Sunday, June 12, 2011

பெருவிரைவு ரயில்களில் பயணம் -கவிதை.



பெருவிரைவு ரயில்களில்  பயணம்.

                                     ---------------
வீட்டு வேலைகள் முடித்து வீதியிலே நடந்து சோர்ந்து
வாட்டமாய் வந்து சேர்ந்தேன் பெருவிரைவு ரயில்நிலையம்.
பிரயாணச் சீட்டை அவசரமாய்க் காட்டி விட்டு...கொஞ்சத் தூரம்
பரபரக்கும்  படிக்கட்டில் கால்வைத்து வெளியேற...மேடைக்கு
இசைவுடனே விரைவாக வந்ததுவே ரயில்வண்டி....
தசைப்பிடிப்புக் கால்வைத்து உட்புகுந்தால் உட்கார இடமில்லை.
முடிநரைத்த தலைபார்த்த நிலவுமுகம் புன்னகைத்து....
கடிதென எழுந்துநின்று தன்னிருக்கையை எனக்களித்தாள்.
பளிங்குச் சிலையொன்று பள்ளிச் சீருடையுடனே...
தெளிந்த நீரோடைபோல் விளங்கும் கருணைமுகம்.
தானிறங்கும் இடமது வந்தவுடன் கையசைத்தாள்...
நான் மறந்தேன் என்னை, எனக்குள்ளே ஒருசிலிர்ப்பு!
வயோதிபத்தாய் உட்கார இடங்கொடுத்த பண்பை எண்ணி...
இளவயதுச் சந்ததியை நினைந்து இறுமாப்புக் கொண்டேனே!.
மற்றவர்க்கு உதவுவதால் தன்னில்தான் உயர்ந்து நிற்பர்.
சொற்களிலே வடிக்க முடியாத செயலிதை எழுதுகின்றேன்.   
வள்ளியம்மை சுப்பிரமணியம்.  

0 comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo above to download the FULL VOLUME in PDF Size 10MB