Thursday, July 15, 2010

மெல்பேர்ண் மணியின் சந்தக் கவிதைகட்குச் சிந்தையால் வாழ்த்துக்கள்...........

சந்தக் கவிதைகட்குச் சிந்தையால் வாழ்த்துக்கள்...........
-----------------------------------------------------------------------------------------



 மாண்போடு மாதர்களின் மனவழகைப் புரிந்துகொண்டு
 ஆண்களும் உதவவேண்டும் அரிவையர்கள் குடும்பத்தைத்
 தூண்போலத் தாங்கித் தூக்கி நிறுத்துதற்கு
 சாணேற முழம்சறுக்கும் சச்சரவுச் சூழ்நிலையில்
 பூணுகின்ற ஒழுக்கநெறி புனிதமான வில்லினிலே
 நாணேற்றிக் கூரான நல்லம்பு தொடுத்துவிட்டுத்
 பேணுகின்ற வரிசையிலே பெண்களுக்கே பங்கதிகம்
 தோணிபோற் கரைசேர்க்கும் துணிவும் வரவேண்டும்!


மண்ணில் உழலுகிற மாதருக்கு வழிகாட்ட
 திண்ணமான பற்பல திட்டங்கள் வகுக்கவேண்டும்
 எண்ணத்தில் தெளிவுகொண்ட எழுத்துருவம் பிறந்ததனால்
 உண்மையே நிலைக்குமென்ற உறுதியும் அறுதியாக
 வண்ணம்போல் இளஞ்சிறாரின் வதனத்தை மலர்விக்கும்
 பண்பாடு புகுத்திநின்றார் பரந்த இவ்வுலகினிலே
 கண்போன்ற கருத்துள்ள கவிதைகளைப் படைத்ததனால்
 “மெல்லெனப் பாயும்தண்ணீர் கல்லையும் உருகப்பாயும்!”


 மெல்பேர்ண் மணிக் கவிதை மேன்மையான கருவூலம்
 சொல்வதில் நிதானம், சொற்சுவை, பொருட்சுவையும்
 வல்லவர் தமக்குமல்ல; வரிவரியாய்ப் படிப்பவர்க்கும்
 வெல்லும்வகை, வாழ்க்கைநெறி, வேண்டாத இருளகற்றி
 துல்லியமாய்க் காட்டுகின்ற தூயபளிங் கினைப்போல்.....
 தொல்லைப்படும் மனதில் துயரமே இல்லாத
 வல்லமை நிறைந்த வைரமான நெறிகொண்ட
 நல்லவற்றைக் கூறிநிற்கும் நற்சந்தக் கவிதையிது!


   இன்னும் எழுதவேண்டும் ஈரமனம் தெரியவேண்டும்
   நன்நெறிகள் காட்டும் நயவுரைகள் சொல்லவேண்டும்
   தன்னாலியன்ற மட்டும் தரணிக்கு வழிகாட்டும்
   அன்னமிட்ட கைகளுக்கு அம்பல வாணர்துணை
  அகணிமுதல் பேராசான் தாசனையும் பெற்றெடுத்த
  சொன்னசொற் தவறாத சொற்கொடிநம் கவிதைமணி...........
  பண்பாடு காக்கப் பாரம்பரியம் பேணிப்பல
  வெண்பாக்கள் யாத்து வெளியீடு கண்டாரிவர்!

  நல்லைநகர் தந்த நாவலனார் தொண்டினைப்போல்
  சொல்லவல்ல அறிஞர்களின் சுவட்டினை ஒட்டியிவர்
  எல்லையற்ற கவித்திறத்தால் எடுத்தியம்பும் உண்மைகள்
  அல்லல்கள் யாவும் அகற்றிவிடும் பாங்கினாலே...........
  இல்லையிதற் கீடாக எந்தப் பெண்மணியும்
  சொல்லிவைக்க வில்லையென்று சுடரொளியாத் தெரிகிறதே!
  வல்லவராய்க் கவிதைகளை வடித்து அச்சேற்றி.....
  சல்லடைக் கண்கள்போல் சலித்தெடுத்த சந்தமிது!



  சூழ்ந்துவரும் சுற்றாடல் சுத்தமாய் இருப்பதுபோல்
  வாழ்க்கையில் செழுமையும் வற்றாத நிம்மதியும்
  ஆழ்ந்து நோக்கிடில் அவரவர் இல்லறத்தில்
  பாழ்போகாப் பயிரான பண்பாட்டு நெறிகளும்
  தாழ்வில்லா உயர்வொன்றைத் தந்திடும் என்பதனால்
  காழ்ப்புணர்ச்சி இல்லாத கருமமே கண்ணான
  வாழ்வினில் சமுதாய முன்னேற்ற முயற்சிகளை
  ஏழ்பிறப்பும் ஏற்கும் எதிர்கால வெளிச்சமிது!

  தங்கத் தாத்தா நவாலியூர்ச் சோமசுந் தரனாரின்
  மங்காத கவிதைகள் ஆடிப்பிறப்பு, ஆடுகதறியது...........
  எங்கள் பண்டிதமணி மட்டுவில் கணபதிப்பிள்ளை....
  அங்கம் வகித்து அருந்தமிழை வளர்த்தோர்பலர்.........
  இளமுருகன்,துரைசிங்கம்,இராசையா,வேலனுடன் வேந்தனாரும்
  களமிறங்கிக் கவிபடைத்த புதுவைக் கவிஞன்வரை-----வாழ்வை
  வளப்படுத்தும் தாய்க்குலத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை
  உளம்திறந்து வாழ்த்துவமே சந்தக்கவி விதைத்தவரை!

வள்ளியம்மை சுப்பிரமணியம் 
சத்தியமனை    சிங்கப்பூர் 15 -07 -2010

Monday, June 21, 2010

மெல்பேர்ண் மணியின் -- கவிதைப் பூங்கா

மெல்பேர்ண் மணியின் -- கவிதைப் பூங்கா
------------------------------------------------------------------------------
கண்டேன் ’மெல்பேர்ண்மணி’ கவிதைப் பூங்காவை
கொண்டேன் மனவுறுதி ஒரேமூச்சில் படிக்கவென..........
உண்டேன் தமிழ்ப்பழப் பஞ்சாமிர்தக் கலவையதை
விண்டேன் விழுமியப் பொருளுணர்ந்து கொண்டேன்.

தெய்வ வழிபாடுகள் தீம்பாலிற் சர்க்கரைபோல்..........
உய்யும் வாழ்வுநெறி உயர்வுக்கு வழிகாட்டல்
எய்யும் அம்புகூட எதிரிக்கும் நோய்தீர்க்கும்
வையத்துள் செம்மைவழி வார்த்தைகளிற் தொக்கிநிற்கும்.

மண்வாசனை சொல்கிறது மனமகிழ்வைக் காட்டி.........
எண்ணத்தில் சிலிர்ப்பு !....தெம்பினை ஊட்டி......
பள்ளத்தை நோக்கிய பாசவெள்ளம் கூட்டி.....
அள்ள அள்ளப் பெருக்கெடுக்கும் செந்தமிழ்ப் பாட்டி ..(து)

தாயக நினைவுகளைத் தாங்கிநிற்கும் தாயே!
நீயகலாதே!..கவிச்சுரங்கம் பெற்றெடுத்த சேயே!
நாயகி மெல்பேர்ண் நகரினிலே பெண்ணின
காயகற்றும் சதுரங்க சகலகலா வல்லிநீயே!

வள்ளியம்மை சுப்பிரமணியம்.
சிங்கப்பூர்.

Sunday, May 9, 2010

அன்னையர் தினத்திலே.............வள்ளியம்மை சுப்பிரமணியம்.

அன்னையர் தினத்திலே.............


மக்களே தாய்பற்றி எழுதுவது வழக்கமாம்.......அந்த

அக்கறையில் அன்னையே எழுதி அனுப்புகிறாள்.



பிள்ளைகள் உணர்வினைப் பெற்றவள் சொல்வதே

கொள்ளை இன்பமாம் அன்னையர் நாளிலே........



உண்ண உணவளித்து உறங்க இடமளித்து

வண்ணத்தில் உடைகள்பல வாங்கித் தருமொருவர்!



’கணனி’க்கு மேலே ’கமரா’வும் பொருத்தி

கைத்தொலை பேசியும் கருணையுடன் தருமொருவர்!



அம்மாவின் வயதுக்கு இதுவொன்றும் வேண்டாமென்றால்

“சும்மா இருங்கள். சுழலும் உலகில் உழைக்கும் தாயாக........



இவ்வளவு காலமும் இரவுபகல் பாராமல்

எம்மோடு நீங்கபட்ட இன்னல்கள் போதாதோ?



நான்தரும் பால்பழங்கள் நன்றாக நீயருந்தி

கூன்விழாத முதுகுடன் குதூகலிக்க வேணு’’மென்றார்.



நன்றாகத் தமிழ்த்தாயின் உறவிலே பெற்றமக்கள்................

அன்னையர் தினத்திலே பொன்னாடை போர்த்தி

சின்னமேசை விளக்கும் சிறப்பாக எனக்களித்ததுடன்

’என்வீட்டுக்கு வந்து உன்தமிழால் உரையாடு......

உன்னுடைய ஊக்கம் இளைஞர்க்கு வழிகாட்டும்”



இத்தனைநாள் இல்லாத கருஞ்சிவப்புக் கரைவைத்த

அத்தனை மதிப்பான சேலைதந்தார் மகளொருவர்!

‘அம்மா பசிகிடந்து ‘அல்சர்” வந்ததென்று

தம்மால் முடிந்தவரை தகுமுணவு தருமொருவர்!



செல்லும் திசையெல்லாம் திருப்தியாய்ச் செய்திகளை

சொல்லும் புகைப்படமும் அனுப்பிடுவார் இன்னொருவர்

அம்மாவின் பொறுமையும் அசையாத ந்ம்பிக்கையும்

நம்முடைய வாழ்வுதனில் நடைமுறைக்கு ஏற்கு”மென்பார்.



வள்ளியம்மை சுப்பிரமணியம்.

Sunday, April 25, 2010

சிங்கையில் சித்திரையின் பூக்களும் பழங்களும்

சிங்கையில் சித்திரையின் பூக்களும் பழங்களும்
--------------------------------------------------------------------------------------
தமிழ்மணக்கச் சிங்கையிலே நான்காண்டு முன்னர்
அமிழ்தான சித்திரைத் தமிழ்விழா தொடங்கி..........
அறிஞர்கள் பங்கெடுத்து வழிநடத்தும் செய்கையால்..........
குறிப்பாக மணக்கிறது பூக்களும், பழங்களும்.

பாலர்பள்ளி ஆடல் பாடல் விநோத உடை மல்லிகை.
உயர்நிலைப் பள்ளி சொற்களமோ இதழ்விரித்த தாமரை.
திருக்குறள் விழாவிலே திகழ்ந்தவைகள் றோசாமலர்.
மாதவி இலக்கிய மன்றத்தில் மணத்தது சாமந்திப்பூ.!

முப்பது ஆண்டுக்குப் பின்னர் தேக்காவிற்கு
மதியுரை அமைச்சர் வருகை புரிந்ததும்........
திறந்த வெளியரங்கில் வணக்கம் முழக்கம்
சிறந்தபல சொற்பொழிவு பலாப்பழத்தின் சுவைதானே!

நாளிதழின் செய்தியேடு நாவற்பழச் சுவையாம்
ஒலி 96.8 ஓங்குதமிழ் வாழைப்பழ இனிமை.
வசந்தத்தின் ஒளிபரப்பு மாதுளம் பழம்போல
கவிமாலை நிகழ்ச்சிகளோ மாம்பழத்தின் ருசியினிலே!

”அடுத்த வருடமும் சித்திரைக்குச் சிங்கைக்கு
விடுப்பு எடுத்து வரவேண்டும் விமானத்தில்.............”
ஆசிய வட்டார அயலிலுள்ள நாட்டவரின்
தேசியக் குரலாக ஒலிக்கிறது எம்காதில்.

வள்ளியம்மை சுப்பிரமணியம்.

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF