஎன்றார்கள். இதைத் தான் தாய்மை என்கிறது. வந்தவன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தஜெயாஎன நினைவு. அவன் கேட்டான். “நீர் சத்தியராஜனின் தங்கையா?” என்று. நான் முந்திக்கொண்டு ஐயோ தம்பி அவ சின்னப்பிள்ளை அவசரப்பட்டு கதைத்திட்டா என்றேன். எனக்கு உங்கள் மகனைத் தெரியும். இராணுவம்
என்ன கேட்டாலும் தெரியாது என்றே சொல்லுங்கோ என்று சொல்லிவிட்டு எங்களை போக அனுமதி அளித்தார். இப்படிப் பல கதைகள்.

இந்தக் காலத்தில் தோழருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. சலரோகம், உயர் இரத்த அழுத்தம் இவற்றால் மயங்கிவிழுந்து விட்டார். 1966, 1969 பாதுகாப்புப் படையினரின் மிலேச்சதிகார தாக்குதல்களால் உடல் சிதைந்து போயிருந்தது. அத்தோடு சமதர்ம சமுதாயத்தை, குறுந்தேசிய வாதத்தில் அழுந்திப் போவதும் தோழருக்கு மன வலியை ஏற்படுத்தியது. வீட்டில் வறுமை, மூத்தமகன் சிறையில், இவருக்கு நோய். எல்லாம் எனக்குப் பயத்தையே தந்தது.

1986 ஆம் ஆண்டு மே தினத்தன்று நல்லூரில் இருந்து ஆரம்பமாகி திருநெல்வேலியில் நடைபெற்ற ஊர்வலமும் கூட்டமும் யாழ் நகரில் மிகுந்த பதட்ட சூழ்நிலையில் இடது கம்யூனிஸ்ட் கட்சி மிக எழுச்சியுடன் நடாத்தியது. அங்கு அலை என திரண்ட மக்கள் சுடு வெய்யிலையும் பொருட்படுத்தாது கோசங்களை எழுப்பிய வண்ணம் தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.. அச் சுலோகங்களில் சில இங்கு .............

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
பாட்டாளி வர்க்கம் பாராளும் வர்க்கம்
புத்தர் சொன்னார் அகிம்சை என்று
ஜே ஆர் சொன்னார் யுத்தம் என்று
நாடு எங்கே போகிறது?
யார் யார் பயங்கரவாதி?
ஜே ஆர் பயங்கரவாதி
அத்துலத்முதலி பயங்கரவாதி
ரீகன் பயங்கரவாதி

அவ் ஊர்வலத்திற்கும், கூட்டத்திற்கும் தோழர் தலைமை தாங்கி நடத்தினார். அக் கூட்டப் பேச்சு இது.....

ஜெயவர்த்தனாவும் அவருடைய எடுபிடிகளும் சமாதானம் வேண்டும், வீதியில் அமைதி வேண்டும், நாட்டில் அமைதி வேண்டும் என்றெல்லாம் தினசரி பத்திரிகைகளில் குரல் கொடுப்பதை நாம் அறிவோம். ஆனால் இந்த நாட்டு மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்போது, நீதி மறுக்கப்படும் போது, சுதந்திரம் மறுக்கப்படும் போது, நிச்சயமாக பலாத்காரம் இருக்கத்தான் செய்யும். பலவந்தமாக தங்களது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு மக்களுக்கு உள்ளது. ஆகவே நீதியைப் பற்றிப் பெருமைப்படும் அல்லது நீதி வேண்டும் என்கின்ற ஜெயவர்த்தனாவோ அல்லது அமைதி வேண்டும் என்கிற ஜெயவர்த்தனவோ, இந்த நாட்டில் நீதியையும், சுதந்திரத்தையும் முன்னர் முதலாக வழங்கி இருக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மக்களுடைய உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அப்படியான ஒரு சூழ்நிலையில் தான் நாட்டில் அமைதியைக் காண முடியும். ஜெயவர்த்தனா பேச்சுவார்த்தைக்கு முன்வருவதாகக் கூறி,
இவ்வளவு காலத்தையும் இழுத்தடித்து இருக்கிறார். இன்னும் தான் அவர்கள் அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு முன் வந்தால் நாங்கள் அதனை ஆதரிக்கிறோம் தமிழ் மக்களுடைய பிரதேசங்கள், வடக்குக்கிழக்கு பிரதேசங்கள், அவர்களுடைய தாயகமாக அங்கீகரிக்கப்படவேண்டும். அந்த அடிப்படையில் பிரதேச சுயாட்சி வழங்கப்படவேண்டும். அதுதான் தமிழர்களுடைய கோரிக்கைகள் ஒரு பகுதியாவது அடைவதற்கு அது ஒரு முன்தேவையாக அமையும்.”
இதன் காணொளி இங்கு உள்ளது .... (https://sathiamanai.blogspot.com/.../may-day-rally-speech...)

பபியும் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியிலும், யாழ் பல்கலைக்கழகத்தில் வார இறுதி நாட்களிலும் கணனி தொழில்நுட்பம் பயில ஆயத்தமானாள். இளையவர் கீர்த்தி பொறியியல் துறையில் தேர்வாகி பல்கலைக்கழக எதிர்பார்ப்பில் இருந்தார். இந்நேரம் இரவி தோழரிடம் பபியை தான் விரும்புவதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் சொல்லியிருக்கிறார். அதற்கு தோழர்இது பபிக்குத் தெரியுமா?” என கேட்டிருக்கிறார்.

பபியின் திருமணம் பற்றித் தொடர்வேன்

42

மகளுக்குத் திருமணம்

1986ம் ஆண்டில், எங்கள் அயலில் உள்ள சற்குணம் அக்கா வீட்டு நாய், தோழரை மூன்றாவது தடவையாகக் கடித்து விட்டது. அவரது காலில் இருந்துநிணநீர்பெருகி ஓடத்தொடங்கி விட்டது. சலரோகம் வேறு. கீழே விரித்த சாக்கு நனைகிற அளவுக்கு அந்த நீர்ப் பெருக்கு நீடித்தது. நாங்கள் அவரை மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் சேர்த்தோம். கையில் காசு இல்லாத நிலையில் கூட, அவரை பக்கத்தில் ஒருவர் நின்று பராமரிக்கிற துணை அவசியமாக இருந்தது.
அந்தத் துணை அவரை நன்கு புரிந்து கொண்டவராகவும், அவரது தேவையை குறிப்பால் உணரக்கூடியவராகவும் உள்ள தோழரும், மகனும் போன்ற ரவி தான் அந்த உதவியைச் செய்தார். அத்துடன் அவருக்கு பள்ளி விடுமுறைக் காலமாகவும் அமைந்து இருந்தது.

பபிக்கு தந்தை தான் உலகம். தந்தையுடன் தான் படுப்பார். அவர் வெளியே செல்லும் போது சந்தி வரை நின்று டாட்டா சொல்லித் தான் உள்ளே வருவார். மற்றவர்களும் அப்படியே இருந்தாலும் இவரின் குதூகலமும் அன்பும் வெளிப்படையானது. அதே போல அவரது சைக்கிள் மணிச்சத்தம் கேட்டால் மூன்று குழந்தைகளும் ஓடிச் சென்று சைக்கிளை வாங்குவார்கள். பபி அதை தொடர்ந்தும் செய்தார். இரவிக்கு பபிமேல் விருப்பம் இருப்பதை அவரது சக
ஆசிரியர்கள் பபி விடுமுறைக்கு நுவரெலியா சென்ற சமயம் சொல்லி இருக்கிறார்கள். இதை அறிந்த பபி வீட்டில் சண்டை போட ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் இரவி தோழரிடம் இதைச் சொல்லியிருக்கிறார். அதற்கு தோழரோஇது பபிக்கு தெரியுமா?” எனக் கேட்க, இல்லை என்கிற பதிலைக்கேட்டு, முதலில் அவரின் சம்மதம் தான் முக்கியம் அவரிடம் பேசுங்கள் என்றிருக்கிறார். இரவியின் வீட்டில் பல கலியாணம் பேச அவர் மறுத்து வருவது அவரது அக்காவான பகவதிக்கு கவலை. இது பற்றி எம்மிடம் முறையிடுவார். நானும் சில தடவைகள் காலா காலத்தில் அது அது நடக்கவேண்டும் எனச் சொல்லியிருக்கிறேன். ஆனால் இரவி எங்கள் வீட்டுப்பிள்ளையாக வேணும் என நினைத்ததில்லை. ஆனால் விடயம் திசை மாறிச் செல்ல என் மனதிலும் பிள்ளை போல உதவுகிற ரவியின்உடுக்கை
இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் கழைவதாம் நட்புஎன்ற பொய்யாமொழிக்கு அமைய எம்மைப் புரிந்து கொண்ட ஒரு பிள்ளை எமக்கு உறவாக வாய்த்தால் நல்லது தானே என்ற ஒரு பயன்கருதாத உதவி அவசியமாகப்பட்டது. அப்போது என் மகள் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியில் கணனியியல் படித்துக் கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக தொடங்கப்பட்ட கணணிக் கல்வியாகும். இதனை அறிந்த தோழர் தான் அந்தக் கணனி நெறியில் மகளைச் சேர்ந்து படிக்க உந்துசக்தியாக இருந்தார்.அதே நேரம் பல்கலைக் கழகத்திலும் விடுமுறைநாள் பயிற்சியிலும் இணைந்து படித்து வந்தார்.

1986 ஆனி 29 அன்று PLOTE அமைப்பிலிருந்து பயிற்சி முடித்து வந்த 33 வீரர்கள் இந்துமா சமுத்திரத்தில் படகுடன் சேர்த்து, இலங்கை இராணுவத்தினால் அழிக்கப்பட்டனர். ஒருவரது உடலும் கிடைக்கவில்லை. (போட்டி இயக்கத்தினரின் காட்டிக்கொடுப்பினால் இது நிகழ்ந்ததாகவும் ஒரு ஆதாரமற்ற கதை உண்டு) நாமிழந்த 33 வீரர்களில், பலர் பழகிய உறவுகள். வேதனையின் வலிகள் சொல்லி மாளாதவை. ‘தினமுரசுஆசிரியர் ரமேஷ், தோழருடன் திண்ணையில் இருந்து பேசிக்கொண்டு இருந்த போதே இச்செய்தி எமக்குக் கிடைத்தது. அந்த வலியுடன், தோழர் எப்படி அந்த உரையாடலைத் தொடர்ந்தாரோ? தெரியவில்லை. இராசன் சிறைச்சாலையில், கீர்த்தி உயர்கல்விக்காக வெளியூரில், எமக்கு எல்லாமாக இருந்தது சைலகாந்தன் வைரமுத்து (சாஜகான்) தான். 5 பெண் பிள்ளைகளின் கடைசிப் பையனாக பிறந்து கீர்த்தியின் உயிர் நண்பனாகசத்தியமனையில் உண்டு உறங்கி வளர்ந்த உறவு. அவனுடன் ஏற்பட்ட உறவுக்கு அவனின் விதவைத் தாயின், அவனின் 5 சகோதரிகளின், எம் மீதான நம்பிக்கையே காரணம். வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியில் கணனியியல் படித்துக் கொண்டிருந்தார். எங்களுக்கும் சொல்லாமல் திடீரென முடிவெடுத்துச் சென்றான். போராளி சுந்தரத்தின் மிக நெருங்கிய உறவு. வறுமையும், குடும்பப் பொறுப்பும் நிறைந்த அவனையும் விடுதலை வேட்கை விட்டுவைக்கவில்லை. எப்பொழுதுமே அவனின் நினைவு எம்முடனே இருந்து வந்தது. அவனின் அம்மா திருமதி மகேஸ்வரி - வைரமுத்துவின் (1929-10-01 - 2013-8-10) இழப்பு பலத்தை மீட்டுத் தந்தது. அவர்களுடனான குடும்ப உறவு எப்போதும் தொடரும்!

தனது மதிப்பிற்குரிய தோழர் நோயாளியாக வைத்தியசாலையில் இருப்பது இரவிக்கு மனவேதனையைத் தந்திருக்கும். அந்தத் தோழர் குடும்பத்துக்கு ஒரு நிரந்தர உறவாக செயற்படுகில், விவாகம் என்பது ஒருஆயிரங்காலத்துப் பயிர்போன்ற உறவு தானே. இது எனக்கும் சரி எனவும், ஒத்துவரக் கூடியதாகவும் இருந்தது.“தாரமும் குருவும் தலையில் எழுத்துஎன்பது பழமொழி. கலப்புத்திருமணம் செய்து கொண்ட பெற்றாரின் மகளை அவர்களின் இலட்சியத்தைப் புரிந்து கொண்ட ஒருவனால் தான் அந்தக் குடும்பத்து அங்கத்தவனாக முடியும். கீர்த்திக்கு இரவி மீது மிகுந்த அன்பு. இரவியும் அப்படித்தான். கீர்த்தி, இரவி சத்தியமனைக்கு நிரந்தரவாசி ஆவதை மிகுந்த மகிழ்வுடன் தமக்கைக்கு எடுத்துரைத்தார். அதேநேரம் பபியுடன் படித்த நிமால், மோகன், ஜீவகன், கண்ணனும் இரவியுடன் பேசி அவரது நல்ல இயல்புகளைச் சொல்லி பபியின் சம்மதத்தைப் பெற்றனர். அண்ணன் இல்லாது திருமணம் செய்வது பபிக்கு கவலை. இருந்தும் தந்தையின் சுகயீனம் பயமூட்டியது இறுதியில், திருமணம் நிச்சயமாகியது.

1986 ஐப்பசியில் மகளின் திருமணம், யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் கவிஞர் . முருகையன் அவர்களின் தலைமையில் நடந்தேறியது. நிச்சாமத்து தோழர் தருமுவும், அழகு மாமாவும் சாட்சிக் கையெழுத்திட பதிவும் நடந்தது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலருடன், கட்சித் தோழர்கள் பலரும் சமூகமளித்திருந்தனர். இராசரின் தோழரான சின்ன மென்டிஸும் வந்திருந்தார். (இரு நாட்கள் கழித்து சின்ன மென்டிஸ் புலிகளால் கைதாகி பின் கொல்லப்பட்டார்.) மகளுடன், வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியில் படித்த சக மாணவர்களும் உள்ளடங்குவர். இன்று வரை தொடர்பில் இருக்கின்றநிமோஜிகஎன்ற கூட்டெழுத்துள் அடங்குபவர்கள். அவளது உற்ற தோழிகளான வதனி, கனகேஸ், வான்மதி, ஜெயச்சந்திரா என முதல் நாளே வந்திருந்து, மணவறை, பந்தல் அலங்காரங்களை தங்கள் வீட்டுவேலை போல அக்கறையுடன், கண் விழித்து செய்து முடித்தார்கள். என் தம்பி குடும்பமும் நிலாவெளியில் இருந்து வந்தனர். கீருவின் நண்பர்கள் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ், சிவரத்தினம் சங்கரன், கந்தசாமி அருணகிரிநாதன், மார்க்கண்டு குகதாசன், வைரமுத்து சைலசுதா, சச்சிதானந்தன் விஜயராகவன், தர்மரத்தினம் ரிஷிந்திரன், அன்டன் ரவிராஜ் செல்வரத்தினம், துரைரட்ணம் அம்பிகைபாலன் மற்றும் சரவணபவன் பவான்செல்வம் சகலரும் தங்கள் சகோதரியின் திருமணம் போல அனைத்தும் செய்தனர். மணமகனின் உறவுகள் அநேகர் வந்திருந்து அறுகரிசி போட்டு வாழ்த்தினர். தாய் மாமன்மார் என்ற சிறப்பில் சண்முகலிங்கம் மாஸ்டரும், எங்கள் தம்பியும் மணமகனுக்கு பால், அறுகு வைத்துத் தோய வார்த்தனராம். எங்கள் வீட்டில் மணமகளுக்கு, ரவியின் பெரியம்மா உட்பட பக்கத்து வீட்டு பேபியக்காவும், முன்வீட்டு திலகத்தின் அம்மாவும், இன்னும் பல சுமங்கலிகளும் மணமகளுக்கு பால், அறுகு வைத்து தோயவார்க்கும் கைங்கரியத்தைச் செய்தனர். மகளுடன் படித்த, ஜெயவதனி, ஜெயச்சந்திரா, மீரா ஆகிய பல கல்லூரித் தோழிகள் மணமகளை அலங்கரித்து மணமேடைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமை வகித்த கவிஞர் முருகையன் தன் கையால் மங்கல நாணை எடுத்துக் கொடுக்க, மணமகன் பபி கழுத்தில், அதனை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் உடன் பிறந்த தங்கை இந்திரா தோழி என்ற பங்கினை வகித்தார். திருமணத்திற்கு மணமகனின் பெரியப்பாவின் மகள் திருமதி. நாகரத்தினம் நடராஜா, அவரது மகள் புஷ்பம் சந்திரஹாசன், சோமு பெரியப்பா மகளான பகவதி இரத்தினதுரை போன்றோர் பிரதான பங்களிப்புச் செய்தனர். எங்கள் பக்கத்து வீடும், தோழரின் ஊரும் உறவுமான கோவில் முதலாளியக்கா தனது நகைகளை, “ஒரு மாதத்திற்கு வைத்திருந்து பாவியுங்கஎன்று நல் மனதுடன் தந்திருந்தா.
திருமண வீட்டிற்கு பலகாரம் சுடுதல், அதிலும் முதலில்பால்ரொட்டிஎன்ற பலகாரத்தை எண்ணெய்ச் சட்டிக்குள் போடும்போது வாய்க்குள் நிறையத் தண்ணீர் வைத்துக் கொண்டு தான், தயார் செய்த மாவைப் போட வேண்டுமாம். இந்த நுட்பமான காரியங்களை எங்கள் முன் வீட்டு சிவபாக்கியம் கந்தையா என்ற தாயார் தான் முதன்மைப் பெண்ணாக இருந்து சகல காரியங்களையும் செய்து தந்தார். திருமணச் செலவுகளுடன், மணவறை, பந்தல் ஆகிய செலவுகளுக்கும் தேவர் மூலம் வீட்டு உறுதியை ஈடு வைத்தார். ஈடு வைத்த காசில், வீட்டுச் சுவருக்கு வர்ணம் பூசுதல் ஆகிய காரியத்தை சித்தங்கேணி பெயின்ரர் என்ற தோழரிடம் ஒப்படைத்தார். பந்தல், மணவறை ஆகியவற்றையும் மற்ற அனைத்தையும் கீருவிடம் பாரங் கொடுத்தார்.

மங்கலநாண் பூட்டிய கையோடு கவிஞர் முருகையன் அவர்களால் வாழ்த்துப்பாவும் வாசித்து மணமக்களிடம் கையளிக்கப்பட்டது. எனது மூத்தமகன் சிறைக்குள் இருந்து எழுதிய வாழ்த்தினை எமது குடும்பநண்பரும், சிறை அதிகாரியுமான திரு மாதவர் மார்க்கண்டு அவர்கள் வாசித்தார். அந்த வாழ்த்தாவது..... ஒரு சிறிய துண்டுப்பேப்பரில் எழுதப்பட்டிருந்தது.

சிறைக் கைதிகளுக்கு கடதாசியோ, பேனாவோ வைத்திருக்க அனுமதிக்க மாட்டார்கள். இருந்தும், எப்படி எழுதி எமக்கு எப்படிக் கிடைத்தது என்பது ஒரு பெரிய கதை இராணுவத்தினர் தாங்கள் பாவித்த சிகரெட் பெட்டிகளை வெளியே வீசினால், அவற்றின் உள்ளே இருக்கிறஈய ரிஸ்யுபோன்ற சிறு கடதாசியை பொறுக்கி எடுப்பார்களாம்.
பேனாவும் அப்படித்தான். மேற்படி ராணுவத்தினர் எழுதி முடித்த குமிழ்முனைப் பேனாக்களை குப்பைக்குள் வீசினால், அதற்குள் இருக்கும் உள்தண்டுகளை பொறுக்கிக் கொண்டு வந்து.... மைகளைச்சேர்த்து ஒன்றாக்கி ஒளித்து வைத்துப் பாவிப்பார்களாம். ஐப்பசி மாதத்தில் தான் கந்தசட்டி விரதம் வரும். சிறைக்கைதிகள் அந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள். யாழ். அரசாங்க அதிபரிடம் அனுமதி பெற்று விரத காலத்துக்கு மாத்திரம் 6 நாட்களுக்கு பால், பழம்
கொடுக்கிற உத்தரவை அத்தனை கைதிகளின் தாய்மாரும் பெற்று வைத்திருந்தோம். அதன்படி காய்ச்சிய சுடு பசும்பாலை ஒரு பிளாஸ்கில் ஊற்றிக் கொண்டு போய்க் கொடுப்போம். அந்தச் சுடுதண்ணீர்ப் போத்தலின் அடிப்பாகம் பிளாஸ்டிக் காலான மூடி பூட்டக் பட்டிருக்கும். விரத காலத்தில் படிக்க தேவார, திருவாசக, திருப்புகழ் புத்தகங்களும் கொடுக்க அனுமதியுண்டு. முதல்நாள் கொடுத்த பிளாஸ்க்குடன் ஒரு புத்தகமும் எம்மிடம் திருப்பித் தரப்படும். அந்தப்
புத்தகத்தின் முன் பக்கத்தில் 5ம் பக்கம் பார்க்கவும் என்று எழுதப்பட்டிருக்கும். இப்படியே ஒவ்வொரு பக்க இலக்கம்
குறிப்பிட்டு இப்படி அந்த சங்கேத பாஷையைக் கண்டு பிடித்தவர்கள் இராசனின் சகோதரங்கள் தான். அதனைப் பற்றி விபரமாகச் சொல்வதானால் எவ்வளவோ நேரம் பிடிக்கும். இப்படியான ஒரு பெரிய துப்பறியும் தொழிலாக அந்த வாழ்த்து எமது கரம் கிட்டி ஜெயிலர் மார்கண்டேயரால் வாசிக்கப் பட்டது. கேட்டோர் அனைவரினது கண்களிலும் கண்ணீர் வடிந்தது. நல்ல காலம் அதனைச் சுடுதண்ணீர்ப் போத்தலின் அடிப் பாகத்தை ஆராய்ந்து பார்க்காது விட்டிருந்தால் இந்த வரலாற்றில் இடம் பெறாது போயிருக்கும்.

பாட்டாளி பாராள வேண்டும் என்ற தந்தைஅவர் பாதைதனைத் தொடர்ந்து செல்லும் அன்னைஅடக்குமுறை தனை உடைத்தெறிவோம் என்ற அண்ணன்அநியாயம் கண்டு குமுறும் தம்பிஅன்பிற்கோர் மாமா மாமிஆசைக்கோர் அங்கிள் அன்ரிஅறிவு சொல்லும் தோழர்ஆதரிக்கும் சுற்றம்இவர்கட்கு அருமை பெருமையாக பிறந்தாய், அன்பு பாசத்துடன் வளர்ந்தாய் கருணை, இரக்கம், உந்தன் பழக்கம் கலக்கம், தயக்கம் இல்லை அது உன் வழக்கம் சமூக மாற்றம் வேண்டி நிற்கும் ஒருவன் வாழ்வு தனில் உந்தன் துணைவன் வாழ்க்கை தனில் அவன் பணி தொடர வேண்டும் அவர்களுள் நாமறிந்த இருவர் மார்க்ஸ் / ஜென்னி (அப்பா / அம்மா) அவர்கள் போல் நீயும் வாழ்வில் வெற்றி கொள்ள வாழ்த்துகின்றேன்
இப்படி நீண்டு..... அந்த வாழ்த்து எழுதப்பட்டு இருந்தது.

1986 ஐப்பசியில் நடைபெற்ற மகளின் திருமணத்தின் போது இராணுவக் கோட்டைச் சிறையிலிருந்த மகன் சத்தியராசன் ரகசியமாக அனுப்பிய திருமண வாழ்த்துச் செய்தியினை திரு.எம். மார்க்கண்டு அவர்கள் படித்த வேளை

கவிஞர் முருகையனின் வாழ்த்து இப்படி அமைந்தது ...

நடேசனார் பயிந்த மைந்தன் இரவீந்திரன் வாழ்வில் என்றும்தொடர்நலம் பெருகவேண்டும் சுவைபயன் விரியவேண்டும் கடமையில் மட்டும் அன்றி கல்வியில்.. அறிவில்... ஆய்வில்.. திடமுடன் முன்னேற்றங்கள் சேர்ந்திடல் மிகவும் வேண்டும்.

* * * சுப்பிரமணியத்தாரின் தொண்டுகள் மணக்கும் இந்தச் சத்திய மனையில் வாழும் சத்திய மலரின் வாசம் ஒப்பிலா விதத்தில் மேலும் ஓங்குக
இப்புவி நயக்கும் வண்ணம் இன்பமே நிறைந்து வாழ்க.

* * * இரவி என்போன் கதிரோன் ஆவான் இரவிமுன் கமலம் பூக்கும்
மலர் முகம் ஒளிரும் இந்த வாய்ப்பை நாம் நினைத்தல் வேண்டும்இவர்- பொழுதெலாம் கூடி இன்பத்தில் திழைத்தல் வேண்டும் வலிமையும் வளமும் வாய்ந்த மக்கட்பேறு அடைதல் வேண்டும்.

* * * புதுமண மங்கலத்தின் பொலிவினைப் போற்றுகின்றோம் பிறர்நலன் அறிந்து கொண்டு எண்ணத்தால் பகுத்துக் காணும்அறத்தினால் உறவு பூணும் ஆர்வத்தைப் போற்றுகின்றோம் அறிவினைப் போற்றுகின்றோம் தெளிவினைப் போற்றுகின்றோம்.

* * * எண்ணத்தில் இனிக்கும் இந்நாள் இன்பத்தின் குறியீடாகும் வண்ணத்தார் மலரினோடு ரவியெனும் மணம் கலந்தகிண்ணத்தில் கனிச்சாறாக திழைக்கட்டும் வாழ்க்கையின்பம் உண்ணத்தேன் தமிழ்நாளென்று உவகையால்....புதுமண மக்கள் சேர்ந்த புதுமையை உரைத்தோம் வாழ்க!”

அன்புடன் சபையோர் சார்பாக..

.முருகையன் நீர்வேலி. 19-11-1986

43

ஒரே வீட்டுக்குள் தயாரான எதிர் எதிரான இரண்டு பத்திரிகைகள்

மூத்தவரை பிரிந்த துயரம், தோழரது உடல் நிலை பாதிப்புகள் என தீராத துன்பத்தின் நடுவில் இளைய மகன் பேராதனை பொறியியல் துறைக்கு தெரிவாகியிருந்தார். மகளுக்கும் திருமணம் முடிந்து இரவி சத்தியமனைக்குள் வந்ததும், மீண்டும் காலையடி உறவுகள் எனக்குசொந்தம்எனச் சொல்லக் கிடைத்ததும் ஆறுதலைத் தந்தது. அதை விடவும் இராசருடன் சிறையிருக்கும் இளைஞர்கள் விடுதலையாகும் போது வீட்டிற்கு அடிக்கடி வருவார்கள். அதில் பல இயக்கத்தில் இணைந்து இயங்கியவர்கள் இருந்தார்கள். அவர்களின் பெற்றோர்களும் உறவாக ஆரம்பித்தோம். அப்படி ஒரு உறவு தான் செல்லக்கிளி மாஸ்ரரின் மனைவி. அடிக்கடி வீட்டிற்கு வருவார். தற்செயலாக அவர் வந்த நேரம் தோழர் தேவராஜாவின் சகோதரன் தேவகுமாரிற்கு திருமணம். தோழரின் தலைமையில் நடந்தது. அவரையும் அழைத்துச் சென்றோம். அத் திருமணம் அவருக்கு ஆச்சரியத்தை தந்தது. தோழர் தாலியை எடுத்துக் கொடுக்க திருமணம் நடந்தது. பின் அவர் உரையாற்றினார்.

அதில் அவர் "இவர்களுடைய வாழ்க்கையில், இவர்கள் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்கிறார்கள் என்று அர்த்தம். வாழ்க்கை ஒரு போராட்டம். இவர்களுடைய வாழ்க்கையில் முதலாவது கட்டம் தமது பாடசாலைக் கல்வி சமூக ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம், வறுமைக்கு எதிரான போராட்டம் என இவர்கள் இருவரும் தனித் தனியாக கடந்து வந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் வாழ்க்கைத் துணை என்ற ஒரு நிலைப்பாட்டில் இன்று தமது வாழ்க்கையை ஒருமுகப்படுத்தி முன்னெடுக்க முன்வருகிறார்கள். ஒருவருக்கு ஒருவர் துணையாக, ஒருவரை ஒருவர் சார்ந்து, தமது வாழ்க்கைப் போராட்டத்தை முன்னெடுக்கும் இவ்வேளை, இவ்வுலகம் முழுமையிலுமுள்ள நிலைமைகளைப் பார்த்தால், உலகத்திலுள்ள நாடுகள், தேசங்கள் சுதந்திரத்தை காப்பாற்றுவதற்கும், நாடுகள் விடுதலையை அடைவதற்கும், மக்கள் புரட்சியை வேண்டியும் போராடுகிறார்கள். அவர்களது போராட்டத்துடன் உங்கள் போராட்டம் இணையட்டும். உலக சமாதானத்திற்கும், மனித குல நல்வாழ்விற்குமான பெரும் போராட்டத்தில் உங்கள் பங்கும் இணையட்டும்" என்றார்.

செல்லக்கிளி மாஸ்ரரின் மனைவிஐயர் வந்து கோவிலில் வைத்து நடந்த திருமணங்களைப் பார்த்த அவர் , ஐயர் சொன்ன மந்திரங்கள் புரிவதில்லை. இன்று ஐயா சொன்னவை வாழ்விற்கு தேவையானவை. என்னையும் கூட்டி வந்ததுக்கு நன்றி. இவை பற்றி என் நண்பர்களுக்கும் சொல்வேன்என்றார்.

வடமராட்சிப் பகுதியில் நடந்த ஒப்பிரேசன் லிபரேசன் காலத்தில் பலரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்தனர். நீர்வேலியில் வசித்த எங்கள் கவிஞர் முருகையனுக்கும் இந் நிலை ஏற்பட்டது. அவரது குடும்பமும், அவரது உறவினர்களான இரு பெண்பிள்ளைகளும்சத்தியமனைக்குவந்தனர். அவர்கள் எம்முடன் இருந்த ஒரு மாதத்திற்கு மேற்பட்ட நாட்கள் மிக இனிமையானவை. அவர்கள் மரக்கறி உணவு உண்பவர்கள். விதம் விதமான காய்கறிகளை அவர்களே வாங்கி வந்து மிகச் சிறந்த உணவு வகைகளை உண்டோம். என்னை எந்த வேலையும் செய்ய விடாது குயிலியும், மற்ற இரு பிள்ளைகளும் எல்லாம் செய்வார்கள். நாவலன் எனக்கருகில் அமர்ந்து பழைய கதைகளைக் கேட்பார். நான் கண் கலங்கினால் துடித்துப் போய் நிறுத்தச் சொல்வார். யுத்தம் பல கொடூரங்களைச் செய்த நேரத்திலும் இன்றும் மறக்க முடியாத நாட்களைத்தந்த கவிஞர் முருகையன் குடும்பம் என்றும் எமக்குள் இருப்பர்.

ஜூன் 4, 1987 அன்று இந்திய வான் படை இலங்கை அரசின் அனுமதி இன்றி இலங்கையினுள் பறந்து யாழ்ப்பாண மக்களுக்கு உணவுப்பொருட்கள் வீசியது (பூமாலை நடவடிக்கை). “இந்திய மேலாதிக்க வல்லரசு எம் நாட்டினுள் அத்து மீறி உள் நுழைவதை அனுமதிக்கமுடியாது" என தோழர் கட்சிப் பத்திரிகையான புதிய பூமியில் எழுதினார்.
அதைக் கண்டு வெகுண்டெழுந்த ஈழமுரசு ஆசிரியர்கள் . ஆர். திருச்செல்வம் மற்றும் எஸ் எம் கோபாலரத்தினம் ஆகியோர் அதைக் கண்டித்து; இந்தியா தமிழ் மக்களுக்கு ஆதரவு தருவதை கொம்யூனிஸ்ட்டுகள் விரும்பவில்லை என்ற தொனியில் எழுதியிருந்தார்கள். சில நாட்களில், இதன் பின்னர் இந்திய தலையீட்டின்படி 1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கையினுள் இந்திய அமைதிப்படை உள்நுழைந்தது. தமிழ் தலைவர்கள் மக்களை அழைத்துச் சென்று மாலை போட்டு, திலகமிட்டு வரவேற்றனர். சிறிது காலத்தின் பின்னர் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்கள் எல்லை மீற, மீண்டும் சண்டை ஆரம்பித்தது. இதற்கிடையில் இந்திய இராணுவம் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினர். வீட்டிலோ கஷ்டம். ஊரவர்கள் வரிசையில் காவல் நின்று அரிசி, எண்ணை, பருப்பு, மா என வாங்கி வருவர். தோழரோ அவர்களின் எந்தப் பொருளும் வீட்டினுள் வரக்கூடாது என்று விட்டார். வழமைபோல என் வீட்டு முருங்கையும், வாழையுமே உதவியது. எம் வீட்டிற்கு அருகில் ஒலுமடுவில் பெரிய பண்ணை வைத்திருந்த வேலாயுதத்தின் மனைவி இராஜேஸ்வரி என் மீது மாறாத பற்றுக்கொண்டவர். அவருக்கு எங்கள் குடும்ப நிலமை தெரியும். அவர் ஒரு மூடை நெல் தந்தார். அது அந்நேரம் பேருதவியாக அமைந்தது.

இராசரையும் பூசா முகாமிற்கு மாற்றியதால் சென்று பார்க்கவும் முடியவில்லை. இளைய மகன் கீர்த்தியும் பேராதனை செல்ல ஆரம்பித்தார். விடுதலைப்புலிகளும், இந்திய இராணுவத்தினரும் மோதிக்கொண்டனர். மீண்டும் குண்டுச்சத்தமும், துவக்கொலிகளும், மரணமும் மலிந்தன. எங்கும் ஓலம். மகள் பபி கற்பமுற்றிருந்தார். நல்ல உணவுகளைக் கொடுக்க முடியவில்லை. தோழர் அவவிடம் நல்ல புத்தகங்களை வாசிக்கத் தூண்டுவார். இந்நேரம் யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை கூடங்களை எல்லாம் இராணுவம் குண்டு போட்டுத் தகர்த்தது. திரு கோபாலரத்தினம் அவர்கள் தனது கோப்புகளுடன் சத்தியமனைக்கே வந்தார். மிகச் சிறிய வீட்டின் இரு புறமும் எதிர் எதிர் கருத்துக்களை
உடைய மிக நெருங்கிய நண்பர்கள் தத்தமக்கு சரி எனப்பட்டதை தங்கு தடையின்றி எழுதிக்கொண்டனர். இடையில் முரண்பட்டுக்கொள்வர். ஆனால் அந்த நட்பில் இருந்த நேர்மையும், நம்பிக்கையும் இன்றும் விதந்துரைக்கவல்லது. நண்பர் கோபாலரத்தினம் கோபு பத்திரிகையாளர் தோழர் மணியம் பற்றி எழுதிய குறிப்பை மீண்டும் வாசித்தேன்.

"1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நான் பின்னர் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த ஈழமுரசு பத்திரிகை அச்சு இயந்திரத்தை இந்திய அமைதிப்படை குண்டு வைத்துத் தகர்த்ததைத் தொடர்ந்து ஈழமுரசு சில தினங்கள் தொல்புரத்திலும் சங்கரனையிலிருந்தும் வெளியிடப் பெற்றது. தொல்புரத்திலிருந்து ஈழமுரசு வெளிவந்த சமயம் நண்பர்
..ஆர். திருச்செல்வம் மூலம் மணியம் தனது வீட்டுக்கு வருமாறு தகவல் அனுப்பியிருந்தார். வீட்டுக்குச் சென்றதும் என்னைத் தனது வீட்டிலேயே தங்கியிருக்குமாறு மணியம் கோட்டார். நானோபுலிகளின் பத்திரிகைக்கு ஆசிரியர் நீங்களோ சீனச் சார்ப்புக் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் இருவரும் ஒன்றாக இந்தியா இராணுவத்திடம் அகப்பட்டால் எப்படி
இருக்கும்?” என்றேன். மனம் விட்டுச் சிரித்தார். அந்த நேரம்தலைமறைவாக இருந்தபோது நீங்கள் அவருக்கு உணவு கொடுத்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு உணவு கொடுத்துக் கவனிக்க வேண்டும் என்று அவர் விடாப்பிடியாக நிக்கிறார்என்று திருமதி மணியம் சொன்னர். மணியத்தின் நன்றி மறவாத மனிதப் பண்பு இது. ஈழமுரசு பத்திரிகையில் ஈழ விடுதலைப் போராட்டம் சம்பந்தமாக மணியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையையும் கண்டித்து ஒரு விமர்சனம் செய்திருந்தேன். இதற்கு அவரும் தங்கள் பத்திரிகையில் பதிலளித்துமிருந்தார். தொல்புரத்தில் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது இந்தக் கட்டுரைகள் பற்றிய பேச்சும் வந்தது. கோபுவிடம், படித்த பத்திரிகைத் தமிழிலேயே நான் அவருக்குப் பதிலும் சொல்ல வேண்டியிருந்தது. ஆனால்எங்கள் நட்பில் எதுவும் இடையூறாக வரமுடியாது, வளரவும் முடியாது.” என்றார் மணியம் உறுதியான குரலில். மணியம் நட்புக்கு வகுத்த இலக்கணம் இது. வேற்று அரசியலும், வேறு தளத்திலும் இருந்து அவர் உண்மைகளை எழுதியது மிகுந்த ஆறுதலைத் தந்தது. உண்மைகள், தியாகங்கள் புதைந்தழிந்து போகா என்றிருந்தது. நினைவில் நிறுத்தி எழுதியிருந்தார்.
இடையில் எம் வீட்டிற்கு மேலால் குண்டுகள் பாயும். அந்நேரங்களில் அவரையும் அழைத்துக்கொண்டு இரவியின் ஊரான காலையடிக்கு ஓடுவோம். கையோடு எடுத்துப் போவது தோழர் இரவில் சலம் கழிக்கும் வாளி மட்டுமே. வேறு எதுவுமே எமக்கு பெரிய சொத்தாக தெரியவில்லை. (தோழரது கால்கள் உணர்விழக்க ஆரம்பித்தமையால் இரவில் வெளியில் செல்லும் போது கால்களில் காயங்கள் வந்தன. சலரோகமும் இருந்தமையால் புண்கள் மாறுவது சிரமம். மகள் பபியே வாளியின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்வார்.) எம்முடன் எங்கள் நாயான கிட்டுவும் கூட வரும். கிட்டுவுடன் ஊர் நாய்கள் எல்லாம் சேர்ந்து சண்டை போடும். பபி அழுதபடியேகிட்டு... கிட்டுஎன ஓடுவார். “ஐயோ...! பிள்ளை பேரைச் சொல்லிக் கூப்பிடாதையுங்கோ. அவன் மட்டுமில்லை இவனும் சேர்ந்து வந்து ஏன் 'கிட்டுஎண்டு பேர் வைச்சனீங்கள் எண்டு சுட்டுப்போடுவினம்...” என்று தடுப்பேன். இந்திய அமைதிப்படை காலத்தில் நாம் பட்ட அவஸ்த்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இரவியின் தாயும், தந்தையும் ஒரு கணநேரம் தன்னும் முகம் சுழிக்காது வரவேற்று ஆதரவு தந்தார்கள். இரவியின் சகோதரிகள் பபியை தங்கள் சகோதரி போலவே நடாத்தினார்கள். இதைப் பார்த்து எனக்கும், தோழருக்கும் பெரும் ஆறுதல் கிடைத்தது.

சிறையில் இருந்த இராசருக்கு ஏற்பட்ட காதலும், அதன் தீவிரமும்
பற்றித் தொடர்வேன்....

44

சிறைப்பட்ட மகனைத் தேடி வந்த காதல்

பூசா முகாம் பற்றிய தகவல்கள் எமக்குத் தெரியவில்லை. இந்தக் காலகட்டத்தில் பெற்றோலியம் கதிரவேலு, .ஜே.கனகரத்தினா போன்றவர்களிடம் என் வேதனைகளைச் சொல்லியிருக்கிறேன், அழுதிருக்கிறேன். தோழர் கதிரவேலு (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தந்தை. என் உடன் பிறவா சகோதரன்) அவர்களே சர்வதேச மன்னிப்பு சபைக்கு ஒரு முறைப்பாட்டை அனுப்ப முயற்சி மேற்கொண்டார். அதே நேரத்தில், கட்சியின் பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் சிறந்த சட்ட ஆலோசனைகளை வழங்கியது மட்டுமல்ல சில வழக்குகளையும் எடுத்து நடத்தி வந்தவர் தெல்லிப்பளை வனம் இராஜரட்னம். அவர்களிடத்தில் இராசரின் வழக்குப் பற்றிக் கேட்டறிவதற்கு தோழரைத் தூண்டினார். அந்தக் காலகட்டத்தில் ரி.டபிள்யு இராசரட்னம் ஓய்வு பெற்று இருந்தமையால் அவரது மகன் ரி.சி. இராசரட்னம் அவர்களே எடுத்த நடத்துவதாகவும், பணம் எதுவும் வேண்டாம் எனவும் சொன்னார். ‘சற்றடே ரிவியூபத்திரிகைக்கும் நான் அனுப்பிய அனைத்து செய்திகளின் கோர்வையையும் ஜே. கனகரத்தினா அனுப்பி வைத்தார். அயலவர்கள் இராசரின் அப்பா மற்றவர்களுக்கு கஷ்டம் வந்தபோதெல்லாம் ஓடிச் சென்று உதவுவார். இராசனின் விஷயத்தில் அக்கறையற்று இருப்பதாகக் குறை சொன்னார்கள். எனக்குத் தெரியும் அவருக்கு பிள்ளைகளின் மேலுள்ள அன்பும், அக்கறையும். ஆனால் பிழையான அரசியலைத் தேர்ந்தெடுத்த மகன் மீது கோவம் இருந்தாலும், மூத்த குழந்தையின் பிரிவின் வலி அவருள் தெரிந்ததை நான் உணர்ந்து கொண்டேன். ஆனால் அதை மேவி தேசிய ஒற்றுமை பற்றியும், சிறுபான்மையினரின் சுதந்திரம் பற்றியும் எழுதியும் பேசிய படியும் இருந்தார்.

இந்தக் காலத்தில் ஒருநாள், மெல்லிய, மாநிறம் கொண்ட எங்கள் பபியின் வயதை ஒத்த இரு பெண் பிள்ளைகள் வீட்டை வந்தனர். விசாரித்ததில் இருவரது குடும்பத்தையும் எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்களின் செயற்பாடுகளில் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கிடையில் என் மகள் வந்துவிட்டாள். அம்மா, “இவர் அண்ணாவை நீண்ட காலமாக விரும்புகிறாராம். இவவிற்கும் விருப்பம் என்பது அண்ணாவிற்கு தெரியாதாம். அண்ணாவின் பெயரில் கோவில்களில் அர்ஜனை, விரதம் என இருக்கிறாவாம். அண்ணாவிடம் கடிதம் ஒன்றை சேர்ப்பிக்க வேண்டுமாம்.” ஒரே மூச்சில் பபி கதை சொல்லி நிறுத்தினார். எனக்கு பயத்தில் பேச்சே வரவில்லை. நான் கல்வி கற்ற குருவின் குடும்பம். அவவின் தாய் தோழரின் உறவினராக இருந்தாலும், மிகப் பழமைவாதத்திற்குள் மூழ்கிய கல்விக் குடும்பம். இராசரின் வாழ்வோ கேள்விக் குறி. என்று விடுதலை பெற்று வருவான்? இனி என்ன செய்வான்? தொடர்ந்தும் போராடுவானா? உழைக்கச்
செல்வானா? தந்தையைப் போலத் தானே மகனும் இருப்பான். கலப்பு திருமணத்தினால் பிறந்தவன். எங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கள் சனத்திடமும் சாதி வெறி ஓயவில்லை. ஒரு கணத்தில் ஆயிரம் செய்திகள் மண்டைக்குள் குவிந்தன.
உங்களுக்கு இந்தக் கதையெல்லாம் முந்தியே தெரியுமோ?” என பபியைக் கேட்டேன். “ஓம் அம்மா. என்னுடன் படித்த **** உடன் ***** இன் சகோதரி படிக்கிறார். அவ தான் ஒரு மாதத்திற்கு முதல் வந்து சொன்னார். நான் இதை இவர்கள் இருவரிடமும் கேட்டு நிச்சயப்படுத்தினேன். அண்ணாவிற்கும் இவ மேல் விருப்பம் இருந்தது. இவவின் அண்ணா எங்கள் அண்ணாவின் நல்ல நண்பர் என்பதால் அதைத் தெரிவிக்காமல் இருந்துவிட்டார் போலும் ஆனால் இவ உங்களைச் சந்திக்க வேண்டும் எனக் கேட்டு இன்று வந்திருக்கிறா
பபி இன்றைய காலத்துப் பெண். எல்லாவற்றையும் எதிர்கொள்ளலாம் என துணிந்து வாழ்பவள். தோழரும் அவளை அப்படியே வளர்த்திருந்தார். தோழர் வீட்டில் இருக்கவில்லை. இருந்திருந்தால் ஒரு சிறந்த மறுமொழியை சொல்லியிருப்பார். இல்லாததும் ஒரு வகையில் நல்லது. என் பயத்திலிருந்து தோன்றும் கேள்விகளை தடை இன்றி அந்தச் சிறு பெண்ணிடம் கேட்கலாம். என் சந்தேகங்கள் பலவற்றைக் கேட்டுக் கொண்டேன். பிரதானமாக என்ன நட்சத்திரம்
என்பதை முதலில் கேட்டேன். என் தாயார் வானசாஸ்திரம், கைசாஸ்திரம், பிறப்புக் குறிப்பு எழுதுவதில் வல்லவர். அவரின் கெட்டித்தனமும், நம்பிக்கையும் என்னுள் ஆழமாக ஊறியிருந்தது. தீட்சை பெற்று வளர்ந்த தோழரும் கம்யூனிசத்தை புரிந்து ஏற்றுக் கொண்டபின்னர், எதையுமே விஞ்ஞான ரீதியாக பிரித்து நோக்க வேண்டும் என்பார். என் மதச் சம்பிரதாயங்களை அவர் அடக்குவதில்லை.

இடையில் ஏதாவது கிண்டலாகச் சொன்னாலும் என்னை எதிலும் வற்புறுத்துவதில்லை. மகள் மத நம்பிக்கையற்று தந்தையைப் போலவே வளர்ந்தாள். இரு மகன்களும் என்னை ஒற்றியே வளர்ந்தார்கள். இதில் ஒரு விடயத்தை உங்களுடன் பகிராமல் விட்டுவிட்டேன். இராசர் சிறைப்பட்டது அறிந்த காலம் தொட்டு மனம் அமைதியின்றித்
தவித்தது. ஊண், உறக்கம் இழந்தேன். சகல கோவிலுக்கும் செல்வேன். இதைப் பார்த்த தோழர் அவரது நண்பரான செல்வம் என்ற கட்டிட தொழிலாளியை அழைத்து எனக்கு துளசி நடுவதற்கு ஒரு சிறிய மாடம் போன்ற சாடியைச் செய்து தந்து, “உங்கட சாமி நல்லவர். கோயிலுக்குத் தான் வரவேணும் என்று அடம்பிடிக்கமாட்டார். இதிலை சூரியனையும் சேர்த்துக் கும்பிடலாம். இரண்டு பேரும் சேர்ந்து வருவார்கள்எனச் சொல்லி வளவில் நின்ற துளசியையும் நட்டுவிட்டார்.

என் சந்தேகங்களையெல்லாம் கேட்டுத் தெரிந்தபின், மனதில், என் மூத்த குழந்தையையும் மனசார விரும்பி ஒரு ஆசிரியரான பெண் இன்று வந்திருக்கிறாள். “அவன் நல்லவன். விவேகி. கற்பூரம் போன்றவன்என அவனது நண்பர்கள் சொல்லுவார்கள். புரிந்துணர்வும், செயலாற்றலும் மிக்கவன். மிகக் கெட்டிக்காரன். அட்டாவதானி. தோழரது இனிமையான குரல் வளம் அவனுக்குள் தான் இருந்தது. நான் வாசித்த கதைகளிலோ, பார்த்த படங்களிலோ, கேள்விப்பட்டவற்றிலோ இது போன்ற காதலை நான் கேட்டதில்லையே என்ற மகிழ்ச்சியும் என்னுள் உருவாகாமல் விடவில்லை. பெண் சொந்தக் காலில் நிற்கக்கூடிய வல்லமையுடன் இருந்தது, சுயநலமிக்க தாயாக அது எனக்குள் நிறைவையே தந்தது. துளசி மாடத்தில் இரு கொப்புகளைப் பிடுங்கி ஆளுக்கு ஒன்றாக கொடுத்து அவர் கொண்டு வந்த கடிதத்தை வாங்கினேன். சுடுநீர் போத்தல் பரிவர்த்தனையும் நின்றுவிட்டது. எங்கே, எப்படிப் பார்க்கப் போகிறோம் என்பதும் தெரியவில்லை. அச் சிறு பெண்ணுக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த என் மனசு சம்மதிக்கவில்லை.
இது நடந்து இரண்டு மூன்று நாட்களின் பின்னர் இராசரை மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றிவிட்டதாக அவர்கள் அனுமதித்த தாளில் கடிதம் எழுதியிருந்தார். விலாசமும் அனுப்பியதால் அப்பெண்ணின் கடிதத்தையே முதல் கடிதமாக அனுப்பினோம்.

அதற்கு அவரின் வெளிப்பாடும், அக்காதல் வளர்ந்தது பற்றியும் தொடர்வேன்.....

குறிப்பு- இந்தச் சம்பவங்களை தொடராமல் விட்டுச் செல்ல நினைத்தேன் பலரும் பல புனைகதைகளை தத்தமது கற்பனைக்கும், காழ்ப்பிற்கும் அமைவாக வெளிப்படுத்தியிருந்தனர். நான் உயிருடன் இருக்கும் போது உண்மையைச் சொல்வதே சரி என நினைத்தேன்.

45

மகன் சிறையிலிருந்து விடுதலை

நண்பர் .ஜே. கனகரத்னா (ஆகஸ்ட் 26, 1934 - அக்டோபர் 11, 2006) ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் உழைத்தவரும் தலைசிறந்த விமர்சகரும் ஈழத்து எழுத்தாளரும் ஆவார். ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம், நாடகம் என்று பல்துறை ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தவர். பல இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆசானாகவும் அடக்கமான தொண்டு செய்த இவர் பொதுவாக .ஜே என்றே அழைக்கப்பட்டார். அந்த நட்பில் இருந்த நேர்மையும், நம்பிக்கையும் இன்றும் விதந்துரைக்கவல்லது. நண்பர் .ஜே. கனகரத்னா, தோழர் மணியம் பற்றி எழுதிய குறிப்பை மீண்டும் வாசித்தேன்.

இக்கட்டான இன்றைய நிலையில், வடபகுதி இடதுசாரி இயக்கத்திற்கு தோழர் கே.. சுப்பிரமணியத்தின் மறைவு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தோழர் சுப்பிரமணியம் தன் வாழ் நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்காக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வந்தார். அவருடைய போராட்ட வாழ்க்கையைப் பற்றி நான் அதிகம் கூறவேண்டியதில்லை. ஏனென்றால் பலராலும் நன்கு அறியப்பட்ட ஒன்றே. தனிப்பட்டமுறையில் அவரது மறைவால் நான் ஒர் உண்மையான நண்பனை இழந்துவிட்டேன். இதை எழுதும் போது அவரது சிரித்தமுகம் எனது அகக் கண்முன் தோன்றுகின்றது. மனம் விட்டு நாம் இருவரும் பல விடயங்களைப்பற்றி அரசியல் உட்பட கதைப்போம். தனது கருத்தை விட்டுக் கொடுக்காத போதிலும், மற்றவர்களின் அபிப்பிராயங்களை செவிமடுக்கும் மனப்பக்குவம். அவரிடம் இருந்தது: அவர் கனவு கண்ட சமுதாயம் நனவாக முன்பு அவர் காலமாகிவிட்டார். ஆனால் அவர் போன்றோர் மேற்கொண்ட முயற்சிகளால் அந்த இலட்சிய சமுதாயம் உருவாகும் நாள் நெருங்குகிறது. அந்த நாள் எந்நாளோ?”.

இனி, ராசருக்கு அந்தப் பெண்ணின் கடிதத்தை மட்டுமே முதலில் அனுப்பினோம். பின்னர் பபி தந்தையிடம், தம்பியிடம், தன் கணவரிடம் இது பற்றிப் பேசினார். தோழர் சாதிய பிணைப்புச் சங்கிலிகள் மாற்றத்துடன் வேறு பிணைப்புகளாக வேண்டும் என நினைத்திருப்பார் போலும். மீண்டும் இராசரின் வாழ்வில் தனது குடும்ப நீட்சி இணைவது அவரது எண்ணத்திற்கு தடையாக இருந்தாலும், இரு மனங்களின் இணைவையே முன்னிறுத்துவார். அதனால் அக்காதலில் தடை இருக்கவில்லை. பபியை தமையனுக்கு விபரமான கடிதம் ஒன்றை எழுதச் சொன்னார். முன்பின்னாக அனுப்பியிருந்த போதும், இரு கடிதங்களும் ஒன்றாகவே இராசருக்கு கிடைத்தன என நினைக்கிறேன். அவரும் ஒரே தாளில் தனித்தனியாகக் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

எங்களுக்கானதில் அப் பெண்ணின் உயர்ந்த குணங்களையும், தனது விடுதலையின் விபரம் தெரியாமையால் அவரது வாழ்வை குழப்புவது சரியல்ல என்றும் எழுதியிருந்தார். அவருக்கான பகுதியில் அவரது படிப்பு, வேலை, குடும்பத்தவர்களின் சுகம் என்பன பற்றி மட்டுமே விசாரித்து எழுதியிருந்தார். ஆனால் பபி முழுக்கடிதமாகவே அந்தப் பெண்ணிடம் கடிதத்தை சேர்ப்பித்தார்.அதன் பின்னர் அவர் தானாகவே கடிதங்களை அனுப்ப ஆரம்பித்தார். என நினைத்தேன். சில கடிதங்களின் பின்னர் வந்த கடிதங்கள் அதிகமாக அவருக்கானவையாகவே இருந்தது. அதனால் வெளியில் அவரது பெயர் இருந்ததால், நாம் கடிதத்தை உடைக்காமலே கொடுக்க ஆரம்பித்தோம். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின், சர்வதேச மன்னிப்புச்சபைக்கு போட்ட கடிதத்திற்கு அவ்விடயத்தைக் கவனத்தில் எடுப்பதாக ஆறுதல் தரக்கூடிய பதில் வந்திருந்தது. இதற்கிடையில் நீதியரசர் வனம் இராசரத்தினத்தின் மகனான வழக்கறிஞர் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி தெல்லிப்பழை வனராஜா இராசரத்தினம் ( 21 டிசம்பர் 1920 - 15 ஜனவரி 1994) இலங்கையின் ஒரு முன்னணித் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பருவ நீதிமன்ற ஆணையராகவும், மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். அந்த நட்பில் இருந்த நேர்மையும், நம்பிக்கையும் இன்றும் விதந்துரைக்க வல்லது.

நண்பர் வனம் இராசரத்தினம், தோழர் மணியம் பற்றி எழுதிய குறிப்பை மீண்டும் வாசித்தேன் அதனையும் உங்களுடன் பகிர நினைத்தேன். சில வரலாறுகள் பரந்து செல்ல வேண்டுமல்லவா?

"நான் சட்டத்தரணியாகப் பணியாற்றத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலும் அதன் பின்னரும் தொழிலாளர்களுக்கும் தொழிற் சங்கவாதிகளுக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மிக கடினமான வழக்குகளில் எல்லாம் சுப்பிரமணியம் என்னை ஆஜராகும்படி செய்வித்தார். அந்தக் கட்டத்தில் அரசும் சமுதாயமும் தொழிலாளர்களையும் தொழிற்சங்கவாதிகளையும் பெரும் தொந்தரவுகளுக்கு உட்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் சுப்பிரமணியம் எல்லோர்க்கும் உற்சாகம் ஊட்டக் கூடிய தலைவராகவிருந்ததால், நாம் வழக்குகளில் தோற்பது மிகவும் அரிது. அவர் சார்பாக நான் ஆஜரான கடைசி வழக்கு சாவகச்சேரியில் ஆலயப் பிரவேசத்துடன் தொடர்புற்றிருந்த ஒர் வழக்கு. கிணறுகளை நச்சுப்படுத்துவதற்கு உயர் சாதியினர் முயன்றனர். ஆலய வளவிற்கு தாழ்த்தப்பட்டவர்கள் புகுவதைத் தடுப்பதற்கு பொலிசார் மேல்சாதியினருக்கு உதவி புரிந்து கொண்டிருந்தனர் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு இந்தப் படுமோசமான, ஈனத்தனமான செயலைச் செய்யாது பொலிசாரைத் தடுத்தனர். அவர்கள் பொலிசாரைத் தாக்கவும் செய்தனர். பரபரப்புமிக்க வழக்காக இது இருந்ததோடு, உயர் சாதியினர் நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.”நாம் வழக்கில் வென்றோம். உண்மையான தலைவராக சுப்பிரமணியம் இருந்ததால், சாதி அரக்கன் அட்டகாசம் செய்து வந்த பகுதியாய் இருந்த போதிலும், அவர் வழக்கினை நன்கு ஆயத்தம் செய்திருந்தார். சுப்பிரமணியம் அரசியலை நன்கு கற்றுத் தேர்ந்தவர். அவருக்கென சொந்த அரசியல் தத்துவங்கள் இருந்தன. அவற்றை என்னுடன் அடிக்கடி பரிமாறிக் கொள்வார். எம்மிடையே அரசியல் சார்ந்த ஒரு சில கருத்து வேற்றுமைகள் இருந்தபோதிலும் அது நாம் இருவர் சந்திப்பதிலும் பயனுள்ள கலந்துரையாடல்களில் பங்குபற்றுவதிலும் தடையாய் இருக்கவில்லை. சுப்பிரமணியம் பாசமிக்க நண்பராய் இருந்தார். கொழும்பிற்கு வரும் போது என்னைச் சந்திக்கத் தவறமாட்டார். அவரது மகனைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. குடும்ப நண்பராகவும், நிதானமிக்க அரசியல்வாதியாகவும், பண்பு மிக்க மனிதராகவும் அவர் விளங்கினர். அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள துயரத்தை அவரது குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். சுப்பிரமணியம் ஒர் தேசபக்தன், மனிதாபிமானி, மக்களை நேசித்தவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் தனது வாழ்நாள் பூராவும் அடக்கியொடுக்கியவர்களுக்கு எதிராக அயராது போராடினார். வீரத்துடன் அவர் போராடினார். அவரது வாழ்வு மரணத்தை ஜெயித்துவிட்டது.”

இலங்கை இந்திய அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையில் அரசியல் கைதிகள் விடுதலை, போராளி அமைப்புகளின் ஆயுத ஒப்படைப்பும் அடங்கலாக இருந்தது. அதனால் இராசரும் விடுதலை பெற்றிடுவார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியது. அரசியல் ரீதியாக இந்திய அரசும், படைகளும் பல அத்துமீறல்களையும், அடாவடிகளையும் செய்திருந்தபோதும் என் சுயநலமிக்க தாய்மை உணர்விற்கு அது ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தியது உண்மையே.

கடந்த வருட மேதினம் ஐக்கிய மேதினமாக அமைந்திருந்தது. நவசமசமாச கட்சி தோழர் அண்ணாமலை, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மொஸ்கோ சார்பு) தோழர் .வைத்தியலிங்கம், தோழர் எஸ்.விஜயானந்தன், தோழர் .திருநாவுக்கரசு என இடதுசாரியக் கருத்துடைய அனைவரும் இணைந்து யாழ் நகரில் ஆரம்பித்து கொக்குவில் பொது
மைதானத்தில் மிக மிக எழுச்சியுடன் நடத்தினர். தோழர் மிக நோய்வாய்பட்ட நிலையில் கையில் கட்டுடன் மிக உற்சாகமாக,முற்போக்கு சக்திகளின் இணைவு தந்த மகிழ்வுடன் பேசினார். மீண்டும் விடுதலைப் புலிகளுக்கும், அமைதிப்படைக்கும் சண்டைகள் ஆரம்பித்தன. வெலிகட சிறையிலிருந்து மகசீன் சிறைக்கு மாற்றப்பட்டார். எங்களால் அவரைச் சென்று பார்க்கமுடியவில்லை. பபியுடன் படித்த நிமால் இராசருக்கு விளையாட்டு பத்திரிகையான ஸ்போர்ட் ஸ்டார் அனுப்புவார். வேறு செய்திப்பத்திரிகை தடை இப்படியே இராசரது காதல் வளர்ந்தது.

அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன் வைக்கின்றது.

1987 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 செவ்வாய் கிழமை சிறைக்கைதிகளை பகுதி பகுதியாக சிறைச்சாலையிலிருந்து வழக்கு பதிவு செய்து கொண்டு சட்டத்தரணி மூலம் விடுதலை செய்தனர் எனது மகன் மாத்திரமல்ல, அநேக இளைஞர்கள் விடுவிக்கப்பட்டனர். எனது மகள் தனது கணவனின் உதவியுடன் தமையனைப் பார்க்க சென்று வந்தார். அவரை எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட இளம் குடும்பமான சந்திரகாசன் அவர்களே கையெழுத்திட்டு அழைத்து வந்தார்கள். அவர்கள் இராசனில் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர்கள். அனைவரையும் கப்பித்தாவத்தை கோயிலில் வைத்திருந்து பின் விட்டனர். இராசர் மெலிந்திருந்ததாகச் சொன்னார். விடுதலை செய்யப்பட்ட பிள்ளையை வீட்டிற்கு அழைத்து வர முடியவில்லை. ஏனென்றால், அவரது உயிருக்கு உத்தரவாதமற்ற நிலைதான் யாழ்ப்பாணத்தில் இருந்தது.விடுதலைப் புலிகளின் இயக்கத்தினர் பிடிபட்டவுடன்சயனைட்குப்பியைக் கடித்து உயிரைப் போக்கி விடுவார்கள். மற்ற இயக்கத்தினர் தான் பிடிபட்டு ராணுவத்தினரின் அடி, ஆக்கினைகளுக்கு முகம் கொடுத்து உடல் வேதனைகளுடன் வெளியேறினார்கள்.

எனது மகன் ஒரு நாற்காலியில் ஐந்து நிமிடத்துக்கு மேல் உட்கார மாட்டார். நாரி வருத்தமும், குதிக்கால் நோவும் நிலத்தில் கால் ஊன்றி நடக்க முடியாமல் கஷ்டப்படுவதாகவும் சொன்னார்கள். பபியிடம் செய்தி அறிய ஊரவர்கள், நண்பர்கள், தோழர்களுடன் அந்தப் பெண்ணும் வந்தார். அவர் கையில் கோயில் அர்ஜனைப்பூவும், திருநீறும் ஒருவகையில் அவர் தான் வணங்கிய தெய்வங்கள் இரங்கியே விடுதலை கிடைத்ததாக எண்ணியிருக்கலாம். நானும் அவ்வாறே எண்ணினேன். தோழருடன் ஒன்றிணைந்திருந்தாலும், என் ஊசலாட்ட மனோபாவம் துன்பம் என்னைச் சூழ்ந்தபோதெல்லாம் தெய்வத்திடம் சரணடைய வைத்தது அந்த நம்பிக்கையே என்னைக் கொண்டு சென்றது.

இராசர் விடுதலையின் பின் ரி.சி. ராஜரட்ணம் அவர்களை சென்று பார்த்து நன்றி சொல்லி வந்தார். அவர் இராஜசுந்தரம் மாஸ்ரரின் உறவினரான வேலனை .பெ. இரத்தினம் குடும்பத்தில் திருமணம் செய்ததாக இராசர் சொன்னார். அவரது சேமிப்புகளுடன் இந்தப் பத்திரிகைத் துண்டும் இருந்தது. இன்று அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை.

இராசரின் விவாகப் பதிவும், அதனால் ஏற்பட்ட மிகப்பெரிய துன்பமும். தொடர்வேன்.

46

திருமணத்துக்குப் பிறகும் மகனுக்கு தீராத துயரம்

விடுதலையான இராசரைப் பார்க்க என்னால் செல்ல முடியவில்லை. மூன்று ஆண்டுகள் முழுமையும் உடற்காயம், மனக்காயம் சுமந்த குழந்தைக்கு நல்ல உணவும், உபசரிப்பும் கிடைக்குமோ என்னவோ எனத் தாய் மனது தவித்தது. மகள் பபி வந்து தவறவிடாது எல்லாக் கதையும் சொன்னார். இடைக்கிடை அந்தப் பெண் வீட்டிற்கு வருவார். இப்படியே நாட்கள் கழிந்தன. பபியும் இரவியும் கப்பித்தாவத்தை கோவிலில் இராசரை முதன் முதல் கண்ட கதையிலிருந்து எல்லாம்
சொன்னார்கள். பல்வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருடன் ஒருவர் அன்பாக இருந்தது மட்டுமல்ல, மற்றவர்களது குடும்பம் பற்றியும் அறிந்திருந்தனராம். நாட்டு நிலை காரணமாக இயக்க சம்பந்தப்பட்ட போராளியை வீட்டில் வைத்திருப்பதற்கு அஞ்சிய காலம். இருந்தும் சந்திரகாசன் இராசர் மேலுள்ள அன்பாலும், தோழர் மீதிருந்த மதிப்பாலும் தன் வீட்டிற்கு அழைத்து உணவு கொடுத்தார். மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் இராசரும் கோயில் மேல் மாடம், கடைத்தொகுதி மொட்டைமாடி எனத் தங்கினார். தன்னை மிக அன்புடன் நேசித்த ஒரத்தநாட்டைச் சேர்ந்த குடும்பத்தைப் பார்க்கவேண்டும் என்று நண்பர்களின் உதவியுடன் இந்தியா சென்றார். அங்கும் அவருக்கும் அந்தப் பெண்ணிற்குமான உறவு கடிதம் எழுதி வளர்ந்தது.

இந்தியாவில் எங்களூர் பாலமோட்டை சிவத்துடனும், வட்டுக்கோட்டை டெனியுடனும் பம்பாய் சென்றார். அந்தப் புகைப் படங்களை எமக்கும் அனுப்பினார். பின் மீண்டும் இலங்கை வந்தார். நண்பர்களின் உதவியுடன் இராசர் அந்தப் பெண்ணை பதிவுத் திருமணம் செய்ததாக பபி சொன்னார். பக்கத்தில் நிற்க முடியவில்லையே என கவலை வந்தாலும் புலிகளாலும், இராணுவத்தாலும் ஏற்படும் தொல்லையால் என மனம் ஆறுதல் பட்டது. அதுவும் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

அன்று 1988 வைகாசி விசாகம். பறாளாய் கோவில் தேர். வழமையாக விரதம் இருப்பேன். என் சகல சுகதுக்கங்களையும் அந்த வயல் வெளிச் சாமியிடம் காற்றில் கலக்கவிடுவேன். மத்தியானம் சாப்பாடு முடித்தவேளை கீருவின் நண்பர் ஒருவர் பதறியடித்து வந்து “*** அக்கா ***** அலரிக்கொட்டை சாப்பிட்டு இறந்துவிட்டா...” என விம்மலுடன் சொன்னார். தோழரும் அன்று வீட்டிலிருந்தார். நம்பவே முடியாத ஒன்று. இறந்த பெண்ணை நினைத்து அழுவதா? நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடரக் காத்திருக்கும் என் மகனை நினைத்து அழுவதா? ஏன் இவ்வளவு துன்பங்கள்? வாழ ஆசைப்பட்ட குழந்தைகளின் வாழ்வு ஏன் முடிந்தது? பதில் தெரியா ஆயிரம் கேள்விகள் மண்டைக்குள் ரீங்கரித்தது. பபியும் தோழருமாக இரவு பஸ்சில் கொழும்பிலுள்ள இராசரைப் பார்க்க புறப்பட்டனர். இராசர் இயக்கத்திற்கு சென்றதில் இருந்து தந்தை அவரைப் பார்க்கவில்லை. முதன் முதல் இத்துன்பத்தில் பார்க்கப் போனார்.

பபியின் வயிற்றில் 4 மாத குழந்தை வேறு. மூன்று நாட்கள் கழித்து மீண்டும் சத்தியமனைக்கு வந்தார்கள். பபி அழுது கொண்டே இருந்தாள். இராசர் அப்பெண்ணின் மரணச்செய்தியைப் பத்திரிகைக்கு கொடுத்ததால் ஊரில் அநேகர் அவர்களுக்கு நடந்த விவாகப் பதிவை அறிந்திருந்தனர். பலரும் துக்கம் விசாரிக்க வீடு வந்தனர். காரணம் தெரியாது, வந்தவர்கள் சொன்ன அரை குறைக் கதைகளை கேட்டு நானும் துவண்டு விட்டேன். தோழரும் குழம்பிப் போயிருந்தார். இதுவரை அவரின் பெயரை நான் சொல்லவில்லை. ஆனால் எங்களை அறிந்த பலருக்கும் இவைபற்றி நன்கு தெரியும். பொருளாதார நிலை, நிரந்தர உத்தியோகம், சாதீயத்தை கடைப்பிடிக்காத போக்கு இன்னும் இன்னும் பல காரணங்கள் முரணாக அமைந்திருக்கலாம். எதை நினைக்க? எங்கள் வீட்டுக்கான சிறு பெண்ணின் இழப்பு இன்றுவரை ஆறாத் துயரமாய் தொடர்கிறது. இராசர் இறுதி வரை அவரின் படம் போட்ட பெந்தனை அணிந்திருந்தார். அவர் 1981 - 1988 வரை தன் காதலையும் உணர்வையும் சொன்ன கடிதங்கள் இராசரின் கைப்பையினுள் உறைகளிட்டு கவனமாக அடுக்கப்பட்டிருந்தன. அவை காவியம். அவரின் பெயரைச் சகோதரன் தன் குழந்தைக்கே இட்டார். அவரின் அன்பு எங்களுடன் இன்றும் வாழ்கிறது.

கடிதங்கள்

அரசியல் ரீதியாகவும் சில முரண்பாடுகள் இருந்ததால் இராசர் தான் சார்ந்த இயக்க அலுவலகத்திற்கு செல்லவில்லை. இராசரை தொடர்ந்து தங்கள் வீடுகளில் வைத்திருப்பதற்கு உறவுகளும் அஞ்சினர். சில நாட்களுக்கு பம்பலப்பிட்டி கோவில் மேற்தட்டில் இரவில் படுப்பதும், இராஜசுந்தரம் மாஸ்டரின் மகன் பரனின் உதவியுடன் பம்பலப்பிட்டி கோவில் அருகே உள்ள உணவகத்தில் காலை கடன்களை முடித்தும் வந்தார். பின்னர் தோழர் தேவர் இராசரை அழைத்துக் கொண்டு கண்டி சென்றார். அப்போ கலா ஆசிரியர் தொழில் நிமித்தம் அங்கிருந்தார். தோழர் தம்பையாவிற்கு திருமணம் என்பதால் இராசரையும் பார்க்கலாம் என எனது பெறாமகள் ஞானாம்பிகையுடன் கொழும்பு சென்றேன்.

ஒன்றரை ஆண்டுகளின் பின் இராசரைப் பார்த்தேன். நீண்ட தாடியுடன் இருந்தார். எவ்வளவோ சொல்லி அவரின் தாடியை எடுக்க வைத்து அத்திருமணத்திற்கு அழைத்துச் சென்றேன். இனி என்ன செய்யப் போகிறார்? கையில் பணம் இல்லை. வேலை இல்லை. வாழ்வின் நம்பிக்கைக்கு எந்தத் துரும்பும் இல்லை. மீண்டும் துக்கத்தை மட்டுமே சுமந்தபடி சத்தியமனைக்கு வந்தேன். இராஜசுந்தரம் மாஸ்டர் இறந்ததால், அவருடைய வீட்டில் வேலை செய்த அன்னப்பிள்ளைக்கு கனகேஸ்வரி என்று ஒரு மகள் இருக்கிறார் .தந்தை இல்லை. “மீண்டும் என் ஊரில் வயசுக்கு வந்த சிறுபெண்ணைக் கூட்டிச் சென்று வளர்க்க முடியாது. உங்களை விட நம்பிக்கையானவர் எவரும் எனக்கில்லை. என் மகளை உங்கள் வீட்டில் வைத்திருப்பீர்களா?” எனக் கேட்டு அத் தாய் நின்றார். நாங்களோ அரை வயிற்றுக் கஞ்சி தான் குடிக்கிறோம்.
உன் பிள்ளைக்கும் அதைத்தான் என்னால் கொடுக்கமுடியும். அதைவிட அவள் பாடசாலைக்கு அனுப்பி கல்வியைத் தொடர வைப்பதைச் செய்வேன் என்றேன். பக்கத்து வீட்டு அகிலனும், கனகமும் ஒன்றாகப் பாடசாலை சென்று வந்தனர்.

புரட்டாசி மாதம் சுபாரா பிறந்தார். துன்பத்தின் மேல் துன்பம் சுமந்து மௌனமாய் அழுத வீட்டில் மழலையின் சங்கீதம் புத்தாக்கம் அளித்தது. சுப்பிரமணியம், பபி, ரவி என்பவற்றின் முதல் எழுத்துகள் சேரசுபாராஆனார். தோழரை அவ்வளவு சந்தோசமாக நீண்ட காலத்தின் பின் கண்டேன். அதி காலையில் எழும்பும் வழக்கமுடைய தோழர் சுபாராவை
தூக்கிச் சென்று தன்னுடன் வைத்திருப்பார். ரோச்சை சுவரில் அடித்து நிலாப் பாடல்கள் பாடுவார். குழந்தைக்கு தாய்ப்பால் முக்கியம் என்று பொன்னாலை கடலுக்குச் சென்றுகீளி மீன்வாங்கி வருவார். இராணுவ கெடுபிடிகள் அதிகரித்தமையால் சத்தியமனையில் கட்சிக் கூட்டங்களும் நடக்கத் தொடங்கின.

இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்கான அரசியல் மாற்றங்கள் பற்றிய விவாதங்கள் நடந்தன. இந்திய இராணுவ அத்துமீறல்களும், புலிகளின் எதேச்சதிகாரப் போக்கும் அச்சத்தையே அளித்தது. மின்சாரம் தடைப்பட்டது. உணவுப் பற்றாக்குறை. திடீர் திடீரென குண்டு வீச்சுகள். வீடுகள் தோறும் பங்கர்கள் அமைக்கத் தொடங்கினர். ஜனாதிபதி தேர்தலுக்கான பேச்சுகள் ஆரம்பித்தன. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பிரேமதாசா அவர்களும், சுதந்திரக்கட்சி சார்பில் சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களும் போட்டியிடுவதாகப் பேசினர்.

ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டமும், புலிகளின் அச்சுறுத்தலும் பற்றித் தொடர்வேன்.

47

ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டமும், புலிகளின் அச்சுறுத்தலும்

1988, அன்றைய நிலையில் தமிழ் பேசும் மக்கள் உட்பட நாட்டு மக்கள் அனைவரும் அனுபவித்து வரும் அவல வாழ்வுக்கு குறைந்தபட்சத் தீர்வாவது ஏற்பட வேண்டும் என்பதற்காக மாற்று அரசாங்கம் ஒன்றின் தேவையை இலங்கை கம்யூனிஸ்ட் (இடது) கட்சியின் மூலமாக தோழர் வலியுறுத்தி வந்தார். ஆட்சி மாற்றம் மட்டுமே இந்திய இராணுவத்தை திருப்பி அனுப்ப முடியும் என்ற ரீதியில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் முற்போக்கு அணிகளைச் சார்ந்த பலரும் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக மக்கள் சக்தி வேட்பாளராகப் போட்டியிட்ட திருமதி சிறிமாவோ பண்டார நாயக்காவை ஆதரிப்பதாக முடிவு எடுத்தன.

விடுதலைப் போராட்ட இயக்கங்களாகக் கருதப்பட்ட இயக்கத்தவர்களும் இந்திய இராணுவத்தின் அராஜகங்களால் பதுங்கித் தாக்கி மறைந்து வாழ்ந்தனர். இதன் மூலம் முற்போக்கு ஜனநாயக தேச பக்த சக்திகளிடையே ஐக்கியமும் புரிந்துணர்வும் உருவாகுவதற்கு வழி ஏற்பட்டது. இதற்கான முன்னெடுப்பு வேலைகள் ஆரம்பித்தன. தோழர் ஓய்வின்றி அலைந்தபடி இருந்தார். அடிக்கடி கொழும்பு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.

முன்னர் தோழர் .ரி. மூர்த்தி வீடு தெகிவளையில் இருந்தது அங்கு போய் அவருடன் தங்குவார். அரசியல் ரீதியாக முரண்பாடான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் மிகச் சிறந்த நட்பு அவர்களிடம் இருந்து வந்தது. பேராசிரியர் கைலாசபதி நோயுற்று இருந்த காலத்தில் .ரி. மூர்த்தி வீட்டிலிருந்தே பேராசிரியரைச் சென்று பார்த்து வந்தார். பின் அவரும் தன் தொழிற்சங்க காரியாலயத்தில் தங்கும் நிலை ஏற்பட்டபின், தோழர் இராமகிருஷ்ண மண்டபத்தில் தங்க ஆரம்பித்தார். மிகக் குறைந்த கட்டணத்தில் சுகாதார முறையில் அது பேணப்பட்டு வந்தது. ஒரு தடவை அங்கு தங்கியிருந்த வேளை மிகச் சுகயீனம் அடைந்து கொழும்பு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தோழர் தம்பையா, தோழர் மூர்த்தி, தோழர் கதிரவேலு (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தந்தை, என் உடன் பிறவா சகோதரன்) போன்றவர்களும் நண்பர் குலேந்திரனும் சென்று பார்த்து உணவு வழங்கினர். மீண்டும் சத்தியமனை திரும்பிய தோழர் உற்சாகமாக இயங்கினார்.

ஒரு நாள் எம் வீட்டிற்கு வந்த கார் ஒன்றிலிருந்து மேட்டுமைத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய தோற்றத்துடன் கணவனும், மனைவியும் வந்தனர். எனக்கு யாரெனத் தெரியவில்லை. தோழர் அவர்களை அடையாளம் கண்டு கொண்டார் எங்கள் கீர்த்தி தங்கள் பெண்ணைக் (சுசித்ரா) காதலிப்பதாகவும் அதைத் தடுக்கச் சொல்லவே வந்ததாகச் சொன்னார்கள். தோழர் அவர்களிடம் மிக நிதானமாக, “இவ்வளவு தூரம் அலையாது, இதை உங்கள் மகளிடமே சொல்லியிருக்கலாமேஎன்றார். அப்போது கீர்த்தி மாணவர்களின் போராட்டம் காரணமாக பேராதனை பல்கலைக்
கழகம் மூடப்பட்டு இருந்ததால் ஊருக்கு வந்திருந்தார். ஆனால் அறைக்கு உள்ளேயே இருந்து கொண்டார். மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற தோழருக்கு பலத்த தாக்குதலால் காயங்களை ஏற்படுத்திய உறவினர்களின் நெருங்கிய உறவினர் இவர்கள். “சாதிய எல்லைக் கோடுகளைத் தகர்க்கவே என் வாழ்க்கையை அமைத்து நடக்கிறேன். மீண்டும் எனது உறவுக்குள் செல்வது பற்றி கீர்த்தி தான் முடிவு செய்ய வேண்டும். நான் காதலைப் பிரிக்கமாட்டேன். அவர் யோசித்து முடிவு எடுக்கட்டும்’’ என்றார். எனக்கு இது பலத்த அதிர்ச்சியாக இருந்தது. பபிக்கு முதலே கீர்த்தி சொல்லியிருப்பார் போலும். தந்தையுடன் அவரே பேசினார். பின் தம்பியுடனும் பேசினார். அடுத்த
நாள் காலை எல்லாவற்றையும் மறந்தவர்களாய் இயங்கத் தொடங்கினோம்.

அரசியலை, இலக்கியத்துடன் இணைத்தபடி மக்களிடம் செல்ல வேணும் என்பதில் தோழர் அதிக சிரத்தை எடுப்பார். அவரது ஆரம்ப அரசியல் தன் வீட்டிற்கு அருகில் கிளானை வாசிகசாலையை அமைத்து பாரதி விழாவைத் தொடங்கி நடத்தியதிலிருந்து ஆரம்பித்தது.

இது பற்றி விபரமாக முன்னைய குறிப்பொன்றில் சொல்லியிருக்கிறேன். சிறிது நாட்களின் பின் கீர்த்தியும் தோழர் தேவராஜாவின் ஏற்பாட்டில் இந்தியா சென்றுவிட்டார். அப்பிரயாணத்தின் பிரதான நோக்கம், அன்னியர் ஆதிக்கத்தில் அல்லலுற்ற தன்நாட்டு மக்களுக்கு உரிமை உணர்வை எழுப்பி வீராவேசத்துடன் பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியை நிகர்த்தாக ஹங்கேரியக் கவிஞன் பெட்டோபியின் கவிதைகள் தமிழில் வெளி வர மொழி பெயர்த்தார். பிரபல எழுத்தாளர் கே. கணேஷ். அதன் விளைவாய் அளிக்கப்பட்ட கையெழுத்துப் படிவங்கள் அன்றைய நாட்டு நிலை காரணமாக அச்சேற முடியாது சில ஆண்டுகள் சுணங்க நேர்ந்தது. பேராதனையில் படித்துக்கொண்டிருந்த கீர்த்தியைத் தோழர் அவர்கள் எழுத்தாளர் திரு கே.கணேஷ் வீட்டிற்கு அனுப்பி, அவருடன் இருந்து திருத்த வேலைகளைச் செய்து எடுத்துவரச் செய்தார். அதனைச் சென்னை புக் ஹவுஸ் தோழர் பாலாஜி உதவியுடன் தேசிய கலை இலக்கியப் பேரவை அழகு பெற வெளியிட தேவையான வேலைகளையும் கீர்த்தியும் உடன் நின்று செய்தார். அப்போது, இராசரும் இந்தியாவில் இருந்தார் ஆனால் அவரிடம் இருந்து தகவல் எதுவும் இல்லை.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு சிறீமாவோ வருவதற்கான திகதி 1988 டிசம்பர் மாதம் 14 என்று தீர்மானிக்கப்பட்டது. வீடு நிறைய தோழர்கள் மிக உற்சாகமாக இயங்கினர். அடுத்தநாள் காலை பண்டத்தெருப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் கூட்டத்தை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. இரவு உணவிற்கான சாப்பாட்டைத் தயாரித்த பின் அடுத்தநாள் சிங்களத் தோழர்கள் சிலருக்கும் எமது தோழர்களுக்குமான உணவு ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தேன். திடீரென பரபரப்பு. பக்கத்துவீட்டுப் பெண் 'தும்பனும், வெற்றியும் துவக்குடன் வந்திருக்கிறாங்கள். ஐயாவும், பபியும் அறைக்குள் கூட்டிப் போயிருக்கிறார்கள். என்ன நடக்கப் போகுதோ? ஆமி வரப்போறாங்களே? எனப் பதறியபடி சொன்னார். நான் குசினியிலிருந்து விறாந்தைக்குச் சென்றேன். அறைக்கதவு சற்று விலகியபடி இருந்தது. நிலையுடன் ஒரு துப்பாக்கி சாத்தி வைக்கப்பட்டிருந்தது. இரவி வெளியில் நிலையுடன் நின்றார். உள்ளே செல்லக் கூடாது எனப் புரிந்துகொண்டேன். இந்திய இராணுவத்துடன் இருந்த நட்பு பின் விடுதலைப்புலிகளுக்கு முரணான காரணத்தால் இந் நிகழ்வை மகிழ்வுடன் ஏற்று, ஆதரிக்கவே வந்துள்ளார்கள் அதனால் தான் துவக்கை வெளியில் சாத்தி வைத்திருக்கிறார்கள் என நினைத்தேன். அதனைவிடவும் தும்பன் என்பவர் பபியின் பாடசாலையில் படித்தமையால் நட்பு இருந்தது. வெற்றி பபியின் திருமணத்திற்கு சின்ன மென்டிஸிற்கு துணையாக வந்திருந்தார். என் மனதில் எந்தவித அச்சமும் இவர்கள் பற்றி ஏற்படவில்லை. ஆனால் இவர்களால் இந்திய இராணுவம் பல தாக்குதல்களைச் செய்வார்களே எனப் பயந்தேன். முற்றத்தில் தோழர்கள் செந்தில், தேவராஜா, நவரத்தினம், சிவதாசன் எனப் பலரும் நின்றனர். சில மணி நேரத்தின் பின் அவர்கள் வெளியே வந்து துவக்குகளையும் காவியபடி சென்றனர். தோழர் தம் தோழர்களுடன் முற்றத்தில் போய்ப் பேசினார். பபி அழுதபடிஅவன்கள் கூட்டத்தை வைக்க வேண்டாம். “ஐயா நீங்கள் நல்லவர் தான் பொட்டரைப் போட்டதும் நாங்கள் தான். இது மேலிடத்து ஓடர். காட்டில இருந்து வந்ததுஎண்டுரான்கள் என பதறியபடி, “அவன்களுக்கு கலியாணம் எண்டால் மணவறையில தாங்கள் இருக்கவேணும், செத்தவீடு எண்டாலும் பாடையில அவங்களை போடவேணும் எண்டுறாங்கள்அது இது எனக் கத்தத் தொடங்கிவிட்டாள். கைக்குழந்தை சுபா நான்கு மாசமும் ஆகவில்லை. அவ கத்தியபடி இருந்தார்.

தோழர்களுக்கு முதலே சாப்பாடு கொடுத்திருந்தேன். தோழர் மட்டும் சாப்பிடவில்லை. எனக்கு பதட்டத்தில் ஒன்றும் ஏவவில்லை. “சாப்படுங்கோஎனக் கேட்கப் பயமாக இருந்தது. ஊரடங்கு வேளை, அதிகாலை அம்மையார் வந்து விடுவார்கள். அவர்களிடம் தோழர் சொன்னாராம்தொலைத்தொடர்பு வசதிகள் அற்ற நேரம் இது. நாட்டின் முக்கிய தேவை கருதியே இதனை ஏற்பாடு செய்தோம்.”அதிகாலை சிறீமாவோ அவர்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டு
விடுவார். கூட்டம் நிச்சயம் நடக்கும். “ஒருவேளை என்னை நீங்கள் சுட்டால் சிலவேளை அது தடைப்படலாம்என்றாராம். அதற்கே பொட்டரைச் சுட்ட கதையைச் தும்பன் சொன்னானாம். பபி இடியப்பத்தை வற்புறுத்தி இரண்டு வாய் தந்தைக்கு ஊட்டி, மாத்திரைகளும் கொடுத்தார். இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்காக நடத்தும் கூட்டத்திற்கான அனுமதியை அவர்களிடமே கேட்க வேண்டியதாக இருந்தது.

அதிகாலை எழுந்து தோழர் அனுமதி பெறுவதற்காக கிளம்ப ஆயத்தமானார். தோழரிடம் இருந்த இரண்டு வெள்ளை சேர்ட்டுகளில் ஒன்று கொஞ்சம் புதியது. மினுக்கியபடி இருந்த அதனை பபி கொண்டு வந்து கொடுக்க, இல்லை இது கூட்டத்திற்குப் போடவேணும், வந்து போடுகிறேன் என்றார். ஆட்டுப்பால் கோப்பியை வாங்கிக் குடித்துவிட்டு கிளம்ப ஆயத்தமாக இரவியும் சேர்ந்து கிளம்பினார். அவரைத் தடுத்த தோழர்நீங்கள் மைதானத்திற்குச் சென்று ஆயத்தங்களைக் கவனியுங்கள். நான் தனியச் செல்கிறேன்என்றார். பபியோ அழுது அடம்பிடித்து போட்ட உடுப்புடனேயே கிளம்பிவிட்டார். பாலூட்டும் தாய், குழந்தையை விட்டிட்டு செல்வதில் எனக்கு அதிக உடன்பாடு இருக்கவில்லை. நான் ஏதோ சொல்ல ஆரம்பிக்க முதலே அவள் கத்தி அழத் தொடங்கினாள். தந்தை ஒரு துவிச்சக்க வண்டியில் முன் செல்ல அவள் மற்றொரு துவிச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்தாள். அந்த ஆட்டுப்பால் கோப்பி தான் தோழரின் அன்றைய உணவு என்று தெரியாமல் மீண்டும் குசினியினுள் புகுந்தேன். வீட்டில் இருந்த தோழர்கள் கூடிப் பேசினர்.

பின் என்ன என்ன நடந்தது என்பது பற்றித் தொடர்வேன்....

48

இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்கான பொதுக்கூட்டம்

அன்று முழுமைக்கும் தோழரின் உணவு, அதிகாலையில் குடித்த ஆட்டுப்பால் கோப்பி தான் என்று தெரியாமல் மீண்டும் சமையலுக்காக குசினியினுள் நுழைந்து, வீட்டில் தங்கியிருந்த தோழர்களுக்கு உணவு தயார் செய்தேன்
என போன பதிவில் போட்டிருந்தேன்.

1978
ம் ஆண்டு வரை அனைத்து தேர்தல்களையும் பகிஷ்கரித்து, திருமதி சிறீமாவின் 1970 தொடக்கம் 1977 வரையான ஆட்சிக்காலத்தில் பதவி சுகம் அனுபவித்த என்.எம். பெரேரா, பீட்டர் கெனமன் போன்ற இடதுசாரி தலைமைகளின் தவறுகளை மிகக் கடுமையாக எதிர்த்து தோழர் போராடினார். ஆனாலும் 1977 தேர்தலில் SLFP யை கைவிட்டு UNP க்கு மாபெரும் வெற்றி ஏற்படும் வகையிற் செயற்பட்ட இடதுசாரி தலைமைகளின் தவறுகளால், பின்னர் திருமதி சிறீமாவின் குடியுரிமையை பறித்த UNP அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து 1982, 1988 ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி வேட்பாளர்களை இடது கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. அதிகாலையே தோழரும் மகளும் இருவேறு துவிச்சக்கரங்களில் சென்ற பின், வீட்டில் தங்கியிருந்த தோழர்களும் உணவுண்டு கூட்டம் நடைபெறும் பண்டத்தெருப்பு இந்துக்கல்லூரி மைதானத்திற்கு புறப்பட ஆயத்தமானார்கள். இதனிடையே தோழர் சிவதாசனுக்கும் உடல் நலமில்லை என தோழர் செந்தில் சொன்னார். தோழர் சிவதாசன் பின்னர் எங்கு சென்றார் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்தான் சிறிமா அம்மையாரின் பேச்சை தமிழில் மொழிபெயர்ப்பதாக இருந்தது.

இந்த நேரத்தில், ஐக்கியமும் போராட்டமும் என்ற தலைப்பில் பேராசிரியர் சி.சிவசேகரம் 1991இல் எழுதியது ஞாபகம் வருகின்றது .

“1977
க்குப் பின் UNP அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட பிரதான எதிர்கட்சி வேட்பாளர்களையும், 1983 பாராளுமன்ற கலைப்பு பிரச்சனையில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கை மீதான சர்வசன வாக்கு எடுப்பின் போதும் இடது கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைப்பாடு ஐக்கியமும் போராட்டமும் என்ற கொள்கைக்கு நல்ல நடை முறை விளக்கமாகவே இருந்தது. அண்மைக் கால நெருக்கடி மிகுந்த சூழலில் ஒன்றுபடுத்தக் கூடிய சகல சக்திகளிடமும் ஒன்று பட்டு செயற்பட்டதன் மூலம் கட்சி தனையும் தேசபக்த முற்போக்கு சக்திகளையும் பலப்படுத்தி கொண்டதன் காரணமாகவே இன்றும் தொடர்ந்து செயற்படக்கூடிய
நிலையில் உள்ளது. இதில் நண்பர் மணியத்தின் வாக்கெடுப்பின் போதும் இடது கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைப்பாடு ஐக்கியமும் போராட்டமும் என்ற கொள்கைக்கு நல்ல நடைமுறை விளக்கமாகவே இருந்தது. அண்மைக்கால நெருக்கடி மிகுந்த சூழலில் ஒன்றுபடுத்தக்கூடிய சகல சக்திகளிடமும் ஒன்றுபட்டு செயற்பட்டதன் மூலம் கட்சி தன்னையும் தேசபக்த முற்போக்கு சக்திகளையும் பலப்படுத்தி கொண்டதன் காரணமாகவே இன்றும் தொடர்ந்து செயற்படக்கூடிய நிலையில் உள்ளது. இதில் நண்பர் மணியத்தின் தலைமையும் முன்னுதாரணமான செயற்பாடும் மிக முக்கியமானது என்றே கருதுகின்றேன்”. மேலும், “எந்தவொரு கட்சி தோழரையும் விடத்தன்னை முக்கியமானவராகக் கருதாதவர் நண்பர் மணியம். கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி அதன் நேச சக்திகளுள் எவராயினும் தன்னை அபாயத்துக்கு உட்படுத்தி கொள்வதை அவர் விரும்பியதில்லை. புரட்சி என்றாலே கொலையும் வீண் இரத்தம் சிந்தலும் என்றும் பலரையும் கருத தூண்டும் ஒரு சூழலில், அனாவசியமான ஒரு உயிரிழப்பையும் விரும்பாத நண்பர் மணியம் மாக்ஸிஸ புரட்சியின் மனிதாபிமானம் மற்றைய கிளர்சிக்காரர்களது உலக நோக்கினின்று எவ்வாறு வேறுபடுகின்றது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுபுரட்சிக்கு உயிர் தியாகங்கள் அவசியமாகலாம், ஆனால் வீண் உயிர் இழப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டும்என்ற அவரது பார்வை மாக்ஸிஸ முதல்வர்களது பார்வையுடன் மிகவும் உடன்பாடானது. எதிரிக்கும் மக்களுக்குமிடையிலான முரண்பாட்டையும் மக்கள் மத்தியிலான முரண்பாடுகளையும் தெளிவாக இனங்கண்டு அதன் அடிப்படையில் உருவான இந்த மனிதாபிமானமே நண்பர் மணியத்துடன் கருத்து வேறுபாடுடையவர்களையும் அவர் மீது அபிமானமும் மதிப்பும் உடையவர்களாக்கியது.”

அந்த அடிப்படையிலேயே கட்சியின் முக்கிய பல உறுப்பினர்கள் பாதுகாப்பாக இருந்து, கட்சியையும் தேசபக்த முற்போக்கு சக்திகளையும் பலப்படுத்தி தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதற்காக அவர்களை இக்கூட்டத்துக்கு வரும்படி தோழர் அழைக்கவில்லை.” நேரம் ஓடிக்கொண்டிருந்தது. நானும் குழந்தை சுபாவும் பக்கத்துவீட்டு அகிலனின் தாயார் பேபியும் மட்டும் வீட்டில் இருந்தோம். குழந்தை சுபா தாயின் பாலுக்காக அழுதபடி இருந்தார். பால்மா கிடைப்பது கடினம். அதை நாங்கள் பழக்கவும் இல்லை. நெல்லுப் பொரி தண்ணீரை, செறிலாக்கை கொடுத்தபடி இருந்தேன். அழுதழுது முகம் சிவந்து வீங்கியிருந்தது. மதியம் கடந்த நிலையில் பபி வந்தார். “அப்பா என்னை வரவேண்டாம் எனச் சொல்லிவிட்டு தனியே போய்விட்டாரம்மாஎனக் கேவினாள். அவளிடம் பல கேள்விகளைக் கேட்டேன்.

*
நேராக சில்லாலையிலுள்ள இந்திய இராணுவ முகாமில் கூட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு பண்டத்தெருப்பு மகளிர் கல்லூரிக்கு செல்லவும் நேரம் சரியாக இருந்ததாம். (அங்குதான் 2 ஹெலிகள் இறங்கியது). முதல் ஹெலியில், பின்னர் சந்திரிகா அரசின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த திரு. ரத்வத்தையும், வேறு பாதுகாப்பாளர்களும் வந்தார்களாம். அவர்களை திரு. ஆழ்வார்பிள்ளை கந்தசாமி வரவேற்றாராம்.

இரண்டாவது ஹெலியில் திருமதி சிறிமாவுடன் திருமதி லெனரோல் வந்திருந்தாராம். இந்த நேரத்தில், திருமதி லெனரோலை முன்னர் நான் சந்தித்தது ஞாபகம் வருகின்றது. 1963 ஆம் ஆண்டுமுற்போக்கு மாதர் அணிஎன்ற பெயரில் ஒரு பெண்கள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அதற்கு கொழும்பு தாய்ச் சங்கத்தில் இருந்து திருமதி லெனரோல், திருமதி தேஜோ குணவர்த்தன, செல்வி நாணயக்கார, இன்னும் சிலரை உள்ளடக்கிய குழுவொன்று யாழ் வந்து, இங்கும் ஒரு கிளையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. அதற்கு திருமதி உருத்திரா கந்தசாமி தலைவராகவும், திருமதி தங்கம் கந்தஞானியார் செயலாளராகவும், என்னை உப செயலாளராகவும், செல்வி சந்திரகாந்தி சீனிவாசகம் அவர்களை தனாதிகாரியாகவும் தெரிவு செய்து இன்னும் ஐந்து பேரை செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமித்தனர்.

** திருமதி சிறீமாவை வரவேற்றது திருமதி கலாலட்சுமி தேவராஜாவும் அவர்கள் மகன் ஜனமகனும், அவர்கள் உறவுச் சிறுமி ஒருத்தியும் ஆவர் கலாலட்சுமி தனது துணைவர் சோ. தேவராஜாவுடன் புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். 1966 கடைசியில் எனக்கு , காரைநகரிலிருந்து, பண்டத்தெருப்பு பனிப்புலம் என்ற கிராமத்துக்கு மாற்றல் கிடைத்து, நிலையத்திற்கு அருகில் நான் வாடகைக்கு எடுத்த வீடு, கலாலட்சுமியின் அம்மா திருமதி. தங்கம்மாவினுடையது. கலாலட்சுமியை சிறு வயது முதல் அறிவேன்.

** பின் இந்திய இராணுவத் தளபதி கல்கத், திருமதி சிறீமாவை சம்பிரதாயபூர்வமாக சந்தித்துப் பேசினாராம். இதன் ஒலி / ஒளி காட்சி யூரியூப் இணைப்பில் உள்ளது. பகுதி 1 https://www.youtube.com/watch?v=I1gnfvz18l0

திருமதி சிறீமாவின் பாதுகாப்புக்கருதி இந்திய இராணுவ வாகனங்களை பயன்படுத்தாமல், சிறிய காரில் திருமதி லெனரோல் ஒருபுறமும் திருமதி கலாலட்சுமி மறுபுறமும் இருந்து திருமதி சிறீமாவை பாதுகாப்பாக பண்டத்தெருப்பு மகளிர் கல்லூரியில் இருந்து பண்டத்தெருப்பு இந்துக்கல்லூரி மைதானத்திற்கு தோழருடன் சேர்த்து அழைத்து வந்தனராம். திரு. குமார் பொன்னம்பலம் உட்பட பலர் உரையாற்ற வந்திருந்த போதிலும் சில பிரச்சனைகள் காரணமாக திருமதி சிறீமா அம்மையாரும் தோழருமே பேசினார்கள். திரு. மோதிலால் நேரு, திருமதி சிறீமாவின் உரையை மொழிபெயர்ப்பு செய்திருந்தார். தோழர் சோ.தேவராஜா, திருமதி லெனரோல், திரு. குமார் பொன்னம்பலம், திரு. ரத்வத்தை திரு. ஆழ்வார்பிள்ளை கந்தசாமி எனப் பலரும் மேடையில் இருந்தனராம்.

**தோழர் தனது தலைமைப் பேச்சில் , “தமிழ் மக்களின் பிரச்சனை எது? எப்படி தீர்வு காணவேண்டும் என்று போராடும் அனைத்து சக்திகளுடனும் ஒன்றுபட்டு நிற்கிறோமே தவிர சொந்த அபிலாசைகளுக்காகவோ வேறு எதற்காவோ நாம் இங்கு நிற்கவில்லை. சிறிமாவோ பண்டரநாயக்கா இந்த ஒப்பந்தத்தை, இந்திய இராணுவத்தை அகற்ற முயல்வார் என்று நம்புகிறோம்என்று உரையாற்றினார்.
இதன் ஒலி / ஒளி காட்சி யூரியூப் இணைப்பில் உள்ளது. பகுதி 2 (https://youtu.be/pdL3Gnucs2U*)
பல நூற்றுக்கணக்கான மக்கள் அந்த மைதானம் முழுமையும் நிறைந்திருந்தனராம். நான் ஆட்சி அமைத்தவுடன் முதலில் இந்திய இராணுவத்தை வெளியேற்றுவேன் என திருமதி சிறீமா சொன்ன போது மக்களின் கரவொலி சுற்றி நின்ற இந்திய இராணுவத்தினரை திகைப்படைய வைத்திருக்கும் என்றால், அந்தளவு தூரம் மக்கள் துன்பங்களைச் சுமந்தார்கள்.

** கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பின்னர், பிரச்சனையை அறிந்த திருமதி சிறீமா தன்னுடன் ஹெலியில் கொழும்புக்கு வரும்படி அழைத்தாராம். தோழர் மறுத்துவிட்டார்.

** இந்திய இராணுவம் தோழரிடம் தாங்கள் அவருக்கு பாதுகாப்பு தருவதாக கூறியபோது, “உங்களை வெளியேற்றவே இந்தக்கூட்டம் நடைபெற்றது. என்னை நானே பார்த்துக்கொள்கிறேன்எனச் சொல்லி அகன்றாராம். இதன் ஒலி / ஒளி காட்சி யூரியூப் இணைப்பில் உள்ளது. (பகுதி 3 https://www.youtube.com/watch?v=K2KVpoHA0CU)

இவையெல்லாவற்றையும் பார்த்த பபி தனித்து பின் நகர்ந்தே நின்றிருக்கிறார். நீண்ட நேரத்தின் பின்னரே இரவி வந்தார். மிகவும் சோர்ந்திருந்தார். பபியிடம் எல்லாம் விசாரித்து அறிந்ததால் நான் எதுவும் கேட்கவில்லை. இரவு தோழர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் எமக்குத் தெரியவில்லை. வீட்டின் வெளியே நாய்களின் ஓலம் மட்டும் கேட்டபடி இருந்தது. அடுத்த நாள் காலை அறிமுகமற்ற ஒருவர் வந்து தோழரை விசாரித்தார். எமக்குத் தெரியாது என்றதும் தெரிந்தால்
எமக்குத் தெரியப்படுத்துங்கள் என்றார். இரண்டாம் நாள் சாயந்தரம் அவரது கடிதம் ஒன்றை அவரது பொதுவான நண்பரான பவளம் என்பவர் கொண்டு வந்தார். அவர்களது வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் மாற்றுடை வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது. அவர் தலைமறைவாக இருந்த வீட்டுப் பையன் புலிகளின் அணியைச் சார்ந்தவர். தோழர் மீதிருந்த மரியாதையும். அன்பும் அவரைக் காப்பாற்றியது. பின் பபியும் அகிலனுமாக ஒழுங்கைகள் மாறி மாறிச்
சென்று பார்த்து வந்தனர். இதனிடையே ஒரு தடவை தும்பன் மீண்டும் வந்து விசாரித்தார். ஒன்பது நாட்கள் கடந்தபின் தோழர்கள் அவரைத் கட்சித் தோழரின் உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து கொழும்பு செல்ல முடிவெடுத்தார்.

தொடர்வேன்....

49

விடுதலையான மகனைச் சந்தித்தேன்

1988 மார்கழி ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முடிந்தபின், இலங்கை தேர்தல் வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்வாக சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு ஒரு தேர்தல் அதிகாரியாவது அனுப்பிக் கொள்ள முடியவில்லை. பிரேமதாச 50.43% வாக்குகளைப் பெற்றதினால் ஜனாதிபதியாக 1989.01.02ம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

புலிகளின் எதேச்சாதிகார நடவடிக்கைகள் காரணமாகபவளம்என்ற சில்லாலையில் வாழ்ந்த ஒரு நண்பரின் வீட்டில் தோழர் போய்த் தங்கியிருந்தது பற்றி சொல்லியிருந்தேன், (பவளத்தின் மருமக்களாகிய இரண்டு தம்பிகளில் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளராக இருந்தவர்.) அந்த இடத்தில் தனது சைக்கிளையும் வைத்துவிட்டு பாதுகாப்பாக இருந்தார். தகப்பனைத் தேடிப்போன மகள் பபி தனது மூன்றரை மாத கைக்குழந்தைக்காக வீட்டிற்கு வந்து விட்டார். இருந்தாலும் தனது தந்தையின் நோய்வாய்ப்பட்ட உடல்நிலை கருதிக் கவலையுடன் இருந்தார்.

கட்சித் தோழர்கள் தங்கள் தோழரைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்று விரும்பினர். அதன்படி தோழர் தேவராசா அவர்கள் தனது நெருங்கிய உறவினரான சற்குணம் என்பவரது ஆனைக்கோட்டை வீட்டில் தங்கவைத்து சில நாட்களின் பின்னர் கொழும்புக்கு அனுப்பி வைத்தனர். தோழர் கொழும்பில் மிக வசதி குறைந்த ஒரு லாட்ஜ்சில் தங்கியிருந்தார். பின் இராமகிருஷ்ண மிசனில் சில நண்பர்களின் உதவியால் நாளாந்த கட்டணத்தின் அளவை விட குறைந்த பணத்தில் தங்கியிருந்தார். அந்நேரம் தோழர்களான .ரி. மூர்த்தி (செங்கொடிச் சங்கம்), கதிரவேலு (அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தந்தை. என் உடன் பிறவா சகோதரன்), . தம்பையா, . குலேந்திரன், ஆழ்வார்பிள்ளை கந்தசாமி போன்றோர் மிகவும் ஆதரவாக இருந்தனர்.
இந்த வேளையில் மாலைதீவு சிறைச்சாலையிலிருந்து இராசரின் நெருங்கிய நண்பரும் என் அயல் வீட்டில் வாழ்ந்தவருமான திரு ராகவன் (RR) என அழைக்கப்பட்ட வேலாயுதம் நல்லநாதர் என்பவரிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது. இவரின் அரசியல் கருத்தியலில் முரண்பாடு இருந்தபோதிலும் இவர் மீது அளவுகடந்த அன்பையும் அக்கறையையும் தோழர் காட்டினார். அவரைப் பற்றிய விபரம் தெரியாமல் தவித்த அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும், அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பது ஆறுதல் அளித்தது. கொழும்பு சென்று அவர் பட்ட கஷ்டங்களில் சிலதையே தோழர் சொல்லியிருக்கிறார். சிலது தோழர்களும், நண்பர்களும் சொன்னவையே.

திவ்வியராஜா சென்று பார்த்துபுது வரலாறும் நாமே படைப்போம்பாடல்களைப் பாடியும், நாட்டு நடப்புகள் பற்றியும் பேசியதாக பின்னர் சொன்னார். பல தோழர்கள் சந்தித்துச் சென்றனர். உமாமேஸ்வரன் இராமகிருஷ்ண மிஷன் மண்டபம் வந்து பேசிக்கொண்டு இருந்தபோதே தீராத வலியை உணர்ந்திருக்கிறார். 1988 நவம்பர் மாலைதீவில் மரணித்த மற்றும் கைது செய்யப்பட்ட இராசரின் தோழர்கள் வசந்தி (மணிவண்ணன்- வடலியடைப்பு) , ராகவன் (RR) மற்றும் பலர் பற்றியும், மற்றும் அரசியல் நிலவரங்கள் பற்றியும் வலியை மறைத்தபடி பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அன்றிரவு ஏற்பட்ட சுகவீனத்தைத் தொடர்ந்து, கொழும்பு குமரன் இரத்தினம் ஆஸ்பத்திரியில் இராமகிருஷ்ண மிஷன் நிர்வாகத்தினரால் சேர்க்கப்பட்டார். அதன் பின்னர் Dr. இராமச்சந்திரா அவர்களின் ஆலோசனைப்படி கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். கீர்த்தி பல்கலைக்கழகம் மூடியிருந்த நாட்களில் கொழும்பில் எனது நண்பி இரஞ்சித்தின் மகன் சுதா, இன்னும் சிலருடன் தங்கியிருந்தார். அதனால் தந்தையை அவர் அருகில் இருந்து பார்த்துக்கொண்டார்.

நானும், மகள் பபி குடும்பமும் பல சிரமத்தின் மத்தியில் அவசரமாக கைக்குழந்தையுடன் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றோம். அதை இப்போ நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கனப்பதால் கண்ணீர் தான் வழிகிறது. வெள்ளவத்தையில் உள்ள சிவநேசன் அண்ணை குஞ்சு வீட்டில் தங்கி கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அவரைச் சென்று பார்த்தோம். என் நண்பியான குஞ்சு அந்நேரம் செய்த உதவியை இன்றும் நினைத்துக் கொள்கிறேன். இராசர் இந்தியாவில் இருந்தார். இதனிடையே கீர்த்தியை தோழர் தேவராஜா இந்தியாவிற்கு புத்தக வெளியீடும் சமூக விஞ்ஞான தொடர்புகளுக்காவும், இன்னும் சொல்லப் போனால் கீர்த்தியை ஊக்குவிப்பதற்குமாக அனுப்பியிருந்தார். இராசரும் இந்தியாவில் மீண்டும் இயக்க உறவுகளால் பிணைந்தும் இருந்தார்.

சென்னையில் பபியின் நண்பியான வதனியின் பண உதவியுடன் இராசரை பங்களாதேசுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை கீர்த்தி செய்துவிட்டு ஊர் திரும்பியிருந்தார். ஆனாலும் ஒரு சில நாட்களில் இராசர் கொழும்புக்கு வந்து விட்டார். “ஏன்எனக் கேட்டபோது? தந்தையின் சுகவீனம் அறிந்ததாகவும், அதனால் வந்ததாகவும் குறிப்பிட்டார்.
முதலில் வெள்ளவத்தை, குஞ்சு வீட்டில் தங்கிப் பிறகு வைத்தியசாலைக்குச் சென்றோம். அங்கு தங்கி வைத்தியம் செய்வித்த சிங்கள நோயாளிகள்சின்னக் குழந்தையைஇப்படியான நோயாளர் வார்ட்டுக்கு கொண்டுவரக் கூடாதென ஆலோசனை கூறினார்கள். குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வதை அங்கு இருந்த தாதியர்கள் விரும்பவில்லை. ஆனாலும் அங்கு தங்கியிருந்த நாட்களெல்லாம் அவளையும் அழைத்துச் சென்றோம். தோழர் குழந்தை சுபா மீது தீராத பாசம் வைத்திருந்தார். முதல் பேத்தியல்லவா? பணக்கஷ்டம், மனக்கஷ்டம் எம்மை வாட்டியபோதும் அக்குழந்தை பல ஆறுதலைத் தந்தது. வீட்டிலிருந்த வேளைகளில் அவளுடன் நேரத்தைச் செலவிட்டார் அதையெல்லாம் திடீரென வலிந்து பறித்தது போலாயிற்றுது.

இதற்கிடையில் கொழும்பில் வைத்தியம் நடந்த வேளையில்கிரிலப்பனையில் தங்கியிருந்த இளையமகன் கீர்த்தியை போலீஸ் கைது செய்தது. அந்தக் காலகட்டத்தில் சுற்றி வளைத்து இளைஞர்களைக் கைது செய்கிற ஒரு செயலும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனைத் தோழர் மணியம் அவர்கள் கனவிலேயே கண்டு விட்டுச் சுற்றி இருந்தவர்களுக்கு கூறினாராம். பின்னர் திரு. அழகரத்தினம் அவர்களின் சிபாரசின் பேரில் கீர்த்தி விடுவிக்கப்பட்டாராம். ஆஸ்பத்திரி வைத்தியத்திற்குப் பிறகு தோழரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்திற்கு மாற்றிக் கொண்டு வந்தோம். இந்த வேளையில் இந்தியாவிலிருந்து இராசனும் வந்து எங்களுடன் இணைந்து கொண்டார். உணவை குஞ்சுவும், .ரி. மூர்த்தி தோழரின் துணைவியார் வசந்தியும் தயாரித்துத் தந்துதவினார்கள். சுனித்தாவும் அவருக்கான காலை உணவைத் தருவார். எங்களுடைய உணவைசாந்தி விஹார்உணவகத்தில் மனேஜராக இருந்த ஆழ்வார்பிள்ளை கந்தசாமி தந்து உதவினார் அந்த உதவிக்கு எந்தவகையில் நன்றி சொல்லித் தீர்ப்பது? தங்கியிருந்த இராமகிருஷ்ண மண்டப அறையில் மனம் முழுவதும் கவலையும் எதிர்காலமே கேள்விக்குறியான நிலையில், குலேந்திரன் தனது கமராவால் சில படங்களை எடுத்தார்.துன்பத்தின் நடுவில் தத்தளித்த வேளையில் நாம் அனைவரும் சேர்ந்திருந்தோம். மிசனில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சரத்பாபு குடும்பத்தைச் சந்தித்தோம். நிச்சயமாக அவர்கள் பற்றி நான் பகிர வேண்டும்.

தொடர்வேன்..

50

வைத்தியம் செய்ய இந்தியா செல்ல மணியம் மறுத்தார்

இராமகிருஷ்ண மிசனில் வேலை பார்த்த கணக்குப் பதிவாளரின் ஒத்துழைப்பால், மிகக் குறைந்த கட்டணத்தில் சத்தியமனையின் ஏழு பேரும் தங்கியிருந்தோம். இராசர், கதவிற்கு வெளியில் படுப்பார். தோய்த்த உடுப்புகளைக் காயப்போட மேல்மாடிக்கு செல்லும் போது 40-42 வயது மதிக்கத்தக்க பெண் கவலையான முகத்துடன் இருப்பார். இருவரும் பேச ஆரம்பித்தோம். ஒரே மகன் கொன்றது யார் என சரியான அடையாளப்படுத்தலின்றி, மகனைப்பிரிந்த வலியை சுமந்தபடி இடம்பெயர்ந்து அங்கு இருப்பதை அறிந்து கொண்டேன். சரத்பாபுவின் தந்தை ஓர் ஓவியர். கலப்புத் திருமணத்தால் தனித்து வாழ்ந்திருந்தனர். நாங்கள் தோழருக்கு உடல்நலம் ஓரளவு சுகம் அடைந்ததும் யாழ்ப்பாணம் வர எத்தனிக்க, என் கையில் சிறிது பணத்தைப் பொத்தினார். ஐயோ பிள்ளை உமக்குத் தான் பிள்ளையும் இல்லை, கணவரும் இல்லை வேண்டாம் எனச் சொல்லியும், உங்கள் கணவர் போல மக்களுக்காக வாழும் மனிதர் நீண்டகாலம் வாழ வேண்டும் என அத்தாய் உதவினார். அவர் பகிர்ந்த சிலதை அவர் அனுமதி இன்றி சொல்லமுடியாததால் அவற்றைத் தவிர்க்கிறேன். புலிகளின் அச்சுறுத்தலும், நடமாட்டமும் யாழில் குறைந்ததாக கட்சித் தோழர்கள் செய்தி அனுப்பியதால் மீண்டும் சத்தியமனைக்கு வந்தோம்.

கீர்த்தியும் கண்டிக்குப் போக, இராசரும் பங்களாதேசுக்குப் புறப்பட்டார். யாழில் இருந்த போது மீண்டும் தோழரின் உடல் நிலை பாதிப்படைந்தது. யாழ். பெரியாஸ்பத்திரியில் Dr. சிவகுமாரன் அவர்களிடம் வைத்தியம் செய்விக்கப்பட்டது.
யாழ். பெரியாஸ்பத்திரியில் வைத்தியம் நடந்த வேளையில் செல்வி சுசித்திராவும், செல்வன் புவீந்திரனும், வேறு இரண்டு தோழர்களும் இரத்ததானம் செய்தனர். யாழ். வைத்தியசாலையில் தோழர் சிகிச்சை பெற்றிருந்த காலத்தில் மல்லிகை டொமினிக்ஜீவா மற்றும் பழைய கட்சித் தோழர்களும், எமது யாழ்ப்பாணத்துத் தோழர்களும் சென்று பார்வையிட்டனர். உணவு இருபாலை தோழர் பாலனும், தோழர் நவரத்தினமும் மனைவி சந்திராவும் கொண்டு வருவார்கள்.

மீண்டும் சத்தியமனைக்கு வந்த நேரம் தோழர் வீ. கந்தசாமி அவர்கள் சத்தியமனைக்கு திடீரென வந்தார். ஒரு காலத்தில் மிக மிக நெருக்கமாக இருந்த தோழர்கள் அவர்களிருவரும், கொள்கை முரண்பாட்டினால் மிக நீண்டகாலம் உறவறுந்திருந்தனர். தோழர் விறாந்தையில் படுத்திருந்தார். எழ எத்தனிக்க தானும் நிலத்தில் அமர்ந்து தோழரின் கைகளை பொத்திப்பிடித்துக் கொண்டு, “இந்தியாவில் வைத்தியம் செய்வதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். போகலாம்என்றார். வழமையான புன்முறுவலுடன் தோழர், “அவர்களின் அத்துமீறல்களை கண்டித்தபடி தான் இயங்குகிறேன். உங்கள் அக்கறைக்கும், வருகைக்கும் நன்றிஎனக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார். ‘கொள்கையற்ற நடைமுறை குருட்டுத்தனம், நடைமுறையற்ற கொள்கை மலட்டுத்தனம்என தோழர் வீ. இற்காக பல ஆண்டுகளுக்கு முன்னர் வளையில் எழுதியதை நினைத்துக் கொண்டேன். இப்படியாக இரண்டு மாதங்கள் கழிந்தபின் 1989 ஆண்டுமேதினம் ஸ்டான்லி றோட்டிலுள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் தோழர் மணியத்தின் தலைமையில் நடாத்தப்பட்டது.
நிச்சாமத் தோழர்களுடன் ஒரு லொறியில் குழந்தையையும் சுமந்தபடி சென்றோம். சுத்திவர இந்திய இராணுவம், தோழரது உரை அவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாகவே இருந்தது. அதன் இணைப்பை இங்கே பகிர்கிறேன்.

இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், விடுதலைப் புலிகள் என மூன்று ஆயுதங்களும் அச்சுறுத்தலாக இருந்தது. தேசத்தின் ஒற்றுமையைப் பேச உரிமை மறுக்கப்படுகிறது. அடுத்தநாள் காலை அச்சத்துடன் விடிந்தது... (https://youtu.be/wmGqCkBRj4w)

தொடர்வேன்….

கே. . சுப்பிரமணியம் மருத்துவமனையில் கடும் சுகவீனமுற்று இருந்து வெளிவந்து , யாழ் / ஸ்டான்லி வீதியில் 1989-05-01 மேதினத்திலன்று............... 01 May 1989

பிரேமதாசா அரசு, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறதென்றால், நாம் ஏற்கனவே கூறிய உண்மைஉண்மைதான்என்பதை அதன் மூலமாக விளங்கிக் கொள்ள முடியும். நாம் பேச்சு வார்த்தையை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம் அது பூச்சாண்டியாக அமையக்கூடும். அது உண்மையாக இரு இனங்களும், எமது
நாட்டில் சுதந்திரத்துடனும், இறையாண்மையுடனும் வாழக்கூடியதாக ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் ஏற்ற வழி அமைக்கப்படவேண்டும் அதற்கு முன்பாகவே, வெலியோயா தனி மாவட்டமாக அமைப்பதைக் கைவிட வேண்டும். அத்தோடு கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பைத் தற்காலிகமாக நிறுத்தி,
ஏன் முற்றாகவே கைவிட வேண்டும் என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) வலியுறுத்தி நிற்கிறது. இதன் மூலம் தான் பேச்சு வார்த்தைக்கு போகக் கூடிய ஸ்தாபனங்களுக்கும், மக்களுக்கும் நம்பிக்கையைத் தரும். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தையை நடாத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகமுடியும். இதனை விடுத்து இலங்கை அரசின் விருப்பத்தின் பேரிலோ, இந்திய அரசின் விருப்பத்தின் பேரிலோ, ஒருதலைப்பட்ச முடிவுகளின் பேரிலோ ஏற்படுத்தப்படக்கூடிய தீர்மானங்களும், முடிவுகளும், ஆயுதங்களும் எமது தேசத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியாது. இதுவே எமது நிலைப்பாடாகும். நாம் இந்தியாவின் தலையீட்டை ஆரம்பம் தொட்டு எதிர்த்து வந்திருக்கின்றோம். இலங்கை அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் என்ற காரணத்தினால், சில விட்டுக் கொடுப்பை இலங்கை மக்கள் செய்ய வேண்டும். அந்த விட்டுக்கொடுப்பு, இந்தியாவையும் இணைத்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை. இந்தப் பேச்சுவார்த்தை இலங்கை அரசு, இந்திய அரசு, ஏனைய விடுதலை அமைப்புகள் மூன்றும் ஒன்று கூடிக் கதைத்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய, வெற்றி காணக் கூடிய முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும், அதை விட்டு ஒன்றிற்கொன்று கழுத்தறுப்பு வேலைகளைச் செய்வது, எமது நாட்டிற்கும், மக்களுக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். இந்தியா
பற்றிய எமது நிலை ஏற்கனவே நீங்கள் அறிந்ததே, இருந்தும் சிலதைத் திரும்பச் சொல்ல வேண்டும். ஆரம்பம் தொட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பீட்டர் கெனமன், விக்கிரமசிங்க போன்றோர் தலைமையிலும் சரி, பின்னர் கருத்துவேறுபட்டு பிரிந்த பின் எமது கட்சினரும் சரிஅந்நியத் தலையீடுபற்றி எச்சரித்தே வந்திருக்கின்றது இதனை இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள், விடுதலை இயக்கங்கள் கவனத்தில் கொள்ளத் தவறி விட்டன. 1983 இனக்
கலவரத்தைச் சாதகமாக்கி இந்தியா தன்னுடைய விஸ்தரிப்பை ஆரம்பித்தது. அதனை இலங்கை அரசும் ஆதரிப்பது போன்றே நடந்து கொண்டது. ஒப்பந்தம் உருவானது. இது பல வகையிலும் குழப்பமான ஒன்றாகவே உள்ளது. சில விஷயங்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கும் எதிர்காலத்திற்கும் உதவக்கூடிய சில அம்சங்கள் உள்ளன. ஆனால் ஒப்பந்தத்தில் காணப்படும் பெரும்பான்மையான விடயங்கள்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சகல இலங்கைமக்களையும்
பாதிக்கக் கூடியதே. இதனை எதிர்க்க வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும்.”

1989 மே 1 அன்று தோழர் கே.. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தோழர் எஸ். தேவராஜா உரை ஆற்றிய பொழுது

51

கடைசி சந்திப்பு

தொழிலாளர்களின் உரிமையை இரத்தம் சிந்தி, வெள்ளைக்கொடி சிவப்பான நாளை மேதினம் என உலகம் முழுவதும் கொண்டாடுவர். அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அதிகமாக இடம்பெறவில்லை. கட்சி அக்கூட்டத்தை சிறப்பாகச் செய்திருந்தது. அக் கூட்டமும் தோழர்களின் உணர்வும் மணியம் தோழருக்கு மிகுந்த நிறைவையும் நம்பிக்கையையும் தந்தது. மதியம் கடந்து வீடு திரும்பியிருந்தோம். அதிகாலை தோழர் செல்வநாயகம் அவசரமாக வந்து, “ பி ஆர் எல்
எப் ஐச்சேர்ந்த தோழர் நடு இரவு வந்துதோழர் மணியத்திற்கு ஆபத்து. தொலைபேசி உரையாடலை இடைமறித்துக் கேட்ட மலையாள இடதுசாரியம் சார்ந்த இராணுவ சிப்பாய் சொன்னார்.” என்றாராம். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், விடுதலைப் புலிகள் என அனைத்து ஆயுத முகாந்திரங்களும் அச்சுறுத்தலாகவே இருந்தன. தோழர்கள் சிலரும் வந்துவிட்டனர். யாழில் நடைபெற்ற கூட்டத்தில் தான் சொல்ல வேண்டிய கருத்தைப் பதிய வைத்ததையும், தோழர்களின் உணர்வையும் சுமந்தபடி அவர்களின் வற்புறுத்தலால் உடனடியாக சத்தியமனையிலிருந்து தோழர் வெளியேறினார்.
தோழர் தேவர், மகன் கீர்த்தி கண்டியிலுள்ளதங்கொல்லஎன்ற இடத்தில் ஒரு முஸ்லீம் சகோதரி நடாத்திய விடுதியில்
சேர்த்தனர். அந்த வீட்டில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் அங்கு தங்கி இருந்தனர். அவர்கள் ஞானசோதி, சுரேஷ் என்ற நண்பர்களாவார்கள். அவர்கள் தாங்கள் தங்கி இருந்த அறையைக் கொடுத்து உதவினார்கள். ஊரிலுள்ள பக்கத்து வீட்டுத் தம்பி அகிலனையும் கண்டியில் உள்ள ஒரு பாடசாலையில் சேர்த்து அவரும் இவர்களுடன் தங்கொல்லை வீட்டிலேயே தங்கினார். அவர் மீது தோழர் மிகுந்த அன்பை வைத்திருந்தார். அவரது கல்வி வளர்ச்சியை ஊக்குவித்தபடி இருந்தார். அதன் பின்னர் கண்டி பெரியாஸ்ப்பத்திரியில் Dr. Thilak Abeysekera அவர்களிடம் வைத்தியம் செய்விக்கப்பட்டது.

யாழ். சுளிபுரத்திலிருந்த மகள் குடும்பமும், நண்பர்களும் மாறி மாறி வந்து பார்த்துச் சென்றனர். அதே போல கட்சித் தோழர்களும் வந்து பார்த்து ஆலோசனகளைப் பரிமாறிச் சென்றனர். தனது முதல் பேத்திக்குரிய ஒரு அழகான சட்டையை , அந்த வீட்டுக்காரப் பெண்மணி மூலம் தைப்பித்து வைத்திருந்தார், குழந்தையுடன் பெற்றாரும், அவர்களுடன் மிக அன்பாக இருந்த புஷ்பம் என்ற சகோதரியுடன் கண்டி, தங்கொல்லை சென்றடைந்தார்கள். கண்டிப் பேராதனைப் பூங்காவுக்குச் சென்ற போது சுரேஸ் எடுத்த படங்கள் நினைவுகளாய் உள்ளது. அங்கு தங்கியிருந்த வேளையில் பல தோழர்கள் சென்று சந்தித்துப் போவார்கள். இப்படியே ஐந்து மாதங்கள் கழிந்து போயின. கண்டி, தங்கொல்லையில் தனது தந்தையாரை வைத்துப் பராமரித்துக் கொண்டிருந்த கீர்த்திக்குறோயிங்என்ற படவரைதல் பாடத்தை கீறி முடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அங்கும் ஒருநாள் உடல் நிலை மோசமடைந்ததால், ஞானசோதி, சுரேஷ் என்ற நண்பர்களால் கண்டி பெரியாஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அந்தகாலத்தில், மூத்தவர் இராசர் மலேசியா சென்றிருந்தார். மலேசியாவில் விஜயகுமாரி, பூபாலன் அவர்களது இல்லத்தில் தங்கியிருந்தார். ‘விசாசம்பந்தமாக அடிக்கடி சிங்கப்பூர் சென்று வரும் இராசர் அங்கு ஒரு ஆலயத்தில் தங்கையா மகேஸ்வரி என்ற பெண்ணைச் சந்தித்தார். அவர்களின் உதவியுடன் தகப்பனுக்கு ரூபா 10,000/=த்தை
கண்டிக்கு அனுப்பி வைத்தார்.

1989 நவம்பர் 1ம் திகதி கொழும்பு நூலகத்தில் இடம்பெற்ற மக்கள் சீனப்புத்தகக் கண்காட்சியில் தனது பழைய தோழர்கள், நண்பர்களுடன் மிகவும் உற்சாகமாகச் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் மேலாக நின்ற நிலையிலும், நடந்து கொண்டும் கதைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டு தான் அதிசயப்பட்டதாக அகிலன் கூறியிருந்தார். அன்றைய தினம் தம்பி தேவருடனும் இணைந்து எடுத்த படங்கள் உயிர்ப்பாக உள்ளன.

1989 நவம்பர் நடுப்பகுதியில் நானும் யாழ்ப்பாணத்தில் இருந்துதங்கொல்லசென்றேன். அந்நேரம் JVP 1987-1989 கிளர்ச்சி நடந்த வேளை. நடைமுறையற்ற கொள்கையும், கொள்கையற்ற நடைமுறையுடன் தமிழ் பிரதேசங்களில் நடைபெற்ற செயல் போலவே இங்கும் நடந்தது. இதனால் இராணுவம் தன் அதிகாரங்களை பொதுமக்கள் மீது அவிழ்த்து விட்டனர். அதிலும் சிங்கள மக்கள் மிகுந்த துன்பத்தை இருசாராரிடமிருந்தும் எதிர்நோக்கினர். நாங்கள் சத்தியமனையில் இருந்த காலம் வரை எம்மிடம் எந்தவிதமான செய்திப் பரிவர்த்தனை,வானொலி, தொலைக்காட்சிப் பெட்டி உபகரணமும் இருக்கவில்லை. அவசியமான நாட்களில் மட்டும் இரவி தன் வீட்டிலிருந்து எடுத்து வருவார். முன்னர் 1972 ஆண்டு சில்லையூர் செல்வராஐன் ஒரு வானொலியை தந்திருந்தார் . ஆனால் அது பல தடவை பழுதாகி தோழர் மான் முத்தையாவின் மகன் மோகன் பல தடவை இலவசமாக திருத்தி தருவார். இறுதியில் வானொலி செயற்பட முடியாத நிலைமைக்கு வந்துவிட்டது. கண்டி விடுதியில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அதில் ரோகண விஜயவீராவின் கொலையை (1989.11.13 ) அறிந்திருந்தார். அது பற்றிய ஒரு குறிப்பையும் எழுதியிருந்தார். நாயகன், பகல்நிலவு படங்களை நானும் அவருடன் சேர்ந்து தொலைக்காட்சியில் பார்த்தோம். அங்கு இரு சிறு குழந்தைகள் இருந்தன. அவர்கள் தோழருடன் வந்து விளையாடுவார்கள். ஒருநாள் மருந்து வாங்க சென்ற வேளை அருகில் இருந்தலக்ஸ்மன் ஸ்ரூடியோவுக்குச் சென்று போட்டோ பிடித்துக் கொண்டோம்.

தான் நூறு ஆண்டுகளுக்கு அதிகமான நாட்கள் உயிர் வாழ்வேன் எனச் சொல்லி வந்த தோழர் தனது இறுதி நாட்களை நெருங்குவதை உணர்ந்து கொண்டார் போலும். இரண்டு நாட்களின் பின்னர் ஊருக்கு வர நான் புறப்படும் வேளையில் என்னைஊருக்குப் போக வேண்டாம்என, தோழர் தடுத்தார். இதுவே தோழருடனான கடைசிச் சந்திப்பு என எனக்குத் தெரியாது. எனக்கோ மனம் முழுவதும் கைக்குழந்தை, வயிற்றில் மற்றக்குழந்தை, மாரி மாதக் கிணறு, காலையில் கற்பிக்க ஆறுமுக வித்தியாசாலைக்குப் போய்விடும் இரவி இவை எல்லாவற்றையும் நினைக்கும் போது ஒரே மனக்
கலக்கமாக இருந்தது. ஆகவே தொடர்ந்து இருக்க முடியாமல், ஊருக்கு வந்து சேர்ந்து விட்டேன். ஊருக்கு வந்து பார்த்தபோது தான் உண்மை நிலை தெரிந்தது. கைஉதவி இல்லாமல் சமையல் வேலை ஓடித்திரியும் குழந்தை சுபா பக்கத்தில் உள்ள கிணற்றை எட்டிப்பார்க்கும் அவலம்! ஏனெனில், வீட்டுற்கு முன் கதவு போடாத வீடு இவற்றை நேரில் பார்த்த போது தான் மகள் தனிய இருந்து சகல பொறுப்புக்களையும் மேற்பார்வை செய்வதைக் கண்டேன். ஓரளவு மனம் ஆறுதலடைந்தது.

இந்த வேளையில் மகள் பபிக்கு ஆசிரிய நியமனம் கண்டிக்கு வரும்படி அழைப்புக் கடிதம் வந்ததால், பக்கத்துவீட்டு
அன்னையம்மாவின் (அகிலனின் தாயார்) உதவியுடன் புறப்பட்டுச் சென்றார். அப்போ வயிற்றில் ஒன்பது மாதக்குழந்தை இருந்தது. அதைக்கூடக் கடிதத்தில் எழுதும்போது தோழர்தம்பி தான் பிறப்பார் அவரும் அக்காவைப் போலவே அறிவாளியாக வளருவார்என்று எழுதியிருந்தார். அவருக்குக் கொடுத்துவிட எம்மிடம் முடக்கொத்தான் இலைகள் மட்டுமே இருந்தன. பொருளாதார ரீதியாக மிக நலிவுற்றிருந்தாலும் நம்பிக்கை மட்டும் வலிமையுடன் இருந்தது.

தொடர்வேன்…..

52

தோழர் மணியம் விடைபெற்றார்

குழந்தை சுபாவை சத்தியமனையில் விட்டிட்டு நிறைமாத சுமண்யன் குழந்தையைச் சுமந்தபடி பபி, பக்கத்துவீட்டு அகிலனின் தாயார் பேபியின் துணையுடன் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணமானார். ஒரு குடும்பத்தில் ஆணும், பெண்ணும் வேலை செய்யவேண்டும். அவரவர் தங்கள் கால்களில் நின்று வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்
என்பதையே என்னுடன் பழகுபவர்களுக்கு வலியுறுத்துவேன். என் மகள் பபிக்கும் அதையே சொல்லுவேன். அவருடன் படித்தவர்கள் பலர் தொழில் செய்ய கொழும்பு சென்றபோது, தந்தையின் உடல்நிலையும், அதனால் திடீரென ஏற்பாடான திருமணமும் அதை நிறுத்தியிருந்தது. இந்த ஆசிரியர் தொழில் கிடைத்ததும், தந்தையுடன் சேர்ந்து இருக்கலாம் என்ற நினைப்புடன் பயணமானார்.

மீண்டும் மயக்கமடைந்த தோழர் கண்டி பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட செய்தி எமக்குத் தெரியாது. ஆனால் பபி போட்ட கடிதம் அவருக்கு கிடைத்திருந்தது. கண்டி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தோழருக்கு ஒரு பெளத்த பிக்குவின் இரத்தம் ஏற்றப்பட்டதாம். இரண்டு நாட்களாகக் குளிக்காத கீர்த்தி தங்கொல்லைக்குப் போக, தம்பி அகிலன் மாத்திரம் பக்கத்தில் இருந்தாராம். இறுதியில் ஒரு முஸ்லீம் சகோதரியின் உணவும், பெளத்த பிக்குவின் இரத்தம் உடம்பிலும் உள்ளடங்கலாக தோழரின் உயிர்விடைபெறுகிறேன்என்ற சைகை வலது கையை மேலே உயர்த்தி விடைபெற்றுக் கொண்டாராம் என பின்னர் அகிலன் சொன்னார். அவரது மரணம்மாரடைப்புஎன இறப்புச் சான்றிதழில் பதியப்பட்டிருந்தது. தனது மரணம்விடைபெறுகிறேன்என்றே குறிப்பிடப்படவேண்டும் என்றே சொன்னார். படம் கூட கையை அசைத்து விடைபெறுவதாகக் காட்டும் படமே போட வேண்டும் என்றார்.. “என் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் மக்களுக்கானதாக இருந்தது. என் கடமைகளை என் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் முடிந்தவரை செய்தேன். இப்போது விடைபெறும் நேரம்என்றார்.
இவற்றை அவர் சொன்னதை கேட்க மனது பொறுக்காமல் அழுது தீர்த்தோம். ஏழு வருட காதல், 27 வருட திருமண வாழ்வு. என்னை நீங்கினார். முரண்பாடுகள், கோவங்கள் வந்தாலும் அது அன்புடன் நிறைவடையும். குழந்தைகள் தவறு செய்தபோதெல்லாம் அவர்களுடன் சேர்ந்து நானும் முழந்தாளில் நின்றருக்கிறேன், நானும் நிற்கிறேன் என்பதற்காகவே அவர்களை சீக்கிரம் எழுந்திருக்கச் சொல்லிவிடுவார்.

தனது தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்று மாற்றுவார்.என் மேல் கொண்ட காதலுக்காக தாய், தந்தை, உற்றார், உறவினர், ஊர், வீடு அனைத்தையும் இழந்து என்னுடன் ஊர் ஊராக அலைந்தார். மேல் தளமுள்ள வசதியான வீட்டில் பிறந்த அவர் வெள்ளம் புகுந்த சத்தியமனை மண் வீட்டில் வாழ்ந்தார். காலில் சப்பாத்துப் போட்டு படிக்கச் சென்ற அவர், காலணி வாங்குவது செலவு என வெறும் காலுடன் கொதிக்கும் தார்சாலை எல்லாம் நடந்தார். பின் பேராசிரியர் கைலாசபதி சொல்லியும் கேளாதவர் அவரது பெண்குழந்தைகளின் வற்புறுத்தலால் 1982இல் மீண்டும் காலணி போட ஆரம்பித்தார். பெற்றோர் வழியால் தங்கள் கோவில்கள் எனக் கொண்டாடப்பட்ட மாவிட்டபுரம் கோவிலில் தீட்சை பெற்ற அவர் தன் இறுதி நிகழ்வில் எந்தவொரு மத சம்பிரதாயமும் இருக்கக் கூடாது என்றார். மகள் பபியும் சேர்ந்து கொள்ளி வைக்க வேண்டும் என்றார்.

புகைவண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்த மகளுக்கு தான்அப்பாவைப் பார்க்கப் போகிறேன்என்ற நினைவு
பூரணமாக மனதை நிறைக்க ஆகாய வெளியில் தெரிந்த முகிற் கூட்ட வெண்மை,நிறம் அப்பாவின் வெள்ளை நிற உடுப்புக்களை நினைவூட்டினவாம். அவர் வீட்டிலிருந்து புறப்படும்போது கீழ்காய் நெல்லியும், முடக் கொத்தான் செடியுந்தான் எடுத்துச் சென்றார். திடீரென புகைவண்டி நிறுத்தப்பட்டது. அரை மணி நேரத்திற்கு அதிகமாக காரணம் தெரியவில்லை. அப்பாவைப் பார்ப்பதற்கான நேரம் வீணாவதாய் அவள் கவலைப்பட்டாளாம். தந்தைக்காகவே வாழ்ந்த மகள் அவள். புகையிரத இலாகா உத்தியோகத்தர்கள் இருவர் வந்தனராம். பபியின் பெயரைசத்தியமலர் இரவீந்திரன்என்ற பெயரில் அழைத்தார்களாம். தனக்கு ஒன்றுமே புரியவில்லையாம். “உங்களின் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத தால் யாழ்பாணம் கொண்டு செல்ல இருக்கிறார்களாம். அதனால், உங்களையையும் இறங்கச்சொல்கிறோம்.....” என்றனராம். (இந்த இடத்தில் கண்ணீர் என் கண்களை மறைக்கிறது.........)

கீர்த்தி மூலம் செய்தியறிந்த கவிஞர் கே. கணேஷ், தோழர்கள் சி.கா. செந்திவேல், . தம்பையா இவர்களுடன் திரு.குலேந்திரனும் கண்டிக்கு வந்துபோஸ்மோட்டம் இறப்புச் சாட்சிப்பத்திரம் முதலிய அவசிய வேலைகளைச் செய்தனராம். மகள் பபியை அண்மையில் மறைந்த தங்கராசா, தொண்டர் கந்தசாமி அவர்கள் வந்த வாகனத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் வந்தனராம். அன்னையம்மா மிகக் கவனமாக பபியை புகைவண்டியிலிருந்து வாகனத்தில் ஏற்றிச் சத்தியமனை வந்தடைந்தனர். வைத்திய நிபுணரின் மிகக் கடுமையான எச்சரிக்கையையும் மீறி இறுதிவரை பத்திரிகைகள் வாசித்து வந்த தோழர், இறுதியாக கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் .எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்களின்ஓர் இந்தியக் கம்யூனிஸ்டின் நினைவலைகள்என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தார். பல
சட்டமறுப்பு ஊர்வலங்களில் முன்னணியில் சென்று காவற்படையாலும், சாதியக் காவலர்களாலும் தாக்குதல்களுக்கு உள்ளான தேகம் ஐம்பத்தெட்டு வயதில் விடைபெற்றுக்கொண்டது.

1987ம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து தனது முழங்கால்களுக்குக் கீழ் எத்தகைய உணர்ச்சியும் அற்றிருந்த போதிலும் தோழர் சாமர்த்தியமாக நடந்தார். பிரயாணம் செய்தார். ஏன்? வெற்றிகரமாக சைக்கிள் கூட ஓடியிருக்கின்றார் தோழர். தனது கால்கள் உணர்விழந்து விட்டதை தோழர் யாருக்குமே கூறவில்லை. கூறினாலும் நம்பமுடியாத அளவுக்குத் தனது பாதங்களையோ விரல்களையோ அசைக்கமுடியாத நிலையிலும் சர்வசாதாரணமாக நடமாடிய தோழரது மனவலிமை….

தோழர் இறுதியாக (20-11-1989) எழுதிய கடிதம், தோழர் சிவ. இராஜேந்திரன் (Rajendran Sivanu) அவர்களுக்குரியது. அதில் டிசம்பர் 10ம் திகதி கொழும்பில் நடைபெற இருக்கும் கூட்டத்திற்குத் தான் வருவேன்
என்பதை மிகவும் உறுதியாக எழுதியிருந்தார்.

27-11-1989 அன்று கண்டி மருத்துவமனையில் விடைபெற்ற தோழர் மணியத்தின் உடல் 29-ம் திகதி யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு யாழ்-நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் கட்சித் தோழர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின் சுழிபுரத்திலுள்ள சத்தியமனைக்கு எடுத்து வரப்பட்டு 30-11-1989 அன்று இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அரிவாள் சம்மட்டி தாங்கிய செங்கொடி அவரின் மேல் விரிக்கப்பட்டது. எங்களின் திருமணத்தை உலகிற்கு அறிவிக்கும்
முகமாக தாலி என அவர் கட்டிய அரிவாள் சம்மட்டி என்னிடம் இருக்கவில்லை. அது அடவுகடையில் உறங்கிக்கொண்டிருந்தது.

இறுதி அஞ்சலிக்கான கட்சிக் குழுவின் சார்பில் தோழர் சி.கா. செந்திவேல் இறுதி நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினார். குடும்பத்தினர், கட்சித் தோழர்கள், நண்பர்கள் இறுதி மலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சிகளில் மதக் கிரியைகள் மூட நம்பிக்கைகளைக் கொண்ட வழக்கங்கள், சாதியசார நடைமுறைகள், பழைய சம்பிரதாய செயல்முறைகள் போன்ற எதுவும் கடைப் பிடிக்கப்படவில்லை. முற்றிலும் ஒரு கம்யூனிஸ்ட் போராளி தலைவனுக்குரிய கட்சியின் புரட்சிகர மரியாதைகளுடன் மேற்படி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

பேராசிரியர் கைலாசபதியின் மகள் பவித்திரா, தோழர்களும், நண்பர்களுமாக இருபத்தியொரு பேர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

செங் கொடி தாங்கிய நீண்ட இறுதி ஊர்வலத்தை எம் ஊர் கண்டதில்லை. இந்திய இராணுவம் ஆச்சரியத்துடனும், பலத்த வினாவுடனும் முழித்துப் பார்த்து நின்றது. தோழரை இந்த மக்களிடமிருந்து பிரிக்கமுடியாது என்பதை IPKF இந்திய இராணுவ, புலி இராணுவ கெடுபிடிகளையும் மீறி அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் திரள் காட்டியது.

தோழர் கே..சுப்பிரமணியம் அவர்களுக்கான இறுதி (வீர) அஞ்சலியில் செங்கொடி தாங்கிய நீண்ட மக்கள் திரளைக் கொண்ட ஊர்வலம்

தோழர் மணியம் அவர்களை சுளிபுரம் திருவடிநிலை மயானத்தில் கீரு எரியூட்டினார். பபி நிறைமாதம். மயங்கியபடி இருந்தார். அவர் அங்கு செல்லவில்லை.

குறிப்பு:-
இதன் பின் கண்டி, சிங்கப்பூர், கொழும்பு வாழ்வு, மகனின் மறைவு, அமெரிக்கா, இந்தியா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா பயணங்கள், மீண்டும் இலங்கை வரவு என..... வாழ்வின் சந்திப்புகள் தொடர்கிறது. இத்துடன் இப்பகுதியை முடிக்கலாம் என நினைக்கிறேன். எனது ஆதங்கங்களை உங்களுடன் பகிரக் கிடைத்தமைக்கு முகநூலுக்கு நன்றி. எனது பதிவுகளை வாசித்து ஊக்கம் தந்த அன்பு உறவுகளுக்கும் நன்றி.

53

கே..எஸ் சத்தியமனை நூலகம்

தோழர் மணியம் அவர்களது சாம்பலை 30 ஆண்டுகள் காவித் திரிந்து அதன் மேல் எழும்பியதே கே..எஸ் சத்தியமனை நூலகமும் அரங்கும் ஆகும். அவரது இறுதி நிகழ்வாக அவர் படுத்த நிலத்தை மீண்டும் பல கஷ்டங்களின் மத்தியில் வாங்கி, அவரைப் போலவே கம்பீரமாக, மக்களுக்கான இடமாக மாறி நிமிர்ந்து நிற்கிறது.

1969ம் ஆண்டு மே தின போராட்டத்தைப் பற்றிய .ஆர். திருச்செல்வம் அவர்களின் பதிவு.

தொழிலாளர் உரிமையை நிராகரிப்பதா? பனங்காட்டான் - . ஆர். திருச்செல்வம்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரான சம்பவமொன்றை இவ்வேளையில் நினைவுகூருவது பொருத்தமானது என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

“1965 முதல் 1970 வரையான காலத்தை இலங்கையின் முதலாவது தேசிய அரசாங்கம் ஆட்சி புரிந்தது. இதன் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்க இருந்தார். இவரது தேசிய அரசில் அங்கம் வகித்த பிரமுகர்கள் எவரும் இப்போது அரசியலில் இல்லை.

1969ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினமன்று வெசாக் தினமும் ஒன்றாக வந்தது. பௌத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிங்கள அரசாங்கம் மே தினத்தை உத்தியோக பூர்வமாகத் தடை செய்தது. பிரதான அரசியற் கட்சிகள் அனைத்தும் இதனை ஏற்றுக் கொண்டன.

தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக செனட்டர் மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராக பதவி வகித்தார். இதனாலோ என்னவோ, தமிழ் அரசுக் கட்சி அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக் கொண்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே பௌத்தம் இலங்கையின் அதிகாரபூர்வ மதம் என்பதை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டதை இதனூடாகப் பார்க்கலாம்.

ஆனால், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாணக் கிளை அரசாங்கத்தின் இந்த முடிவை முழுமையாக எதிர்த்தது. மே முதலாம் திகதியே யாழ்ப்பாணத்தில் மே தினம் நடத்தப்படுமெனவும் அறிவித்தது.இதற்கு பொலிஸ் அனுமதி கிடைக்கவில்லை. அதனை ஏற்றுக் கொள்ளாத மேற்படி யாழ்ப்பாணக் கிளையின் செயற்பாட்டாளரான கே.. சுப்பிரமணியம் மே தின ஏற்பாடுகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

இதனால் பொலிசார் தீவிரமான செயற்பாட்டில் இறங்கினர். எக்காரணம் கொண்டும் யாழ்ப்பாணத்தில் மே தினம் நடத்த அனுமதிக்கக்கூடாதென்ற உத்தரவு கொழும்பிலிருந்து வடமாகாண பொலிஸ் சுப்பிரிண்டனுக்குப் பிறப்பிக்கப்பட்டது.

அப்போது பொலிஸ் சுப்பிரிண்டனாக ஆர். சுந்தரலிங்கம் பணி புரிந்தார். குடாநாட்டு ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சாமர்த்தியசாலி இவர். உதவி பொலிஸ் சுப்பிரிண்டனாக ஆர்.தவராசா இருந்தார். மிகக்கடும் போக்கான, ஆனால் நேர்மையான அதிகாரி இவர்.

அவ்வேளை நான் (. ஆர். திருச்செல்வம்) யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக இருந்தேன். அமரர்களான செல்லத்துரை (வீரகேசரி), பரராஜசிங்கம் (தினகரன்), கதிரவேலு (டெய்லி நியூஸ்), புஸ்பரத்தினம் (டெய்லி மிறர்), அரசரத்தினம் (தினபதி) ஆகியோர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களாக அப்போது பணி புரிந்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சுப்பிரமணியம் ஊடகவியலாளர்களுடன் அந்நியோன்யமாகப் பழகுபவர். சீனப் படங்களுடனான கலண்டர்கள், பலவர்ண அச்சுப் புத்தகங்கள் போன்றவற்றை வருடாவருடம் அன்பளிப்பாக வழங்குபவர்.இதனால், இவர்கள் நடத்தவுள்ள மே தினக்கூட்ட இடத்தை அறிவதற்காக பொலிஸ் சுப்பிரிண்டன் ஊடகவியலாளரான எங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தார்.

மே மாதம் முதலாம் திகதி எங்களை எங்கள் அலுவலகத்திலேயே இருக்குமாறும், உரிய நேரத்தில் தாம் தொடர்பு கொள்வதாகவும் திரு. சுப்பிரமணியம் ஏற்கனவே எம்மிடம் கூறியிருந்தார். அன்று காலையிலிருந்து நானும் மற்றைய ஊடகவியலாளர்களும் அவரது தொலைபேசி அழைப்புக்காக அதனருகில் தவம் கிடந்தோம். (அப்போது செல்லிடத் தொலைபேசிகள், முகநூல்கள் கிடையாது).

மறுபுறத்தில், வெளிமாகாணங்களிலிருந்து 2000க்கும் அதிகமான பொலிசார் யாழ்ப்பாணத்தில் இறக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்தனர். கலகம் அடக்கும் பொலிசாரும் ஒரு புறத்தில் யுத்த பூமி போல யாழ்ப்பாணம் அன்று காட்சியளித்தது.

குடாநாட்டில் சாதி ஒழிப்பு, ஆலயப் பிரவேசம் போன்றவைகளில் நீண்ட காலமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். சங்கானையில் நிற்சாமம், தென்மராட்சியில் மந்துவில், வடமராட்சியில் நெல்லியடி, வலிகாமம் வடக்கில் மாவிட்டபுரம், யாழ்நகரில் ஆரியகுளத்தடி என்பவை இவர்களின் போராட்டக் கோட்டைகளாக விளங்கிய இடங்கள். இதனால், இவ்விடங்களில் மே தின ஊர்வலமோ கூட்டமோ நடத்தப்படலாமென்ற சந்தேகத்தில் பெருமளவான பொலிசார் ஆயுதபாணிகளாக நிறுத்தப்பட்டிருந்தனர்.

மாலை சுமார் ஐந்து மணிவரை எந்தவித அசமாத்தமும் இல்லை. யாழ் நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது, ஆங்காங்கே பொலிஸ் ஜீப் வண்டிகள் உறுமிக் கொண்டு திரிந்தன. சுப்பிரமணியம் அவர்களின் தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்து நாம் களைத்துப் போயிருந்தோம்.

ஐந்தேகால் மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில் வின்ட்சர் தியேட்டர் அமைந்திருக்கும் ஸ்ரான்லி வீதி - கஸ்தூரியார் வீதிச் சந்திக்கு வருமாறு ஓர் அநாமதேயக் குரல் தெரிவித்தது. அடுத்த விபரம் கேட்பதற்கிடையில் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சில வேளை இது பொலிசாரின் தந்திர யுக்தியாக இருக்கலாமோவெனவும் எண்ணத் தோன்றியது. ஆனாலும் அந்தத் தொலைபேசி அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. இரண்டு நிமிடங்களில் நான் அவ்விடத்துக்குச் சென்றுவிட்டேன். மற்றைய பத்திரிகை நண்பர்களும் இளைக்கக்களைக்க வந்து சேர்ந்தனர்.

வின்ட்சர் தியேட்டரும் ராஜா தியேட்டரும் அச்சந்தியில் எதிரும் புதிருமாக உள்ளன. பிற்பகல் ஐந்தரை மணியளவில் இரண்டு தியேட்டர்களிலும் 2:30 மணி பகல் படக்காட்சி முடிந்து சுமார் 500க்கும் அதிகமானவர்கள் வெளியே வந்தனர். வழக்கமாக படம் பார்க்க வரும் கூட்டமென்று நாம் நினைத்தோம்.

இரு அணியினரும் ஒன்றாக இணைந்து தங்கள் பொக்கற்றுக்குள் இருந்த சிவப்புத் துணிகளை மேலே உயர்த்தியவாறு திடீரென "தொழிலாளர் வாழ்க" என கோசமெழுப்பினர். எங்கிருந்து வந்ததோ தெரியாது, சிவப்புத் துணியில் எழுதப்பட்ட "தொழிலாளர் தினம்" என்ற பெரிய பதாதையை முன்னால் தாங்கிக் கொண்டு இருவர் செல்ல அந்தக் கூட்டம் அவர்கள் பின்னால் வேகமாகக் கோசமிட்டவாறு ஓடிச் சென்றது. கஸ்தூரியார் வீதி, பள்ளிவாசல் ஒழுங்கை, சப்பாத்துக்கடை ஒழுங்கை, மலாயன் கடைச் சந்தி என்று சகல குறுக்கு ஒழுங்கைகளாலும் ஆறு ஓடுவது போல ஆர்ப்பாட்டமிட்டவாறு அவர்கள் ஊர்வலமாகப் பாய்ந்து பாய்ந்து சென்றனர்.

சத்திரத்துச் சந்தி தாண்டி யாழ்ப்பாணம் பெரிய தபாற் கந்தோரடியை (முற்றவெளியின் முன்னால்) ஊர்வலத்தின் முற்பகுதி தாண்டும்போது கே.. சுப்பிரமணியமும் மற்றும் முக்கியஸ்தர்களும் அங்கு காணப்பட்டனர்.

சில நிமிடங்கள் தாண்டியிருந்தால் ஊர்வலம் யாழ். பொலிஸ் நிலையத்தைச் சென்றடைந்திருக்கும். அதற்கிடையில் பெரிய ட்ரக் வண்டிகளில் பொலிசார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அவர்களின் குண்டாந்தடிகள் ஊர்வலகாரரை பதம் பார்த்தன. கண்ணீர் புகை பிரயோகம் செய்யப்பட்டது.

கீழே விழுந்த சுப்பிரமணியம் அவர்கள் மீது இலக்கு வைத்து பொலிசார் தாக்கினர். அவர் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார். ஆனாலும் ஊர்வலத்தினர் அச்சமடைந்து திரும்பிச் செல்லவில்லை. அவ்விடத்திலேயே அமர்ந்துவிட்டனர். சுப்பிரமணியம் அவர்களை நிலத்தில் இழுத்துச் சென்ற பொலிசார், எதிரே வந்த பஸ் வண்டியின் முன்னால் தூக்கி வீசினர். பஸ் வண்டி அவர் மீது ஏறாத குறை.

பொலிசாரைப் பொறுத்தளவில் மே தினக்கூட்டம் தடுக்கப்பட்டதென்ற நிம்மதி. ஆனால், அதனை ஏற்பாடு செய்தவர்களைப் பொறுத்தமட்டில் வெசாக் தின பிரகடனம் முறியடிக்கப்பட்டு தொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வமாக வெற்றி கண்டது என்ற பெருமை.இங்கு குறிப்பிடக்கூடிய முக்கியமான ஒன்று, அதனை ஏற்பாடு செய்தவர்களின் அபாரமான திட்டமிடல். எவருக்கும் ஒருபோதும் தெரியாதவாறு சுமார் 500 பேரை பகல் படக்காட்சிக்கு இரண்டு தியேட்டர்களுக்கும் உள்ளே அனுப்பியதும், அவர்களது பொக்கற்றுகளுக்குள் மறைத்து வைத்திருக்கும் வகையில் சிவப்புத் துணிகளைக் கொடுத்து அனுப்பியதும் வித்தியாசமான ஏற்பாடு. எக்காரணம் கொண்டும் இதனை முற்கூட்டியே கண்டுபிடிக்க முடியாமல் போனது பொலிசாரின் புலனாய்வுக்குக் கிடைத்த படு தோல்வி.

நேர்த்தியாக ஏற்பாடான இந்தப் பேரணி, சுமார் ஐந்து நிமிடத்துக்குள் ஒரு மைல் தூரத்தை பாய்ந்து பாய்ந்து சென்று முன்னேறியது பொலிசாரின் கண்களுக்குள் எண்ணெய் ஊற்றியது போல. ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டும் பேரணி ஆரம்பமாவதைத் தடுக்க முடியாமல் போனது தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றி. அன்றைய தாக்குதலில் படுகாயமுற்ற திரு.சுப்பிரமணியம் யாழ். மருத்துவமனையில் சில நாள் சிகிச்சை பெற்றபின் சீனா கொண்டு செல்லப்பட்டு மேற்சிகிச்சை வழங்கப்பட்டது.

அன்று வெசாக் நாளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தின நிகழ்வுக்கும், இவ்வருடம் வெசாக் நாளில் ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணத்தில் மே தினத்தை நடத்த தீர்மானித்திருப்பதற்கும் இடையில் அரசியல்ரீதியாக எந்த ஒருமைப்பாட்டையும் காணமுடியவில்லை.

யுத்த வலியிலிருந்து மீள முடியாது தவித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தில், காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் குடும்பத்தினர் மத்தியில் ஜே.வி.பி.யினர் யாழ்ப்பாணம் சென்று எதற்காக மே தினத்தை நடத்த வேண்டும்? கொள்கைப்பிடிப்பும் ஆத்மசுத்தியும் இருந்தால் இவர்கள் தங்களுடைய மே தின நிகழ்வை வெசாக் தினத்திலன்று தெற்கிலுள்ள ஏதாவதொரு நகரில் ஏன் நடத்தக்கூடாது?

. ஆர். திருச்செல்வம்

மேலே உள்ள கட்டுரைக்கான சில சிறிய திருத்தங்களுடன் எனது பதில் கீழே உள்ளது.

நண்பர் மூத்த பத்திரிகையாளர் . ஆர். திருச்செல்வம், தங்கள் வரலாற்றுப் பதிவுக்கு மிக்க நன்றி. எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1969 ஆண்டு மே நாள் நிகழ்வு பௌத்தர்களின் புனித நாளான வெசாக் நாளன்று வந்ததால் அன்று மே தினப் பேரணிகளுக்கு அன்றைய டட்லி சேனநாயக்க அரசு தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை மீறி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் கொழும்பில் பெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். எஸ். டி. பண்டாரநாயக்கா, டி.கே.டி ஜினேந்திரபாலா, மற்றும் வாட்சன் பெர்னாண்டோ ஆகியோர் மே 1, 1969 அன்று கொழும்பில் கைது செய்யப்பட்டனர். நண்பர் மூத்த பத்திரிகையாளர் எஸ். எம்.கோபாலரத்தினம், தோழர் மணியம் பற்றி எழுதிய 1989 குறிப்பை மீண்டும் வாசித்தேன்.... https://sathiamanai.blogspot.com/2017/12/blog-post.html வேற்று அரசியலும், வேறு தளத்திலும் இருந்து உண்மைகளை எழுதியது, மிகுந்த ஆறுதலைத் தந்தது. உண்மைகள, தியாகங்கள் புதைந்தழிந்து போகா.…...

"அன்றைய தாக்குதலில் படுகாயமுற்ற திரு.சுப்பிரமணியம் யாழ். மருத்துவமனையில் சில நாள் சிகிச்சை பெற்றபின் சீனா கொண்டு செல்லப்பட்டு மேற்சிகிச்சை வழங்கப்பட்டது." நான் இதை எழுதுவதன் நோக்கம் என்னவென்றால், தோழர் மணியம் 1969ஆம் ஆண்டு மேதினத்தில் படுகாயப்பட்டதும், அவருக்கு தோழர் சண்முகதாசன் தனது வீட்டில் வைத்து
வைத்தியம் செய்ததும் முன்னர் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் தோழர் மணியத்தை வைத்தியத்திற்காக சீனாவுக்கு அனுப்ப தோழர் சண்முகதாசன் பல முயற்சிகள் எடுத்தாராம். ஆனாலும் அம்முயற்சிகள் கைகூடவில்லை. இது தோழர் சண்ணுக்கு, சீனக் கட்சி மீது விசனத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் இருந்து சீனா பற்றிய அவரது கண்ணோட்டம் மாற்றமடைய தொடங்கியது. தோழர் மணியம் தனது உடல் நலம் பற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. ஆனாலும் அவர்களுக்கிடையே சீனா பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. தன்னை முன்னிலைப்படுத்திய எந்த ஒருவிடயத்தையும் அவர் விரும்பியிருக்கமாட்டார். அன்று தோழர்களுடன் சேர்ந்து கைச்சாத்திட்ட 1963 ஆண்டு உடன்படிக்கையின் படி தனது மனச்சாட்சிக்கு ஏற்ப சுயநலமின்றி தோழர் மணியம் வாழ்ந்து மறைந்தார்.
வள்ளியம்மை சுப்பிரமணியம்

54

தோழி அரங்கா அவர்களின் கவிதை.

சங்கானை நிச்சாமத்தோழி அரங்காவின் தோழர் மணியம் பற்றிய கவிதை.

ஒரு ஆத்மார்த்தமான அரங்கவெளியில்
அனைவரும் இளையோடிப்போயிருக்கும்
இவ் நினைவேந்தல் நிகழ்வில்
வருகைதந்திட்ட விருந்தினரே, தோழர்களே..குடும்பத்தினரே ,ஊர் மக்களே, உற்றார் நண்பர்களே..
அனைவருக்கும் காலை வணக்கங்கள்

பேராசிரியர் கைலாசபதி அவர்களின்
நினைவேந்தல் நிகழ்வினை..
தோழர் சுப்பிரமணியம் அவர்களின்
நினைவு தினத்தில் நடாத்துவதன்
தாற்பரியத்தினை எண்ணிநான்
மனம் நெகிழ்கின்றேன்..
காரணம், இருவரும் இடதுசாரித் தேரின்..
இரு சக்கரங்கள்..கொள்கைவழி
ஒன்றாய் பயணித்துபல வேள்வித் தீ கண்டவர்கள்.. தீண்டாமைக்கு எதிராக..
விடிவெள்ளியாய் நின்றவர்கள்..

பேராசிரியர் கைலாசபதி மற்றும்
அவர் அருமை பெருமைகளை..
அவையோர் நன்கறிந்த போதிலும்
என் நினைவோடு நின்றிட்ட நிஜத் தலைவன்..சமூகப் போராளி சுப்பிரமணியம் ஜயாஅவர்களைப் பற்றியேநான்
இங்கு விளம்ப வந்துள்ளேன்..
மணி ஜயா எனும் இமயமே.. இடதுசாரி கொள்கையுடன் தம் கொள்கைவழி..
என் தந்தை நின் கைகோர்த்து நடந்தார்
என்பதில் நான் பெருமை அடைகின்றேன்..

வீரச் செருக்கு மிக்க விழுதுகள் வாழ்ந்த பதியின் - சாதியெனும்
கோரச் சிரத்தையினை கொன்றளிக்க வந்தமகன்.. பாரச் சிலுவைகளை தம் தோழில் தூக்கி நின்றுஎம்
பாவங்களை தான் சுமந்த பிறிதொரு
இயேசு பிரான்..

வீரத்தின் விளைநிலமாம் நிற்சாம மண்ணின்.. குச்சுக்குடிசைகளின் தாழ்வாரத்தில் படுத்துறங்கி
ஒற்றைப் பாத்திரத்தில் ஒருபிடி

உணவுண்டுஅவர்தம்
கொலைக்கள இராத்திரிகளில்
கொள்கையை கனவாய் கொண்டு.. சாதிவெறி தகர்த்தெறிந்து
எம் மக்கள் முதுகெலும்பு நிமிர்த்தியவர்..
அவர்களின் தன்மானச் செருக்கினைமகிழ்ந்துஅனுபவித்தவர்..

தேனீர் கோப்பைக்குள் எம்
தன்மானத்தைஅவர்கள் குடித்த போதும்தேரேறி வந்த தெய்வம்
காணஎம் தேகங்களை கிழித்த போதும்..
வாளோடு வந்த மகன் - மணி ஜயா
வாழ்வினை வென்ற மகன்..
திக்குத் தெரியாமல் - நாம்
திகைப்புற்று நின்றவேளை.. தானாக வந்த திசை காட்டி.. மணி ஜயா..
எழிற்சியின் வேர் - அவர்
விடியலின் வேர்.. பொதுவுடமை
கொண்ட பேறு..
தீண்டாமை வென்ற நீறு
தொழிலாளர்களின் தோழ்..
குற்றங்கள் களைந்த கூர் வாழ்..

தனக்காய் வாழ்பவன் மனிதன் - தன்
இனத்தின் விடுதலைக்காய் வாழ்பவன் மாமனிதன்..
ஆமாம்.. மணி ஜயா எனும் மாமனிதன்
மானுடம் போற்றும் புனிதன்..
தன் தசையின் இளைகளை அறுத்திட்ட போதிலும்.. எலும்பின் முடிச்சை உடைத்தெறிந்த போதிலும்..
மாக்ஸ்ஸிசத்தினை மருந்தாய் உண்டு மீண்டெழுந்த..
எம் மண்ணின் பிறிதொரு மா சேதுங்..
மணி ஜயா துணிச்சலின் முழு உருவம்..

ஒடுக்கப்பட்ட பெண்களின்..
தாவணிகளை அவர்கள் - தம்
செருக்கினில் முடிந்த போது..
துயரத் தாய்மார்களின் ஓலம் கேட்டு..
நின்மனம் கொதிக்கக் கண்டு..
துவண்டு புதுமைப் பெண் படைக்க வந்தீர்..

ஆதலால் எமக்கு நீங்கள் பாரதீ..
கொடுஞ் சாவு கண்டு அஞ்சிடா நெஞ்சன்..
நெடுஞ் சோர்வு கொண்டு துஞ்சிடா மைந்தன்.. தடம்மாறா திடம் கொண்டு..
தரம் பாரா வகை கண்டுஎதிரிகளின்
விடம் அறுக்க வந்த வள்ளல் - மணி ஜயா
நெடுந்தூர பயணச் செம்மல்
அன்பு மனைவி….
ஆசைக்குழந்தைகள் - தன்
உள்ளக்கிடக்கையில் உறைந்து கிடந்திட
கொள்கைப்பிடிப்பால் தாழ்ந்தோரையெல்லாம்
உற்ற சோதரராய் கொண்டாடி மகிழ்ந்து
தன்னுயிர் நீத்து-எம் மக்கள் மனங்களில் உத்தமராய் வாழ்பவர்.. மணி ஜயா..

மாற்றம் காணாத வராலாறு இங்கில்லை
எம் விடிவானில் எழுந்த செங்கதிரே..
தூற்றுவார் உமை தூற்ற-அதை
துச்சமென நினைத்து
எமக்கு தோள்கொடுத்த தோழன்
நல்ல தொழிலாளத் தலைவன்..
வெஞ்சினம் கண்டு நின் சிவந்த கைகள் கொண்டு.. அஞ்சிய மக்களின் உள்ளக்கிடக்கை வென்ற..
பொதுவுடமைப் பொருளோன்-நின்
இறுதி மூச்சிலும் நெறிபிறழா திறலோன்.
மேடைகளில் நின் பேச்சும்
ஆவேச குரல் தொனியும்..
எதிரிகளை அச்சமுறச் செய்தது
அடக்குமுறை தகர்த்தது..
மணியம் ஜயாஎம் விளை நிலம் கண்ட விடிவெள்ளிதாழ்த்தப்பட்டோர்க்காய்
தன்னையே செதுக்கிய சிற்பி

மணி ஜயா நினைவுரையில் - நின்
துணைவியரை பாட மறுக்கின்
ஏனை மனச்சாட்சி கொன்று விடும்..
அவர் கருணையின் உறைவிடம்
வள்ளியம்மை பெண்ணியப் போராளி..
தன் கணவனின் கொள்கைகளை-தன்
கனவெனக் கொண்டு
அவரின் போராட்ட ஊர்வலங்களில்..
ஓர் செருப்பெனத் தேய்ந்து..
ஓங்கி ஒலிக்கும் அவர் குரலின் பால் நின்று..
தாழ்த்தப்பட்டோரை தன் உறவென கொண்டாடிய.. ஒரு அற்புத தாய்

காடையர்களின் காட்டுமிராண்டித்தனத்தினால்
அவர் நோயுற்று கிடந்த வேளை
ஒரு தாயினும் மேலாக-அவர்
கொள்கை காத்த புதுமைப் பெண்..
அச்சுப் பிறளாமல் தன் பிள்ளைகளையும்
கம்யூனிசிய அச்சாணி கொண்டு
தேரிழுத்த தெய்வம்..
ஆமாம்
சத்தியமனை எனும் கொலுவில்..
மணி ஜயா வள்ளியம்மையாவர்க்கும்
ஈடில்லா நல் இணைகள்

பல தசாப்த்தங்கள் இளையோடிப் போயின..
நிற்சையூர் குடிசைகள் இத்துப் போய்..
செங்கற்கள் ஆயின-ஓர்
அக்கினிக் குஞ்சென நீங்கள் இட்ட தீ
வெறும் பிண்டங்களாய் இருந்த
எம் மக்களின் தலைவிதிகள் மாற்றியது...
கல்விவிற்பன்னர்களாய் கலங்கரை தொட்டு..
பொறியியல் பீடங்களில் பெயர் பொறித்து நின்று..

வைத்தியத் துறைகளில் வரலாறு புதுப்பித்து..
தீண்டாமை எனும் தீட்டினை
கூண்டோடு அழிக்க வந்த தோழன்..
மாண்டோர்கள் இனிப் போதும்
ஆண்டாண்டு காலமாய் இனி அடிவருட முடியாதென
மீண்டெழ வைத்த வீரச் செம்மல்..

மணி ஜயா
வேடிக்கை மனிதனுமில்லை-அவர்
வீழ்ந்து கிடக்கவுமில்லை..
மணி ஜயா
உறங்கிப் போயிருக்கலாம்..
அவர் கனவுகளும், கொள்கைகளும்
உறங்குவதில்லை..
ஆயிரம் ஆயிரம் அக்கினிச் சிறகுகளாய்
ஆவேசம் கொண்டு மீள மீள எழும் - நின்
பெயரை ஒப்புவித்தே இவ் வையம் வாழும்

- அரங்கா விஜயராஜ் .

55

படித்தோர் கருத்து